Skip to main content

“அவன் கண்ணில பயம் இல்ல!”





தற்போது லார்ட்ஸில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா பெற்றுள்ள வெற்றியை அனேகமாக 2001இல் கொல்கொத்தாவில் follow on பண்ணப்பட்டு, தோல்வியின் விளிம்பில் இருந்து லஷ்ம்ண-திராவிட் கூட்டணியால் மீண்டும் வந்து, ஹர்பஜனின் பந்துவீச்சு மேதைமையால் ஆட்டம் முடியும் தறுவாயில் நாம் பெற்ற வெற்றியுடன் ஒப்பிடலாம். நேற்று (4வது நாள்) முடிவில் இந்தியா ஜடேஜாவை இழந்த போது (175/6) 70 ரன்கள் கூடுதலாவது எப்படியாவது எடுத்து 220 இலக்கை அடைந்தால் மட்டுமே இந்தியா தப்பிக்க முடியும் எனும் நிலை இருந்தது. இன்று காலை இருபது சொச்சம் ஓட்டங்களுக்கு பண்டும், இஷாந்தும் ஆட்டம் இழக்க, 209/8 எனும் நிலையில் எல்லாம் முடிந்தது என்றே இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் தோன்றி இருக்கும். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்திருந்தால் 190 எனும் இலக்கை 90 ஓவர்களில் அடிப்பது என நிலைமை இந்தியாவுக்கு சிக்கலாகி இருக்கும்.


 அதாவது ஓவருக்கு 2 ஓட்டங்கள் போதும். நான்கு விக்கெட்டுகள் இழந்து 100 ரன்கள் எடுத்தாலும் மிச்ச 90 ரன்களை அவர்களால் அடிக்க முடியும் எனும் நம்பிக்கை இருக்கும் போது கோலியால் தொடர்ந்து தாக்குதல் அணுகுமுறையை எடுக்க முடியாது. ஒன்றிரண்டு பவுண்டரிகள் போனால் களத்தடுப்பை பரவலாக்கி, இங்கிலாந்து மட்டையாளர்கள் ஒற்றை ஓட்டங்கள் எடுப்பதை சுலபமாக்கும் நிலை ஏற்படும். அதன் பிறகு எங்கே தோற்று விடுவோமோ எனும் பயத்துடன், பவுண்டரி கொடுக்காமல் விக்கெட் எடுக்க வேண்டும் எனும் நெருக்கடியில் பந்து வீசுவது மிகவும் சிரமம் ஆகும். அதுவும் மட்டையாடுவதற்கு அதிகமான நெருக்கடி தராத ஒரு நல்ல ஆடுதளத்தில். அதனால் 60-70 ஓவர்களில் 220-230 என்பது ஓரளவுக்கு இங்கிலாந்தைக் கட்டுப்படுத்த ஒரு சரியான இலக்காக இருக்கும் என நிபுணர்கள் நம்பினர்கள். கோலி 55-60 ஓவர்களுக்கு மேல் இங்கிலாந்துக்கு கொடுக்கக் கூடாது என தான் நம்பியதாக பின்னர் சொன்னார். ஏனென்றால் அத்தவறை அவர் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியுசிலாந்துக்கு எதிராகப் பண்ணினார். ஆனால் அந்த இறுதிப்போட்டியின் இறுதி நாளில் போல இந்திய கீழ் மத்திய வரிசை இப்போது உருக்குலையவிலை. மாறாக இம்முறை பும்ராவும் ஷாமியும் யாரும் எதிர்பாராதபடி அபாரமாக மட்டையாடினர்.

 

ஆனால் நிஜமான திருப்புமுனை இதுவல்ல - இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் போன நிலையில் ரூட்டுடன் ஜோடி சேர ஆண்டர்ஸன் முகத்தை சுளித்தபடி வந்தார். அப்போது ஒரு ஓவரில் பும்ரா தொடர்ந்து பவுன்சர்களாக வீசினார். ஆண்டர்ஸனுக்கு இரண்டுமுறை தலையில் அடிபட்டது. பும்ரா தொடர்ந்து நோபால்களாக வீசியதால் அந்த ஓவர் 10 பந்துகளுக்கு நீடிக்க அநேகமாய் இரண்டு ஓவர்களுக்கு தொடர்ந்து பவுன்சர்களை சந்தித்தது போல ஆனது ஆண்டர்ஸனின் நிலை. தான் bodyline பந்து வீச்சுக்கு அளாக்கப்படுவதாக நினைத்த ஆண்டர்ஸன் கடுப்பானார். அவர் அவுட் ஆன பின்னர் பும்ராவிடம் அவர் தன் கோபத்தைக் காட்டினார். இங்கிலாந்து அணித்தலைவர் ரூட்டும் கோலியிடம் புகார் கூற, கோலி திரும்பிக் கத்த, மொத்தத்தில் அதைக் காண சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. அடுத்த நாள் இந்தியா மட்டையாட வந்த போது இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசி இந்தியாவை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள். புஜாராவும் ரஹானேவும் தடுப்பாட்டத்தினால் சரிவை ஓரளவுக்கு தடுத்து இந்தியாவின் உடனடி தோல்வியைத் தள்ளிப்போட்டார்கள். ஐந்தாவது நாள் ஆரம்பத்தில் நான் சொன்னது போல பும்ரா, ஷாமி தான் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றினார்கள். ஆனால் அதற்கும் மறைமுகமாக உதவியது இங்கிலாந்தின் விசித்திரமான உத்தி.


பும்ரா வந்ததும் ரூட் வுட் மற்றும் ராபின்ஸனைக் கொண்டு பவுன்சர்கள் வீச வைத்தார். அதுவரை சரியான நீளத்தில், திசையில் வீசி ஸ்லிப்பில் விக்கெட் எடுக்க முயன்றவர்கள் இப்போது ஆண்டர்ஸனுக்காக பும்ராவை பழிவாங்க முயன்றனர். பும்ரா இன்னொரு பக்கம் எல்லா பந்துகளையும் அடிக்கிறேன் எனும் பெயரில் மட்டையை ஏதோ சார்லி சாப்ளின் கைத்தடியை சுற்றுவதைப் போல சுழற்றினாரே தவிர பந்து படவேயில்லை. ஷாமியும் இப்போது அடித்தாட தொடங்கினார். வேகவீச்சாளர்களின் பவுன்சர்கள் உடம்பில் பட, தன்னை பழிவாங்க முனைகிறார்கள் இங்கிலாந்து அணியினர் எனும் புரிதல் பும்ராவின் அணுகுமுறையை மாற்றியது. ஆட்டத்தின் அழுத்தம் காணாமல் போனது. தனிப்பட்ட மோதலாக உருமாறியது. இங்கிலாந்து வீரர்கள் தம் கவனத்தை இழந்தனர். தெருவில் விடலைப்பையன்களின் தள்ளுமுள்ளு போல ஆனது ஆட்டம். இதை பும்ரா சரியாக பயன்படுத்தி உறுதிப்பாட்டுடன் ஆடினார். அணியைக் காப்பாற்ற வேண்டும் எனும் நெருக்கடியை விட இவர்களுக்கு தன்னை நிரூபிக்க வேண்டும் எனும் ஆவேசமே அவரை நடத்தியது என நினைக்கிறேன்.


 இன்னொரு பக்கம் ஜோ ரூட் இப்போது இந்த இருவரும் பவுண்டரிகள் அடித்து இலக்கை பெரிதாக்கி விடுவார்களோ என அஞ்சி களத்தடுப்பை எல்லைக்கோட்டுக்கு பரவலாக்கி, ஒற்றை ஓட்டங்கள் எடுப்பதை சுலபமாக்கினார். வேகவீச்சாளர்கள் விக்கெட் எடுப்பதா, தடுத்தாடுவதா எனக் குழம்பிப் போயினர். ஒரு கட்டத்தில் ஒற்றை ஓட்டங்களிலே பும்ராவும் ஷாமியும் ஓவருக்கு மூன்று நான்கு ஓட்டங்கள் எடுத்தனர். இருவருமாக இலக்கை 220 தாண்டி கொண்டு சென்ற நிலையில் மொத்த இங்கிலாந்து அணியும் ஆட்டத்தில் கவனத்தையும் அக்கறையையும் இழந்தது. இனி ஜெயிக்க முடியாது எனும் எண்ணம் அவர்களுக்கு அதிகமானது. களத்தடுப்பில் சொதப்பினர், கேட்சுகளை விட்டனர். ஷாமி அரைசதம் (56) அடித்தார், பும்ரா 34 எடுத்தார். இருவருமே தன்னம்பிக்கையுடன் சீராகப் பந்துகளை தடுத்தாடி, கவர் பகுதியில் தொடர்ந்து விரட்டும் அளவுக்கு ஆட்டம் இந்தியாவுக்கு சுலபமாகியிருந்தது. 209க்கு 8 விக்கெட்டுகளில் இருந்து 298க்கு 8 எனும் ஸ்கோரில் கோலி டிக்ளேர் பண்ணினார். (ஒருவேளை அவர் இன்னும் 20 ஓவர்கள் கொடுத்திருந்தால் ஷாமி இன்று சதம் அடித்திருக்கவும் கூடும்.)


60 சொச்சம் ஓவர்களில் 272 எனும் கிட்டத்தட்ட அசாத்தியமான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் மனதளவில் களைத்துப் போயிருந்தனர். இரண்டே ஓவர்களில் ஒரு ஓட்டத்துக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து ஜோ ரூட் நன்றாக ஆடி ஒரு மறுவருகைக்கு களம் அமைத்தாலும், வெற்றி வாய்ப்பே இல்லை எனும் எண்ணம் இந்தியாவுக்கு தொடர்ந்து அதிரடியாக ஆடும் சுதந்திரத்தைக் கொடுக்க, டிராவுக்காக ஆடும் அனுபவமற்ற இங்கிலாந்தை அது மனதளவில் பின்னுக்கு தள்ளியது. அவர்களுடைய உடல்மொழியே முழுக்கத் தவறாக இருந்தது. ஆட்டத்தின் முக்கியமான அடுத்த திருப்புமுனை ஆண்டர்ஸன் பாணியில் பும்ரா வைடாக ஓடி வந்து ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்து நேராக எடுத்து சென்றிட அதை ரூட் எட்ஜ் கொடுத்ததே.


 அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எனும் நிலையை அடைந்தாலும் ராபின்ஸன் ஆட வந்ததும் மீண்டும் ஒரு திருப்பம் - முன்பு ரூட் செய்த தவறை கோலி இப்போது செய்தார். அவர் ராபின்ஸனிடம் தேவையில்லாமல் கத்துவது, கேலி பண்ணுவது என ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து சிராஜும் வேடிக்கையாக முறைக்க முயன்றார். நிறைய பவுன்சர்கள் வீசினார்கள். ஆட்டத்தில் இருந்து இந்திய அணி கவனத்தை இழக்க ராபின்ஸன் பட்லருடன் சேர்ந்து 30 ரன்கள் சேர்த்தார். முக்கியமாக 60 ஓவர்கள் இன்னிங்ஸில் 13 ஓவர்களை அந்த கூட்டணி முழுங்க இந்தியா நம்பிக்கை இழந்தது. கோலி பட்லரின் கேச்சை விடவும் செய்தார். இடைவேளைக்குப் பின் இஷாந்தும் சிராஜும் பந்து வீசிய நேரத்தில் தான் இந்தியா மீண்டும் தன் நிதானத்தை மீட்டு ஒழுங்காக வீசி, உணர்ச்சிக்கொந்தளிப்பில் ஈடுபடாமல் ஆடியது. மிக முக்கியமான திருப்புமுனை பும்ரா ராபின்சனுக்கு சுற்றி ஓடி வந்து (round the wicket) ஒரு மெதுவான பந்தை (slow ball) வீசியதே. அதற்கு முன் சில பவுன்சர்கள் வீசி ராபின்சனை அவர் பின்னங்காலுக்குத் தள்ளியிருக்க அவர் இப்போது LBW ஆனார். நடுவர் கொடுக்காவிடிலும் ரெய்வூ எடுத்து இந்தியா விக்கெட்டை பெற்றது.  இதைத் தொடர்ந்து உடனே பட்லர் சிராஜின் பந்தில் வெளியேறினார். ஆண்டர்ஸன் 10வது எண்ணில் ஆட வந்து சில பந்துகள் கூடத் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் முதல் இன்னிங்ஸ் நினைவில் பவுன்சருக்கு பயந்து பின்னுக்குப் போய் ஏதோ சுவரோடு ஒட்டிய நிழலைப் போல நின்றார். சிராஜின் ஒரு முழுநீளப் பந்துக்கு பவுல்ட் ஆனார். யாருமே கற்பனை பண்ணியிராத ஒரு அபாரமான மீள்வருகையை நிகழ்த்தி, தோல்வியின் விளிம்பில் இருந்து இந்தியா வெற்றி தட்டிச்சென்றது.


யோசித்துப் பார்த்தால் இந்த மொத்த டிராமாவும் ஆண்டர்ஸனை பும்ரா பவுன்சர் போட்டு சிரமப்படுத்திய ஓவரின் போது ஏற்பட்ட சச்சரவினால் விளைந்தது என்று தோன்றுகிறது. அது இப்படி இறுதியில் தமக்கே ஒரு துன்பியலாக மாறும் என ஜோ ரூட் கற்பனை பண்ணி இருக்க மாட்டார். “பொல்லாதவன்” படத்தில் தனுஷைப் பற்றி கிஷோர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. பும்ராவை அவர் பாட்டுக்கு ஆட விட்டிருந்தால் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஐந்து, பத்து ஓட்டங்களுக்கு நடைகட்டி இருப்பார். சுத்தமாக ரிதம் இல்லாமல், 16 நோபால்களுக்கு மேல் முதல் இன்னிங்ஸில் வீசி திணறிக் கொண்டிருந்த பும்ராவை கிளப்பி விட்டு கடைசியில் ஹீரோவும் ஆக்கி விட்டார்கள் ஜோ ரூட்டும், ஆண்டர்ஸனும். பும்ராவின் கோபம் ஒட்டுமொத்த இந்திய அணியையும் வெறிகொண்டு போராடச் செய்தது. ஆட்டம் வெற்றியில் முடிய கோலி லாலிபாப் கிடைத்த குழந்தை போல சுற்றி சுற்றி ஓடிட, ரூட் வெளிறிய முகத்துடன் டிரெஸ்ஸிங் ரூமின் இருட்டில் இருந்து பார்த்தார்.

 “பும்ராவை அப்படியே போக விட்டிருக்கலாம் இல்ல?” என யோசித்திருப்பாரோ?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...