முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்ணில் புரை விழுந்த உலகம்




கண்ணில் புரை விழுந்த சிறிய நாய்க்கு

உலகமே

கலங்கலான நீர்த்தொட்டிக்குள் இருந்து

ஒரு மீன் பார்ப்பதைப் போல இருக்கிறது


தான் போகும்

பாதைகளை அது

வாசனைகளால் மட்டுமே

வரையறுத்துக் கொண்டது


தரை, மிதியடி, நாற்காலி, முக்காலி, சக்கரநாற்காலி,

 வாஷிங்மெஷின், அலமாரி, 

நேராநேரத்துக்கு நிறைந்து அழைக்கும் சாப்பாட்டுக்கிண்ணம்,

 வாசல், வாசல் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் கதவு

இவ்வளவுக்கும் இடையில் நுணுக்கமாக

இழையும் பல பாதைகள்

நினைவின் வரைபடத்தால்

வரிசை வரிசையாக

செல்லும் எறும்புகளைப் போல

அதன் சிறிய பாதங்கள்

துல்லியமாக நடக்கின்றன


கண்ணில் புரை விழுந்த சிறிய நாய்க்கு

இந்த உலகமே

வாசனைகளும் சப்தங்களும் தான் என்றானது

அதற்கு எந்த வருத்தமும் இல்லை

அதை நெருக்கமாய் கவனிப்பவர்களுக்குக் கூட

அதன் உலகம் மாறிப்போனது

தெரியவில்லை


தினமும் காலையில் எழுந்ததும்

பால்கனிக் கதவை மூக்கால்

தொட்டுத்திறந்து

வெளிச்சமும் இதமான வெப்பமும் நிறைந்த

மூட்டமான உலகை

பார்வையிடுவது பழக்கத்தினாலே


கதவு திறக்கும் சப்தம்

உணவு சமிக்ஞைக்கான சப்தம்

வா போகலாம் எனும் சப்தம்

தன் பெயருக்கான சப்தம்

தொலைவில் ஏதோ ஒரு தெருமுக்கில் இருந்து

கூட்டுக்குரைப்பு

அண்மையில் ஏதோ ஒரு வீட்டிலிருந்து 

அழும் குழந்தை

வீட்டுக்குள் கடுமையாக

வாதிடும் இருவர்

தன் பெரிய தொங்கும் காதுகளால்

அது ஒவ்வொருவரையும்

ஒரு இடத்தில் வைத்திருக்கிறது

ஒருவேளை இடமாறி

இவர்கள் போனால் என்னாவது

என ஒரு பயம் அதற்கு உள்ளது

தினமும் எல்லாம் சரியாக 

அதனதன் இடத்தில் உள்ளதா

என சோதித்துக் கொள்கிறது


கண்ணில் புரை விழுந்த சிறிய நாய்

தனக்கு நேர்ந்த 

இரு அவமானங்களை

இங்கு பதிவு செய்ய விரும்புகிறது

ஒன்று, டிவிக்குள் ஓடும் 

குழப்பமான சலனங்களில் இருந்து

ஒரு பெரிய கரடி தோன்றியது -

அன்று வெகுநேரம் குலைத்த பின்

ஏதோ உறைக்க அது

மௌனமாகியது

மற்றொன்று, பிரியத்துக்குரியவர்

ஒரு பூங்காவின் மறுஎல்லையில் நின்றபடி

தன்னை அழைத்த போது

அதற்கு பெரியதொரு

கால வெற்றிடத்தில் இருந்து

தான் முதன்முதலாக வெளிப்பட்ட

நெகிழ்வான புழையின்

இருள் துளையில் இருந்து

தன் பெயரை

யாரோ அழைக்கும் சித்திரம் ஏற்பட்டது

“வா சீக்கிரம்”

அது திடுக்கிட்டது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.