முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு சுடரொளி!


ஒரு எழுத்தாளனாக என் ஆசான் எப்போதுமே ஜெ.மோ தான். ஒரு பதின்வயதினனாக அவரை அணுகி கவனிக்க இயன்றதே என்னை பின்னாளில் இப்படி ஒரு எழுத்தாளனாக்கியது.
இவையெல்லாம் ஜெ.மோ எனும் ஆசிரியர் எனக்குக் கற்றுத் தந்தவை:

1) ஒரு எழுத்தாளன் தன் வாழ்க்கையை முழுக்க எழுத்தை சுற்றியே அமைத்துக் கொள்ள வேண்டும்.
2) சும்மா புகார் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.
3) வேண்டியதை விடா முயற்சியால் அடைய வேண்டும்.
4) எதையும் நம்பிக்கையுடன் உறுதிபட சொல்ல வேண்டும்.
5) நிறைய எழுத வேண்டும்.
6) தினமும் எழுத வேண்டும்.
7) தமிழைத் தாண்டியும் வாசித்து, இலக்கியத்தைத் தாண்டியும் பல ஆர்வங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
8) வாசகனை சமமாக நடத்த வேண்டும்.
9) இளம் படைப்பாளிகளை தோளோடு அணைத்துக் கொள்ள வேண்டும்.
10) உலகையே மறந்து இலக்கியம், புத்தகங்கள், அறிவுத்துறைகள் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டும். 
11) யார் செத்தாலும் கவலைப்படாமல் உலகம் சுற்றுகிற அச்சு நம் எழுத்தே என நம்ப வேண்டும்.
12) பணம் சம்பாதித்தாலும் அதில் பற்றுக் கொள்ளல் ஆகாது.
 13)லௌகீகத்தில் சற்று தத்தியாக இருந்தால் தப்பில்லை.

14) நாம் நம்புவதே உண்மை எனக் கருதி செயல்பட வேண்டும் - அப்போது தான் செயலூக்கம், ஆற்றல் கிடைக்கும்.

15) பெண்கள் விசயத்தில் காதலி / துணைவி - தோழியர் என ஒரு கராறான பாகுபாட்டை பேண வேண்டும். உணர்ச்சிகள் அணை உடைத்தாலும் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே பிறருக்கு நாம் தரும் கண்ணியம், மரியாதை. 

16) நம்புகிற லட்சியத்தை எப்போதும் இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

ஜெ.மோவிடம் நான் கற்றுக் கொள்ளாதவை:
1) சுய ஒழுக்கம் - கராறாக திட்டமிட்டு வாழ்க்கையை நடத்த முடிந்ததில்லை. ஆனால் விழித்திருக்கும் நேரத்தை கணிசமாக எழுத்துக்கு குருதிக்கொடை கொடுத்து விடுகிறேன்.
2) உடல் நலனைப் பேணுவது - உடற்பயிற்சியில் ஈடுபட்டால் எழுதும் ஆர்வம் குறைந்து விடுகிற ஒரு வினோத சிக்கல் எனக்குண்டு.
3) ஆசான் குடிக்கவே கூடாது என வலியுறுத்துபவர்.
எனக்கு மதுவில் ஆர்வம் என்றைக்குமே இருந்ததில்லை. ஆனாலும் போரடிக்கும் போது, பெரும்பாலும் மாதம் ஒருமுறை குடிக்கிறேன். 

ஜெ.மோவிடம் நான் தொடர்ந்து மறுப்பவை:
1) சமூக, அரசியல் கருத்துக்கள் - அவரிடம் உள்ள காழ்ப்பினாலோ வேறு ஆதாயங்களுக்காகவோ நான் அவரை விமர்சித்து சில ஆயிரம் பக்கங்களை எழுதவில்லை (தொகுத்தால் ஒரு புத்தகம் அளவுக்கே வந்து விடும்.), மாறாக என் கொள்கை எப்போதுமே அவரிடம் இருந்து மாறுபட்டது. நான் கலை இலக்கிய பெருமன்ற நண்பர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட கொள்கை அது. ஆக அவரைப் படிக்கும் போதெல்லாம் கடுப்பில் மறுத்து எழுதும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது. இலக்கிய கொள்கையைப் பொறுத்தமட்டில் அவர் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை இங்கிலாந்தில் பிரசித்தமாக விளங்கிய லிபரல் ஹியூமனிசப் பள்ளியை சேர்ந்தவர். நான் கடுமையாக வெறுக்கிற ஒரு இலக்கியப் பள்ளி அது. ஆக நான் அவரிடம் இலக்கிய விமர்சனங்களில் முரண்படுவதும் இயல்பே. மற்றபடி தனிப்பட்ட கோபதாபம், கசப்பு ஏதுமில்லை - ஒரு ஆசான் நம் நெஞ்சில் சுடர் விடும் அகல் விளக்கு. அவரை எப்படி வெறுக்க முடியும்?

அந்த சுடரொளிக்கு இந்த ஆசிரியர் தினத்தன்று நன்றியும் அன்பும் தெரிவிக்கிறேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.