முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு சுடரொளி!


ஒரு எழுத்தாளனாக என் ஆசான் எப்போதுமே ஜெ.மோ தான். ஒரு பதின்வயதினனாக அவரை அணுகி கவனிக்க இயன்றதே என்னை பின்னாளில் இப்படி ஒரு எழுத்தாளனாக்கியது.
இவையெல்லாம் ஜெ.மோ எனும் ஆசிரியர் எனக்குக் கற்றுத் தந்தவை:

1) ஒரு எழுத்தாளன் தன் வாழ்க்கையை முழுக்க எழுத்தை சுற்றியே அமைத்துக் கொள்ள வேண்டும்.
2) சும்மா புகார் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.
3) வேண்டியதை விடா முயற்சியால் அடைய வேண்டும்.
4) எதையும் நம்பிக்கையுடன் உறுதிபட சொல்ல வேண்டும்.
5) நிறைய எழுத வேண்டும்.
6) தினமும் எழுத வேண்டும்.
7) தமிழைத் தாண்டியும் வாசித்து, இலக்கியத்தைத் தாண்டியும் பல ஆர்வங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
8) வாசகனை சமமாக நடத்த வேண்டும்.
9) இளம் படைப்பாளிகளை தோளோடு அணைத்துக் கொள்ள வேண்டும்.
10) உலகையே மறந்து இலக்கியம், புத்தகங்கள், அறிவுத்துறைகள் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டும். 
11) யார் செத்தாலும் கவலைப்படாமல் உலகம் சுற்றுகிற அச்சு நம் எழுத்தே என நம்ப வேண்டும்.
12) பணம் சம்பாதித்தாலும் அதில் பற்றுக் கொள்ளல் ஆகாது.
 13)லௌகீகத்தில் சற்று தத்தியாக இருந்தால் தப்பில்லை.

14) நாம் நம்புவதே உண்மை எனக் கருதி செயல்பட வேண்டும் - அப்போது தான் செயலூக்கம், ஆற்றல் கிடைக்கும்.

15) பெண்கள் விசயத்தில் காதலி / துணைவி - தோழியர் என ஒரு கராறான பாகுபாட்டை பேண வேண்டும். உணர்ச்சிகள் அணை உடைத்தாலும் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே பிறருக்கு நாம் தரும் கண்ணியம், மரியாதை. 

16) நம்புகிற லட்சியத்தை எப்போதும் இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

ஜெ.மோவிடம் நான் கற்றுக் கொள்ளாதவை:
1) சுய ஒழுக்கம் - கராறாக திட்டமிட்டு வாழ்க்கையை நடத்த முடிந்ததில்லை. ஆனால் விழித்திருக்கும் நேரத்தை கணிசமாக எழுத்துக்கு குருதிக்கொடை கொடுத்து விடுகிறேன்.
2) உடல் நலனைப் பேணுவது - உடற்பயிற்சியில் ஈடுபட்டால் எழுதும் ஆர்வம் குறைந்து விடுகிற ஒரு வினோத சிக்கல் எனக்குண்டு.
3) ஆசான் குடிக்கவே கூடாது என வலியுறுத்துபவர்.
எனக்கு மதுவில் ஆர்வம் என்றைக்குமே இருந்ததில்லை. ஆனாலும் போரடிக்கும் போது, பெரும்பாலும் மாதம் ஒருமுறை குடிக்கிறேன். 

ஜெ.மோவிடம் நான் தொடர்ந்து மறுப்பவை:
1) சமூக, அரசியல் கருத்துக்கள் - அவரிடம் உள்ள காழ்ப்பினாலோ வேறு ஆதாயங்களுக்காகவோ நான் அவரை விமர்சித்து சில ஆயிரம் பக்கங்களை எழுதவில்லை (தொகுத்தால் ஒரு புத்தகம் அளவுக்கே வந்து விடும்.), மாறாக என் கொள்கை எப்போதுமே அவரிடம் இருந்து மாறுபட்டது. நான் கலை இலக்கிய பெருமன்ற நண்பர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட கொள்கை அது. ஆக அவரைப் படிக்கும் போதெல்லாம் கடுப்பில் மறுத்து எழுதும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது. இலக்கிய கொள்கையைப் பொறுத்தமட்டில் அவர் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை இங்கிலாந்தில் பிரசித்தமாக விளங்கிய லிபரல் ஹியூமனிசப் பள்ளியை சேர்ந்தவர். நான் கடுமையாக வெறுக்கிற ஒரு இலக்கியப் பள்ளி அது. ஆக நான் அவரிடம் இலக்கிய விமர்சனங்களில் முரண்படுவதும் இயல்பே. மற்றபடி தனிப்பட்ட கோபதாபம், கசப்பு ஏதுமில்லை - ஒரு ஆசான் நம் நெஞ்சில் சுடர் விடும் அகல் விளக்கு. அவரை எப்படி வெறுக்க முடியும்?

அந்த சுடரொளிக்கு இந்த ஆசிரியர் தினத்தன்று நன்றியும் அன்பும் தெரிவிக்கிறேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...