முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம்மால் ஏன் சாதியை ஒழிக்க முடியவில்லை? - மென்-வலதுசாரி மத்யமர்களுக்கான பதில்கள்



1. பொதுவாக மென்-சனாதன ஆதரவாளர்கள், மத்யமர்களாக முகம் காட்டுபவர்கள், அம்பேத்கருக்கு முன்பான சமூக சீர்திருத்தவாதிகளில் இருந்து இன்று செயல்படும் பகுத்தறிவு இயக்கங்கள் வரை சாதியை ஒழிக்கவில்லை, அவர்கள் சாதி அதிகாரத்தை இடமாற்றும் பணியை மட்டுமே ஆற்றியிருக்கிறார்கள் என ஒரு வாதத்தை எடுத்து வைப்பார்கள். வெளிப்படையாகப் பார்க்கும் போது “அட ஆமா உண்மை தானே, சாதி எங்கே ஒழிந்துவிட்டது?” என நாமும் யோசிப்போம். 


நிஜம் என்னவென்றால் கண்ணுக்குப் புலப்படாத எத்தனையோ மாற்றங்கள் நம் சமூக அமைப்பில் கடந்த சில நூற்றாண்டுகளாக நிகழ்ந்து கொண்டு வந்திருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவே சுதந்திரத்துக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினருக்கு போதுமான அங்கீகாரமும், பிரதிநுத்துவமும் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் ஒரு மத்திய சாதி சதித்திட்டமோ பகுத்தறிவு, சோசலிச இயக்கங்களோ அல்ல. அதற்கான உண்மைக் காரணத்தை அறிய நாம் பூனா ஒப்பந்த விவாதங்களுக்கு திரும்ப செல்ல வேண்டும். 

ஒரு ஜனநாயக நாட்டில் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரதிநுத்துவம் அமைவது ஆபத்தானது. குறைந்தபட்சம் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு நாம் தனி வேட்பாளர்கள், தனி வாக்காளர்களை சாத்தியப்படுத்தும் சட்டத்தை நாம் வனைந்திருந்தால் இன்றுள்ள அதிக மக்கள் தொகையில் உள்ளவர்களுக்கே அதிக அதிகாரம், அதிக பிரதிநுத்துவம் எனும் ‘வலுத்தவனே வெல்வான்’ எனும் ஜனநாயக விரோத நிலை இருந்திருக்காது. ஆனால் இது குறித்த அம்பேத்கரின் கோரிக்கையை காந்தி “சமூகத்தை அது பிளவுபடுத்தும்” என அபத்தமான ஒரு காரணத்தை வைத்து மறுத்ததுடன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பேன் என மிரட்டி ஒழித்துக் கட்டினார். அடிப்படையில் காந்திக்கு இந்த சமூக அமைப்பு மாறுவதில், நவீனப்படுவதில் மிகப்பெரிய தயக்கம், பயம் இருந்தது என்பதை அவருடைய எழுத்துக்களில் பல இடங்களில் காணலாம். ஒருவிதத்தில் இந்த சமூகத்தை அப்படியே தக்க வைப்பதில் அவர் வென்று விட்டார். அவர் ஆரம்பித்த மேலோட்டமான சீர்திருத்த செயல்பாடுகள் மேல்சாதியினரின் குற்றவுணர்வை சுரண்டி அவர்களுக்கு “தாம் தலித்துகளின் பால் அறத்துடன் இருக்கிறோம்” எனும் போலியான திருப்தியை அளித்தது என டி.ஆர் நாகராஜ் “தீப்பற்றிய பாதங்கள்” நூலில் விமர்சிப்பதை நாம் கவனிக்க வேண்டும்.  “சந்திரமுகியில்” ரஜினி ஜோதிகாவை ஒரு பொம்மையை வெட்ட செய்து வில்லனை கொன்ற திருப்தியை அளித்து சிகிச்சை கொடுத்து சரி செய்வார் அல்லவா அதை காந்தி மேல்சாதியினருக்கு செய்ததே அவரது தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகள் என அம்பேத்கர் அன்றே தெளிவாக கணித்தார். அதனால் தலித்துகளுக்கு எந்த பலனும் இருக்கவில்லை என நாகராஜும் கூறுகிறார்.


2. தமிழில் உள்ள மென்-வலதுசாரிகளுக்கு காந்தியின் status quoவை நீட்டிக்க நினைக்கும் கருத்தியல் வசதியாக இருக்கிறது. அதில் உணர்ச்சிகரமான தியாகம், ஹீரோயிசம், மேல்சாதியினர் தரப்பில் இருந்து சிந்திப்பது, சமூக, மத, கலாச்சார அமைப்புகளை மாற்றாமல் புரட்சி பேசும் பங்கு உள்ளது அவர்களுக்கு வசதியாக உள்ளது. ஆக அவர்கள் காந்தியின் ஆதரவாளர்கள் ஆகிறார்கள். காந்தியை யாராவது விமர்சித்தால் அவர்கள் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வருவதைக் கண்டிருக்கிறேன் - அது ஏனென்றால் காந்தியை விட்டால் அவர்களால் சாவர்க்கர் போன்ற தீவிர வலதுசாரிகள் பக்கமோ பெரியார் பக்கமோ செல்ல முடியாது என்பதாலே. காந்தியே மென்வலதுசாதி மத்யமர்களுடைய ஒரே சரணாலயம்.


 காந்தியினால் தான் சாதியமைப்பு நீடிக்கிறது என நான் கூறவில்லை, ஆனால் அவர் புனிதரோ நேர்மையான அரசியல்வாதியோ அல்ல என்கிறேன். தன்னுடைய சுயசெயல்பாடுகளின், மனவோட்டங்களை வெளிப்படையாக முன்வைத்த காந்தியால் சாதி, மதம் என்று வந்த போது தன் நோக்கத்தின் உண்மையை சொல்ல முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின் ஒரு மென்வலதுசாரி அரசியல் சோஷலிச சார்புடன் அதிகாரத்துக்கு வந்தது. அது பின்னர் முழுமையான வலதுசாரித்தனத்துக்கு வழிவிட்டதன் விளைவைத் தான் நாம் இன்று அனுபவித்து வருகிறோம். அதாவது காந்தி பேட்மேன் என்றால், சாவர்க்கர் ஜோக்கர் - ஒரு வைதீக மனத்தின் இரு பக்கங்கள்.


பூனா ஒப்பந்த கால சம்பவங்கள் சாதியமைப்பில் எண்ணிக்கை அடிப்படையில் வலுவான இடத்தில் இருப்பவர்களுக்கு ஒரு தனி அதிகாரத்தை மக்களாட்சி அமைப்பில் கொடுத்து விட்டன. விளைவாக சாதி அமைப்பின் அதிகார கட்டமைப்பு ஒரு புதுவிதமாக - பார்ப்பனிய-மத்தியசாதி கூட்டணியாக - உருவெடுத்து விட்டது.


ஒரு பக்கம், ஆயிரம் ஆண்டுகளாக நம் மீது படையெடுத்துக் கொண்டிருக்கும் வைதீகம், இன்னொரு பக்கம் அநீதியான வகையில் பிரதிநுத்துவம் கொடுக்கும் தேர்தல் முறை என சாதி எதிர்ப்பு போராளிகள் கடும் அழுத்தத்தை சுதந்திரத்துக்குப் பிறகு எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு, மக்களாட்சி கட்டமைப்புக்கு வெளியே நின்று போராடி வருகிறார்கள்.   


3. மென்வலதுசாரி மத்யமர்கள் இப்போது இன்னொரு காரியத்தை சாமர்த்தியமாக செய்கிறார்கள் - 1) பெரியார் சாதியை ஒழித்து விட்டாராய்யா எனக் கேட்கிறார்கள். வியாதியின் பழியை மருத்துவன் மீது போடுகிற தந்திரம் இது. எந்த மருத்துவரிடமாவது நீங்கள் சென்று ஏன் கொரோனாவை இன்னும் ஒழிக்கவில்லை எனக் கேட்க முடியுமா? அது அபத்தமில்லையா? சாதி ஒழிப்பு நீண்ட நெடிய போராட்டம், ஒருநாள் விடிவு வரும் எனும் நம்பிக்கையில் நடப்பது. 


4. மத்யமர்களின் இன்னொரு தந்திரமான விளக்கம் “சாதி இயல்பானது, அது பண்டைய பழங்குடி இன அமைப்பின் நீட்சியே, பழங்குடி இனங்கள் மருவி சாதியாகி விட்டது” எனக் கூறுவது. இதன் நோக்கம் சாதி மனித குலத்தின் துவக்கத்திலே தோன்றி விட்டதால் அதை அழிக்க வேண்டியதில்லை என்பது. இந்த மோசடியான வாதத்தை அம்பேத்கர் தனது Who Were the Shudras? நூலில் அம்பலப்படுத்துகிறார் - இந்தியாவில் வைதீகத்துக்கு முன்பு இனங்கள் பரஸ்பரம் கொடுக்கல் வாங்கலுடன் லகுவாக இருந்தன, அவர்கள் தமக்குள் மூடிக்கொண்ட போதே சாதி தோன்றுகிற எனக் கூறும் அவர், முதன்முதலாக அவர்கள் “கதவை சாத்தியவர்கள்” பார்ப்பனர்களே, அவர்களைக் கண்டே பிறர் போலச் செய்து சாதியை உருவாக்கினார்கள் என்கிறார். இங்கு நாம் இன்னொரு விசயத்தை கவனிக்க வேண்டும் - தென்னமெரிக்க பழங்குடி இனங்களைக் கண்டு அவர்களைப் போல வைதீகத்துக்கு முந்தைய இந்திய சமூகம் இருந்தது என நாம் கருதக் கூடாது. அடுத்து சாதி அமைப்பு பல்வேறு விழுமியங்கள், நம்பிக்கைகளின் அடிப்படையில் தக்க வைக்கப்படுகிறது; அதற்காகவே சடங்கு, சம்பிரதாயங்கள், மனு ஸ்மிருதி போன்ற சட்டங்கள் இருக்கின்றன. இயற்கையான ஒன்றை ஏன் இவ்வளவு மெனக்கெட்டு ஒரு சமூகம் தக்க வைக்க வேண்டும்? பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்றால் தெரியும். பசி தெரியும். எட்டு மாதங்களில் அதற்கு பாலுணர்வு கூட வந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் சாதி உணர்வு அப்படி அதற்கு வருவதில்லை. அது மொழி வழியாக மெல்ல மெல்ல கட்டமைக்கப்பட்டு அதற்குள் ஏற்றப்படுகிறது. தூய்மை-அசுத்தம் எனும் இருமை அதற்காக பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். சாதி மிக மிக சிக்கலான ஒரு சமூக உளவியலாக இருக்கிறது. அதுவே அது இயல்பானது அல்ல என்பதைக் காட்டுகிறது.

5. சாதியை ஒழிக்க இரு தளங்களில் பணி செய்ய வேண்டும்: அ) மொழி, பண்பாடு, மதம். ஆ) திருமணம், குடும்பம், வேலை, குடியிருப்பு. பண்பாடு, மதம், மொழி என வரும் போது நாம் ஆயிரமாண்டு வைதீக இயக்கங்களுடன் போராட வேண்டும். புனிதம் எனும் கருத்தமைவை முதலில் நொறுக்க வேண்டும். எதெல்லாம் ஒழுங்கற்றதோ, தீட்டோ, அழுக்கோ, அருவருப்போ அதைக் கொண்டாட ஆரம்பிக்க வேண்டும். இதன் பின்னுள்ள அரசியலைப் பற்றி தொடர்ந்து பேச வேண்டும். கோயில்களில் இறைச்சிக்கறியை படைப்பது, மதம் சார்ந்த விதிமுறைகளை தொடர்ந்து உடைப்பது, செருப்பணிந்து கோயிலுக்குள் செல்வது, தலித்துகள் மட்டுமே பூசாரிகளாக இருக்க வேண்டும் என விதிமுறையை உருவாக்குவது, மாதவிடாயின் போது பெண்கள் கோயிலுக்கு சென்று அதை வெளிப்படையாகக் கொண்டாடுவது என சாத்தியப்படும் இடங்களில் எல்லாம் தூய்மையை அடித்துக் கொல்ல வேண்டும். இதை இந்து மதத்துக்குள் மட்டுமல்ல அனைத்து சமூக தளங்களிலும், மதங்களுக்குள்ளும் செய்ய வேண்டும். இது ஒரு நீண்ட நெடிய போராட்டம்.  ஆ) கலப்புத்திருமணத்தை கட்டாயமாக்க வேண்டும். நவீன கருவிகளைக் கொண்டு குப்பை அள்ளும், மலம் அள்ளும் பணிகளில் இருந்து தாழ்த்தப்பட்டோரை விடுவிக்க வேண்டும். அனைத்து சாதியினரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். இறுதியாக வைதீகத்துக்கு மாற்றாக பூர்வ பௌத்தத்தை இந்தியா முழுக்க பரவலாக்க வேண்டும் - இந்து மதத்துக்கு மாற்றாக மட்டுமல்ல, கிறித்துவம், இஸ்லாத்துக்கு மாற்றாகவும் நாம் பௌத்தத்தை கொண்டு வர வேண்டும். ஏனென்றால் மேற்சொன்ன பிரச்சனைகள் சிறுபான்மை மதங்களின் தத்துவங்களிலும் உள்ளன. இப்போதைக்கு சாராம்சவாதத்துக்கு எதிரான ஒரே மதம் பௌத்தமே. சாதி விடுதலைக்கு பௌத்தமே ஒரே தத்துவார்த்த தீர்வு என அதனாலே அம்பேத்கர் கூறினார். உடனே மத்யமர்கள் “பௌத்தத்துக்குள் இனவாதம் இல்லையா?” என கத்தியை தூக்குவார்கள். அதற்குத் தீர்வாகவே நவயான பௌத்தத்தை அம்பேத்கர் உருவாக்கினார். அதை நாம் இந்தியாவின் தேசிய மதமாக அறிவித்து ஆரம்ப பள்ளியில் இருந்தே குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கலாம். 

6. இந்த மாற்றங்களை ஒட்டுமொத்த இந்திய சமூகமும் மனமுவந்தால் ஒரு நூற்றாண்டில் செய்யலாம், அல்லது பல நூற்றாண்டுகள் ஆகும். ஒன்றை அழிப்பது சுலபம், மீளமைப்பது சிரமம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் சமூகம் ஆரியர்களால் அழிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டு விட்டது. அதை ஒரே நாளில் பகுத்தறிவாளர்களால் சரி செய்ய வேண்டும் எனக் கோருவது இவர்களுடைய பாசாங்கை, குரோதத்தை, வஞ்சகத்தை காட்டுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...