முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம்.ஜி.ஆர்: இது வாலிப வயசு!





எம்.ஜி.ஆர் சரோஜா தேவியை தவிர்க்கத் தொடங்கி அந்த இடத்தில் ஜெயலலிதாவை கொண்டு வந்த கதையை நாம் அறிவோம். அது ஏன் என்பதன் பின்னால் எம்.ஜி.ஆரின் பாதுகாப்பின்மை குறித்த ஒரு கதை இருக்கிறது.


 சரோஜா தேவி எம்.ஜி.ஆரின் படத்தில் (நாடோடி மன்னன்) நாயகியாக அறிமுகமானாலும் தொடர்ந்து, விரைவில் தமிழில் பிரசித்தமான நடிகையாகிறார். துவக்கத்தில் பார்க்க கறுப்பாக, பேரழகிகளின் அங்க லட்சணங்கள் என தமிழ் சினிமாவில் நம்பப்படுகிற தோற்ற இயல்புகள் இல்லாமலே இருந்தார். அதனாலே அவரை நாயகி ஆக்க துவக்கத்தில் தயாரிப்பாளருக்கு அவநம்பிக்கை இருந்தது. எம்.ஜி.ஆருக்கு அவரை பிடித்துப் போக ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்க வைத்து ஓக்கே பண்ணுகிறார். எம்.ஜி.ஆரின் தேர்வும் கணிப்பும் பொய்க்கவில்லை. சரோஜா தேவி அந்த காலத்துக்கு கனவுக்கன்னியாக மாறுகிறார். முகம், கழுத்து, கைகள் என எங்கும் களிம்புகள் பூசி தன்னை பளிச்சென்று மாற்ற முயன்று, அந்த ஒயிலான நடை, சிங்காரமான வெட்டு, தளுக்கு, கொஞ்சல் மொழி ஆகியவை கொண்டு ரசிகர்களை நிரந்தரமாக தொந்தர்வுக்குள்ளாக்கும் கனவு நாயகி ஆகிறார். ஆனால் அவருடைய நிறம் துவங்கி அவர் நடக்கிற பாணி (ஏன் ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு நடக்கிறார் என தயாரிப்பாளர் கேட்கிறார்), கன்னட சாயல் அதிகம் கொண்ட தமிழ் ஆகியவை பிரச்சனைகளாக ஆரம்பத்தில் பார்க்கப்பட்டு பின்பு அவற்றினாலே அவர் வெகுவாக சிலாகிக்கப்படும் நிலைக்கு விரைவில் வருகிறார். 


ஆனால் இதே சரோஜா தேவி சாமர்த்தியமாக தன் தொழில் வாழ்வையும் அமைத்துக் கொள்கிறார். எம்.ஜி.ஆரின் தோட்டத்து முல்லையாக மட்டும் இருக்க மறுக்கிறார். அதுவும் எம்.ஜி.ஆருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஓய்வில் இருந்த ஓராண்டில் அவருடைய படங்கள் முடங்கிப் போகின்றன. திரும்ப வரும் எம்.ஜி.ஆரால் சிவாஜிக்கு ஈடாக வெற்றிப்படங்களை உடனடியாக அளிக்க முடியவில்லை. படங்களை நேரத்துக்கு முடிக்காமல் தாமதித்து தயாரிப்பாளர்களை நட்டமடைய வைக்கிறார் எனும் குற்றச்சாட்டு எல்லா திசைகளிலும் எழுகிறது. ஆனால் இந்த ஓராண்டுக்குள் சரோஜா தேவி சிவாஜி “கல்யாண பரிசு”, “பாகப்பிரிவினை”, “கைராசி” உள்ளிட்ட வேறு நாயகர்களின் வெற்றிப்படங்களில் நடித்து தமிழகம் முழுக்க பிரபலமாகிறார். எம்.ஜி.ஆர் திரும்ப வரும் போது தான் ஆரம்பத்தில் பார்த்த சரோஜா தேவி அல்ல இவர் எனப் புரிந்து கொள்கிறார். காலை முதல் மாலை வரை சிவாஜியின் படத்து வேலையை முடித்து விட்டு மாலையில் அவர் எம்.ஜி.ஆரின் “திருடாதேவுக்கான” படத்தளத்துக்கு வருவார். அப்போது அவருடனான காட்சிகளில் நடிப்பதற்காக ஒருநாள் முழுக்க எம்.ஜி.ஆர் பொறுமையாக காத்திருப்பாராம். எம்.ஜி.ஆருக்கு கடுப்பு தான், ஆனால் வேறு வழியில்லையே. அதனால் பொறுத்துக் கொண்டார். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றிப்படங்களை அளித்து தன்னை உச்ச நட்சத்திரமாக மீண்டும் உயர்த்திக்கொண்டார் எம்.ஜி.ஆர். இருந்தாலும் சரோஜா தேவி அப்போதும் எம்.ஜி.ஆரின் கைகளுக்குள் எப்போதும் சிக்கிக் கிடக்காத பட்டாம்பூச்சியாகவே இருந்தார்.


இதன் பிறகே ஜெயலலிதாவின் வருகை தமிழில் “வெண்ணிற ஆடையுடன்” நிகழ்கிறது. எம்.ஜி.ஆர் அதற்கு முன்னே அவரை கவனித்து 1965இல் தன் “ஆயிரத்தில் ஒருவனில்” நாயகி ஆக்குகிறார் (ஜெயலலிதாவுக்கு முதலில் வெளியான படம் அது.) அப்போது ஜெயலலிதாவுக்கு வயது 17 (பார்க்க அதைவிட இளமையாக இருப்பார்.) எம்.ஜி.ஆருக்கோ வயது அப்போது 48. 31 வயது வித்தியாசம் இருவருக்கும் இடையே. அப்போது அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஒரு கருத்தை பகிர்ந்து கொள்கிறார்: “என்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு விரைவில் வயதாகி விடுகிறது. ஆனால் எனக்கோ வயதாக ஆக இளமை திரும்புகிறது. அதனால் இனி இது போல இளம் நடிகைகளுடன் மட்டுமே நடிக்கப் போகிறேன்.” என்ன குசும்பு பாருங்கள். சொன்னது போன்றே எம்.ஜி.ஆர் சரோஜா தேவிக்கு வாய்ப்புகளை அவர் அடுத்து அளிக்கவில்லை. (தயாரிப்பாளரின் வலியுறுத்தலால் மட்டும் “அன்பே வா” படத்தில் மீண்டும் சரோஜா தேவியுடன் இணைந்தார்.) ஜெயலலிதாவுடன் தொடர்ந்து அவர் நடிக்க, ஜெயலலிதா ஒரு உச்ச நட்சத்திரமாகிறார். 


எம்.ஜி.ஆரின் இந்த தேர்வைப் பற்றி யோசிக்கையில் ஒன்று தோன்றுகிறது. எம்.ஜி.ஆர் தன் செல்வாக்கின் உச்சத்தின் இருந்த போது அவருக்கு வயதாகி விடுகிறது. அது குறித்த ஒரு தாழ்வுணர்வு அவருக்கு அதிகமாக இருந்திருக்க வேண்டும். அதை யாரும் குறிப்பிடாலாகாது என அவர் கவனமாக இருக்கிறார். ஆக, “எனக்கு போகப் போக இளமை அதிகமாகிறது” என கூறிக்கொண்டே அவரே அதை நம்பவும் முயல்கிறார். அவருடன் இருந்த ஜால்ராக்களும் அதை ஊக்கப்படுத்தி இருப்பார்கள். ஆனால் அவருக்கு இன்னொரு பக்கம் தன் வயசான தோற்றம் உறுத்தியபடியும் இருக்கிறது. இதை ஈடு கட்ட அவர் 18 வயதுக்குள்ளான, அவருடைய மகளின் தோற்றம் உள்ள பெண்களுடன் நடிக்கத் தொடங்குகிறார். அந்த காலத்தில் துடிப்பான இளம் நடிகர்களாக இருந்த ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றோருடன் போட்டி போடவும் செய்கிறார் எம்.ஜி.ஆர். இப்போது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது, ஆனால் அன்று இந்த கோணங்கித்தனங்களை அவர் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டு செய்திருக்கிறார். பின்னர் இதையே இப்போது தமிழில் ரஜினி, கமல், மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்களும் பின்பற்றுகிறார்கள். மோகன்லால் கூடுதலாக முகத்தசைகளுக்கு அறுவை சிகிச்சை பண்ணிக் கொண்டு அது சொதப்பிட உணர்ச்சிகளை முகத்தில் காட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. ஆனாலும் அவர் இளம்பெண்களுடன் இன்னும் நடனமாடத் தான் செய்கிறார்.


வணிக சினிமாவில் இந்த 60, 70 வயதுக்காரர்களின் இளமை ஒரு தீராத பிரச்சனையாகவே இன்றும் தொடர்கிறது. 1960களில் ‘“இது வாலிப வயசு” என எம்.ஜி.ஆர் கூடுதலாக முறுக்கேற்றிக் கொண்டு ஆட்டம் போட்டு இப்பழக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...