முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம்.ஜி.ஆர்: இது வாலிப வயசு!





எம்.ஜி.ஆர் சரோஜா தேவியை தவிர்க்கத் தொடங்கி அந்த இடத்தில் ஜெயலலிதாவை கொண்டு வந்த கதையை நாம் அறிவோம். அது ஏன் என்பதன் பின்னால் எம்.ஜி.ஆரின் பாதுகாப்பின்மை குறித்த ஒரு கதை இருக்கிறது.


 சரோஜா தேவி எம்.ஜி.ஆரின் படத்தில் (நாடோடி மன்னன்) நாயகியாக அறிமுகமானாலும் தொடர்ந்து, விரைவில் தமிழில் பிரசித்தமான நடிகையாகிறார். துவக்கத்தில் பார்க்க கறுப்பாக, பேரழகிகளின் அங்க லட்சணங்கள் என தமிழ் சினிமாவில் நம்பப்படுகிற தோற்ற இயல்புகள் இல்லாமலே இருந்தார். அதனாலே அவரை நாயகி ஆக்க துவக்கத்தில் தயாரிப்பாளருக்கு அவநம்பிக்கை இருந்தது. எம்.ஜி.ஆருக்கு அவரை பிடித்துப் போக ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்க வைத்து ஓக்கே பண்ணுகிறார். எம்.ஜி.ஆரின் தேர்வும் கணிப்பும் பொய்க்கவில்லை. சரோஜா தேவி அந்த காலத்துக்கு கனவுக்கன்னியாக மாறுகிறார். முகம், கழுத்து, கைகள் என எங்கும் களிம்புகள் பூசி தன்னை பளிச்சென்று மாற்ற முயன்று, அந்த ஒயிலான நடை, சிங்காரமான வெட்டு, தளுக்கு, கொஞ்சல் மொழி ஆகியவை கொண்டு ரசிகர்களை நிரந்தரமாக தொந்தர்வுக்குள்ளாக்கும் கனவு நாயகி ஆகிறார். ஆனால் அவருடைய நிறம் துவங்கி அவர் நடக்கிற பாணி (ஏன் ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு நடக்கிறார் என தயாரிப்பாளர் கேட்கிறார்), கன்னட சாயல் அதிகம் கொண்ட தமிழ் ஆகியவை பிரச்சனைகளாக ஆரம்பத்தில் பார்க்கப்பட்டு பின்பு அவற்றினாலே அவர் வெகுவாக சிலாகிக்கப்படும் நிலைக்கு விரைவில் வருகிறார். 


ஆனால் இதே சரோஜா தேவி சாமர்த்தியமாக தன் தொழில் வாழ்வையும் அமைத்துக் கொள்கிறார். எம்.ஜி.ஆரின் தோட்டத்து முல்லையாக மட்டும் இருக்க மறுக்கிறார். அதுவும் எம்.ஜி.ஆருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஓய்வில் இருந்த ஓராண்டில் அவருடைய படங்கள் முடங்கிப் போகின்றன. திரும்ப வரும் எம்.ஜி.ஆரால் சிவாஜிக்கு ஈடாக வெற்றிப்படங்களை உடனடியாக அளிக்க முடியவில்லை. படங்களை நேரத்துக்கு முடிக்காமல் தாமதித்து தயாரிப்பாளர்களை நட்டமடைய வைக்கிறார் எனும் குற்றச்சாட்டு எல்லா திசைகளிலும் எழுகிறது. ஆனால் இந்த ஓராண்டுக்குள் சரோஜா தேவி சிவாஜி “கல்யாண பரிசு”, “பாகப்பிரிவினை”, “கைராசி” உள்ளிட்ட வேறு நாயகர்களின் வெற்றிப்படங்களில் நடித்து தமிழகம் முழுக்க பிரபலமாகிறார். எம்.ஜி.ஆர் திரும்ப வரும் போது தான் ஆரம்பத்தில் பார்த்த சரோஜா தேவி அல்ல இவர் எனப் புரிந்து கொள்கிறார். காலை முதல் மாலை வரை சிவாஜியின் படத்து வேலையை முடித்து விட்டு மாலையில் அவர் எம்.ஜி.ஆரின் “திருடாதேவுக்கான” படத்தளத்துக்கு வருவார். அப்போது அவருடனான காட்சிகளில் நடிப்பதற்காக ஒருநாள் முழுக்க எம்.ஜி.ஆர் பொறுமையாக காத்திருப்பாராம். எம்.ஜி.ஆருக்கு கடுப்பு தான், ஆனால் வேறு வழியில்லையே. அதனால் பொறுத்துக் கொண்டார். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றிப்படங்களை அளித்து தன்னை உச்ச நட்சத்திரமாக மீண்டும் உயர்த்திக்கொண்டார் எம்.ஜி.ஆர். இருந்தாலும் சரோஜா தேவி அப்போதும் எம்.ஜி.ஆரின் கைகளுக்குள் எப்போதும் சிக்கிக் கிடக்காத பட்டாம்பூச்சியாகவே இருந்தார்.


இதன் பிறகே ஜெயலலிதாவின் வருகை தமிழில் “வெண்ணிற ஆடையுடன்” நிகழ்கிறது. எம்.ஜி.ஆர் அதற்கு முன்னே அவரை கவனித்து 1965இல் தன் “ஆயிரத்தில் ஒருவனில்” நாயகி ஆக்குகிறார் (ஜெயலலிதாவுக்கு முதலில் வெளியான படம் அது.) அப்போது ஜெயலலிதாவுக்கு வயது 17 (பார்க்க அதைவிட இளமையாக இருப்பார்.) எம்.ஜி.ஆருக்கோ வயது அப்போது 48. 31 வயது வித்தியாசம் இருவருக்கும் இடையே. அப்போது அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஒரு கருத்தை பகிர்ந்து கொள்கிறார்: “என்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு விரைவில் வயதாகி விடுகிறது. ஆனால் எனக்கோ வயதாக ஆக இளமை திரும்புகிறது. அதனால் இனி இது போல இளம் நடிகைகளுடன் மட்டுமே நடிக்கப் போகிறேன்.” என்ன குசும்பு பாருங்கள். சொன்னது போன்றே எம்.ஜி.ஆர் சரோஜா தேவிக்கு வாய்ப்புகளை அவர் அடுத்து அளிக்கவில்லை. (தயாரிப்பாளரின் வலியுறுத்தலால் மட்டும் “அன்பே வா” படத்தில் மீண்டும் சரோஜா தேவியுடன் இணைந்தார்.) ஜெயலலிதாவுடன் தொடர்ந்து அவர் நடிக்க, ஜெயலலிதா ஒரு உச்ச நட்சத்திரமாகிறார். 


எம்.ஜி.ஆரின் இந்த தேர்வைப் பற்றி யோசிக்கையில் ஒன்று தோன்றுகிறது. எம்.ஜி.ஆர் தன் செல்வாக்கின் உச்சத்தின் இருந்த போது அவருக்கு வயதாகி விடுகிறது. அது குறித்த ஒரு தாழ்வுணர்வு அவருக்கு அதிகமாக இருந்திருக்க வேண்டும். அதை யாரும் குறிப்பிடாலாகாது என அவர் கவனமாக இருக்கிறார். ஆக, “எனக்கு போகப் போக இளமை அதிகமாகிறது” என கூறிக்கொண்டே அவரே அதை நம்பவும் முயல்கிறார். அவருடன் இருந்த ஜால்ராக்களும் அதை ஊக்கப்படுத்தி இருப்பார்கள். ஆனால் அவருக்கு இன்னொரு பக்கம் தன் வயசான தோற்றம் உறுத்தியபடியும் இருக்கிறது. இதை ஈடு கட்ட அவர் 18 வயதுக்குள்ளான, அவருடைய மகளின் தோற்றம் உள்ள பெண்களுடன் நடிக்கத் தொடங்குகிறார். அந்த காலத்தில் துடிப்பான இளம் நடிகர்களாக இருந்த ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றோருடன் போட்டி போடவும் செய்கிறார் எம்.ஜி.ஆர். இப்போது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது, ஆனால் அன்று இந்த கோணங்கித்தனங்களை அவர் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டு செய்திருக்கிறார். பின்னர் இதையே இப்போது தமிழில் ரஜினி, கமல், மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்களும் பின்பற்றுகிறார்கள். மோகன்லால் கூடுதலாக முகத்தசைகளுக்கு அறுவை சிகிச்சை பண்ணிக் கொண்டு அது சொதப்பிட உணர்ச்சிகளை முகத்தில் காட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. ஆனாலும் அவர் இளம்பெண்களுடன் இன்னும் நடனமாடத் தான் செய்கிறார்.


வணிக சினிமாவில் இந்த 60, 70 வயதுக்காரர்களின் இளமை ஒரு தீராத பிரச்சனையாகவே இன்றும் தொடர்கிறது. 1960களில் ‘“இது வாலிப வயசு” என எம்.ஜி.ஆர் கூடுதலாக முறுக்கேற்றிக் கொண்டு ஆட்டம் போட்டு இப்பழக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.