Skip to main content

எம்.ஜி.ஆர்: இது வாலிப வயசு!





எம்.ஜி.ஆர் சரோஜா தேவியை தவிர்க்கத் தொடங்கி அந்த இடத்தில் ஜெயலலிதாவை கொண்டு வந்த கதையை நாம் அறிவோம். அது ஏன் என்பதன் பின்னால் எம்.ஜி.ஆரின் பாதுகாப்பின்மை குறித்த ஒரு கதை இருக்கிறது.


 சரோஜா தேவி எம்.ஜி.ஆரின் படத்தில் (நாடோடி மன்னன்) நாயகியாக அறிமுகமானாலும் தொடர்ந்து, விரைவில் தமிழில் பிரசித்தமான நடிகையாகிறார். துவக்கத்தில் பார்க்க கறுப்பாக, பேரழகிகளின் அங்க லட்சணங்கள் என தமிழ் சினிமாவில் நம்பப்படுகிற தோற்ற இயல்புகள் இல்லாமலே இருந்தார். அதனாலே அவரை நாயகி ஆக்க துவக்கத்தில் தயாரிப்பாளருக்கு அவநம்பிக்கை இருந்தது. எம்.ஜி.ஆருக்கு அவரை பிடித்துப் போக ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்க வைத்து ஓக்கே பண்ணுகிறார். எம்.ஜி.ஆரின் தேர்வும் கணிப்பும் பொய்க்கவில்லை. சரோஜா தேவி அந்த காலத்துக்கு கனவுக்கன்னியாக மாறுகிறார். முகம், கழுத்து, கைகள் என எங்கும் களிம்புகள் பூசி தன்னை பளிச்சென்று மாற்ற முயன்று, அந்த ஒயிலான நடை, சிங்காரமான வெட்டு, தளுக்கு, கொஞ்சல் மொழி ஆகியவை கொண்டு ரசிகர்களை நிரந்தரமாக தொந்தர்வுக்குள்ளாக்கும் கனவு நாயகி ஆகிறார். ஆனால் அவருடைய நிறம் துவங்கி அவர் நடக்கிற பாணி (ஏன் ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு நடக்கிறார் என தயாரிப்பாளர் கேட்கிறார்), கன்னட சாயல் அதிகம் கொண்ட தமிழ் ஆகியவை பிரச்சனைகளாக ஆரம்பத்தில் பார்க்கப்பட்டு பின்பு அவற்றினாலே அவர் வெகுவாக சிலாகிக்கப்படும் நிலைக்கு விரைவில் வருகிறார். 


ஆனால் இதே சரோஜா தேவி சாமர்த்தியமாக தன் தொழில் வாழ்வையும் அமைத்துக் கொள்கிறார். எம்.ஜி.ஆரின் தோட்டத்து முல்லையாக மட்டும் இருக்க மறுக்கிறார். அதுவும் எம்.ஜி.ஆருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஓய்வில் இருந்த ஓராண்டில் அவருடைய படங்கள் முடங்கிப் போகின்றன. திரும்ப வரும் எம்.ஜி.ஆரால் சிவாஜிக்கு ஈடாக வெற்றிப்படங்களை உடனடியாக அளிக்க முடியவில்லை. படங்களை நேரத்துக்கு முடிக்காமல் தாமதித்து தயாரிப்பாளர்களை நட்டமடைய வைக்கிறார் எனும் குற்றச்சாட்டு எல்லா திசைகளிலும் எழுகிறது. ஆனால் இந்த ஓராண்டுக்குள் சரோஜா தேவி சிவாஜி “கல்யாண பரிசு”, “பாகப்பிரிவினை”, “கைராசி” உள்ளிட்ட வேறு நாயகர்களின் வெற்றிப்படங்களில் நடித்து தமிழகம் முழுக்க பிரபலமாகிறார். எம்.ஜி.ஆர் திரும்ப வரும் போது தான் ஆரம்பத்தில் பார்த்த சரோஜா தேவி அல்ல இவர் எனப் புரிந்து கொள்கிறார். காலை முதல் மாலை வரை சிவாஜியின் படத்து வேலையை முடித்து விட்டு மாலையில் அவர் எம்.ஜி.ஆரின் “திருடாதேவுக்கான” படத்தளத்துக்கு வருவார். அப்போது அவருடனான காட்சிகளில் நடிப்பதற்காக ஒருநாள் முழுக்க எம்.ஜி.ஆர் பொறுமையாக காத்திருப்பாராம். எம்.ஜி.ஆருக்கு கடுப்பு தான், ஆனால் வேறு வழியில்லையே. அதனால் பொறுத்துக் கொண்டார். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றிப்படங்களை அளித்து தன்னை உச்ச நட்சத்திரமாக மீண்டும் உயர்த்திக்கொண்டார் எம்.ஜி.ஆர். இருந்தாலும் சரோஜா தேவி அப்போதும் எம்.ஜி.ஆரின் கைகளுக்குள் எப்போதும் சிக்கிக் கிடக்காத பட்டாம்பூச்சியாகவே இருந்தார்.


இதன் பிறகே ஜெயலலிதாவின் வருகை தமிழில் “வெண்ணிற ஆடையுடன்” நிகழ்கிறது. எம்.ஜி.ஆர் அதற்கு முன்னே அவரை கவனித்து 1965இல் தன் “ஆயிரத்தில் ஒருவனில்” நாயகி ஆக்குகிறார் (ஜெயலலிதாவுக்கு முதலில் வெளியான படம் அது.) அப்போது ஜெயலலிதாவுக்கு வயது 17 (பார்க்க அதைவிட இளமையாக இருப்பார்.) எம்.ஜி.ஆருக்கோ வயது அப்போது 48. 31 வயது வித்தியாசம் இருவருக்கும் இடையே. அப்போது அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஒரு கருத்தை பகிர்ந்து கொள்கிறார்: “என்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு விரைவில் வயதாகி விடுகிறது. ஆனால் எனக்கோ வயதாக ஆக இளமை திரும்புகிறது. அதனால் இனி இது போல இளம் நடிகைகளுடன் மட்டுமே நடிக்கப் போகிறேன்.” என்ன குசும்பு பாருங்கள். சொன்னது போன்றே எம்.ஜி.ஆர் சரோஜா தேவிக்கு வாய்ப்புகளை அவர் அடுத்து அளிக்கவில்லை. (தயாரிப்பாளரின் வலியுறுத்தலால் மட்டும் “அன்பே வா” படத்தில் மீண்டும் சரோஜா தேவியுடன் இணைந்தார்.) ஜெயலலிதாவுடன் தொடர்ந்து அவர் நடிக்க, ஜெயலலிதா ஒரு உச்ச நட்சத்திரமாகிறார். 


எம்.ஜி.ஆரின் இந்த தேர்வைப் பற்றி யோசிக்கையில் ஒன்று தோன்றுகிறது. எம்.ஜி.ஆர் தன் செல்வாக்கின் உச்சத்தின் இருந்த போது அவருக்கு வயதாகி விடுகிறது. அது குறித்த ஒரு தாழ்வுணர்வு அவருக்கு அதிகமாக இருந்திருக்க வேண்டும். அதை யாரும் குறிப்பிடாலாகாது என அவர் கவனமாக இருக்கிறார். ஆக, “எனக்கு போகப் போக இளமை அதிகமாகிறது” என கூறிக்கொண்டே அவரே அதை நம்பவும் முயல்கிறார். அவருடன் இருந்த ஜால்ராக்களும் அதை ஊக்கப்படுத்தி இருப்பார்கள். ஆனால் அவருக்கு இன்னொரு பக்கம் தன் வயசான தோற்றம் உறுத்தியபடியும் இருக்கிறது. இதை ஈடு கட்ட அவர் 18 வயதுக்குள்ளான, அவருடைய மகளின் தோற்றம் உள்ள பெண்களுடன் நடிக்கத் தொடங்குகிறார். அந்த காலத்தில் துடிப்பான இளம் நடிகர்களாக இருந்த ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றோருடன் போட்டி போடவும் செய்கிறார் எம்.ஜி.ஆர். இப்போது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது, ஆனால் அன்று இந்த கோணங்கித்தனங்களை அவர் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டு செய்திருக்கிறார். பின்னர் இதையே இப்போது தமிழில் ரஜினி, கமல், மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்களும் பின்பற்றுகிறார்கள். மோகன்லால் கூடுதலாக முகத்தசைகளுக்கு அறுவை சிகிச்சை பண்ணிக் கொண்டு அது சொதப்பிட உணர்ச்சிகளை முகத்தில் காட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. ஆனாலும் அவர் இளம்பெண்களுடன் இன்னும் நடனமாடத் தான் செய்கிறார்.


வணிக சினிமாவில் இந்த 60, 70 வயதுக்காரர்களின் இளமை ஒரு தீராத பிரச்சனையாகவே இன்றும் தொடர்கிறது. 1960களில் ‘“இது வாலிப வயசு” என எம்.ஜி.ஆர் கூடுதலாக முறுக்கேற்றிக் கொண்டு ஆட்டம் போட்டு இப்பழக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...