முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!



இந்த ஆண்டு எனக்கு சற்று கூடுதல் தெளிவு மனிதர்களைப் பற்றி கிடைத்திருக்கிறது. அது என் வாசிப்பிலும் அனுபவத்திலும் இருந்து கிட்டியது.


 நாமே தேடிச் செல்லாவிட்டாலும் துன்பம் வரும் போது கூடவே உதவிக்கு நண்பர்களும் வருவார்கள் எனும் இதமான நம்பிக்கையும் கிடைத்தது. 


பெங்களூருக்கு வந்த பிறகு பலவிதமான நண்பர்களை, வாசகர்களை, மனிதர்களை சந்தித்து அளவளாவுவது வெகுவாக குறைந்து போனாலும் நிறைய வாசித்திருக்கிறேன். குறிப்பாக தத்துவத்திலும் இலக்கியத்திலும். அந்த விதத்தில் மகிழ்ச்சி. புதிய விசயங்களைக் கற்றுக் கொள்வது எப்போதும் தித்திப்பானது அல்லவா! கூடவே ஒரு பிரச்சனையை தர்க்கரீதியாக பகுப்பாய்வு செய்ய தத்துவ வாசிப்பு உதவியுள்ளது. இலக்கியத்தில் ஐரோப்பிய, அமெரிக்க, பின்நவீன இலக்கியம் நோக்கி கவனத்தை செலுத்தினேன். இதை அடுத்து, கதைத்தொழில் நுட்பம் சார்ந்து நிறைய வாசித்தேன், சிந்தித்தேன்; இயன்றால் அடுத்த வருடத்திற்குள் நாவல், திரைக்கதை ஆகிய வடிவங்களின் கதைத்தொழில் நுட்பத்தை விளக்குகிற புத்தகங்களை எழுதுவேன். அதே போல 2022-23 ஆண்டுகளில், அமெரிக்க பல்கலைகளில் உள்ள BFA in Creative Writing பாணியில் நாவல், சிறுகதை, திரைக்கதை ஆகியவற்றை எழுதப் பயிற்சியளிக்கும் பாடத்திட்டங்களை உருவாக்கி (கல்லூரியில்) கற்பிக்கும் திட்டமும் உள்ளது.


 இதுவரை உணர்ச்சிகரமாகவும், கருத்து, மனவோட்டம் சார்ந்தும் மட்டுமே கதைகளைப் பார்த்து வந்த எனக்கு இப்படி புறவயமாக பார்ப்பது, பரிசீலிப்பது ஜாலியாக இருக்கிறது. கதைகளை வடிவம் சார்ந்து புரிந்து கொள்ளும், திட்டமிடும் திறனை இது எனக்கு அளித்துள்ளது. நான் எழுதிக் கைவிட்ட நாவல்களில் செய்த தவறுகள் என்ன, எழுதி வரும் நாவலில் செய்ய வேண்டிய திருத்தங்கள் என்னவென யோசிக்கிற பக்குவம் கிடைத்திருக்கிறது.


பெங்களூருக்கு வந்த பின்னர் முன்பை விட அதிகமாக எழுதி இருக்கிறேன். விசித்திரமாக, வாழ்க்கையில் குறைவான மகிழ்ச்சியுடன், அதிருப்தியுடன், அதிக தனிமையில் இருந்தாலும் என் வாசிப்பு, எழுத்து செயல்பாடுகள் மேம்பட்டிருக்கின்றன.


இந்த வருடம் லாக் டவுன் காரணமாகவும், உடலை கவனிப்பதில் அக்கறை காட்டாததாலும் நிறைய எடை போட்டு விட்டேன். இப்போது எழுதி வரும் நாவலை முடித்து விட்டு உடலை சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். 


இந்த வருட துவக்கத்தில் வாழ்வதில் சற்றும் அக்கறை இல்லாமல் இருந்தேன். எழுத்து மட்டுமே என்னை தொடர்ந்து செலுத்தியது. அந்த அவநம்பிக்கை சட்டென ஒரு நாள் போய் விட்டது. நம்பிக்கைகளின் ஊற்று பெருகியது. எல்லாம் ஷண நேரத்தில் தோன்றி மறைவது எனக் கற்றுக் கொண்டேன். அந்தந்த நேரத்தில் எப்படி ஒன்றிருக்கிறதோ அதைத் தாண்டி அதற்கு மதிப்போ நீடிக்கிற தன்மையோ இல்லை எனப் புரிந்து கொண்டேன். சுதந்திரம் என்பது அன்றன்றைக்குள், அந்தந்த மணிப்பொழுதுகளுக்குள் புழங்குவது மட்டுமே.


எதிர்காலம் குறித்து கனவு காணலாம். ஆனால் அது ஒரு கிளுகிளுப்பாக ஆறுதலுக்காக மட்டுமே. நம்மால் செய்ய முடிவதெல்லாம் அன்றாடத்தை அர்த்தபூர்வமாக வைத்துக் கொள்வது மட்டுமே. அதுவே நாமும் நம்மைச் சுற்றியுள்ளோரும் சமூகமும் உருவாக்கித் தரும் சட்டகத்தினுள் இருந்தபடி, தரப்பட்ட பாத்திரத்துக்குள் சரியாக நடித்தபடி மட்டுமே சாத்தியம்.


 இந்த உலகம் ஒரு மிகப்பெரிய புனைவு என்றால் அதனுள் சின்னச் சின்ன கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றைத் தேர்ந்து சரிவர பொருந்திக் கொள்வது மட்டுமே நம்மால் செய்ய முடிந்தது. அப்போதும் கதை என்ன, அதன் அமைப்பு, போக்கு, எந்த கடையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனப் புரிந்து கொண்டு இயங்கினால், நமதான ஒரு அர்த்தத்தை அதற்கு கொடுக்கவும் முடிந்தால் மட்டுமே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட நடிப்பவரோ காட்சியை அமைப்பவரோ சொதப்பினால் கூட நாம் மேடைக்கு வெளியே தூக்கி வீசப்படுவோம். அப்போது மற்றொரு கதையை நாடிச் சென்று விட வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்கு உட்பட்ட நிகழ்த்து கலை எனும் புரிதல் அவசியம் என நினைக்கிறேன். 

இதைத் தாண்டி எவருக்கும், எதற்கும் மதிப்பில்லை.

இது நான் கண்டடைந்த மற்றொரு புரிதல். 


வரும் ஆண்டும் நமக்கு சிறப்பாக அமையட்டும். கொண்டாடுவோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...