முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உருட்டின் உளவியல்



நாம் இன்று அதிகம் பயன்படுத்தும் சொல் “உருட்டு” என்றும், அநேகமாக எல்லாவித சந்தர்பங்களுக்கும் மரமண்டைத்தனமாக அச்சொல்லை நாம் பயன்படுத்துகிறோம் என அண்மையில் மனுஷ் ஒரு கவிதையில் கூறியிருந்தார். கடந்த சில ஆண்டுகளில் நிச்சயமாக இச்சொல்லின் பயன்பாடு அதிகரித்துள்ளது உண்மையே. ஆனால் அதற்கான தேவையும் ஏற்பட்டுள்ளது.


சமூகவலைதளங்களின் வருகை இன்று எல்லா விசயங்களை நோக்கியும் கருத்து கூறும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கி இருக்கிறது. பிரபலங்கள், அதிகாரவர்க்கத்தினர் மனம் திறந்து பேசினால் அது உடனே சர்ச்சையாகிறது. ஏனென்றால் டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் அதை கிழித்து தொங்க போட்டு விடுகிறார்கள். இது ஒரு செயற்கையான சூழலை உருவாக்கி இருக்கிறது. எல்லாரையும் மனதுக்குப் பட்டதை விட யாரும் புண்படாத வகையான கருத்துக்களையே சொல்லுகிறார்கள். அப்படி ஒரு கருத்து எங்கும் இல்லை என்பதால் நேரடியான பதில்களை தவிர்த்து “உருட்டுகிறார்கள்”. உருட்டுதல் என்பது ஒரு பொருள் “சம்மந்தமில்லாமல் பொத்தாம்பொதுவாக பேசுவது.” நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், ஊடக நெறியாளர்கள் என எல்லாருமே உருட்டிக் கொண்டே போகிறார்கள்.


உருட்டுவதன் மற்றொரு அர்த்தம் தவறு நம் மீது இருக்கும் போதும் அதை ஏற்காமல் வெற்றாய் நியாயப்படுத்துவது. சும்மா எதையாவது சொல்லி தான் தன்னம்பிக்கையுடன் இருப்பதாக காட்டிக் கொள்வது. அமைச்சர்கள், கட்சியின் ஊடக பிரதிநிதிகள் போன்றோர் இதை அதிகமாக செய்கிறார்கள்.


இப்படி இருவிதமான உருட்டல்களுக்கும் காரணமே நாம் என்கிற போதும், அதிகமாக சமூகவலைதளங்களில் உருட்டுவதும் நாம் தான். ஒரே வித்தியாசம் சமூகவலைதளத்தில் ஒரு பொதுவான போக்கு உருவாகும் போது அதன் திசையில் அங்கபிரதட்சணம் செய்வது போல உருள்வதே நமது வழக்கம். ஒரு பக்கம் மற்றவர்கள் உருட்டும் போது அவர்களைக் கிழிக்கிற நாமே நம்மை பிறர் தப்பாக நினைக்கக் கூடாது எனும் எண்ணி உருள்கிறோம்.


உருட்டுவதன் இன்னொரு வகைமை ஒரு மோசமான விசயத்தை வெல்லத்தில் முக்கி அது மிகவும் சிறந்தது என மிகைக்கப்படுத்தி காட்டுவது. அதாவது ஒவ்வொரு வினாடியையும் பாஸிட்டிவ்வாக “வாவ் சூப்பர் சூப்பர்” என்று பாராட்டிக் கொண்டு செல்வது. இன்று ஊடகங்களில் நெறியாளர்கள், தொகுப்பாளர்கள், வர்ணனையாளர்களாக உள்ளவர்கள் இதை அதிகமாக செய்கிறார்கள். மிக சலிப்பான ஒரு நிகழ்ச்சியை அவர்கள் சுவாரஸ்யமானதாக்க இப்படி கிடந்து உருள்கிறார்கள். மிக அலுப்பான ஒரு போட்டியை முன்பு வர்ணனை செய்தவர்கள் தமது மனநிலையை வெளிக்காட்ட தயங்கியதில்லை. ஜெப்ரி பாய்கட், கவாஸ்கர், சேப்பல் போன்றோர் அப்படி வெளிப்படையாக இருந்தார்கள். ஆனால் இன்றைய வர்ணனையாளர்கள் அப்படி நேர்மையாக இருக்க அஞ்சுகிறார்கள் - எங்கே பார்வையாளர்கள் சேனலை மாற்றி விடுவார்களோ எனும் பயம். அது அவர்களை சியர் கெர்ள்ஸாக மாற்றி விடுகிறது.


இந்த உருட்டை ஊடகங்களில், சமூகவலைதளத்தில் மட்டுமல்ல நேர் வாழ்க்கையிலும் தான் செய்கிறோம். முன்பு இல்லாதளவுக்கு நாம் எல்லாரிடம் “ஹவ் ஆர் யூ” என்று வினவுகிறோம். கேட்கப்பட்டவர்கள் கடும் ஜுரத்தில் இருந்தால் கூட “நல்லா இருக்கேன்” என்கிறார். கேட்கிறவர் கடும் மனச்சோர்வில் இருந்தால் கூட “நானும் நல்லா இருக்கேன்” என்கிறார்கள். மிக மோசமான செய்தியைக் கேட்டால் கூட முகத்தில் ஒரு புன்னகையை வருவித்துக் கொண்டு “நோ பிறாப்ளம்” என்கிறார்கள், உள்ளுக்குள் அழுதபடியே. நாம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறோம், உண்மையை நம் உடல்மொழியிலோ பேச்சிலோ காட்டினால் வேலைக்கு ஆபத்தாகி என அஞ்சுகிறோம்.

இன்னொரு பக்கம், விமர்சிப்பவர்கள், கேள்வி கேட்பவர்கள், வாதிடுபவர்களை நாம் எல்லா இடங்களிலும் வெறுக்க ஆரம்பித்திருக்கிறோம். ஏனென்றால் ஒரு சிறிய எதிர்கேள்வியை கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு கூருணர்வு மிக்கவர்களாகி விட்டோம். நம்மை சதா பிறர் புகழ்ந்தபடியே இருக்க வேண்டும் என விரும்புகிறோம். பத்து நிமிடம் நம்மை யாராவது புகழாவிடில் கூட பதற்றமாகி சுற்றுமுற்றும் பார்க்கிறோம். யாரிடமாவது போய் இளித்துக் கொண்டு “ஹவ் ஆர் யு?” என்று நிற்கிறோம். சுயபிம்ப நிர்வாகத்தில் இந்தளவுக்கு பிரக்ஞையுடன் நாம் முன்பு இருந்ததில்லை. 


 இந்த மனநிலை வேலையிடத்தில் என்றில்லை சாலையில் போகும் போது, நமது குடியிருப்பில் அண்டை வீட்டாரிடம் பேசும் போது கூட வெளிப்படுகிறது. வெறுமை, கடன் தொல்லை, மனைவி / கணவனுடன் பிரச்சனை என பல அழுத்தங்கள் இருக்கும். வீட்டில் பெரிய சண்டை நடந்திருக்கும், யாரோ தூக்கு மாட்ட முயன்று நீங்கள் காப்பாற்றி இருப்பீர்கள். ஆனால் வெளியே வந்ததும் அண்டை வீட்டுக்காரரைப் பார்த்ததும் “ஹலோ ஹவ் ஆர் யு? ஐ ஆம் பைன்” என ஆரம்பித்து விடுவீர்கள். கோபத்தை காட்ட, ஒரு துளி கண்ணீர் விட நாம் இப்போது போல வேறெப்போதும் அஞ்சியதில்லை. கக்கூஸில் இருக்கையில் தவிர வேறில்லா இடங்களிலும் இந்த உருட்டு நம்மை இளிச்சவாயன்களாக்கி விட்டது.

 

இன்று உலகில் உருட்டாமல் இருக்கிற ஒரே இனம் வலதுசாரிகள் தாம். அவர்களுக்கு தமக்கு கெட்ட பெயர் ஏற்படுவது பற்றி, தம்மை வெறுப்பாளர்கள், குறுகின எண்ணம் படைத்தவர்கள், பிரிவினைவாதிகள், அடிமுட்டாள்கள் என்று யார் நினைத்தாலும் கவலையில்ல. அமெரிக்காவில் டிரம்பின் கட்சியினரில் இருந்து பாஜகவினர் வரை பாருங்கள். எப்போதாவது தமது தவறுக்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார்களா? போர்ன் காணொலியை பார்த்தாக மாட்டிக் கொண்ட வலதுசாரி எம்.எல்.ஏக்கள் தம்மை நியாயப்படுத்த முயன்றதில்லை. கே.டி ராகவன் எவ்வளவு தான் அசிங்கப்பட்டாலும் கடைசி வரை “உருட்டவில்லை”. எவ்வளவு டுரோல் செய்யப்பட்டாலும் மதுவந்தி தன்னை மாற்றிக் கொள்வதில்லை. தமது எத்தனையோ பொய்கள், புரட்டுகள் அம்பலப்படுத்தப்பட்டாலும் சங்கிகள் “உருட்டுவதில்லை” - சொன்ன பொய்யிலே, வெறுப்புவாத கருத்திலே ஊன்றி நிற்கிறார்கள். 


ஏன் அவர்கள் மட்டும் இப்படி இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை - ஒருவேளை உலகமே ஒரே சமயம் உருட்டுவதன் இயற்கையான எதிர்வினையாக இவர்கள் மட்டும் இன்னொரு எதிர்முனைக்குப் போய் வெட்கம் மானமற்று நடந்து கொள்கிறார்களா?

 உருட்டின் எதிர்மை தான் துணிச்சலான புரட்டா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...