Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

உருட்டின் உளவியல்



நாம் இன்று அதிகம் பயன்படுத்தும் சொல் “உருட்டு” என்றும், அநேகமாக எல்லாவித சந்தர்பங்களுக்கும் மரமண்டைத்தனமாக அச்சொல்லை நாம் பயன்படுத்துகிறோம் என அண்மையில் மனுஷ் ஒரு கவிதையில் கூறியிருந்தார். கடந்த சில ஆண்டுகளில் நிச்சயமாக இச்சொல்லின் பயன்பாடு அதிகரித்துள்ளது உண்மையே. ஆனால் அதற்கான தேவையும் ஏற்பட்டுள்ளது.


சமூகவலைதளங்களின் வருகை இன்று எல்லா விசயங்களை நோக்கியும் கருத்து கூறும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கி இருக்கிறது. பிரபலங்கள், அதிகாரவர்க்கத்தினர் மனம் திறந்து பேசினால் அது உடனே சர்ச்சையாகிறது. ஏனென்றால் டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் அதை கிழித்து தொங்க போட்டு விடுகிறார்கள். இது ஒரு செயற்கையான சூழலை உருவாக்கி இருக்கிறது. எல்லாரையும் மனதுக்குப் பட்டதை விட யாரும் புண்படாத வகையான கருத்துக்களையே சொல்லுகிறார்கள். அப்படி ஒரு கருத்து எங்கும் இல்லை என்பதால் நேரடியான பதில்களை தவிர்த்து “உருட்டுகிறார்கள்”. உருட்டுதல் என்பது ஒரு பொருள் “சம்மந்தமில்லாமல் பொத்தாம்பொதுவாக பேசுவது.” நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், ஊடக நெறியாளர்கள் என எல்லாருமே உருட்டிக் கொண்டே போகிறார்கள்.


உருட்டுவதன் மற்றொரு அர்த்தம் தவறு நம் மீது இருக்கும் போதும் அதை ஏற்காமல் வெற்றாய் நியாயப்படுத்துவது. சும்மா எதையாவது சொல்லி தான் தன்னம்பிக்கையுடன் இருப்பதாக காட்டிக் கொள்வது. அமைச்சர்கள், கட்சியின் ஊடக பிரதிநிதிகள் போன்றோர் இதை அதிகமாக செய்கிறார்கள்.


இப்படி இருவிதமான உருட்டல்களுக்கும் காரணமே நாம் என்கிற போதும், அதிகமாக சமூகவலைதளங்களில் உருட்டுவதும் நாம் தான். ஒரே வித்தியாசம் சமூகவலைதளத்தில் ஒரு பொதுவான போக்கு உருவாகும் போது அதன் திசையில் அங்கபிரதட்சணம் செய்வது போல உருள்வதே நமது வழக்கம். ஒரு பக்கம் மற்றவர்கள் உருட்டும் போது அவர்களைக் கிழிக்கிற நாமே நம்மை பிறர் தப்பாக நினைக்கக் கூடாது எனும் எண்ணி உருள்கிறோம்.


உருட்டுவதன் இன்னொரு வகைமை ஒரு மோசமான விசயத்தை வெல்லத்தில் முக்கி அது மிகவும் சிறந்தது என மிகைக்கப்படுத்தி காட்டுவது. அதாவது ஒவ்வொரு வினாடியையும் பாஸிட்டிவ்வாக “வாவ் சூப்பர் சூப்பர்” என்று பாராட்டிக் கொண்டு செல்வது. இன்று ஊடகங்களில் நெறியாளர்கள், தொகுப்பாளர்கள், வர்ணனையாளர்களாக உள்ளவர்கள் இதை அதிகமாக செய்கிறார்கள். மிக சலிப்பான ஒரு நிகழ்ச்சியை அவர்கள் சுவாரஸ்யமானதாக்க இப்படி கிடந்து உருள்கிறார்கள். மிக அலுப்பான ஒரு போட்டியை முன்பு வர்ணனை செய்தவர்கள் தமது மனநிலையை வெளிக்காட்ட தயங்கியதில்லை. ஜெப்ரி பாய்கட், கவாஸ்கர், சேப்பல் போன்றோர் அப்படி வெளிப்படையாக இருந்தார்கள். ஆனால் இன்றைய வர்ணனையாளர்கள் அப்படி நேர்மையாக இருக்க அஞ்சுகிறார்கள் - எங்கே பார்வையாளர்கள் சேனலை மாற்றி விடுவார்களோ எனும் பயம். அது அவர்களை சியர் கெர்ள்ஸாக மாற்றி விடுகிறது.


இந்த உருட்டை ஊடகங்களில், சமூகவலைதளத்தில் மட்டுமல்ல நேர் வாழ்க்கையிலும் தான் செய்கிறோம். முன்பு இல்லாதளவுக்கு நாம் எல்லாரிடம் “ஹவ் ஆர் யூ” என்று வினவுகிறோம். கேட்கப்பட்டவர்கள் கடும் ஜுரத்தில் இருந்தால் கூட “நல்லா இருக்கேன்” என்கிறார். கேட்கிறவர் கடும் மனச்சோர்வில் இருந்தால் கூட “நானும் நல்லா இருக்கேன்” என்கிறார்கள். மிக மோசமான செய்தியைக் கேட்டால் கூட முகத்தில் ஒரு புன்னகையை வருவித்துக் கொண்டு “நோ பிறாப்ளம்” என்கிறார்கள், உள்ளுக்குள் அழுதபடியே. நாம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறோம், உண்மையை நம் உடல்மொழியிலோ பேச்சிலோ காட்டினால் வேலைக்கு ஆபத்தாகி என அஞ்சுகிறோம்.

இன்னொரு பக்கம், விமர்சிப்பவர்கள், கேள்வி கேட்பவர்கள், வாதிடுபவர்களை நாம் எல்லா இடங்களிலும் வெறுக்க ஆரம்பித்திருக்கிறோம். ஏனென்றால் ஒரு சிறிய எதிர்கேள்வியை கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு கூருணர்வு மிக்கவர்களாகி விட்டோம். நம்மை சதா பிறர் புகழ்ந்தபடியே இருக்க வேண்டும் என விரும்புகிறோம். பத்து நிமிடம் நம்மை யாராவது புகழாவிடில் கூட பதற்றமாகி சுற்றுமுற்றும் பார்க்கிறோம். யாரிடமாவது போய் இளித்துக் கொண்டு “ஹவ் ஆர் யு?” என்று நிற்கிறோம். சுயபிம்ப நிர்வாகத்தில் இந்தளவுக்கு பிரக்ஞையுடன் நாம் முன்பு இருந்ததில்லை. 


 இந்த மனநிலை வேலையிடத்தில் என்றில்லை சாலையில் போகும் போது, நமது குடியிருப்பில் அண்டை வீட்டாரிடம் பேசும் போது கூட வெளிப்படுகிறது. வெறுமை, கடன் தொல்லை, மனைவி / கணவனுடன் பிரச்சனை என பல அழுத்தங்கள் இருக்கும். வீட்டில் பெரிய சண்டை நடந்திருக்கும், யாரோ தூக்கு மாட்ட முயன்று நீங்கள் காப்பாற்றி இருப்பீர்கள். ஆனால் வெளியே வந்ததும் அண்டை வீட்டுக்காரரைப் பார்த்ததும் “ஹலோ ஹவ் ஆர் யு? ஐ ஆம் பைன்” என ஆரம்பித்து விடுவீர்கள். கோபத்தை காட்ட, ஒரு துளி கண்ணீர் விட நாம் இப்போது போல வேறெப்போதும் அஞ்சியதில்லை. கக்கூஸில் இருக்கையில் தவிர வேறில்லா இடங்களிலும் இந்த உருட்டு நம்மை இளிச்சவாயன்களாக்கி விட்டது.

 

இன்று உலகில் உருட்டாமல் இருக்கிற ஒரே இனம் வலதுசாரிகள் தாம். அவர்களுக்கு தமக்கு கெட்ட பெயர் ஏற்படுவது பற்றி, தம்மை வெறுப்பாளர்கள், குறுகின எண்ணம் படைத்தவர்கள், பிரிவினைவாதிகள், அடிமுட்டாள்கள் என்று யார் நினைத்தாலும் கவலையில்ல. அமெரிக்காவில் டிரம்பின் கட்சியினரில் இருந்து பாஜகவினர் வரை பாருங்கள். எப்போதாவது தமது தவறுக்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார்களா? போர்ன் காணொலியை பார்த்தாக மாட்டிக் கொண்ட வலதுசாரி எம்.எல்.ஏக்கள் தம்மை நியாயப்படுத்த முயன்றதில்லை. கே.டி ராகவன் எவ்வளவு தான் அசிங்கப்பட்டாலும் கடைசி வரை “உருட்டவில்லை”. எவ்வளவு டுரோல் செய்யப்பட்டாலும் மதுவந்தி தன்னை மாற்றிக் கொள்வதில்லை. தமது எத்தனையோ பொய்கள், புரட்டுகள் அம்பலப்படுத்தப்பட்டாலும் சங்கிகள் “உருட்டுவதில்லை” - சொன்ன பொய்யிலே, வெறுப்புவாத கருத்திலே ஊன்றி நிற்கிறார்கள். 


ஏன் அவர்கள் மட்டும் இப்படி இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை - ஒருவேளை உலகமே ஒரே சமயம் உருட்டுவதன் இயற்கையான எதிர்வினையாக இவர்கள் மட்டும் இன்னொரு எதிர்முனைக்குப் போய் வெட்கம் மானமற்று நடந்து கொள்கிறார்களா?

 உருட்டின் எதிர்மை தான் துணிச்சலான புரட்டா?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...