முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உருட்டின் உளவியல்



நாம் இன்று அதிகம் பயன்படுத்தும் சொல் “உருட்டு” என்றும், அநேகமாக எல்லாவித சந்தர்பங்களுக்கும் மரமண்டைத்தனமாக அச்சொல்லை நாம் பயன்படுத்துகிறோம் என அண்மையில் மனுஷ் ஒரு கவிதையில் கூறியிருந்தார். கடந்த சில ஆண்டுகளில் நிச்சயமாக இச்சொல்லின் பயன்பாடு அதிகரித்துள்ளது உண்மையே. ஆனால் அதற்கான தேவையும் ஏற்பட்டுள்ளது.


சமூகவலைதளங்களின் வருகை இன்று எல்லா விசயங்களை நோக்கியும் கருத்து கூறும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கி இருக்கிறது. பிரபலங்கள், அதிகாரவர்க்கத்தினர் மனம் திறந்து பேசினால் அது உடனே சர்ச்சையாகிறது. ஏனென்றால் டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் அதை கிழித்து தொங்க போட்டு விடுகிறார்கள். இது ஒரு செயற்கையான சூழலை உருவாக்கி இருக்கிறது. எல்லாரையும் மனதுக்குப் பட்டதை விட யாரும் புண்படாத வகையான கருத்துக்களையே சொல்லுகிறார்கள். அப்படி ஒரு கருத்து எங்கும் இல்லை என்பதால் நேரடியான பதில்களை தவிர்த்து “உருட்டுகிறார்கள்”. உருட்டுதல் என்பது ஒரு பொருள் “சம்மந்தமில்லாமல் பொத்தாம்பொதுவாக பேசுவது.” நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், ஊடக நெறியாளர்கள் என எல்லாருமே உருட்டிக் கொண்டே போகிறார்கள்.


உருட்டுவதன் மற்றொரு அர்த்தம் தவறு நம் மீது இருக்கும் போதும் அதை ஏற்காமல் வெற்றாய் நியாயப்படுத்துவது. சும்மா எதையாவது சொல்லி தான் தன்னம்பிக்கையுடன் இருப்பதாக காட்டிக் கொள்வது. அமைச்சர்கள், கட்சியின் ஊடக பிரதிநிதிகள் போன்றோர் இதை அதிகமாக செய்கிறார்கள்.


இப்படி இருவிதமான உருட்டல்களுக்கும் காரணமே நாம் என்கிற போதும், அதிகமாக சமூகவலைதளங்களில் உருட்டுவதும் நாம் தான். ஒரே வித்தியாசம் சமூகவலைதளத்தில் ஒரு பொதுவான போக்கு உருவாகும் போது அதன் திசையில் அங்கபிரதட்சணம் செய்வது போல உருள்வதே நமது வழக்கம். ஒரு பக்கம் மற்றவர்கள் உருட்டும் போது அவர்களைக் கிழிக்கிற நாமே நம்மை பிறர் தப்பாக நினைக்கக் கூடாது எனும் எண்ணி உருள்கிறோம்.


உருட்டுவதன் இன்னொரு வகைமை ஒரு மோசமான விசயத்தை வெல்லத்தில் முக்கி அது மிகவும் சிறந்தது என மிகைக்கப்படுத்தி காட்டுவது. அதாவது ஒவ்வொரு வினாடியையும் பாஸிட்டிவ்வாக “வாவ் சூப்பர் சூப்பர்” என்று பாராட்டிக் கொண்டு செல்வது. இன்று ஊடகங்களில் நெறியாளர்கள், தொகுப்பாளர்கள், வர்ணனையாளர்களாக உள்ளவர்கள் இதை அதிகமாக செய்கிறார்கள். மிக சலிப்பான ஒரு நிகழ்ச்சியை அவர்கள் சுவாரஸ்யமானதாக்க இப்படி கிடந்து உருள்கிறார்கள். மிக அலுப்பான ஒரு போட்டியை முன்பு வர்ணனை செய்தவர்கள் தமது மனநிலையை வெளிக்காட்ட தயங்கியதில்லை. ஜெப்ரி பாய்கட், கவாஸ்கர், சேப்பல் போன்றோர் அப்படி வெளிப்படையாக இருந்தார்கள். ஆனால் இன்றைய வர்ணனையாளர்கள் அப்படி நேர்மையாக இருக்க அஞ்சுகிறார்கள் - எங்கே பார்வையாளர்கள் சேனலை மாற்றி விடுவார்களோ எனும் பயம். அது அவர்களை சியர் கெர்ள்ஸாக மாற்றி விடுகிறது.


இந்த உருட்டை ஊடகங்களில், சமூகவலைதளத்தில் மட்டுமல்ல நேர் வாழ்க்கையிலும் தான் செய்கிறோம். முன்பு இல்லாதளவுக்கு நாம் எல்லாரிடம் “ஹவ் ஆர் யூ” என்று வினவுகிறோம். கேட்கப்பட்டவர்கள் கடும் ஜுரத்தில் இருந்தால் கூட “நல்லா இருக்கேன்” என்கிறார். கேட்கிறவர் கடும் மனச்சோர்வில் இருந்தால் கூட “நானும் நல்லா இருக்கேன்” என்கிறார்கள். மிக மோசமான செய்தியைக் கேட்டால் கூட முகத்தில் ஒரு புன்னகையை வருவித்துக் கொண்டு “நோ பிறாப்ளம்” என்கிறார்கள், உள்ளுக்குள் அழுதபடியே. நாம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறோம், உண்மையை நம் உடல்மொழியிலோ பேச்சிலோ காட்டினால் வேலைக்கு ஆபத்தாகி என அஞ்சுகிறோம்.

இன்னொரு பக்கம், விமர்சிப்பவர்கள், கேள்வி கேட்பவர்கள், வாதிடுபவர்களை நாம் எல்லா இடங்களிலும் வெறுக்க ஆரம்பித்திருக்கிறோம். ஏனென்றால் ஒரு சிறிய எதிர்கேள்வியை கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு கூருணர்வு மிக்கவர்களாகி விட்டோம். நம்மை சதா பிறர் புகழ்ந்தபடியே இருக்க வேண்டும் என விரும்புகிறோம். பத்து நிமிடம் நம்மை யாராவது புகழாவிடில் கூட பதற்றமாகி சுற்றுமுற்றும் பார்க்கிறோம். யாரிடமாவது போய் இளித்துக் கொண்டு “ஹவ் ஆர் யு?” என்று நிற்கிறோம். சுயபிம்ப நிர்வாகத்தில் இந்தளவுக்கு பிரக்ஞையுடன் நாம் முன்பு இருந்ததில்லை. 


 இந்த மனநிலை வேலையிடத்தில் என்றில்லை சாலையில் போகும் போது, நமது குடியிருப்பில் அண்டை வீட்டாரிடம் பேசும் போது கூட வெளிப்படுகிறது. வெறுமை, கடன் தொல்லை, மனைவி / கணவனுடன் பிரச்சனை என பல அழுத்தங்கள் இருக்கும். வீட்டில் பெரிய சண்டை நடந்திருக்கும், யாரோ தூக்கு மாட்ட முயன்று நீங்கள் காப்பாற்றி இருப்பீர்கள். ஆனால் வெளியே வந்ததும் அண்டை வீட்டுக்காரரைப் பார்த்ததும் “ஹலோ ஹவ் ஆர் யு? ஐ ஆம் பைன்” என ஆரம்பித்து விடுவீர்கள். கோபத்தை காட்ட, ஒரு துளி கண்ணீர் விட நாம் இப்போது போல வேறெப்போதும் அஞ்சியதில்லை. கக்கூஸில் இருக்கையில் தவிர வேறில்லா இடங்களிலும் இந்த உருட்டு நம்மை இளிச்சவாயன்களாக்கி விட்டது.

 

இன்று உலகில் உருட்டாமல் இருக்கிற ஒரே இனம் வலதுசாரிகள் தாம். அவர்களுக்கு தமக்கு கெட்ட பெயர் ஏற்படுவது பற்றி, தம்மை வெறுப்பாளர்கள், குறுகின எண்ணம் படைத்தவர்கள், பிரிவினைவாதிகள், அடிமுட்டாள்கள் என்று யார் நினைத்தாலும் கவலையில்ல. அமெரிக்காவில் டிரம்பின் கட்சியினரில் இருந்து பாஜகவினர் வரை பாருங்கள். எப்போதாவது தமது தவறுக்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார்களா? போர்ன் காணொலியை பார்த்தாக மாட்டிக் கொண்ட வலதுசாரி எம்.எல்.ஏக்கள் தம்மை நியாயப்படுத்த முயன்றதில்லை. கே.டி ராகவன் எவ்வளவு தான் அசிங்கப்பட்டாலும் கடைசி வரை “உருட்டவில்லை”. எவ்வளவு டுரோல் செய்யப்பட்டாலும் மதுவந்தி தன்னை மாற்றிக் கொள்வதில்லை. தமது எத்தனையோ பொய்கள், புரட்டுகள் அம்பலப்படுத்தப்பட்டாலும் சங்கிகள் “உருட்டுவதில்லை” - சொன்ன பொய்யிலே, வெறுப்புவாத கருத்திலே ஊன்றி நிற்கிறார்கள். 


ஏன் அவர்கள் மட்டும் இப்படி இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை - ஒருவேளை உலகமே ஒரே சமயம் உருட்டுவதன் இயற்கையான எதிர்வினையாக இவர்கள் மட்டும் இன்னொரு எதிர்முனைக்குப் போய் வெட்கம் மானமற்று நடந்து கொள்கிறார்களா?

 உருட்டின் எதிர்மை தான் துணிச்சலான புரட்டா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.