முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு விருப்பம்


உலகில் நான் கடுமையாக வெறுக்கக் கூடியது மோசமான வேலையோ, காதல் முறிவோ, வியாதியோ, மரணமோ அல்ல. அது பயணம்.

 ஏனென்றால் என்னிடம் கார் இல்லை. நான் சென்னைக்கோ அதைப் போன்ற பிற இடங்களுக்கோ பயணத்திற்கு பேருந்துகளையே நம்பி இருக்கிறேன். ரயில் நிலையம் என் வீட்டில் இருந்து அதிக தொலைவில் இருக்கிறது. அதில் டிக்கெட் எடுப்பதற்கும் நீண்ட  நாட்களுக்கு முன்பே புக் செய்ய வேண்டும். அப்படியே கிடைத்து விட்டாலும் ரயில் நிலையத்தில் நிறைய சிரமப்படே என் வண்டி நிற்கும் இடத்திற்கு நான் போக முடியும். அந்த வழியில் படிக்கடுகள் உள்ளிட்ட பல தடைகள் இருக்கும். விமானம் என்றால் அதன் கட்டணத்திலே என் பாதி சம்பளம் போய் விடும் என்பதால் சாத்தியமில்லை.


 இந்த பேருந்துகள் விசித்திரமாக அமைக்கப்பட்டவை - பெரிய உயரமான படிக்கட்டுகளைக் கொண்டவை. என்னால் ஒரு எட்டில் ஒரு படிக்கட்டில் ஏற முடியாது. நான் பெரும்பாலும் உட்கார்ந்து உட்கார்ந்து ஊர்ந்து தான் ஏற வேண்டும். அதுவும் படிக்கட்டு முடிந்து பேருந்தின் உள்வாயில் இருக்கிறதே அப்பகுதியை சற்று வளைவாக குறுகலாக வைத்திருக்கிறார்கள். அங்கு நான் ஒரு காலில் நின்று ஒரு கையால் பேருந்தின் ஏதாவது ஒரு பகுதியைப் பற்றி நின்று தொங்கியபடி சாகசம் புரிந்து தான் ஏற முடியும். இது நடக்கையில் பேருந்து வேறு அசைந்தபடி இருக்குமா என விழுந்து இன்னொரு காலும் உடைந்திடுமா என பயமாக இருக்கும். இவ்வளவு முடிந்து உள்ளே போனால் ஸ்லீப்பர் படுக்கைகள் தாழ்வாக அமைந்திருக்கும். ஆட்டத்தின் இடையே அந்த இடத்தை அடைந்து உட்காருமுன் உயிர் போய் உயிர் வருவது போலிருக்கும். இறங்குவது இதை ஒத்த சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் உணவுக்காகவும் சிறுநீர் கழிப்பதற்கும் நிறுத்தும் போது நான் இறங்க மாட்டேன். மூத்திரத்தையும் பிற அவதிகளையும் பொறுத்துக் கொண்டு கிடப்பேன்.


 ஒருநாள் விடிகாலையில் நான் தனியாக சென்னைக்கு வர நேர்ந்தது. அன்று எனக்கு ரத்த சர்க்கரை அளவுக்கு ஐம்பதுக்கு கீழே குறைந்து விட்டது. பேருந்துக்காரர்கள்உங்க இடம் வந்திருச்சுஎன எழுப்பி விட்ட போது நான் hypoglycaemia ஏற்படுத்திய அரை-பிரக்ஞையில் இருந்தேன். ஒன்றுமே புரியாமல் அதே போல ஊர்ந்து சிரமப்பட்டு இறங்கி என் காலிப்பரின் முட்டியில் உள்ள லாக்கைப் போடும் போது கவனமற்று இருந்து விட்டேன். நான் சில அடிகள் தான் நடந்திருப்பேன். என் காலிப்பர் உடைந்து விட்டது. ஒரு வாடித் தளர்ந்த மாலையில் இருந்து காய்ந்த மலர்கள் உதிர்வதைப் போல நான் குலைந்து விழுந்து போனேன். என் காலிப்பரின் கம்பிகள் முடிச்சுப் போட்ட கயிறைப் போல நெளிந்து கிடக்கிறது. அதில் இருந்து என் காலை விடுவிக்கவும் சிரமப்பட்டேன். நல்ல வேளை அன்று என்னை அழைத்துப் போக எழுத்தாளர் தமயந்தியும் நண்பர்கள் தினேஷும் வளனும் இருந்தார்கள். அதனால் தப்பித்தேன். இல்லாவிட்டால் அப்படியே சாலையில் கிடந்திருப்பேன். நல்லவேளை, அன்று என் கால் உடைய வில்லை. என்னைப் போன்றோருக்கு எலும்புகள் osteoporatic ஆக இருக்கும் என்பதால் சிறிய கீறல் விழுந்தாலே குணமாக ஆறு மாதங்கள் ஆகும், உடைந்தால் ஒரு வருடத்திற்கு மேல் நான் படுத்த படுக்கைதான், என் எல்லா வேலைகளும் முடங்கிப் போகும்.


போராட்டம் இத்துடன் முடிவதில்லை. ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் நான் பல வாகனங்களில் ஏறி இறங்கியாக வேண்டும். தங்கும் இடங்களில் உள்ள படிக்கட்டுகளில் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஏற வேண்டும். இன்னொரு பிரச்சனை ஒரு முறை நெடிய பயணம் மேற்கொண்டால் அதன் மோசமான தாக்கம் என் உடல்நிலையில் இருந்து மறைய ஐந்து நாட்களாவது பிடிக்கிறது என்பது. இதனால் நான் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் வேலையும் நின்று போகிறது.


 இந்த விவாகரத்து வழக்கு ஆரம்பித்த பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் நான் இந்த அவலங்களை அனுபவித்து வருகிறேன். இதில் என்ன கொடுமை என்றால் இதை நான் யாரிடம் நேரில் கூறினாலும் அவர்களுக்கு என் பிரச்சனை சுத்தமாகப் புரியவில்லை என்பது. மக்களிடம் இன்று வெகுவாக அடுத்தவர் துன்பத்தை தமதாக உணரும் empathy எனும் திறன் குறைந்து வருகிறது. “தான் தான்என மக்கள் சுயஆட்கொள்ளலில் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் எதைப் பற்றியும் யோசிக்க முடியாதபடி வேலை அழுத்தத்தில் இருக்கிறார்கள் அல்லது அடுத்தவர்களுடைய இன்பங்களில் மட்டுமே பங்குபெற வேண்டும், துன்பங்களில் அல்ல எனும் மனநிலையில் இருக்கிறார்கள். என்னுடைய அம்மாவிடம் ஒருமுறை இந்த அவதிகளைப் பற்றி நான் கூறிய போது அவருக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என சுத்தமாகப் புரியவில்லை. ஒரு துளி கண்ணீர் இல்லை, வருத்தம் இல்லை, அவருக்கே இல்லை என்றால் நான் வேறு யாரிடம் எதிர்பார்க்க முடியும்? நியாயமாக வழக்காடு மன்றங்கள் என்னைப் போன்ற ஒருவரை ஒவ்வொரு முறையும் பஸ்ஸைப் பிடிந்து உருண்டு புரண்டு எப்பாடு பட்டேனும் வந்து முகம் காட்டு என்று கேட்கக் கூடாது. இணையவழி ஆஜராக வசதியை அனுமதிக்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு ஊனமுற்றோரிடத்து கரிசனம் கொண்ட சட்டம் இல்லை. ரெண்டு கையும் காலும் இல்லாவிட்டாலும் நீங்க சட்டத்தின் முன்சமம்அல்லவா?



 ஆனால் வாசிக்கையில் உங்களுக்கு நிச்சயம் எனது அனுபவம் கடத்தப்படும் என நம்புகிறேன், அதனாலே எழுதுகிறேன்.


என்னுடைய விருப்பமெல்லாம் ஒன்று தான் - என்னை இப்படி வருடக்கணக்காக சித்திரவதைக்கு ஆட்படுத்துகிறவர்களுக்கு கடும் துன்பங்கள், இழப்புகள் ஒருநாள் வர வேண்டும், அதை நான் பார்க்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...