Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பதிப்பாள உறவு - எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்




ஒரு அமைப்பு எனும் வகையில் உறவு என்பது கொடுக்கல் வாங்கலின் அடிப்படையில் இயங்குவது. நீங்கள் கொடுத்து வாங்குவது பணமோ, வசதியோ, உணவோ, அங்கீகாரமோ, அன்போ, ஆறுதலோ, பாதுகாப்போ, இது ஒரு வணிக உறவாடலைப் போன்றதே. ஒரு படைப்பாளனுக்கும் பதிப்பாளனுக்குமான உறவும் அப்படியானதே. நீங்கள் அதற்குள் செல்லும் போது அதில் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் எனும் தெளிவு மிக மிக அவசியம். எப்படி ஒரு உறவுக்குள் எல்லாம் கிடைக்காதோ அப்படியே ஒரு பதிப்பாளரிடம் ஒரு படைப்பாளனுக்கு எல்லா எதிர்பார்ப்புகளும் பூர்த்தியடையாது. எப்படி ஒரு எலக்டிரானிக் கடையில் போய் அரை கிலோ கறி கேட்கக் கூடாதோ அதே போல என்ன கிடைக்கும் என்பது தெரியாமல் நீங்கள் ஒரு பதிப்பாளரிடமும் செல்லக் கூடாது. இந்த தெளிவு என் முந்தைய தலைமுறையில் தொடர்ந்து எழுதும் படைப்பாளிகளிடம் இருந்ததைப் போல என்னுடன் எழுத வந்தவர்களிடம் இல்லை என்று இன்று ஒரு சீனியர் எழுத்தாளரிடம் பேசிய போது தோன்றியது

தமிழில் ஒரு முறைசாரா தொழிலாகவே பதிப்பும் எழுத்தும் இருப்பதால் இன்றைய எழுத்தாளர்கள் பல ஏமாற்றங்களுக்கு ஆளாகிறார்கள்; புலம்புகிறார்கள்; மியூசிக்கல் சேர் விளையாட்டு போல மாறி மாறி பல இருக்கைகளில் அமர்கிறார்கள். முக்கியமாக, அவர்கள் இங்கு எல்லாமே முறையாக, நியாயமாக இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் லாட்டரி சீட்டு வாங்குவதைப் போன்றதே.


இங்கு என்று தான் இல்லை - என் நண்பர் ஒரு ஆங்கிலக் கவி. அவர் வங்காளத்தில் உள்ள ஒரு பெயர்பெற்ற பதிப்பகத்துக்கு ஒரு லட்சம் மேல் பணம் கொடுத்து தன் முதல் கவிதை நூலை வெளியிட்டார். அடுத்த கவிதை நூலையும் அவ்வாறே வேறொரு பதிப்பகம் வழியாகக் கொண்டு வந்தார். சச்சிதானந்தன் போன்றோர் முன்னுரை எழுதிக் கொடுத்தனர்; அவர் அளவுக்கு அவர் படோடாபமாகவே புத்தகத்தை வெளியிட்டார். ஆனால் கடந்த சில மாதங்களாகஎனக்கு ஒரு வருட ராயல்டியாக 450 ரூபாய் மட்டுமே அனுப்பி இருக்கிறார்கள்என புலம்பிக் கொண்டிருக்கிறார். இனி பணம் கொடுத்து புத்தகம் கொண்டு வரப் போவதில்லை என்று வேறு சபதம் செய்கிறார். நான்பணம் கொடுக்காதீங்கஎன இரண்டு வருடங்களுக்கு முன்பே எச்சரித்தேன். அவர் கேட்கவில்லை. இப்போது புலம்புகிறார். இன்னொரு நண்பர்என் புத்தகத்தை நூலகங்களில் பார்த்தேன், ஆனால் பதிப்பாளர் எனக்கு காசு தரவில்லைஎன்று அழுதார். அவரையும் நான் இதைக் குறிப்பிட்டே முன்பு எச்சரித்திருந்தேன். அப்போது அவர் என் சொற்களை காதிலே வாங்கிக் கொள்ளவில்லை. இப்படி பலர்!


இந்த வாரம் நீயா நானாவில் சைவம் சாப்பிடும் கணவர்களுக்கும் அசைவம் உண்ணும் மனைவியருக்கும் இடையே ஒரு விவாதம். அதில் ஒரு பெண் தன் கணவரைப் பற்றி சொல்லும் போதுஅவரு ஒரு ஓட்டல்ல chef என்று சொல்லித் தான் கட்டி வச்சாங்க. நல்லா விதவிதமாக சிக்கன் கறி, பிரியாணின்னு சமைச்சுப் போடுவாருன்னு நினைச்சா வெறும் சைவமா சமைக்கிறாருங்கஎன்று புலம்பினார். கணவன் சைவ உணவுக்காரராம். இது தெரியாமலே கட்டியிருக்கிறார். மேற்சொன்ன ஏமாற்றங்கள் இப்படியானவையே.


தீர விசாரித்து, யோசித்து நம் ஆட்கள் ஒரு பதிப்பாளரை அணுகுவதில்லை. ஏதோ ரோட்டில் போகிற பெண்ணின் கண்ணை மட்டும் பார்த்து காதலில் விழும் சினிமா காதலனைப் போல புத்தகங்களைக் கொடுக்கிறார்கள். நீங்கள் இந்தி பேசுகிற பெண்ணை மணமுடித்து விட்டுஅவ எங்கிட்ட தினமும் இந்தியிலே பேசி சாகடிக்கிறாஎன்று புலம்புவதால் என்ன பலன்? வேறு வழியில்லாமல் சிக்கிக் கொண்டால் கழற்றி விட்டு அடுத்துஒரு தமிழ்ப் பெண்ணிடம்போவது தானே சரி! சொல்லப் போனால் ஆண் பெண் உறவை விட எழுத்தாள-பதிப்பாள உறவு சுலபமானது


 இத்தனைக்கும் இன்று ஏகப்பட்ட பதிப்பாளர்கள் தோன்றி விட்டார்கள். POD வந்தே சில வருடங்கள் ஆகின்றன. இன்று பூப்பறிப்பதைப் போல ஒரு புத்தகத்தை பிரசுரித்து விடலாம். ஓரளவுக்கு தெரியப்பட்ட எழுத்தாளர்களிடம் நாவல் இருந்தால் அதை வாங்க நான்கைந்து பதிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். மற்ற எழுத்தாளர்களுக்கும் நூல் பிரசுரிப்பது குதிரைக் கொம்பல்ல


எப்போதும் ஒரு புத்தகத்தினால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது - பணமா, புகழா, இலக்கிய அங்கீகாரமா, ஒரு துவக்கமா - என்பதில் தெளிவு வேண்டும். அதில் உங்கள் முதலீடு என்ன, முதலுக்கு லாபம் வருமா என்பதும் தெரிந்திருக்க வேண்டும். புத்தகமும் பதிப்பகமும் அதை நோக்கியே எழுதப்படவும் அணுகப்படவும் வேண்டும். “இங்கே போனால் உங்க புத்தகத்துக்கு கவனம், பிராண்ட் வேல்யூ கிடைக்கும், ஆனால் பணம் கஷ்டம் தான்என்று யாராவது சொன்னால் அதைத் தெரிந்து கொண்டு போங்க. “பணமும் அங்கீகாரமும் கிடைக்கும்என்றால் அதை நாடிப் போங்க. “அன்பும், நட்புமே எனக்கு முக்கியம், அதனுடன் இலக்கிய ஸ்தானமும் என்றால்அது கிடைக்கும் இடத்துக்குப் போங்க. “விருதுகள், தொடர்புகள், மொழிபெயர்ப்பு வாய்ப்புகள், இலக்கிய பயண வாய்ப்புகள் முக்கியம் எனக்குஎனத் தோன்றினால் அவை கிடைக்கும் பதிப்பாளரிடம் செல்லுங்கள்.


இதை என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்:

 முதலில், ஒரு எழுத்தாளன் தொடர்ந்து நிலையாக இயங்க நீடித்த பதிப்பாள உறவு முக்கியம்


இரண்டாவதாக, நீங்கள் அறிமுக எழுத்தாளரோ, அறியப்பட்ட எழுத்தாளரோ அடுத்த பத்தாண்டுகளில் உங்கள் இலக்கு என்ன, அதை அடைய எந்த பதிப்பாளர் பொருத்தமாக இருப்பார் என்பதை முடிவு செய்தே எழுத வேண்டும். அதை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும், உதிரி பலன்களை அல்ல. சொந்த நண்பர்களே வெளியிட்டாலும் சரி, உங்கள் எதிர்பார்ப்பு நட்பா, அதிக வாசகர்களா, பணமா என முடிவு செய்து அதை மட்டுமே கேளுங்கள். முதல் மூன்றாண்டுகளுக்கு எனக்கு பிராண்ட் மதிப்பு தான் தேவை என்றால் அதுவரை பொறுமையாக இருங்கள். “சமவயது படைப்பாளிகளுடன் பிரசுரித்து அவர்களுடன் போட்டியிட்டு நான் வளர்ந்து கொள்வேன்என நினைத்தால் பெரும் படைப்பாளிகளைப் பிரசுரிக்காத ஒரு வளரும் பதிப்பகத்துக்குப் போங்க. “புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தக அடுக்கில் அவர்கள் அருகே என் புத்தகமும் வர வேண்டும்என்றால் அப்படியான ஒரு பதிப்பகத்தை அணுகுங்கள். உங்களுக்கு என்று தனித்த கொள்கை, அரசியல் இருந்தால் உங்களை ஒத்தோருடன் மட்டுமே செயல்பட வேண்டும் என்றால், உங்கள் அரசியலுக்கு இணக்கமானோர் உள்ள பதிப்பகத்துக்குப் போங்க. ஒரு இளம் எழுத்தாளனாக அங்கே போன பிறகு உங்கள் முதன்மை எதிர்பார்ப்பை மீறி வேறெதையும் முதல் சில ஆண்டுகளுக்கு எதிர்பார்க்காதீர்கள். உங்களை நிறுவிய பிறகு அடுத்த இலக்கை தீர்மானியுங்கள்.


மூன்றாவதாக, ஒரு பதிப்பாளர் எப்படியானவர், என்ன பின்னணி, என்ன வரலாறு எனத் தெரிந்து கால் வைத்தால் அங்கு கசப்போ ஏமாற்றமோ இராது. நான் ஒரு புத்தகத்தை எழுதும் போதே அதை பிரசுரிக்க வேண்டிய பதிப்பாளர் யார் என இப்போது யோசிக்கிறேன். என் எழுத்தாள நண்பர்களிடம் பரவலாக விசாரித்து நிறைய யோசித்து பல மாதங்களுக்குப் பிறகே எந்த பதிப்பாளரை தேர்வது என ஒரு முடிவை எடுக்கிறேன். அதன் பிறகு ஏமாற்றம் ஏற்பட்டாலும் கவலைப்பட மாட்டேன். ஆனால் நான் 15 ஆண்டுகளாக புத்தகங்கள் எழுதி வருகிறேன். சங்கடங்கள், அதிர்ச்சிகள் இருந்ததுண்டு, ஆனால் ஒரு சிறிய வருத்தம், ஏமாற்றம் கூட எனக்கு என் பதிப்பாளர்களிடம் ஏற்பட்டதில்லை.


 நான்காவதாக, புத்தக விற்பனையில் இருந்து கிடைக்கும் பணம் உபரி வருமானமாகவே இருக்க வேண்டும்; நமக்கு வேறு தொழில் இருக்க வேண்டும். இல்லாவிடில் மேற்சொன்ன மூன்று விசயங்களும் சொதப்பிப் போகும்.


ஐந்தாவதாக, அவசர கதியில் எந்த பிரசுர முடிவையும் எடுக்காதீர்கள். இலக்கிய உலகில் ஒரு புத்தகம் 2022இல் வந்தாலும் 2027இல் வந்தாலும் ஒன்று தான். இங்கு முயலை விட ஆமையே வெல்லும்.


மேலே வருவன இன்று பதிப்பாள-எழுத்தாள உறவைப் பற்றி ஒரு புத்தகத்தைப் படித்த உணர்வில் எழுதியது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...