முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கையில் உன்னதமும் இலக்குகளும்


வாழ்க்கையில் வேறெந்த கனவுகளையும் விட திட்டவட்டமான இலக்குகளே அவசியம். அதற்கு ஒரு கால எல்லையும் அமைத்திட வேண்டும். உ.தா நல்ல எழுத்தாளனாவது என்பதை விட ஒரு கால அளவுக்குள் ஒரு நாவலோ பத்து கதைகளோ எழுத வேண்டும் என்பது சிறப்பான இலக்கு. அது இன்னும் நேரடியானது, தூலமானது. 'நல்ல' என்பது, எழுத்தாளனாக இருப்பது என்பது அரூபமானவை. அரூபமாக நம்மை வரையறுப்பது தேவையில்லாத அழுத்தத்தில், நெருக்கடியில் நம்மை வைத்திருக்கும். தொடர்ந்து நான் எவ்வளவு பெரிய ஆள் என சவடால் விட்டுக்கொண்டிருக்கவோ ஜால்ராவுக்கு ஆள் சேர்க்கவோ வேண்டி இருக்கும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை தரும் சந்தோஷத்தை கற்பனையான சுயமதிப்பீடுகள் தராது. 

ஒரு நாவலை தினமும் எழுதுவதை விட இத்தனை காட்சிகள், பக்கங்கள், சொற்கள் எழுதுவேன் என முடிவெடுப்பது சிறப்பானது, நிஜமானது. 

இலக்கியம், தத்துவம் படித்து அறிவு பெற்றவனாவேன் என்பதை விட இன்னின்ன வகை நூல்களைப் படிப்பேன், இவ்வகை தத்துவத்தில் இவ்வருட முடிவுக்குள் ஒரு குறிப்பிட்ட நூல்களைப் படித்து முடித்து அதைப் பற்றி பேசுவேன், எழுத்வேன் எனும் இலக்கு மேலானது. 

பணக்காரன் ஆவேன் என்பதை விட இவ்வளவு ஆயிரங்கள், லட்சங்களை இந்த காலத்திற்குள் சம்பாதிப்பேன் என்பது பயனுள்ளது.

பாடத்திட்ட அமைப்பில் இதை outcome-based learning என்கிறார்கள். அதாவது இலக்கை திட்டவட்டமாக தீர்மானித்து விட்டு திட்டத்தை உருவாக்குவது. திட்டத்தை அமைத்து விட்டு இலக்கை நாடுவது தவறானது.

மகிழ்ச்சியாக வாழ்தலும் அப்படியே. எது மகிழ்ச்சியைத் தரும் என அடையாளம் காணாமல் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடியாது. 

நான் தினமும் எழுந்ததும் இன்று இந்த புத்தகத்துக்காக இத்தனை பக்கங்கள் எழுத வேண்டும் என நினைத்துக் கொள்வேன். தூங்கப் போகுமுன் அதை சாதிப்பேன். இல்லாவிடினும் அடுத்த நாள் எழுத்த மீண்டும் அன்றைய இலக்கை முடிவு செய்வேன். திரும்பத் திரும்ப மனதிடம் சொன்னால் நான் அதை செய்து விடுவேன். அல்ல, என் மனமே அதை செய்து விடும். அவ்வளவு தான். நான் ஒரு நல்ல எழுத்தாளனா இல்லையா என்றெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. நான் கடந்த வருடத்தை விட இவ்வருடம் மேம்பட்டிருக்கிறேனா என்றும் யோசிப்பதில்லை. இதிலெல்லாம் அர்த்தமில்லை. கடந்தாண்டு மூன்று புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறேன் என்றால் இந்த ஆண்டு எத்தனை? அதை எப்படி செய்வது? என் நேரத்தை எப்படி மேலாண்மை செய்து என் இலக்கை அடைவது? இப்படித்தான் யோசிக்கிறேன்.

மனுஷ்யபுத்திரன் 14 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் சொன்னார், "நீ 'சிறப்பாக' எழுத முடியாது. எழுத மட்டுமே முடியும். நீ உள்ளுக்குள் சிறப்பாக இயங்கினால், உனக்கு சரக்கிருந்தால், உன் எழுத்தும் சிறப்பாக அமையும். அது உன் கையில் இல்லை. அதனால் அதைப் பற்றி கவலைப்படாதே!" நாம் கடுமையாக உழைக்கலாம், பயிற்சி செய்யலாம், அது நம் படைப்பு மேம்பட உதவும். ஆனால் அதுவும் ஓரளவுக்குத் தான். நாம் எதுவாக இருக்கிறோமோ அதுவே நம் எழுத்து. அதை மாற்ற முடியாது எனும் போது ஏன் உன்னதத்தை நாடி வருத்திக் கொள்ள வேண்டும்? எந்த துறையிலும் நாம் நாணயமாக இருந்தால் அங்கு நம் வெளிப்பாடு சிறப்பாக அமைவதைக் காண்கிறோம். எனில் உன்னதத்தை நாடுவதை விட இயல்பாக இருத்தலும், அதில் ஒர் தொடர்ச்சியை தக்க வைப்பதும், அதைத் தூலமாக வரையறுப்பதுமே முக்கியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.