முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நன்மைக்கும் தீமைக்கும் அப்பால் …


 

50, 60களில் பிறந்து அரசியல் சமூகம் பற்றி சதா அறம், முறம், சமூகம், நீதி, சமூக நீதி, நீதி சமூகம் என்றெல்லாம் எழுதிக் கொண்டிருப்பவர்களிடம் நான் காணும் ஒரு விசித்திர பண்பு இவர்கள் சமூகத்துக்காக இவ்வளவு கண்ணீர் சிந்துவார்களே, சரி இவர்கள் தாயுமானவர் போல இருப்பார்கள் என எண்ணி நீங்கள் நேரடியாக இவர்களிடம் போய் பேசினால் துளி அன்பைக் கூட உங்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்பது. எனில்  இவர்கள் நா தழுக்க பேசுகிற அந்த சமூகம், மற்றமை என்பது யார்? இவர்களோ நாமோ ஒருவரும் அறியாத புதிர் இது


என்னுடைய சிறு ஊகம் என்னவென்றால் இவர்கள் தம் தலைமுறையின் ஒரு அடிப்படையான முரண்பாட்டில் உழல்பவர்கள். அது என்னவென பார்க்குமுன்னர் நாம் நமது வரலாற்றைப் பார்க்க வேண்டும்.

 வெள்ளையர்கள் இங்கு வருமுன் இங்கு பிரசித்தமாக இருந்தது பக்தி மரபு. பக்தி என்றால் உலகம் முழுக்க ஒன்று தான் - மனிதன் தான் அல்லாத ஒன்றிடம் - மற்றமையிடம் - தன்னை ஒப்புக்கொடுத்து தன்னைக்கடக்காமல் கடந்துபோவது (என்னவொரு அபத்தமான முரண்!). அதாவது ஒருவன் தன்னிடம் இருந்து கடவுளிடம் செல்வது அல்ல பக்தி அனுபவம். தனக்கும் கடவுளுக்குமான ஒரு பயணத்தில் போய் இணைந்து தானும் அல்லாமல் கடவுளும் அல்லாமல் உருமாறுவதே பக்தி ரசம். இது ஒரு ஏமாற்றுவித்தை என பௌத்தம் நிரூபித்தது. அதனாலே பௌத்தத்தை துரத்தி அடித்தார்கள் பக்தி போதை வியாபாரிகள். சரி அதை விடுங்கள். இதன் பிறகு காலனிய காலம் வருகிறது. அது பக்தி மரபின் இறுதி கட்டம் - மரண ஊர்வல கட்டம் என்று கொள்வோம். இதற்கு அடுத்து அறிவியல், பகுத்தறிவு, நவீன நிர்வாகம், தனிமனிதவாதம், நவீன சமூக கட்டமைப்பு எல்லாம் இந்தியாவுக்கு வருகிறது. இது பக்தி மரபுக்கு பழகியவர்களுக்கு சவாலாகிறது, ஏனென்றால் இது தன்னிலையைக் கடந்த வேறொன்று இல்லை என்கிறது. நீ உனக்காக சிந்திக்க வேண்டும், நீ உனக்காக தீர்மானங்கள் எடுத்து நீயாகவே வாழ வேண்டும் என்கிறது நவீன சிந்தனை. இது கடவுள் நம்பிக்கையை மறுக்கிறது. இந்த இடத்தில் தான் நமது இந்து சீர்திருத்தவாதிகளின் நீட்சியாக, இந்து பக்தி மரபை அரசியல் கதையாடலாக மாற்றிய காந்தி வருகிறார். அவரை நம் ஆட்களுக்கு பெரிதும் பிடித்துப் போகிறது. ஏனென்றால் இப்போது நாம் கடவுள் இல்லாமலே பக்தர்களாக இருக்க முடிகிறது, கூடவே பஜனையும் பண்ணலாம் என்றார் காந்தி. (இதனாலே தமிழகத்தில் பெரியாரிஸ்டுகளை விட அதிகமான காந்தியவாதிகள் இலக்கியவாதிகளாக இருக்கிறார்கள், இலக்கியம் என்பது பக்தி மரபின் நீட்சி அல்லவா?) 

ஆனால் காந்திக்கு அடுத்த காலகட்டம் தீவிரமான முதலீட்டியவாதம், நகரமயமாக்கல், எந்திரமயமாக்கல் எம சமூகம் நகர்கிறது, இது பக்தி சிந்தனைக்கு இடறாகிறது. இப்போது நமது மக்களில் ஒரு பகுதியினர் அரசியல் சமூக லட்சியவாதிகள் ஆகிறார்கள். அவர்கள் (காந்தியை பின்பற்றி) கடவுளின் இடத்தில் சமூகத்தை, மற்றமையை வைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் கடவுள் எதிர்ப்பு பேசிக்கொண்டே மதத்துக்குள்ளும், சாதி எதிர்ப்பு பேசிக்கொண்டே சாதியமைப்புக்குள்ளும் காலாட்டியபடி இருப்பார்கள். ஆனால் தொடர்ந்து ஏழைகள், தலித்துகள், சிறுபான்மை மதத்தவர்கள் பற்றி கண்ணீர் வடிப்பார்கள், அவர்களுக்கு சாதகமாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று கூறுவார்கள், ஆனால் அவர்கள் ஒடுக்கப்படும் நிலையில் வைத்திருக்கும் சமூகப்பொருளாதார, மத அமைப்பை எதிர்க்கவோ விட்டு வெளியேறவோ மாட்டார்கள், எப்போதும் அன்பு, கருணை, தன்னிலையை இழந்து மற்றமையாவது பற்றி பேசுவார்கள், ஆனால் தன்னைத் தவிர வேறு யாரைப் பற்றி எதார்த்தத்தில் அக்கறை காட்ட மாட்டார்கள். இதைப் பற்றி குற்றவுணர்வு மிகுந்திட இவர்கள் இன்னும் அதிகமாக சமூக கருத்தியல், நீதி பேதி என கட்டுரைகளை எழுதுவார்கள். ஒரு மனிதன் தன்னைப் பற்றி, குறிப்பாக தன் உடலை, தன் லௌகீகத் தேவைகளைப் பற்றி அக்கறை கொள்ளுவது மட்டுமே இந்த வாழ்க்கையின் ஒரே உண்மை என்பதை புரிந்து கொண்டாலே இந்த சித்தாந்த மயக்கம் தெளிந்து விடும். ஆனால் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இவர்கள்கடவுள் நம்பிக்கையற்ற பக்தி மரபைசேர்ந்தவர்கள் (மற்றொரு முரண்). கடப்புநிலைவாதிகள் (transcendentalists) அல்லது கடவுளற்ற மீபொருண்மைவாதிகள். நான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா - கடவுளை அடைவது அல்ல, அந்த பயணத்தில் இருப்பது, தன்னிலையும், மற்றமையும் அல்லாமல் ஆவதே இவர்களுடைய இலக்கு என்று. ஆக சமூகத்திடம் / மற்றமையிடம் போய் சேர்வது அல்ல அப்படி ஒரு கற்பனை பயணத்தில் இருந்து கொண்டிருப்பதே இவர்களுக்குத் தேவை.


இதை நான் ஏதோ புதிதாக சொல்கிறேன் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த மனப்பான்மையே நவீன ஐரோப்பியர்களிடம் தென்படுவதாக நீட்சே கூறியிருக்கிறார். கர்த்தர் நீங்கள் வறியவர்கள், எளியவர்களுக்காக இரங்கினாலே கடவுளை அடையலாம் என்று கூறினார். இதுவே மற்றமைக்காக இரங்குவது. இது தன்னிலை பற்றி ஒரு கற்பனையை உருவாக்க நவீன சமூகத்துக்கு உதவியதாகவும், தன்னிலை-மற்றமை எனும் இருமையை வலுவாக்கியதாகவும், மக்கள் தமக்குள் அடிமைகளாக மாறினார்கள் (slave mentality) என்று நீட்சே கூறுகிறார். விளைவாக நவீன ஐரோப்பியனுக்கு தன்னிடத்தும் அக்கறை இல்லை, மற்றமையிடமும் பாசம் இல்லை, அவன் இரண்டுக்கும் இடையில் அல்லாடியபடி சதா தன்னையும் மற்றமையையும் கண்டு பயந்தபடி போலியானவனாக மாறிப் போகிறான், தன் இருத்தலை அறிய முடியாதவனாக ஆகிறான் என்கிறார் நீட்சே தனதுநன்மை தீமைக்கு அப்பால்” (Beyond Good and Evil) நூலில். ஹைடெக்கரும் இந்த பார்வையை நீட்டித்தே தனதுஇருத்தலும் காலமும்” (Being and Time) நூலை எழுதினார். அதில் ஹைடெக்கர் இந்த உடலைக் கொண்டு இவ்வுலகில் இருத்தலைத் தவிர வேறொன்றும் உண்மையாக முடியாது என்று கூறி மேற்சொன்ன கடப்புநிலைவாதத்தை, மீபொருண்மைவாதத்தை மறுத்தார்


நவீன ஐரோப்பியர்களுக்கும், நம்மூர் காந்தியவாதிகளுக்கும், அவர்களுக்கு அடுத்து வந்த லட்சியவாத தலைமுறைக்கும், இன்றும் எழுதிக்கொண்டிருக்கும் அந்த வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சினை கடவுள் நம்பிக்கை இல்லாமல் தம் பக்தியை எப்படி முன்னெடுப்பது என்பதே, கடவுள் இல்லாமல் தன்னிலையைக் கடந்து ஒரு கற்பனை highக்குள் எப்படி போவது என்பதே, வெறுமனே இந்த உடலுடன் உலகில் இருப்பது அச்சமூட்டாதா என்பதே. நீட்சே ஐரோப்பியர்களிடம் இந்த மனநோயை Christian morality என்றார் என்றால் தமிழில் இது ஒரு ஹிந்து morality ஆக இருக்கிறது.

 இவர்களுக்கு காவடி தூக்கிக் கொண்டு மலையேறும் சாமான்யர்களே மேல்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...