முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'ஊழல் ஒழிப்பு' எனும் அபத்தம்

ஆளுங்கட்சியின் ஊழல் - அதை எந்த கட்சி செய்தாலும் - ஒரு தனி பிரச்சினை. ஊழலை நான் இப்படி புரிந்து கொள்கிறேன் - அது முதலீட்டிய சந்தையில் முறையற்று பெருகும் பணம் எனும் கொள்ளையை ஆட்சியாளர்கள் அனுமதிப்பதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு நன்றித்தொகை.

நாம் தீவிர முதலீட்டிய விசுவாசிகள் என்பதால், இந்த பொருளாதார அமைப்பினால் பலனடைகிறவர்கள் என்று நம்புகிறவர்கள் எனபதால், இதில் முறையற்று கையூட்டை வழங்குவோர் அதே பணத்தை முறையற்று தானே சம்பாதிக்கிறார்கள் என்பதை ‘கவனிக்க’ தவறுகிறோம். ஒரு துறைமுக கட்டுமானம் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றால் அது ஏன்? நெடுஞ்சாலை பணிகள் ஒருவருக்கே கிடைக்கிறது என்றால் அது ஏன்? அதில் அபரிதமான பணம் முறையற்று வருகிறது என்பதாலே. உடனே நாம் ஊழல் இருப்பதனால் தான் முறையற்று சம்பாதிக்கும் முறை வருகிறது என்கிறோம். நான் இதை திருப்பி பார்க்கிறேன் - ஊழல் எனும் வழக்கம் இருப்பதே முறையற்று சம்பாதிக்கும் நிலை உள்ளதாலே.
ஆக இந்த பொருளாதார கட்டமைப்பிலேயே அடிப்படையான பிழை உள்ளது. அது என்னவென்று அறிய நாம் ஏன் ஒப்பந்த பணிகளை ஒரு அரசே எடுத்து நடத்த முடியாது என யோசிக்க வேண்டும். ஒரே காரணம் லாபத்தை எப்படி கணக்கு வைப்பது என்பதே. உ.தா., நான் ஒரு பேனாவை உற்பத்தி பண்ணியாக வேண்டும். அதற்கான உற்பத்தி செலவு 6 ரூ. அடக்க விலை 10. 4 ரூ லாபம். ஒப்பந்த பணியின் போது அடக்கவிலை அரசு முன்னரே கொடுக்கும் பணம், உற்பத்தி செலவு ஒப்பந்ததாரருக்கு பின்னர் நிஜமாக ஆகும் செலவு. அதாவது நாலு ரூபாயை கூட்டி சொல்லி செய்து பெறுவதே லாபம். இப்படி இந்த அமைப்பிலேயே ஒரு ஊழல் இருக்கிறது. நீங்கள் இந்த வித்தியாசத்தை எந்தளவுக்கு அதிகப்படுத்துகிறீர்களோ அந்தளவுக்கு ஊழல் அதிகரிக்கிறது எனப் பொருள். ஜனநாயக ஆட்சியின் ஆகப்பெரிய அபத்தம், வேடிக்கை இந்த ஒப்பந்த பணிகளும், கொள்முதலும் தான்.
சரி இந்த 4 ரூபாய் லாபத்தை நேர்மையாக வாங்கிக்கொண்டு போனால் ஊழலே இருக்காதே என யோசிக்கிறீர்களா? இங்கு தான் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் - இந்த 4 ரூபாயே அடிப்படையில் ஒரு ஊழல் தான். அது நியாயமான ‘உபரியோ’, லாபமோ அல்ல. தாராள பொருளாதார சந்தையின் லாஜிக்குக்கே வருகிறேன். சந்தையில் பலத்த போட்டியின் நடுவே ஒரு பண்டத்தை விற்கும் போது நீங்கள் உங்கள் பண்டத்தின் தரத்தின் அடிப்படையிலே வெல்ல முடியும். ஆனால் இங்கு அப்படி ஒரு முறை இல்லை. உ.தா., கொள்முதலில் இதனை நடைமுறைப்படுத்தலாம்: அரசு மாணவர்களுக்கு இலவசமாக கொடுப்பதற்காக மடிக்கணினியை வாங்குகிறது. டெண்டர் முறைக்கு பதிலாக இந்த மடிக்கணிகளை சாம்பிளாக வாங்கி பயனர்களுக்கு கொடுத்து கருத்துக்கேட்டு அதன் அடிப்படையில் அரசின் எந்த தலையீடும் இன்றி ஒப்பந்தத்தை கொடுப்பதானால் அங்கு ஊழலைத் தவிர்க்கலாம். ஒப்பந்தம் பெற்ற பின் உற்பத்தி ஆகும் மடிக்கணிகளின் தரம் குறைவென்றால் அதை ஒப்பிட்டே கண்டுபிடித்து சுலபத்தில் முறைகேட்டை நிரூபிக்கலாம். ஆனால் இப்போதோ ஒரு பண்டத்தின் உற்பத்தி செலவில் சந்தையில் உள்ள மதிப்பென்ன, இவர்களுக்கு அளிக்கப்பட்ட தொகைக்கும் அதற்குமான வித்தியாசம் என்ன என்பதை வைத்தே ஊகம் மூலம் ஊழலை உறுதி செய்ய வேண்டி வருகிறது. அப்போதும் ஒப்பந்ததாரர் தப்பித்து விடுவார்.
இதே போல, சாலை, துறைமுகம், விமான நிலையம் போன்ற கட்டுமானப்பணிகளைப் பொறுத்தமட்டில் அரசுக்கு உள்ள உள்கட்டமைப்பையும் செல்வத்தையும் வைத்து அரசே இப்பணிகளை செய்ய இயலும். மேலும் பணத்தைக் கொடுக்கும் அரசே முதலாளி எனும் போது அதை அரசால் தானே செய்ய இயலாதா? ஆனால் அப்படி செய்தால் தானே ஆளுங்கட்சியால் எஸ்டிமேட் போட்டு தானே குறைந்த செலவில் முடித்து லாபத்தை எடுத்து பாக்கெட்டில் போட முடியாது என்று இப்படி வெளியே விட்டு ஊழல் பண்ணி பணத்தை அடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
இதற்கு மது உற்பத்தி ஒரு நல்ல உதாரணம். அரசு மதுவை விற்கிறது, ஆனால் உற்பத்தியை கட்சிக்காரர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இதையும் அரசே செய்தால் அரசின் நிதிநிலைமை மேம்படும், ஆனால் ஊழல் பண்ண முடியாது.
இந்த 4 ரூ என்பது பல ஆயிரம் கோடி முதலீட்டில் எத்தனை கோடி என யோசியுங்கள். மேலும் 4 ரூபாய் என்பது நியாயமான அநியாய லாபம் என்றால் அதை 6 ரூ ஆக்கினால் அது அநியாயமான அநியாய லாபம். அப்போது ஆட்சியாளர்கள் இதில் கையிட்டு வாரத்தான் முயல்வார்கள்.
இப்பணிகளை செய்ய அரசிடம் பணமே இல்லை என்பவர்களிடம் நான் கேட்கும் கேள்விகள்:
ஊழல் கணக்கில் வரும் இவ்வளவு கோடானு கோடி பணம் யாருடைய பணம்?
பணமே இல்லாத அரசால் எந்த சொத்துப்பின்னணியும் இல்லாத அதானியை எப்படி பத்தாண்டுகளில் உலகப் பணக்காரர்களில் ஒருவராக மாற்ற முடிந்தது?
பணமே இல்லாத அரசை நடத்தும் ஆளுங்கட்சியால் எப்படி இவ்வளவு பணத்தை தேர்தல் நிதியாக இறக்க முடிகிறது?
இவை முழுக்க மக்கள் பணமென்றால் மக்கள் பணமும் அரசின் பணமும் வேறு வேறா?
கடைசியாக, ஒப்பந்தத்தின் போது அரசால் வழங்கப்படும் பணம் அரசுடையது தானே?
எப்போதும் நம் நாட்டில் ஒரு கட்சியிடம் அபரிதமான பணம் இருக்கும், ஆனால் அரசின் கஜானாவில் குறைவாகவே இருக்கும், ஆனால் ஆட்சி பண்ணும் கட்சியானது தன்னையே அரசு என்று எண்ணவும் செய்யும். இது முரண் இல்லையா? மேலும் இப்படி அரசு கஜானா காலி செய்யப்படுவதே தனியார்மயமாக்கலின் முக்கியமானதாக்கி மொத்தத்தையும் அவர்களிடம் விற்கவே.
நாம் ஊழலைப் பற்றி பேசும் போது செய்யும் பெரிய தவறு கட்சிகளை மட்டும் குறைசொல்லிவிட்டு பொருளாதார அமைப்பில் செல்வம் எங்கெல்லாம் போகிறது என்பதை கண்டுகொள்ளாமல் விடுவது. அதாவது காரணத்தை (பொருளாதாரம்) விட்டுவிட்டு அறிகுறியை (ஊழல்) சாடுவது. அதனாலே நம் மக்கள் ஒரு கட்சி அதிகமாக ஊழல் செய்கிறது எனத் தெரிந்தால் “நீ அடிச்சது போதும், அடுத்தவன் வரட்டும்” என அடுத்த கட்சியை ஆதரிக்கிறார்கள். அவர்கள் கொள்ளையடிப்பது அதிகமானால் “உனக்கு முன்னே இருந்தவன் இனி கொஞ்சம் அடிக்கட்டும்” என அவர்களை அழைக்கிறோம். இதில் எதாவது லாஜிக் உள்ளதா?
நான் ஒரு வாக்காளனாக இருந்தால் யார் அதிகமாக ஊழல் செய்தார்கள், யார் அண்மையில் ஊழல் செய்தார்கள் என்று பார்த்து ம்யூசிக்கல் சேர் விளையாடாமல் இந்த சீரழிவுக்கு காரணமான பொருளாதார அமைப்பை மாற்றக் கேட்பேன். அதற்காக போராடுவேன். பேசுவேன். அப்படி என்னால் கேட்க முடியாவிட்டால், ஒரு கட்சியின் அரசியல், கொள்கை முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே வாக்களிப்பேன் (ஊழலைக் கருதி அல்ல).
இப்போது திமுக அரசின் ஊழல் குறித்து பொங்குகிறவர்களை கவனியுங்கள் - இவர்கள் மத்தியில் ஆளும் கட்சியின் மறைமுக ஆதரவாளர்களாக, மூன்றாவது அணியின் தொண்டர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒன்றிய அரசின் ஊழல்களைப் பற்றி சேதி வந்தால் கமுக்கமாக இருப்பார்கள். இவர்களுக்கு ஊழலை ஒழிப்பதில் எந்த அக்கறையும் இல்லை.
நமக்குத் தேவை ஊழல் ஒழிப்பு அல்ல, இந்த பொருளாதார அமைப்பின் மாற்றமே. அதுவே பிரச்சினையின் இலைகளைக் கிள்ளிவிட்டு நாடகமாடாமல் ஆணிவேர் வரை சென்று மாற்றுவது. அதுவரை ஊழலை விவாதிப்பதைப் போல பெரிய பாசாங்கு வேறில்லை.
பின்குறிப்பு: என் நோக்கம் ஒரு கட்சியின் ஊழலை ஆதரிப்பதோ ‘முட்டுக்கொடுப்பதோ’ அல்ல. உண்மையான பிரச்சினையை பேசுங்கள் எனக் கோருவதே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...