முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகாநதி - ஒரு மீள் பார்வை




 

சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் வசந்தபாலன்மகாநதியைப்பற்றி மீள்மதிப்புரை எழுதியதைப் படித்த போது எனக்கு அதைப் பற்றி வேறு சில விசயங்கள் தோன்றின


எனக்கு எப்போதெல்லாம் உலகத்தின் மீது கசப்பு ஏற்படுகிறதே அப்போதெல்லாம்மகாநதியைஓட விட்டு என்னை மறந்து பார்த்திருப்பேன். என்னை அதிகமாக ஈர்ப்பது இப்படத்தில் நியாயம், தர்மம், அறம் பற்றி கமல் எழுப்பும் கேள்விகளே. ஒரு சின்ன கோடு, அதைக் கடந்து அந்தப் பக்கம் போய் விடலாமே எனத் தோன்றாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் செய்ய மாட்டோம் இப்படம் அது ஏன் என்பதைப் பற்றியதே எனத் தோன்றுகிறது. மனிதர்கள் தமது நலனுக்காக எதையும் செய்யலாம், யாரையும் ஏமாற்றலாம், சுரண்டலாம், துன்புறுத்தலாம். அதைப் பார்க்காமல், கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதா அல்லது அதைப் பற்றி யோசிக்க வேண்டுமா எனமகாநதிகேட்கிறது. அதற்குள் இன்னும் தீவிரமாக கமல் பயணிக்கவில்லை என்றாலும் தமிழில் வண்ணப்படங்கள் வந்த பிறகு அந்த பகுதிக்குள் யாருமே அனேகமாக பயணிக்கவில்லை, சினிமாக்கள் முழுக்க ஒன்று தனிப்பட்ட உறவுச்சிக்கல் அல்லது சமூகப் போராட்டம் என மாறிவிட்டதால்மகாநதிதொடர்ந்து ஒரு தனி இடத்திலே, உயர்வான இடத்திலே இருக்கிறது. நாம் நினைத்திருந்தால் கோடநாடு கொலைவழக்கில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியோ, தனிப்பட்ட முறையில் மிரட்டியும் அடித்துப் பிடுங்கியும் நடுத்தெருவுக்கு கொண்டு வரப்பட்டவர்கள் கொல்லப்பட்டவர்கள் பற்றியோ ஒரு படத்தை எடுத்திருக்கலாம். மதுரையில் ஒரு விஞ்ஞானி பல ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள ஒரு காப்புரிமத்துக்காக அவரது நண்பரால் ரௌடிகளைக் கொண்டு கொல்லப்பட்டார். நாம் சினிமாவில் மட்டுமல்ல எழுத்தில் கூட இந்த வாழ்க்கையை அறமானதாகவா அநீதியாகவா பார்க்க வேண்டும் எனும் கேள்வியை நேர்மையாக எழுப்புவதில்லை. கமல் தன் படத்தில் கிளைமேக்ஸில் ஒருவர் அநீதியைக் கண்டு பயந்து ஓடிக்கொண்டே இருக்கக் கூடாது, எதிர்த்து நிற்கவும் தண்டிக்கவும் வேண்டும் என சொல்லுவார். அந்த சினிமாத்தனமான முடிவை தவிர்த்தால் "ஷஷாங்க் ரிடெம்ப்ஷனைப்" போல இருத்தலியல் படமாகவும் எடுத்திருக்க முடியும்


இன்னொரு விசயம் - வணிக சினிமாவில் எப்போதுமே ஒரு சேடோமசோக்கிஸ (சுயவதை இன்பம்) சரடு உண்டு. அந்த காலத்தில் வந்ததுலாபாரம்போன்ற படங்கள் ஒரு கட்டத்தில் மறைந்துவிட்டன. (அதன் தொடர்ச்சியே 2000இன் பிற்பகுதியில் வசந்தபாலன், பாலா எடுத்தவை.) “மகாநதிஅவ்வகையின் மிக மிகக்கொடூரமானசாத்தியம். மற்ற படங்களில் குழந்தை கொல்லப்படும், நாயகன் நாயகி கொல்லப்படுவார்கள், தெருவுக்கு வருவார்கள், தற்கொலை பண்ணுவார்கள். இதிலோ கற்பனை அப்பால் கொடுமைகள் நிகழ்கின்றன - குழந்தைகள் தற்காலிக அனாதையாக்கப்பட்டு, விபச்சாரியாகவும், கழைக்கூத்தாடியாகவும் மாற்றப்படுகிறார்கள். நாயகனுக்கு தொடர்ச்சியான அவமானங்கள் நடக்கின்றன. சொத்தையும் மரியாதையையும் இழக்கிறான். கடைசியில் அவன் தன் கையையும் இழக்கிறான். நம் மனதுக்குள் ஆயிரமாயிரம் புண்கள் முரடுத்தட்டி இருக்கின்றன. நாம் சில நேரங்களில் அப்புண்களை சுரண்டிப் பார்த்து வலியை நினைவூட்டி ரசிக்க விரும்புகிறோம். அதற்கு ஏற்ற படம்மகாநதி”.


வசந்தபாலன் சொல்வதைப் போலமகாநதிக்குள்இரண்டு மூன்று படங்கள் இருக்கின்றன. ) ஏமாற்றப்பட்ட ஒருவன் தன் பணத்தையும் குடும்பத்தையும் மீட்கும் கதை, ) சிறையில் தன்னைத் தக்க வைக்கும் போராடி மீளும் ஒருவனின் கதை, ) பழிவாங்கும் கதை. இந்த மூன்று கதைகளையும் போட்டுக் குழப்பாமல் ஒரே கதையை மட்டும் எடுத்திருந்தால் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருக்கும் என எனக்குத் தோன்றியது. ஒரு படத்தை மக்கள் பார்க்க ஆரம்பித்த 10 நிமிடங்களில், 30வது, 60வது நிமிடங்களில், கிளைமேக்ஸுக்கு அரைமணி நேரத்துக்கு முன்பு என எப்போது அவர்களை எழுப்பிஇது எதைப் பற்றின கதை?” கேட்டால் அவர்கள் ஒரே பதிலை சொல்ல வேண்டும். எனில் அப்படம் வெல்லும். குழப்பமாக பதில் சொன்னாலும் சொல்லவே தெரியவில்லை என்றாலோ மாற்றி மாற்றி சொல்கிறார்கள் என்றாலோ அப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அங்குதான்அவதாரத்தையும்”, “புதுப்பேட்டையும்போலமகாநதியும்கோட்டை விட்டது.


வசந்தபாலன் கொச்சின் ஹனீபாவைப் போன்ற சூழ்ச்சிமிக்க, அடுத்தவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் வஞ்சகர்களும், சின்னச்சின்ன, நியாயமான ஆசைகள் கொண்ட அப்பாவியான கிருஷ்ணசாமிகளும் இந்த உலகில் என்றுமே இருப்பார்கள் என்று சொல்லி இருந்தார். எனக்கு அண்மையில் இப்படத்தை பார்க்கையில் ஹனீபாவின் பாத்திரம் அந்தளவுக்கு மோசமானவர் அல்ல என்று தோன்றியது. மாறாக, அவர் தன்வேலையைசெய்கிறார். அவர் அதை மிகவும் மகிழ்ச்சியாக தன்னம்பிக்கையுடன் செய்கிறார், மாட்டினவர்களை வதைப்பதில் ஒரு சிறிய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் என்பதே நமக்கு அவர் மீது அருவருப்பை ஏற்படுத்துகிறது; அவருக்கு வேலை கொடுக்கும் தொழிலதிபர் பாத்திரம் இன்னும் கொடூரமான வில்லன். அதனாலே அவர் கையை கமல் வெட்டுகிறார் (பிள்ளைக்கறி கேட்கிறாயா?). ஆனால் நாம் அவரை அதிகமும் நினைவில் வைத்திருப்பதில்லை. ஏனெனில் அவர் யாரையும் வதைப்பதில் மெனெக்கெட்டு அதை ரசிப்பதில்லை. அவரிடம் வஞ்சகம் இல்லை. ஒரு நல்ல வில்லனுக்கு இந்த இரு குணாதசியங்களும் வேண்டும் (தீமையை ரசிப்பது, வஞ்சகம்). 


எனக்கு கமல் பாத்திரத்தின் வீழ்ச்சிக்கு ஹனீபா அளவுக்கு அவரும் தான் காரணம் என்றே படம் உணர்த்துவதாகத் தோன்றியது. கதை ஆரம்பிப்பதே கிருஷ்ணசாமி தன்னுடைய பழைய காரை தன் நண்பன் புதிய காருடன் எதிர்கொண்டு தன் அமெரிக்க வாழ் பகட்டான வாழ்க்கையை காட்டி அவனுக்குள் பொறாமையையும் ஆசையையும் தூண்டும் போதுதான். கிருஷ்ணசாமியின் பிள்ளைகளுக்கு நண்பனின் பிள்ளைகளைப் போல ஆங்கிலம் பேசத் தெரியாது. அவனிடம் விலை மதிப்பான புதிய கார். அவன் நகர வாழ்க்கையை வாழவில்லை. அவனுக்கு மனைவி இல்லை. இது ஹனீபாவின் வைப்பாட்டி மீதான ஈர்ப்பாகிறது. பணம், நவீனம், பெண். இதுதான் கிருஷ்ணசாமியை அவனுடைய அத்தனை தவறுகளையும் இழப்புகளையும் நோக்கி ஈர்க்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவருக்குள் அடக்கப்பட்டு இருக்கும் போதாமையுணர்வு நண்பனின் வருகை கிளர்த்தி விடுகிறது. ஒருவேளை தனுஷுக்குப் (ஹனீபா) பதில் வேறு சரியான வணிக வழிகாட்டியைக் கண்டிருந்தால் அவர் நகரத்துக்கு வந்து சற்றே சிதைத்திருந்தார். தனுஷைக் கண்டதால் அவருடைய சிதைவு இன்னும் வேகமெடுக்கிறது, அவருடைய வீழ்ச்சி இன்னும் கொடூரமானதாகிறது.  கிருஷ்ணசாமியின் பிழையே அவரை அந்த இடத்துக்குக் கொண்டு செல்கிறது என்பதை திரைக்கதை சரியாக சொல்லிவிடுகிறது.


கிருஷ்ணசாமியின் இன்னொரு பிரச்சினை அவருக்கு நடப்புலக சூட்சுமங்கள் தெரியவில்லை என்பது. அவருக்கு மனிதர்களின் சுபாவமோ, பணத்தின் சுபாவமோ தெரியவில்லை. கதை முடியும் போது அவர் தன் மகள், மகனை மட்டும் மீட்கவில்லை, அறிவையும் பெறுகிறார். தன் வெள்ளந்தியான குணத்தை இழந்து சாமர்த்தியமான வலுவான நடைமுறை ஞானம் கொண்ட மனிதராகிறார். இப்படிப் பார்க்கையில்மகாநதிஒருவரின் வீழ்ச்சியைப் பற்றின கதை அல்ல, ஒரு சுயமுன்னேற்றக் கதை. ஆனால் கதையின் தொனி அதை வெளிப்படுத்தவில்லை. அப்படி இருந்தாலும் இப்படத்தை மக்களால் இன்னும் சுலபத்தில் ஜீரணித்திருக்க முடியும்.


ஒரு படத்துக்குள் எவ்வளவு கதைகள்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...