முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யுவன் சந்திரசேகர்




யுவனை நான் ஜெயமோகன் நடத்திய ஊட்டி முகாமில் எனக்கு 17 வயதிருக்கும் போது சந்தித்தேன். அவருக்கு அப்போது நாற்பது வயதிருக்கும், ஆனால் என்னை விட பயங்கர இளைஞனாக நடந்துகொண்டார். அந்த முகாமில் நான் பார்த்த ஒரே சுதந்திர பிறவி அவர் தான் - கவிதையியல் குறித்த தன் நுட்பமான கருத்துக்களை தத்துவார்த்தமாக விவாதிப்பார். - யுவன் விமர்சகராக உருவாகாமல் போனது ஒரு இழப்பே!
எப்போதுமே பேசிக்கொண்டிருக்கும் ஜெயமோகன் இவரது கருத்துக்களை மட்டுமே பொறுமையாகக் கேட்டுப் பார்த்திருக்கிறேன். எப்போதுமே சினம் கொண்டபடி இருக்கும் ஜெயமோகன் இவரிடம் மட்டுமே அமைதியாக இருந்து பார்த்திருக்கிறேன். எனக்கு அப்போதே யுவனை மிகவும் பிடித்திருந்தது.
நான் கல்லூரியில் படிப்பதற்காக சென்னைக்கு சென்ற போது முதலில் சென்று சந்தித்த படைப்பாளி யுவனே. அவரது வீடு என் கல்லூரி அருகிலே இருந்தது. அங்கு யுவன் சற்று வித்தியாசமாக இருந்தார். ஊட்டியில் நான் பார்த்த அந்த ஜாலியான சாகசக்காரராக இல்லாமல் அமைதியான குரலில் பேசும், அலுவலக நேரத்தில் அலுவலக வேலை, வீட்டில் இனிமையான தகப்பன், பிரியமான கணவனாக இருந்தார். அவர் வீட்டுக்குள் சிகரெட் பிடிக்க மாட்டார் என்பதே எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதுதான் அவர் - எல்லா இடங்களிலும் பொருந்திப் போகிறவர். யாரையும் எரிச்சல்படுத்தாதவர். கண்ணியமானவர், ஆனால் சு.ராவைப் போல கனவான் அல்ல. கொஞ்சம் ஹிப்பி, கொஞ்சம் கனவான் என "மைக்கேல் மதன் காமராஜன்" போல இருந்தார். எனக்கு அதுவும் பிடித்திருந்தது.
பொதுவாக நான் சந்தித்த படைப்பாளிகளிடம் இருந்த கோணலான இயல்பு, பிறழ்வின் கொண்டாட்டம் யுவனிடம் இல்லை - எங்கும் நியாயமாக நடக்க வேண்டும், சரியாக சிந்திக்க வேண்டும் என யோசிக்கக் கூடியவர். தனிப்பட்ட முறையில் சுதந்திரவாதி, கலகவாதி போன்ற ஒரு சித்திரம் ஒரு பக்கம் இருந்தாலும் அவரிடம் நாம் போய் அறிவுரை கேட்டால் யாரையும் துன்புறுத்தாத, குடும்பத்துக்கும் சுற்றத்துக்கும் நன்மை பயக்கும் அறிவுரையே தருவார்.

யுவனுடைய புனைவின் தனி அடையாளம் அதன் மடக்குவிசிறி போன்ற கதைமொழியும் கதையமைப்பும். பூமியை நோக்கி விரிந்திருக்கும் முடிவற்ற ஆகாயம், கீழே நீர்த்துளியில் அதே ஆகாயம் எனும் (ஆத்மாவைப் பற்றின) உருவகம் உபநிடத்தில் வரும். எனக்கு யுவனின் கதைகளைப் படிக்கையில் அதுதான் நினைவுக்கு வரும். ஓரிடத்தில் வரும் மிகச்சிறிய குறிப்பின் பார்வையில் மொத்த கதையையும் விரித்துப் படிக்கவும், கதைக்குள் வரும் கதையைக் கொண்டு மற்றொரு கதையை சிந்திக்கவும் முடியும். நான் என் இருபதுகளில் முதலில் படித்த அவரது புனைவு “குள்ளச்சித்தன் சரித்திரம்” தான். அது என்னை மிகவும் கவர்ந்தது. அதன் பிறகு அவரது கதைகளை தொடர்ச்சியாக படித்து வந்திருக்கிறேன். அண்மையில் வெளிவந்த “கடலில் தூக்கி எறிந்தவை” வரை. அத்தொகுப்பில் கதைகள் அவ்வளவு நுட்பமாக முதிர்ச்சியாக இருக்கும். கடந்த இரு பத்தாண்டுகளில் கணிசமான தமிழ் (தீவிர) சிறுகதைகள் நாடகீய உணர்ச்சி மோதல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஆனால் யுவனின் கதையில் அத்தகைய மிகை செண்டிமெண்டுகள், நாடகீய தளும்பல்களை, தாழ்வுணர்ச்சி, போலி அறமதிப்பீடுகளின் தளும்பலை பார்க்க முடியாது. அனேகமாக தொண்ணூறுகள் வரை தமிழ் கதைகளில் இருந்த மௌனத்தையும் நுட்பத்தையும் இன்றும் தக்க வைத்திருக்கும் மிகச்சிலரில் யுவனும் ஒருவர் எனத் தோன்றுகிறது. யுவனின் கதைகள், நாவல்களில் திரும்பத் திரும்ப வரும் கருப்பொருள் “கதையாடல்களின் விளையாட்டே வாழ்வு” என்பதுதான். கதைக்குள் கதைக்குள் கதை எனும் அரேப்பிய இரவுகள் போன்ற frame narrative நமது தொன்மங்களில் வாழ்வின் சிக்கலான அமைப்பைக் காட்ட உருவானது. ஆனால் யுவனில் அது அர்த்தங்களின் சாராம்சமின்மையை சுட்டிக் காட்ட பயன்படுத்தப்பட்டிருக்கும்.

யுவன் எனும் ஒரு புனைவெழுத்தாளரை விட யுவன் எனும் கவிஞர் பல மடங்கு மேலானவர் என்பது என் நம்பிக்கை - அவரது கவிதைகளின் மீபொருண்மை வீச்சு அற்புதமானது. காலம் எனும் இருப்பின் விளிம்பில் நிற்கும் மனிதனின் தவிப்பு என்று அவரது கவிதைகளின் மையக்குரலை அடையாளப்படுத்துவேன். அவரது கவிதைத் தொகுப்புக்கு நான் மிகவும் ரசித்து உயிர்மையில் மதிப்புரை எழுதியிருக்கிறேன்.

எனக்கு யுவனிடம் உள்ள ஒரே குறை அவரது பெயர்: யுவன் சந்திரசேகர் என சொல்லும் இடங்களில் யுவன் சங்கர் ராஜா என்றும் யுவன் சங்கர் ராஜா வர வேண்டிய இடங்களில் யுவன் சந்திரசேகர் என மாற்றி சொல்லி பல்ப் வாங்கும் பழக்கம் நீண்ட காலமாக எனக்குண்டு. இப்படி பெயரளவிலும் அவர் ஒரு ‘குள்ளச்சித்திரன்’ தான்.

இம்முறை விஷ்ணுபுரம் விருது யுவனுக்கு என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் தேர்வாக உள்ளது. அவருக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...