Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

யுவன் சந்திரசேகர்




யுவனை நான் ஜெயமோகன் நடத்திய ஊட்டி முகாமில் எனக்கு 17 வயதிருக்கும் போது சந்தித்தேன். அவருக்கு அப்போது நாற்பது வயதிருக்கும், ஆனால் என்னை விட பயங்கர இளைஞனாக நடந்துகொண்டார். அந்த முகாமில் நான் பார்த்த ஒரே சுதந்திர பிறவி அவர் தான் - கவிதையியல் குறித்த தன் நுட்பமான கருத்துக்களை தத்துவார்த்தமாக விவாதிப்பார். - யுவன் விமர்சகராக உருவாகாமல் போனது ஒரு இழப்பே!
எப்போதுமே பேசிக்கொண்டிருக்கும் ஜெயமோகன் இவரது கருத்துக்களை மட்டுமே பொறுமையாகக் கேட்டுப் பார்த்திருக்கிறேன். எப்போதுமே சினம் கொண்டபடி இருக்கும் ஜெயமோகன் இவரிடம் மட்டுமே அமைதியாக இருந்து பார்த்திருக்கிறேன். எனக்கு அப்போதே யுவனை மிகவும் பிடித்திருந்தது.
நான் கல்லூரியில் படிப்பதற்காக சென்னைக்கு சென்ற போது முதலில் சென்று சந்தித்த படைப்பாளி யுவனே. அவரது வீடு என் கல்லூரி அருகிலே இருந்தது. அங்கு யுவன் சற்று வித்தியாசமாக இருந்தார். ஊட்டியில் நான் பார்த்த அந்த ஜாலியான சாகசக்காரராக இல்லாமல் அமைதியான குரலில் பேசும், அலுவலக நேரத்தில் அலுவலக வேலை, வீட்டில் இனிமையான தகப்பன், பிரியமான கணவனாக இருந்தார். அவர் வீட்டுக்குள் சிகரெட் பிடிக்க மாட்டார் என்பதே எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதுதான் அவர் - எல்லா இடங்களிலும் பொருந்திப் போகிறவர். யாரையும் எரிச்சல்படுத்தாதவர். கண்ணியமானவர், ஆனால் சு.ராவைப் போல கனவான் அல்ல. கொஞ்சம் ஹிப்பி, கொஞ்சம் கனவான் என "மைக்கேல் மதன் காமராஜன்" போல இருந்தார். எனக்கு அதுவும் பிடித்திருந்தது.
பொதுவாக நான் சந்தித்த படைப்பாளிகளிடம் இருந்த கோணலான இயல்பு, பிறழ்வின் கொண்டாட்டம் யுவனிடம் இல்லை - எங்கும் நியாயமாக நடக்க வேண்டும், சரியாக சிந்திக்க வேண்டும் என யோசிக்கக் கூடியவர். தனிப்பட்ட முறையில் சுதந்திரவாதி, கலகவாதி போன்ற ஒரு சித்திரம் ஒரு பக்கம் இருந்தாலும் அவரிடம் நாம் போய் அறிவுரை கேட்டால் யாரையும் துன்புறுத்தாத, குடும்பத்துக்கும் சுற்றத்துக்கும் நன்மை பயக்கும் அறிவுரையே தருவார்.

யுவனுடைய புனைவின் தனி அடையாளம் அதன் மடக்குவிசிறி போன்ற கதைமொழியும் கதையமைப்பும். பூமியை நோக்கி விரிந்திருக்கும் முடிவற்ற ஆகாயம், கீழே நீர்த்துளியில் அதே ஆகாயம் எனும் (ஆத்மாவைப் பற்றின) உருவகம் உபநிடத்தில் வரும். எனக்கு யுவனின் கதைகளைப் படிக்கையில் அதுதான் நினைவுக்கு வரும். ஓரிடத்தில் வரும் மிகச்சிறிய குறிப்பின் பார்வையில் மொத்த கதையையும் விரித்துப் படிக்கவும், கதைக்குள் வரும் கதையைக் கொண்டு மற்றொரு கதையை சிந்திக்கவும் முடியும். நான் என் இருபதுகளில் முதலில் படித்த அவரது புனைவு “குள்ளச்சித்தன் சரித்திரம்” தான். அது என்னை மிகவும் கவர்ந்தது. அதன் பிறகு அவரது கதைகளை தொடர்ச்சியாக படித்து வந்திருக்கிறேன். அண்மையில் வெளிவந்த “கடலில் தூக்கி எறிந்தவை” வரை. அத்தொகுப்பில் கதைகள் அவ்வளவு நுட்பமாக முதிர்ச்சியாக இருக்கும். கடந்த இரு பத்தாண்டுகளில் கணிசமான தமிழ் (தீவிர) சிறுகதைகள் நாடகீய உணர்ச்சி மோதல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஆனால் யுவனின் கதையில் அத்தகைய மிகை செண்டிமெண்டுகள், நாடகீய தளும்பல்களை, தாழ்வுணர்ச்சி, போலி அறமதிப்பீடுகளின் தளும்பலை பார்க்க முடியாது. அனேகமாக தொண்ணூறுகள் வரை தமிழ் கதைகளில் இருந்த மௌனத்தையும் நுட்பத்தையும் இன்றும் தக்க வைத்திருக்கும் மிகச்சிலரில் யுவனும் ஒருவர் எனத் தோன்றுகிறது. யுவனின் கதைகள், நாவல்களில் திரும்பத் திரும்ப வரும் கருப்பொருள் “கதையாடல்களின் விளையாட்டே வாழ்வு” என்பதுதான். கதைக்குள் கதைக்குள் கதை எனும் அரேப்பிய இரவுகள் போன்ற frame narrative நமது தொன்மங்களில் வாழ்வின் சிக்கலான அமைப்பைக் காட்ட உருவானது. ஆனால் யுவனில் அது அர்த்தங்களின் சாராம்சமின்மையை சுட்டிக் காட்ட பயன்படுத்தப்பட்டிருக்கும்.

யுவன் எனும் ஒரு புனைவெழுத்தாளரை விட யுவன் எனும் கவிஞர் பல மடங்கு மேலானவர் என்பது என் நம்பிக்கை - அவரது கவிதைகளின் மீபொருண்மை வீச்சு அற்புதமானது. காலம் எனும் இருப்பின் விளிம்பில் நிற்கும் மனிதனின் தவிப்பு என்று அவரது கவிதைகளின் மையக்குரலை அடையாளப்படுத்துவேன். அவரது கவிதைத் தொகுப்புக்கு நான் மிகவும் ரசித்து உயிர்மையில் மதிப்புரை எழுதியிருக்கிறேன்.

எனக்கு யுவனிடம் உள்ள ஒரே குறை அவரது பெயர்: யுவன் சந்திரசேகர் என சொல்லும் இடங்களில் யுவன் சங்கர் ராஜா என்றும் யுவன் சங்கர் ராஜா வர வேண்டிய இடங்களில் யுவன் சந்திரசேகர் என மாற்றி சொல்லி பல்ப் வாங்கும் பழக்கம் நீண்ட காலமாக எனக்குண்டு. இப்படி பெயரளவிலும் அவர் ஒரு ‘குள்ளச்சித்திரன்’ தான்.

இம்முறை விஷ்ணுபுரம் விருது யுவனுக்கு என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் தேர்வாக உள்ளது. அவருக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...