முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு முடிவற்ற 'துப்பறிவாளன்'




2021இல் எழுதி முடித்த நாவல் அது. அதைக் கடந்த இரு ஆண்டுகளாக திருத்தி மீளெழுதிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அது புதிய பொலிவை, அடர்த்தியைப் பெறும் போது மகிழ்கிறேன். நான் எழுத்தாளனாக அறிமுகமான காலத்தில் ஒரு புனைவெழுத்தை முடித்ததும் வெளியிட்டு அடுத்த வேலையை பார்க்கப் போக வேண்டும் என நினைத்திருந்தேன். வெகுபின்னரே அது தவறு, கண்ணாடியைத் துடைக்கத் துடைக்க தோற்றம் தெளிவுறுவதைப் போல, ஒரு படைப்பை நாம் திருத்தத் திருத்தத்தான் முழுமையாக வெளிப்படுகிறது எனப் புரிந்துகொண்டேன்.
இந்நாவலுக்காக ஆய்வு செய்யும் நோக்கில் எவ்வளவோ படித்திருக்கிறேன், குறிப்பெடுத்திருக்கிறேன். ஒரு பாத்திரத்தின் பெயரை மாற்ற வேண்டுமெனில் அவர் எந்த மதத்தின், தத்துவ சிந்தனையின் பிரதிநிதி என யோசித்து, அதற்கான நூல்களை வாசித்து, அக்குறிப்புகளை கதையில் சரியான இடங்களில் கதையோட்டம் பாதிக்கப்படாமல் நுழைப்பது, அவரவருக்கான தனித்துவமான சிந்தனை, பேச்சுமொழிகளைக் கொண்டு வருவது ... இதற்கே ஒரு சில மாதங்கள் ஆகும். கதை முழுக்க காலநிலைக் குறிப்புகளில் ஒரு தொடர்ச்சியைக் கொண்டு வரவே ஒரு மாதத்திற்கு மேல் உழைப்பு தேவைப்படும். நாவலின் பக்கங்களை இரட்டைப் படை எண்களாகப் பிரித்து சரியான இடத்தில் திருப்பங்களைக் கொண்டு வருவது,ஒரு பாத்திரம் 200வது பக்கத்தில் சொல்லும் ஒரு கருத்துக்கான தர்க்கத்தை அதற்கு முன்பு ஓரிடத்தில் பட்டும்படாமல் உணர்த்துவது, ஒரு பாத்திரத்தின் நன்மைக்கு ஈடாக அவர்து தீமையையும் காட்டி சமநிலைப்படுத்துவது ... இப்படி நாவலைத் திருத்தி எழுதுவது கடும் உழைப்பைக் கோரும் வேலை, ஆனால் அதே நேரம் நாம் வேறு எதிலும் உழைத்துப் பெறாத மகிழ்ச்சியை நிறைவை இது தரும்.

உ.தா., நான் இதற்கு முன்பு பகவத் கீதையை நான்கைந்து முறைகள் துண்டுத்துண்டாகப் படித்திருக்கிறேன். இம்முறை என் நாவலுக்குத் தேவைப்பட்டதால் சினமயானந்தாவின் 1400 பக்க கீதை உரைநூலை பத்து நாட்களில் தினமும் வேலையிடையே படித்து முடித்தேன். என் நண்பர்கள் என் கையிலோ மேஜையிலோ அந்நூலைப் பார்த்து அதிர்ச்சியாவார்கள். ஆனால் எனக்கு அது ஆய்வுக்கான வாசிப்பு. எந்த மனச்சாய்வும் இன்றி, என் தர்க்க மனதை கழற்றி வைத்துவிட்டு, மகிழ்ச்சியாகவும் கொதிப்பாகவும் அதை வாசிக்கையில் நான் என் நாவலின் பாத்திரமாகவே உணர்ந்தேன். அதற்கு ஈடான மகத்தான அனுபவத்தை நான் எந்த நூல் வாசிப்பிலும் அடைந்ததில்லை. ஏனென்றால் புனைவுக்காக தத்துவத்தை வாசிக்கும் போது அதையும் , ஒரு பாத்திரத்தின் நோக்கில் இருந்து புனைவாகவே பார்க்கிறேன். அதனாலே தர்க்க மனத்துடன் தத்துவம் படிப்பதை விட இது அதிகமாக என்னை திகைப்பூட்டுகிறது.
அடுத்து உபநிடங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். என் நாக்வலில் ஒரு முக்கியமான பிரச்சினை இருந்தது. என்ன செய்தாலும் ஒரு பாத்திரத்தை சரியாக 'இருத்த' முடியவில்லை. எவ்வளவு யோசித்தும் தீர்வு கிடைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட உபநிடத்தில் நான் படித்த உரையாடல் தற்செயலாக எனக்கு ஒரு புதிய திறப்பை அளித்தது. அதற்காக மீண்டும் நாவலில் ஒரு புதிய பகுதியை எழுதத் தொடங்கினேன். அடுத்து இதே புனைவு மனநிலையில் சூன்யவாதமும், ஸ்வந்திரிகா பௌத்தமும் படிக்க வேண்டும்.

இப்படி என் "முடிவற்ற துப்பறியும் கதை" நிஜமாகவே ஒரு முடிவற்ற துப்பறியும் கதையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் அவ்வளவு மகிழ்ச்சியாக இப்பணியை செய்துகொண்டிருக்கிறேன். ஆம், நான் இதற்கான நேரத்தில் இன்னும் இரு நாவல்களை எழுதி முடித்திருக்க முடியும். ஆனால் இந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அவற்றில் கிடைக்காது. இதற்கான கூலியோ பாராட்டோ எனக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் கிடைத்தால் அவற்றுக்கு எனது மகிழ்ச்சியும் திருப்தியும் ஈடாகாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...