Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கல்ட் சாமியார்களை நியாயப்படுத்தும் போக்கு சொல்வதென்ன?




கல்ட் சாமியார்களை நியாயப்படுத்தும் போக்கு சொல்வதென்ன?


கல்ட் மத அமைப்புகளின் வரலாற்று தேவையை சில தமிழ் அறிவுஜீவிகள் இவ்விதமாக நியாயப்படுத்தி வரையறுப்பார்கள்:


(முற்போக்கு)

அடித்தட்டு மக்களை நோக்கி இந்து மதத்தை எடுத்துச் செல்வது;

வெகுமக்கள் திரளில் பெண்களுக்கு இடமளித்து அதிகாரமளிப்பது


(வலதுசாரி)


முதலீட்டிய நகரமயமாக்கல் சமூகத்தில் கிறித்துவமும், இஸ்லாமும் அந்நிய முதலீடுகளைப் பெற்று பெருமளவில் வளர்ந்துள்ளதுடன் மதமாற்றத்திலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த இரு வாய்ப்புகளும் - நிறுவனமயமாகி நவீன இளைஞர் திரளை உள்ளிழுப்பது, நமது மரபான ஆன்மீக வடிவங்களான, உளவியல் கருவிகளால் யோகா, தியானம் போன்றவற்றைக் கற்றுக்கொடுத்து அவர்களுடைய உளவியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதும் இந்துமதத்தையும் பரப்பியல் மதங்களிடம் இருந்து பாதுகாத்து நிலைப்படுத்துவதும் - இந்துமதத்துக்கு கிடைக்காமல் போனது. அந்த வெற்றிடத்தில் தோன்றியவையே கல்ட் இந்து மத அமைப்புகளும் அவற்றின் குருமார்களும்.


இந்த இரண்டு தரப்புகளும் கோடானு கோடிகளில் மலைமலையாக குவிந்துள்ள கறுப்புப் பணத்தை பெருமளவில் வெள்ளையாக்குவதற்கும், ஜனநாயக பிரச்சாரத்துக்கு மக்களைத் திரட்டுவதற்கும் கல்ட் அமைப்புகள் பயன்படுத்தப்படுவதை நாம் கவனிக்காமல் இருப்பதற்காக அறிவுஜீவிகள் செய்கிற மோடி மஸ்தான் வேலை மட்டுமே.


முதலில் அடித்தட்டு, எளிய மக்கள், பெண்களுக்கு மதத்தை நுகரும் வாய்ப்பு இங்கு மறுக்கப்பட்டிருந்ததா? நான் கவனித்த வரையில் நாட்டார் வழிபாட்டில் அப்பிரச்சினை இருந்ததில்லை. கிராமங்களிலும் சரி, நகரங்களின் அடித்தட்டு, மத்திய வர்க்கத்தினரின் வசிக்கும் பகுதிகளில் உள்ள நாட்டார் தெய்வ கோயில்களில் பெண்களுக்கு சரிக்கு சமமாக, சில நேரங்களில் ஆண்களை விட அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதைச் செய்ய ஒரு அடிகளாரோ பாபாவோ ஜக்கியோ தேவையில்லை. கல்ட் சாமியார்கள் இப்பெண்களுக்கு பொறுப்பு கொடுத்து அதிகாரம் அளிக்கவில்லை, மாறாக அவர்களை பயன்படுத்தி சுரண்டி பணம் சம்பாதிக்கிறார்கள். அதிகாரத்தைக் கொடுப்பதென்றால் ஒரு வேலையின் கூலியான பணத்தில் பங்கையும் கொடுப்பதுதானே? இந்த ஆசிரமங்கள், அமைப்புகளில் மலைமலையாக திரட்டப்படும் பணத்தில் எத்தனை கோடிகளை இந்த பக்தையருக்கு, பெண் நிர்வாகிகளுக்குக் கொடுத்துள்ளார்கள்? இது அடிகளாரின் முன்னெடுப்பு அல்ல, அவருக்கு முன்பே ஓஷோ இதை செய்திருக்கிறார். அவரை ஒட்டி வந்தவர்களின் கல்ட் அமைப்புகளிலும் (நித்தியானந்தா, ஜக்கி), அவருக்கு முன்பே செயல்பட்ட அரசியல் கல்ட் தலைவரான காந்தியடிகளின் அமைப்பு என எதை எடுத்துக்கொண்டாலும் அங்கு தலைமை குருக்களுக்கு அடுத்தபடியாக பெண் நிர்வாகிகளே இருப்பர். ஆனால் இவர்கள் குருவின் அடிமைகளாக இருப்பதால் கடைசி வரையில் போலியான அதிகாரத்தை அனுபவித்து முழுமையாக சுரண்டப்பட்டு வெளியே வரும் போது யாதுமற்றவர்களாக இருப்பர். கல்ட் அமைப்புகளில் இருந்து வெளிவந்த பெண் நிர்வாகிகளின் புத்தகங்களை, பேட்டிகளைப் படிக்கையில் நாம் இதைத் தவறாமல் கவனிக்கிறோம். ஏன் இருந்தாலும் பெண்கள் அங்கு லட்சக்கணக்கில் படையெடுக்கிறார்கள் எனில் பெண்கள் எப்போதுமே அதிகாரமிக்க ஒரு தந்தை உருவை வழிபடுகிறார்கள்; தம்மை வளர்த்தெடுத்து அதிகாரம் அளிப்பதாக வாக்குறுதி தரும் வரமளிக்கும் தெய்வ உருவை நேசிக்கிறார்கள். ஆனால் தாம் சுரண்டப்படுகிறோம் எனப் புரிந்து விரைவிலேயே வெளிவருகிறார்கள். சிலர் வெகுதாமதமாக உளவியல் ரீதியாக சிதைந்து வெளித்தோன்றுகிறார்கள்.

பெண்கள் நேரடியாக கருவறைக்கு சென்று பூஜை செய்வதும், மாத விலக்கின் போது செல்வதும் அடிகளார் கண்டுபிடித்தது அல்ல. இந்தியாவின் பல பகுதிகளில் இப்படியான பெண்கள் மட்டுமே சென்று வழிபடும் சக்தி பீடங்களும் கோயில்களும் உண்டு. இந்தியப் பண்பாட்டின் பல கூறுகளில் ஒன்று இது. இதை ஒருவர் பயன்படுத்துவதில் முற்போக்கு உண்டெனில் முற்போக்கு என்பதுதான் என்ன?


தம் வாழ்விடத்தில் ஒரு மரத்தடியில் மஞ்சள் துணியை சுற்றியோ கல்லில் சந்தனம், குங்குமத்தைப் பூசியோ தெய்வமாக்கி வழிபடும் போது கிடைக்கும் அணுக்கமும், உரிமையுணர்வும் இம்மாதிரி கல்ட் அமைப்புகளில் ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை; மாறாக தம்ஆன்மீக உழைப்பில்இருந்து அந்நியமாகவே வாய்ப்பதிகம்.

இதையெல்லாம் பெண்ணியம், முற்போக்கு எனும் பெயரில் ஆதரிப்பது மோசடி வேலைக்குத் துணை போவதாகும்.


அடுத்து, இந்து மதத்தை பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவை என்பதே ஒரு ஏமாற்றுவாதம் தான் - பெரும்பான்மை மதமான இந்துமதம் தன் உறுப்பினர்களை இழந்து பலவீனமாகி வருவதாக நமக்கு எந்த ஆதாரமும் இதுவரைக் கிடைக்கவில்லை. ஆகையால் பிரச்சாரத்துக்குத் தேவையே இல்லை. அடுத்து இந்துமதம் ஒரு நிறுவனம் அல்ல. வரலாற்றின் ஊடே அது நிறுவனமாக இருந்ததே இல்லை (வைணவம், சைவம் போன்ற சில பிரிவுகளைத் தவிர). அடுத்து, யோகா, தியானம் போன்ற உடல், அகப்பயிற்சி முறைமைகள் நம் நாட்டில் இத்தனை நூற்றாண்டுகளாக இந்நிறுவனங்கள் இல்லாமல் தாம் பயிலப்பட்டன. கல்ட் அமைப்புகள் இல்லாவிடில் இவை அழிந்து போகும் என்பதும் மோசடி வாதமே. எத்தனை கோடி பேர் இந்நிறுவனங்களின் பயிற்சியால் யோகாவிலும் தியானத்திலும் நிபுணர்களாகி உள்ளார்கள் என ஏதாவது ஆதாரம் உண்டா? இல்லை. மாறாக இவர்கள் யோகாவையும் தியானத்தையும் விற்று வயிற்றை வளர்க்கிறார்கள். அதை ஒரு சேவையென சொல்லி நிதியும் கறுப்புப்பணமும் வாங்கி கொழிக்கிறார்கள்


இன்னொரு பக்கம், யோகாவை தனிப்பட்ட முறையில் ஆசான்கள் ஒவ்வொரு ஊரிலும் தெருவிலும் பணம் வாங்கிக்கொண்டு சொல்லித் தர இருக்கிறார்கள். இந்த கல்ட் அமைப்புகளில் பெரும் பணம் செலுத்தி கூட்டத்தோடு கூட்டமாக நின்று பயில்வதை விட இந்த ஆசான்களிடம் கற்பது மேலானது. தியானத்தையும் விபாசனா பயிற்சி மையங்களில் சிறப்பாக கற்றுக்கொள்ளலாம். ஏதோ ஜக்கி இல்லாவிடில் மக்களுக்கு யோகாவும் தியானமும் கிடைக்காது என்பதாக ஒரு பாவ்லா செய்கிறார்களே இவர்களை செருப்பால் அடிக்க வேண்டாமா? அடுத்து, யோகா ஒரு உடற்பயிற்சி, streching exercise. தியானம் நம் உளவியல் ஆரோக்கியத்துக்கானது. இதை ஒருவர் நமது தத்துவ மரபுடன் தொடர்புறுத்தி யோசிக்கலாம். ஆனால் மதத்திற்கும் இவற்றுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உண்மையான யோகா அசான்கள் தம்மைக் கடவுளாகவோ குருவாகவோ கருதுவதில்லை என்பதே நிஜம். மனிதர்களே சிந்தித்து பரிசோதித்து உருவாக்கின உத்திகள், பயிற்சிகளைச் செய்ய எதற்கு கடவுளுக்கு பங்கு கொடுக்க வேண்டும்? ஒன்றைக் களவாடி எடுத்து தமதானதாக காட்டிக்கொண்டு அதில் இருந்து ஆன்மீக அதிகாரத்தையும் பணத்தையும் கறப்பவர்களை திருடர்கள் அல்லாமல் வேறு எவரென அழைப்பது?


ஆகையால் கல்ட் நிறுவனங்களால் மக்களுக்கு எந்த நேரடி நடப்பியல் பயனும் இல்லை; ஒரு பப், மாலுக்கு, நைட் கிளப்புக்கு உள்ள சமூகத் தாக்கமே இவர்களுடையதும். கிறுத்துவ தேவாலயங்களின் இந்து மத நீட்சிகளாக உள்ளன. கிறித்துவத்திற்கு எப்படி இவை பலனளிக்கவில்லையோ அவ்வாறே இந்துமதத்துக்கும். வணிகப்பரிமாற்றத்தைத் தாண்டி இவை கேளிக்கை களங்களாகவோ கறுப்புச் சந்தைக்கு முகமாகவோ இயங்குவது மட்டுமே பயன்கள். இன்னும் சொல்லப்போனால் மக்களுக்கு போய் சேர வேண்டிய வரிப்பணம் இச்சாமியார்கள் மூலம் வெள்ளையாக்கப்பட்டு அதனால் இந்நாட்டில் வறுமையே அதிகரிக்கிறது. இவர்களே ஆதரிக்கும் இந்து சமூகத்தில் கடும் பணவீக்கமும் விலையேற்றமும் ஏற்பட்டு மக்கள் துன்புற இந்த கல்ட் அமைப்புகள் ஒரு முக்கிய காரணமாகின்றன.


இந்த கல்ட் சாமியார்களை நியாயப்படுத்தி நாம் கடவுளின் இன்மை ஏற்படுத்தும் பதற்றத்தை ஆற்றிக் கொள்கிறோம் என நினைக்கிறேன்.


பி.கு: கிறித்துவ, இஸ்லாமிய மத நிறுவனங்கள் வணிக செயல்பாடுகளில் ஈடுபட்டு பணத்தைக் குவிப்பதற்கு நம் இந்திய சட்டத்தில் அளிக்கப்படும் அனுகூலங்கள் களையப்பட வேண்டும். சாதி, மத அறக்கட்டளை கல்வி, ஆன்மீக நிறுவனங்கள் வணிக செயல்பாடுகளாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். மதத்தின், சாதியின் அடிப்படையில் அறக்கட்டளைகள் நிறுவப்பட்டு பணத்தைக் குவிக்கும் போது சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு அதிகாரம் சில மையங்களுக்குள் இறுகுகிறது. தனியார் என வந்தபின் எல்லாரும் ஒன்றுதான், கல்வி, மதப்பிரச்சாரம் எதுவும் தொண்டாகாது. ஏனெனில் இதைக் காட்டி இந்து கல்ட் அமைப்புகளும் இந்துத்துவ கட்சிகளும் இன்னொரு புறம் கொள்ளையடிக்கின்றன. மதசார்பின்மை அல்ல, அரசியலிலும் சமூகப்பொருளாதாரத்திலும் இருந்து மத நீக்கமே நமக்குத் தேவை. இந்தியாவில் உள்ள மதசார்பின்மை ஒரு போலி மதசார்பு கொள்கை மட்டுமே.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...