முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லவ்வர்



எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதல் காட்சியைப் பார்த்ததும் ரொம்ப கிரிஞ்சாக 96 போல இருக்கும் போல என நினைத்தேன். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் மணிகண்டன் பாத்திரத்தின் நிஜ சொரூபத்தைக் காட்டியதும் செமையான படம் என உட்கார்ந்து விட்டேன். காதலை மட்டுமல்ல எல்லா உறவுகளையும் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளும், தன்னுடைய போதாமைகளை உறவின் ஆறுதலில் கடப்பதற்காக முயன்று ஏமாற்றும் கொள்ளும் ஆணின் அகச்சித்திரம் நன்றாக இருந்தது. கூடவே அவனுக்கு ஈடுகொடுத்து தடுமாறும், துன்பப்படும், பிறகு விட்டுவிடலாம் என நினைக்கும் போதும் அவனிடம் இரக்கம் காட்ட வேண்டும் எனக் கருதி குழப்பி மேலும் காயப்படுத்தும், காயப்படும் அந்த பெண்ணின் பாத்திரம். தெளிவாக யோசித்து இரு பாத்திரங்களையும் உருவாக்கி அவர்களுக்காக மேலும் மேலும் கதையை சிக்கலாக்கிக் கொண்டு திரும்ப வர முடியாத அவல நிலைக்கு அவர்களை நகர்த்தியதும் பிடித்திருந்தது. ஏனென்றால் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய்கள், கெர்ள்களின் உலகில் இப்படியான நிஜ மனிதர்களின் பார்க்கவே கிடைப்பதில்லை. அம்மா தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கிக் கிடக்கும் போது நாயகன் மெதுவாக தூங்கி எழுந்து வர வேலைக்காரி பார்த்துவிட்டு கதற என்ன செய்வதென நிற்கும் இடமும் சிறப்பு. வேறு இயக்குநர்கள் என்றால் நாயகனை கதறி அழுது மாரில் அடித்து களேபரம் பண்ண வைத்திருப்பார்கள். இங்கு நாயகனோ ஆஸ்பத்திரியில் அம்மாவைப் பார்க்க வரும் பொறுப்பில்லாத அப்பாவைப் பார்த்து கத்தி தன் கோபத்தை தணித்துக் கொள்கிறான். காதலியை தேவடியா எனத் திட்டும் இடம் கூட சிறப்பு - எனக்குத் தெரிந்து மிக சாதாரணமாக ஆண்களால் பிரயோகிக்கப்படும் சொல். ஒரு பெண் மறுத்தவுடனே அவளைக் குறித்த ஐயம் வருவதும், தேவடியா என்பதும் நம் பண்பாட்டு உளவியலின் மையம். அதையும் சிறப்பாக காட்டியிருந்தார்கள்.
பிரிவை ஆண்களால் சுலபத்தில் ஏற்றுக்கொள்ள இயலாதது அது அவர்களுடைய ஈகோவுடன் சம்மந்தப்பட்டது என்பதால் தான் - நவீன உலகில் ஆணுக்கென்று நிலம் சார்ந்த உரிமையோ சமூக அந்தஸ்தோ இல்லை. நகரங்களில் அவனுக்கான சமூக அந்தஸ்து இல்லை. அழகாக சேலை அணிந்து வந்தாலோ, நவீன ஆடையில் ஜிங்கு ஜிங்கென நடந்தாலோ ஊரே ஒரு பெண்ணைக் கொண்டாடும். அவள் வேலை பார்த்து சம்பாதித்தால் இன்னும் அதிகமாக கொண்டாடும். (கூடவே தேவடியா என்றும் கூப்பிடும் என்பது வேறு பிரச்சினை.) ஆனால் ஆணுக்கு பணத்தையும் சொத்தையும் கடந்து எந்த அங்கீகாரமும் இல்லை. முன்பு இவையிரண்டும் மரபுவழியாக கிடைத்தது. இன்று அதற்காக அவன் ஆயுள் பூராவும் உழைத்தாலும் சுலபத்தில் கிடைப்பதில்லை. அப்போது அவனுக்கு பெண்ணுடலை உடமையாக்குவது தான் ஒரே வழியாக இருக்கிறது. ஒரு உறவை முறிப்பது அவனுடைய ஆண்மையை முறிப்பதைப் போல இருக்கிறது. ஒரு பெண்ணால் தன் உடலின் ஊடாக புது உலகம், உறவுகள் என நகர முடியும். தம் தோற்றத்தை மேம்படுத்துவது, சின்னச்சின்ன விசயங்களை மாற்றுவது என. அவர்களுக்கு இது தன்னிலை சார்ந்த பெரிய சிக்கல் அல்ல. நம் சமூகத்தில் ஆணுக்கு உடலே இல்லை (குறியீட்டு அளவில்). மனம் மட்டும் தான். அதனாலே அவன் பெண்ணின் கவனம் தன் மீது மட்டுமே இருக்க வேண்டும் எனக் கிடந்து அடித்துக்கொள்கிறான். பொறாமையில், பாதுகாப்பின்மையில் தவிக்கிறான். வன்முறையை கையாள்கிறான். போதையில் சிக்கி கோபத்தை கட்டுப்படுத்த தெரியாமல் அழிகிறான். “நான் ஒன்றுமே இல்லை, யாருமே எனக்கு இல்லை” எனும் அங்கலாய்ப்பு நன்றாக இப்படத்தில் வந்துள்ளது. வேறெந்த தமிழ் சினிமாவிலும் இதைப் பார்த்த நினைவில்லை.
ஒரே பிரச்சினை கிளைமேக்ஸில் நாயகனோ நாயகியோ முழுமையாக மாறவில்லை என்பதுதான். அவர்கள் ஆரம்பித்த இடத்திலே வந்து நிற்கிறார்கள். அவர்கள் தம் வாழ்வில் பெற்ற பாடத்தை, முதிர்ச்சியால், அதனால் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டியிருந்தால் நிறைவு ஏற்பட்டிருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...