Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மதமும் சர்வாதிகாரமும் - அந்தரங்கத்தில் இருந்து பொதுவெளிக்கு (3) - ஆர். அபிலாஷ்





திரள் மனிதனின் கடவுள்:
ஆரெண்ட் தன் ஆய்வில் 19ஆம் நூற்றாண்டில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை ஐரோப்பாவில் தோன்றிய மக்கள் திரள் வர்க்க உணர்வையும், வளர்ச்சியையும் பாதுகாப்பையும் முக்கியமென கருதாததவர்களாக மாறியதைக் குறிப்பிடுகிறார். நீண்ட காலமாக அவர்கள் ஆட்சியாளர்களின் கவனத்தில் இல்லாமல் போனதும், அதனாலே தாம் சமூக அதிகாரம் இழந்து போனதாக ஒரு ஏமாற்றமும் கோபமும் அவர்களுக்குள் திரண்டு வெடித்ததாகவும், அதுவே சர்வாதிகாரத்தின் எழுச்சிக்கு விசையாக அவர்களை மாற்றியது என்கிறார். இந்தியாவில் சாதியமும் நிலவுடைமை சமூகங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வாழ்ந்த காலத்தில் இந்த திரளின் குரலாக சில மேற்தட்டை சேர்ந்த ஆதிக்க சாதி தலைவர்கள் செயல்பட்டனர. உற்பத்தி முறை மாறி தொழில்மயமாக்கல் தீவிரமாக்கப்பட்ட நேருவிய யுகத்தில் தான் இங்கு மாற்றங்கள் தென்படத் துவங்குகின்றன. நேருவின் மறைவுக்குப் பின்பு இந்திரா காந்தியை சிறிது வருத்தத்துடன் மூத்த தலைவர்கள் ஏற்றுக்கொண்டு ஆட்சியை நடத்திய காலத்தில் இங்கு கடும் வறுமையும் பஞ்சங்களும் நிலவின. அதற்கு மழை பொய்த்தது மட்டும் காரணம் அல்ல, புதிய பொருளாதாரத்துக்கு இந்தியா தயாராகி வரும் போது ஏற்பட்ட சில இடர்களுமே காரணம். வறுமையை ஒழிப்போம் எனும் முழக்கத்துடன் ஆட்சியைப் பிடித்து பாகிஸ்தான் போருடன் மகத்தான மக்கள் தலைவராக உயர்ந்தார் இந்திரா. இந்த காலகட்டத்தை நாம் பார்த்தோமானால் ஆரெண்ட் குறிப்பிடும் அடையாளம் இழந்த, சுய அக்கறையில் ஆர்வம் இழந்து வரும் எரிச்சலுற்ற ஒரு மக்கள் திரளை கவனிக்க முடியும். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுடைய பிரச்சினைகளைப் பேச முயன்றதே இந்திராவின் எழுச்சிக்கு வித்திட்டது. இந்திராவின் முயற்சிகளுக்குப் பின்னாலும் 70களின் துவக்கத்தில் பொருளாதார நிலை மேம்படவில்லை. முகமற்ற திரள் இப்போது மீண்டும் கவலையுற்றது, அது வட இந்தியா முழுக்க தொழிலாளர் போராட்டம், வேலை நிறுத்தம் என எழுச்சியாக மாற இந்திரா பதறினார். ஜனதா கட்சியும் கூட்டணிக் கட்சிகளும் இந்த எழுச்சிக்கு தலைமை தாங்க அவர் பலவீனமானார். அதை மறைக்கும் நோக்கிலே நெருக்கடியை நிலையை அறிவித்தார். ஆனால் தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் வந்த போது வட இந்திய மாநிலங்கள் - இந்த திரள் வலுவாக இருக்கும் பகுதிகள் - இந்திராவையும் சஞ்சய்யையும் முறியடித்து, தாம் எந்த விதத்திலும் தலைமையாக ஏற்காத ஜனதா கட்சியையும் அதன் தலைவர்களையும் வேறு வழியின்றி ஆட்சிக்கு கொண்டு வந்தது. அத்தேர்தல் ஒரு கோப வெளிப்பாடு மட்டுமே, ஆட்சியாளர்களின் தேர்வு அல்ல. இந்த கோபத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதே தம் தவறு என இந்திரா புரிந்துகொண்டு விரைவில் மீண்டு வந்தார், வென்றார். அதன் பிறகு ஒவ்வொரு பத்து, இருபதாண்டுகளுக்கு ஒருமுறையும் இந்தியாவில் இந்த விட்டேந்தியான அவ்வப்போது வெகுண்டெழும் திரளை வலதுசாரிகள் மதவாதத்தின் பெயரால் ஒன்றாக்கி அரசியல்படுத்தி பொதுவயப்படுத்தி காங்கிரஸை வீழ்த்தியதை நாம் வரலாற்றில் காண்கிறோம். திரும்ப ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தம் தோல்விக்கு தொழில் வளர்ச்சியின்மையால் ஏற்பட்ட மந்த நிலையே காரணம் எனக் கண்டு உலகமயமாக்கல், நகரமயமாக்கல் முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்தியது. ஆனால் சுயமேம்பாட்டில் ஆர்வம் இழந்த திரள் மனிதன் பிரச்சினையை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதனாலே ஆஷிஸ் நந்தி சொல்வதைப் போல இது ஒவ்வொரு முறை இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வந்து நகரங்களில் வணிகமும் பணப்புழக்கமும் அதிகமாகும் போதும் பாஜகவும் வலதுசாரி கூட்டணியும் இன்னும் அதிகமாக வலுப்பெற்று அதிகாரத்தை நெருங்கின. 2014இல் அவர்கள் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதும் ஒரு பெரும் பொருளாதார எழுச்சிக்குப் பின்பான மந்த நிலையின் போதுதான். அப்போதும் அரசியல் உணர்வு பெற்ற, சமூக வளர்ச்சியால் அதிகாரம் பெற முடியும் என நம்பின வர்க்கங்கள் அல்ல எந்த அரசியல் உணர்வுமற்ற ஒரு திரளே தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும்படி ஒன்றாக பாஜகவுக்கு வாக்களித்தது. நாடு இரண்டு பகுதிகளாக உடைந்தது - அரசியல்பட்ட, சமூக வளர்ச்சியில் பங்குபெற்ற ஒரு கூட்டம், இதில் எந்த விதத்திலும் உடன்படாத இன்னொரு கூட்டம் எதிர்ப்பக்கம். இந்த விட்டேத்தியான அரசியலற்ற திரள் ஏழைகளோ வீடற்றவர்களோ அகதிகளோ அல்ல. இவர்கள் பாதிக்கப்பட்டவர்களும் அல்ல. இவர்களில் கணிசமானோர் மத்திய, மேல்மத்திய வர்க்கமாகவும் இருந்தனர். ஆனால் அவர்கள் தம் விரோதிகளாக, முன்னேற்றத்தில் இருந்து, சுய-அறிதலில் இருந்து தம்மை விலக்கி வைப்போராக கருதியது ஆங்கிலம் பேசும் படித்த வர்க்கத்தையே. ஒரு கட்டத்தில் இந்து விரோதிகள், தேச விரோதிகள், “அர்பன் நக்ஸல்கள்”, சிறுபான்மை ஆதரவாளர்கள், துரோகிகள் என பலவிதங்களில் இந்த மற்றமையை அவர்கள் அடையாளப்படுத்தினர். சொல்லப் போனால் சிறுபான்மையினர் அல்ல, இந்த “உள்-மற்றமையே” (‘துரோகிகள்’) பாஜகவின் வெறுப்பரசியலின் இலக்காக இருந்து வருகிறார்கள். இந்த திரளின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்றே காங்கிரஸ் குடியுரிமை திருத்தச் சட்டம் துவங்கி பல்வேறு மக்கள் விரோத முடிவுகளுக்கு எதிரான போராட்டங்களில் நேரடியாகப் பங்கெடுக்கத் தயங்கியது. ராமர் கோயில் விவகாரத்தில் கூட காங்கிரஸால் அக்கோயிலின் வரலாற்றுத் தவறுகளை, நோக்கத்தை காட்டமாக விமர்சிக்கவோ எதிர்க்கவோ முடியவில்லை. திரும்பத் திரும்ப இந்து விரோதிகள் எனும் முத்திரை காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் மீது விழும் போது தாம் நம்பிக்கையான இந்துக்களே எனக் காட்டினாலும் திரளின் சந்தேகம் தீர்வதில்லை. அதே நேரம் காங்கிரஸ் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆபத்து வரும் போது ஆதரவு தெரிவிக்கத் தயங்குவதில்லை. என்ன பிரச்சினையெனில் அதற்கான வாய்ப்புகளை கடந்த பத்தாண்டுகளில் பாஜக அதிகமாக அமைத்துத் தரவில்லை. சிறுபான்மையினரும் முக்கியமே, ஆனால் அவர்களுக்கு சிறப்புரிமை கொடுப்பதை ஏற்க மாட்டோம் என்கிறார்கள் பாஜகவினர். யார் எப்போது சிறப்புரிமை, அந்தஸ்து கொடுத்தார்கள் என்றால் அதற்கான நடைமுறை ஆதாரங்களைக் காண்பது அரிது. சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை நடத்துவது சுதந்திரத்துக்கு முன்பே துவங்கி விட்டது. மத சிறுபான்மையினரை விட அதிகமாக இணையாகவே இங்கு சமூக ரீதியான கல்வி நிலையங்களும் உள்ளன. இந்து பெரும்பான்மை ஆட்சி நடப்பதான தோற்றம் வரக்கூடாது எனும் நோக்கத்தில் நேருவின் அரசு சிறுபான்மையினரின் இந்த வேண்டுகோளை அனுமதித்திருக்கலாம் என்றாலும் அது காங்கிரஸின் செயல்திட்டம் கூட அல்ல. இருந்திருந்தால் வேறு தொழிற்துறைகளில் ஒதுக்கீடு கொண்டு வந்திருப்பார்கள். இதில் சட்டரீதியாக மாற்றம் கொண்டு வரப் போவதாக பாஜக சொல்லவில்லை. ஆனால் சிறுபான்மையினருக்கு தமது மதத்தை பிரச்சாரம் செய்ய, அதன் அடிப்படையில் கல்வித் தொழிலில் ஈடுபட சலுகை கொடுத்திருப்பதாக ஒரு கோபம் இந்த திரளிடம் உள்ளது. யோசித்துப் பார்த்தால், இதில் எந்த லாஜிக்கும் இல்லை. இந்த கல்வி நிலையங்களால் இந்து திரளுக்கு எந்த நடைமுறை நஷ்டமும் இல்லை. இந்துக்கள் தம் மதத்தை பறைசாற்றுவதில் பொதுவெளியில் தடையும் இல்லை. இவ்வளவு கோயில்கள், விழாக்கள், சடங்குகள், அரசு அலுவலகங்களில், அரசியல் களத்தில் மதச்சின்னங்களை பட்டவர்த்தமாக அணிவது, வழிபடுவது இந்துக்களைப் போல உலகில் வேறு எந்த மதத்தவருக்கும் இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனாலும் தமக்கு இல்லாத ஏதோ ஒன்று மற்றமைக்கு உள்ளது, தமக்கு தீர்க்க முடியாத ஒரு போதாமை உள்ளது எனும் சினம் இத்திரளிடம் திரண்டு வருகிறது. அதற்கு காங்கிரஸை இலக்காக முடிந்ததே, அதற்கு மதச்சாயல் கொண்ட ஒரு கதையாடலை உருவாக்க முடிந்ததே பாஜகவின் முக்கிய வெற்றிகளில் ஒன்று.
(தொடரும்)
(உயிர்மையில் வெளியான கட்டுரையின் மூன்றாம் பாகம்)

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...