முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கைவிடப்பட்ட திரளும் அதற்கான அரசியலும்


திமுக கூட்டணி 40 தொகுதிகளை அடித்திருப்பது பாராட்டத்தக்கது. தெளிவான அரசியல் இலக்கு, கூட்டணி ஒற்றுமை, உழைப்பு, ஸ்டாலினின் தலைமை, ஊடகங்கள், தொண்டர்கள் என பல காரணிகள் இதன் பின்னால் உள்ளனர். இருந்தாலும் திமுகவின் வாக்கு சதவீதம் சற்றே குறைந்துள்ளது (5-6%). முற்போக்காளர்கள் என்னதான கேலி பேசினாலும், மறுத்தாலும் நாம் தமிழர்கள் 4% மேல் முன்னேறி உள்ளனர். நாம் தமிழர் கட்சி முன்பு பலமுறை அதிமுகவுக்கும், அதற்கு முன்பும் பின்பும் ஒன்றியத்தில் ஆளும் அரசுகளுக்கும் விலை போய் உள்ளது அல்லது அவர்களிடம் இருந்து நிதியும், உளவுத்துறையின் வழிகாட்டுதலையும் பெற்றது. அண்மையில் அண்ணாமலையின் நிதி நல்கைத் திட்டத்தின் கீழும் இருந்தார்கள். ஒருவிதத்தில் இம்மாதிரியான நிதியுதவியையும் பெரிய அண்ணன்களின் ஆதரவையும் கொண்டே எந்த இடத்தையும் வெல்லாத ஒரு கட்சியாக அவர்கள் இப்படித்தான் தம் அரசியல் இடத்தை தக்க வைத்தும் கொண்டார்கள். ஆனால் அதையும் மீறி அவர்களுடைய ஆர்ப்பாட்டமான பேச்சுக்கு ஒரு இடம் இளைஞர்கள் மத்தியில் உள்ளது. எனக்குத் தெரிந்த சில இளம் நண்பர்களே நா.த.கவில் உறுப்பினர்களாகவோ சிறு பொறுப்புகளிலோ இருக்கிறார்கள். அங்கு அவர்கள் சொந்தம் கொண்டாட மிகச்சிறியதாக இருந்தாலும் ஊசிகுத்தும் இடமாவது உள்ளதாக நினைக்கிறார்கள். இப்படியான ஒரு திரளுக்கு நா.த.க இடமளிக்கிறது. இரு நூறாண்டுகளுக்கு மேல் ஆயுள் உள்ள தமிழ் தேசியத்தை அவர்கள் தமது வசதிக்கு ஏற்ப அர்த்தப்படுத்தி அதற்கான அடையாளமாக தம்மைக் காட்டிக் கொள்கிறார்கள். திமுக அதன் கௌரவமான நிதானமான கட்டுக்கோப்பான முகம் எனில் அதன் பொறுப்பற்ற வெகுஜன அரசியல் முகமாக நா.த.க இருக்கிறார்கள். எப்போதுமே பொறுப்பின்மையின் முகம் தான் இளைஞர்களை ஆக்கிரமிக்கும், ஈர்க்கும், அவர்களுக்கு அதில் இடமுள்ளதாக நம்ப வைக்கும். இதுவே வரலாறு. தமிழின பெருமிதவாததை எதிர்ப்பரசியலாக முன்வைப்பது ஆர்வமூட்டும், கனவு காண வைக்கும், பங்கேற்போருக்கு இடமளிப்பதாக கற்பனையைத் தரும். ஆனால் அதுவே நிறுவனமயமாகும் போது வெறுமனே அதிகாரப் பெருமிதமும் இனவுணர்வும் கொள்ள மட்டுமே வைக்கும். ஒன்று காலியிடத்தை நோக்கி சமூகத்தின் விளிம்பை ஈர்க்க, மற்றதோ நிரப்பப்பட்ட இடத்தைக் குறித்து நிறைவுகொள்ள மட்டும் வைக்கும்.

நியாயமாக நா.த.கவின் இடத்தை இங்குள்ள இடதுசாரி இயக்கங்களும், தாழ்த்தப்பட்டோருக்கான அமைப்புகளும் எடுத்திருக்க வேண்டும். அவர்கள் செய்யும் தவறு வாக்கரசியலில் ஆர்வத்தை குறைத்துக்கொண்டு ஆட்சியதிகாரத்தில் இடம் பெற முயல்வதே. இது அவர்களுக்கு அங்கீகாரத்தை கொடுக்கும் அதே நேரம் அவர்ளுடைய தனிப்பட்ட வாக்கு சதவீதத்தை குறைக்கிறது. அவர்களால் கூட்டணிக்குள் இருந்தபடி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முடியாது. ஆகையால் அவர்கள் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 'என்னவெல்லாம்' செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் வேறு வகையான அரசியலை மட்டும் செய்கிறார்கள். எதிர்க்கட்சி கூட்டணியாக இருக்கும் போதும் கூட அவர்கள் எதிர்க்கட்சி அரசியலை மட்டுமே செய்வார்கள், எதிர்ப்பரசியலை அல்ல, இரு பெரும் கட்சிகளுக்கும் தாம் மாற்று எனும் நம்பிக்கையை ஏற்படுத்துவதை அல்ல.

நா.த.கவின் நோக்கம் அடுத்த சில பத்தாண்டுகளில் 20% தாண்டுவதும் இரண்டாவது அணியின் கூட்டணிக் கட்சி ஆவதும். அதிமுகவின் மீளெழுச்சி நிகழாத பட்சத்தில் அது சாத்தியப்படும். ஸ்டாலினின் கீழ் திமுக ஒரு கார்ப்பரேட் பாணி கட்சியாக மாறிவருவதால் அவர்கள் தமது வாக்கு சதவீதத்தை முன்னேற்ற அடுத்து நிச்சயம் முயல்வார்கள். அவர்கள் ஏற்கனவே இதை அலசவும் தீர்வுகளை யோசிக்கவும் தொடங்கியிருப்பார்கள்.

பாஜகவின் வாக்கு சதவீதம் 3.58% இல் இருந்து 11%க்கு மேல் வந்துள்ளது. பாஜகவின் சின்னத்தில் நின்றவர்களில் பாதிக்கும் மேல் சொந்த கட்சிக்காரர்கள் அல்ல, அவர்கள் அதிக தொகுதிகளில் நின்றார்கள் எனினும் இது கவனிக்கத்தக்க வளர்ச்சியே. நான் கர்நாடகாவிலும் தமிழகத்திலும் கவனித்தவரை பாஜகவின் புதிய ஆதரவாளர்கள் சந்தர்ப்பவாதிகள் தாம் - கட்சி ஆட்சிக்கு வரும் போது வெளிவருவார்கள், கட்சி பின்வாங்கும் போது இவர்களும் பதுங்குவார்கள். அவர்கள் (நா.த.கவைப் போல) சித்தாந்த தொண்டர்கள் அல்ல. உடனடி பணம், அதிகாரம், பொறுப்பு ஆகியவற்றுக்காக வருபவர்கள். அவர்களுக்கு இந்துத்துவா கனவே இல்லை. வெவ்வேறு கட்சிகளில் ஏற்கனவே இருந்தவர்கள். இவர்களுக்காக தென்னிந்தியாவில் பாஜக மிகப்பெரும் நிதியை செலவிடுகிறது. இவர்களுடைய ஊடக, யுடியூப் ஆதரவாளர்களும் சம்பள ரோலில் இருப்பவர்களே. வருமானம் வராவிடில் அடுத்த கட்சியைத் தேடிப் போவார்கள். அண்ணாமலை வந்த பிறகு பல ஊர்களில் பாஜகவில் சேர்பவர்களுக்கு பொறுப்புகளும் பணமும் அள்ளி வழங்கப்பட்டன (ரௌடிகளை நான் இதில் சேர்க்கவில்லை). வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கும் அங்கிள்களுக்கும், குடும்பங்களுக்கும் இது நற்பேறாகியது. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பிரச்சாரத்துக்கு அதிக அளவில் ஆட்களை வேலைக்கெடுத்து கால் செண்டர் நடத்தி போன் மூலமாகவும் நேரில் வீட்டுக்கு சென்றும் வாக்கு சேகரித்தார்கள். 90களில் கோக், பெப்ஸி நிறுவனங்கள் இங்கு வந்த போது விளம்பரத்துக்கும் வணிக ஊடுருவலுக்கும் பயன்படுத்திய கார்ப்பரேட் உத்திகளையே பாஜக பயன்படுத்தியது. ஏற்கனவே வலதுசாரி மனநிலை கொண்டவர்கள், நவபொருளாதார முதலீட்டிய, சந்தை ஆதிக்க கொள்கையை கொண்டவர்கள் மற்றும் மதவாதிகளையும் இந்த 'பெரும் கட்சிகளால் கைவிடப்பட்ட மக்கள் திரளுடன்' பாஜகவினர் சேர்த்துக் கொண்டார்கள். நான் இவர்களை 'சித்தாந்த அரசியலற்ற பொருளாதார ரீதியிலான வாக்குத்திரள்' என நினைக்கிறேன். இவர்கள் ஒரிஜினல் பாஜக ஆதரவாளர்கள் (intelligensia) அல்லர். ஆனால் அவர்களையும் 'வேலைக்கு சேர்த்ததன்' பலனை அதிக வாக்குகளாக பாஜக பெற்றது.

2029இல் பாஜக முழுமையாக வீழுமானால் இந்த 'அரசியலற்ற ஆதரவுத் திரள்' மீண்டும் 'ஊசலாடும் வாக்காளர்கள்' ஆவார்கள் அல்லது பாஜக கூட்டணியாக இருக்கும் சிறு கட்சிகளைப் போல பெருங்கட்சிகளிடம் போவார்கள் என ஊகிக்கிறேன்.

எப்படியும் ஒவ்வொரு கால் நூற்றாண்டிலும் ஒரு புதிய தலைமுறை தன் இருபது, முப்பதுகளில் தோன்றி தனக்கான அதிகாரத்தை கோரும். இவர்கள் போக, திராவிட கதையாடலில் அதிருப்தி கொள்ளத் தொடங்கும் சில / பல லட்சம் மக்கள் என்றும் இருப்பார்கள். இவர்கள் முன்பு ஊசலாடும் வாக்காளர்களாக இருந்திருப்பார்கள். இன்று அவர்களும் கால் பதிக்க இடம் நாடுகிறார்கள் என நினைக்கிறேன். தமிழகத்தைப் போன்ற ஒவ்வொரு கால் நூற்றாண்டிலும் தொழில் வளர்ச்சியையும் வருமான பெருக்கத்தையும் காணும் ஒரு மாநிலத்தில் புதிதாக தோன்றும் அடுத்த கட்ட முதலீட்டியர்களுக்கு, தொழிலதிபர்களுக்கு, மேல்மத்திய வர்க்கத்துக்கு ஒரு அதிகார பங்கீடு தேவைப்படும். அவர்களும் இயல்பாகவே புதிய அரசியல் களங்கள் உருவாக விரும்பி அதற்கு நிதியும் இடமும் அளிப்பார்கள். உ.தா., முதலாம் உலகப்போருக்குப் பிறகு ஜெர்மனியில் ஆளுங்கட்சிக்கு எதிராக இடதுசாரிகளும் தொழிற்சங்கங்களும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போது அங்குள்ள தொழிலதிபர்கள் ஒரு தேசியவாத கட்சியை இடதுசாரிகளுக்கு மாற்றாக கொண்டு வர வேண்டும் எனக் கருதி நாஜி கட்சியை வளர்த்தெடுத்தனர். இது உலக வரலாற்றையே மாற்றும் நிகழ்வானது. தமிழகத்திலும் எங்கெல்லாம் கடந்த சில பத்தாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி அதிகமாகி புதிய ஆதிக்க வர்க்கங்கள் தோன்றியனவோ அங்கிருந்தெல்லாம் அதிமுகவுக்கும் பின்னர் பாஜகவுக்கும் ஆதரவு கிடைத்தது மற்றொரு ஈடான வரலாறு.

இத்துடன், வேறேதோ ஒரு சமூக உளவியலும் இதற்குப்பின் உள்ளது. அதை சமுக ஆர்வலர்களும் ஊடகங்களும் கட்சிகளும் சேர்ந்து ஆராய வேண்டும். 'கைவிடப்பட்ட திரளுக்கும்', புதிய முதலீட்டிய சக்திகளுக்கும் நம்பிக்கையையும் பொறுப்பு உள்ளிட்ட வாய்ப்புகளையும் வழங்க வேண்டும். இது பாஜக போன்ற தேசிய கட்சிகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையிடும்.

சித்தாந்தத்தையும் பரப்புரையையும் கொண்டு வளரும் நா.த.கவை யாரும் தடுக்க முடியாது என நினைக்கிறேன். ஆனால் அந்த வளர்ச்சியை அறுவடை செய்ய அவர்கள் 2050ஐ கடந்தும் களத்தில் உடையாமல் இருக்க வேண்டும், கூட்டணி கட்சியாக மாறாமல் இருக்க வேண்டும், அதே நேரம் பல கட்டத் தலைமையையும், உள்கட்டமைப்பையும் வளர்க்க வேண்டும் என்பதையும் நிபந்தனையாக சேர்க்கிறேன். அது மட்டுமே ஐயத்துக்கு உரியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.