புக் பிரம்மா இலக்கிய விழாவின் போது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை உணவகங்கள் இருந்த பகுதியில் நண்பர்களை சந்தித்து அரட்டையடிப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அதாவது சென்னையில் அரங்கின் வெளியிலும் தேநீர்க் கடையிலும் நின்று பேசுவதை இங்கு ஆற அமர அமைதியான, வெக்கையற்ற இதமான சூழலில் இருந்து பேச முடிந்தது ஒரு செமையான அனுபவம். பதிப்பாளர்கள் தனியாக அங்கு நடந்த பதிப்புத்துறைக்கான அமர்வுகளில் கலந்துகொள்ள வந்திருந்ததால் அவர்களும் அரட்டையில் இணைந்துகொண்டார்கள். கிட்டத்தட்ட சென்னையில் இருப்பதைப் போன்றே உணர்ந்தேன்.
நான் அங்கு உரையாடியதில் சில பொதுவான விசயங்களை இங்கு சிறு குறிப்புகளாக பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.
****
தெலுங்கு எழுத்தாளர் வோல்கா எனும் லலித குமாரி நாவல் குறித்த கலந்துரையாடலில் ஒரு சுவாரஸ்யமான வசனத்தை சொன்னார். அந்த சொற்றொடர் ஒரு பஞ்ச் டயலாக்கைப் போல இருந்தது. “கவிதைகளை கவிஞரின் பெயராலும் நாவல்களை தனிப்பட்ட படைப்புகளாலும் அடையாளப்படுத்துகிறோம், நினைவுகொள்கிறோம்.” அதாவது நாம் பாரதியின், ஆத்மாநாமின், நகுலனின் கவிதைப் பற்றிப் பேசும் போது அந்த படைப்பாளிகளின் குறிப்பிட்ட கவிதையை அல்ல அவர்களுடைய பெயரே முதலில் வந்து விழுகிறது, அவர்களுடைய ஆகிருதியே நம் முன்னால் பெரிதாக எழுந்து நிற்கிறது. மனுஷ்யபுத்திரனும் தேவதேவனும் அவர்கள் எழுதிய ஒட்டுமொத்த சொற்களின் அடையாளமாகத் தோன்றுகிறார்கள். ஆனால் இது நாவலுக்கு நிச்சயமாக நிகழ்வதில்லை. எனக்கு தஸ்வாவஸ்கியின் / காப்காவின் நாவல்கள் பிடிக்கும் என்று ஒருவர் சொன்னதுடன் அவர் அப்படியே ஒரு குறிப்பிட்ட நாவலைப் பற்றியும், அதில் வரும் காட்சிகள், பாத்திரங்கள் பற்றியும் பேசி அதனுள் போய்விடுவார். அரிதாகவே தஸ்தாவஸ்கியின் / காப்காவின் தரிசனத்தைப் பற்றி பொதுவாகவோ அவர்களுடைய சில வாக்கியங்களைப் பற்றியோ பேசுகிறோம். நாவல்கள் நாவலாசிரியரை மறைய வைப்பதைப் போல கவிதைகள் கவிஞருக்கு செய்வதில்லை. அதனாலே நம் சூழலில் “கவிஞரே” என கனிவாக ஒருவரை அழைப்பதைப் போல “நாவலாசிரியரே” என அழைப்பதில்லை. இது ஏன் என்பதற்குள் வோல்காவோ விவாதத்தை நெறியாள்கை செய்தவரோ போகவில்லை.
நான் இதைப் பற்றி பின்னர் சர்வோத்தமனிடம் பேசிக்கொண்டிருந்தேன். இது ஒரு முற்றிலும் புதிய பார்வை. நாவலானது தன்னளவில் முழுமையாக இருப்பதைப் போல, அது ஒரு பிரபஞ்சமாக தனதேயான உயிர்களுடன் சூழலுடன் உயிர்கொண்டிருப்பதைப் போல ஒரு கவிதையால் இயலாது, கவிதைகள் பெரிய மழையில் உள்ள துளிகளைப் போல தனித்தனியாகவும் நாவல் ஒரு கானகத்தைப் போன்றும் இருப்பதால் தான் இது நிகழ்கிறதோ என்று தோன்றுகிறது என்றேன். ஒரு நாவலுக்குள் எழுத்தாளர் தொலைந்து போவதைப் போல (எது அவருடைய கருத்து, எது கதாபாத்திரத்தின் கருத்து?) கவிதையில் சுலபத்தில் நிகழ்வதில்லை. கவிதையென்பது கவிதைசொல்லியின் பார்வை, கருத்து, அரசியல், கவிதைசொல்லி எப்போதுமே கவிஞர் தான், இருவரும் ஒரே பாலினம் அல்ல என்றாலும் கூட. பின்நவீன கவிதைகளில் மட்டுமே கவிதைசொல்லியே மிகுந்த தன்னுணர்வுடன் தன்னையே மறுத்து எழுதுகிறார். தமிழில் நாம் அரிதாகவே பின்நவீன கவிதைகளைக் காண்கிறோம். அதனாலே இங்கு கவிஞர்கள் என்றாலே அவர்களின் முகங்களே நமக்கு நினைவுக்கு வருகிறேன். அதனாலே இங்கு நாம் கவிஞர்களை அவ்வளவு கொண்டாடுகிறோம், ஆனால் கவிதை நூல்களை வாங்காமல் பதிப்பாளர்களை நொடிந்து போக வைக்கிறோம்.