முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கிய அரட்டைக் குறிப்புகள் (2)

ஈழப் புலம்பெயர் / போர் இலக்கியங்களின் சிறப்பு என்னவென்பது எப்போதுமே எனக்குள் இருக்கும் கேள்வி - தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஈழத்தமிழரைப் போல போர் அனுபவம் இல்லையாகையால் ஈழ இலக்கியத்தாலே உலக இலக்கியத்திற்கு அருகில் போக முடியும், தமிழ்நாட்டு இலக்கியத்தால் முடியாது என்று ஏன் சிலர் கூறுகிறார்கள்?

இந்த விசயத்தைப் பற்றி மொழியாக்கப் பதிப்புகள் உலகளவில் போவது குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது தற்செயலாக ஜீவ கரிகாலனிடம் குறிப்பிட்டேன். ஈழத் தமிழரிடம் உள்ள ஒன்று தமிழ்நாட்டுத் தமிழரிடம் இல்லை. அது நிஜத்தில் போர் அல்ல. காப்காவின், ஜேம்ஸ் ஜாய்ஸின் புனைவுலகிலும் தான் போர் இல்லை. செர்வாண்டஸ் போரில் பங்கெடுத்தவர் என்றாலும் “டான் குவிக்ஸடோவில்” போர்க் காட்சிகள் இல்லை. ஆக, போர் இல்லாத மகத்தான நாவல்களை நம்மால் கணிசமாக குறிப்பிட முடியும். என்றுமே போர் அனுபவம் இலக்கியத் தகுதியாக அறியப்பட்டதில்லை. நோயுறுவது, விபத்துக்குள்ளாவது எழுத்தாளருக்கானது தகுதி என்பதைப் போன்றது இது. நிஜத்தில் நாம் சொல்ல வருவது போர் அனுபவத்தின் முக்கியத்துவத்தை அல்ல - போர் எதற்காக நடைபெறுகிறது? தேசத்துக்காக. தேசம் இல்லாத மக்களால் போர் தொடுக்க முடியும? முடியாது. இதுதான் உண்மையான பிரச்சினை. நாம் தேசியத்தைப் பற்றிப் பேச பயந்து அதைப் போர் அனுபவம் என மாற்றிவிடுகிறோம்.
தமிழ்நாட்டுத் தமிழரின் மிகப்பெரிய குறை அவர்களுக்கு தேசியம் இல்லாததே என்பது என் அனுமானம். தேசியம் ஏன் இல்லையெனில் அவர்களுக்கு என்று ஒரு தேசம் இல்லை. தேசம் இல்லாதவர்கள் அனாதைகள். சரி ஈழத்தமிழர்களுக்கும் தான் தேசம் இல்லையே? ஈழத்தமிழரிடம் சிறிது காலம் ஒரு தேசம் இருந்தது. அதற்கு முன்பே அவர்களுக்கு தேசம் குறித்த ஏக்கமும், தேசத்தை இழந்த பின்னர் ஒரு கனவு தேசிய உணர்வும் இருந்தது, இருக்கிறது. ஈழத்தமிழர் எனும் அடையாளமே தேச அடையாளத்துடன் தோன்றியதே. அதனாலே போருக்குப் பின்பு எழுதப்பட்ட போர் மற்றும் புலம்பெயர் இலக்கியப் படைப்புகளுக்கு உலகளவில் முக்கியத்துவம் ஏற்பட்டது அது ஒரு மொழிசார் இனக்குழுவின் பண்பாட்டு அடையாளம் என்பதாலோ வரலாற்றுக் கதையாடல் என்பதாலோ அல்ல ஒரு தேசிய இனக்குழுவின் அடையாளம், கதையாடல் என்பதாலே.
ஆனால் தமிழருக்கு இது என்றுமே இருந்ததில்லை. அவர்கள் ஒரு சமரசத்தின் பெயரில் தமிழ் தேசியத்தை கட்டமைத்தார்கள். ஆனாலும் அது டயட் ஷுகரைப் போன்ற ஒன்றே, அது ஒரு போதும் இறையாண்மைக்கு ஈடாகாது. அதனாலே என்னதான் தலைசிறந்த இலக்கியத்தைப் படைத்தாலும் அதற்கு உலக இலக்கியத்தில் மதிப்பு ஏற்படாது. இந்தி மொழி இலக்கியத்துக்கு இந்திய தேசிய அடையாளம் உள்ளது, இந்திய இறையாண்மையில் உரிமை உள்ளது. இதை நீங்கள் எந்த இந்தி பேசும் இந்தியரிடமும் காண முடியும். அவர்கள் தொடர்ந்து தேசம் குறித்த கற்பனையில், பரவசத்தில் இருப்பார்கள். அவர்களுடைய கனவில் நமக்கு என்றுமே உரிமை இருப்பதில்லை. நீங்கள் ஆங்கில இந்திய இலக்கியத்தைப் பார்த்தால் 90களுக்குப் பிறகு அதில் பெரும் தாக்கத்தை செலுத்திய உலகளவில் புகழடைந்தவர்கள் இந்தி பேசும் அல்லது சமஸ்கிருத, தேவநாகிரி மொழிக் குடும்பத்தை சேர்ந்தவர்களே (வங்காளிகள், பஞ்சாபியர், தில்லி, மும்பைக்காரர்கள்). மிகவும் பிரசித்தமான படைப்பாளியென்றாலும் ஆர்.கெ நாராயணுக்கு அவர்களுடைய புகழுலகில், உலக சந்தையில் இடம் இருந்ததில்லை. அருந்ததி ராய் கூட தன்னை கேரளாவை சேர்ந்த தென்னிந்தியராக என்றுமே காட்டிக்கொண்டதில்லை. இந்திய இறையாண்மைக் கனவின் பகுதியாக நின்றே அரசியல் சமூகப் பிரச்சினைகளை அவர் பேசினார்.
இதுவே நாம் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்த போது தேசங்களாக மாறியிருந்தால் 1940களுக்குப் பிறகு தமிழில் எழுதிய படைப்பாளிகள் நிச்சயமாக உலகளவில் பரவலாக மொழியாக்கப்பட்டு அடுத்த 50 ஆண்டுகளில் சந்தையை வெற்றி கண்டிருப்பார்கள். 1993இல் வெல்வெட் விவாகரத்து நடந்து செக் தேசம் உருவான பின்னர் இன்று காப்காவுக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது, அவருக்கான அருங்காட்சியகம், விழாக்கள் அங்கு நிழகின்றன, இதுவே செக் தேசம் உருவாகாமல், சோவியத் யூனியனின் பகுதியாக தொடர்ந்திருந்தால், அல்லது ஹிட்லர் கொல்லப்படாமல், இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வென்று, ஜெர்மனியின் பகுதியாகவே தொடர்ந்து செக் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? அவர்களுடைய இலக்கியத்துக்கு உலகளவில் மதிப்பிருந்திருக்குமா? இருக்காது. காப்கா காணாமல் போயிருப்பார். ஜெர்மனியின் மக்கள் தொகையும் தமிழ்நாட்டின் மக்கள் தொகையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் ஜெர்மானிய இலக்கியம், தத்துவத்துக்கு உலகளவில் உள்ள தாக்கம் ஒரு போதும் தமிழ்நாட்டுக்கு இல்லை. தமிழ்நாட்டு மக்கள் தொகைக்கும், நிலப்பரப்புக்கும், உற்பத்தி திறனுக்கும், பொருளாதார மதிப்புக்கும் பத்தில் ஒரு மடங்கு கூட இல்லாத ஐரோப்பிய தேசங்கள் உள்ளன, அவற்றில் தோன்றும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கு உள்ள முதுகு நிமிர்வு, தன்னம்பிக்கை ஒருபோதும் தமிழருக்கு இருக்க முடியாது.
நமது மிகப்பெரிய துரதிஷ்டம் முகலாய ஆட்சியின் கட்டுப்பாட்டில் முதலிலும், கிழக்கிந்திய கம்பனியின் படையினரின் கீழ் அடுத்தும், பிரித்தானிய காலனிய ஆட்சியின் கீழ் அதற்கு அடுத்தும் நாம் வந்து ஒரு காலனியின் பகுதியாக மாறிப் போனதே. தமிழ்நாட்டினர் கடும் பஞ்சத்திற்கு ஒரு காலத்தில் ஆளானதும்,வறுமைக்கு ஆட்பட்டதும், உலகம் முழுக்க புலம்பெயர்ந்ததும் காலனியத்தின் பகுதியாக நாம் ஆனதாலே. அதனாலே சுதந்திரத்துக்குப் பின் ஒரு பின்காலனிய தேசமான இந்தியாவின் பகுதியாக வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டோம். இது தமிழரின் தன்னம்பிக்கையை நிச்சயமாக பாதித்தது, தம்மைக் குறித்து பெருமையுடன் நினைக்க ஒன்றுமே இல்லாமல் பண்ணியது, தமது மொழி, பண்பாட்டுப் பெருமைகளை அங்கீகரிக்கும்படி ஒன்றியத்துடன் கையேந்தும் மனநிலை ஏற்படுத்தியது. பின்காலனிய சிந்தனையில் இதை மிமிக்றி என்கிறார்கள். நாம் இந்தி பேசும் இந்தியாவை போலச் செய்வதற்கோ அதைப் போலச் செய்யாமல் இருக்கவோ தாம் முயல்கிறோம். அவ்வாறே நாம் தேசியவாதிகளாகவோ தமிழ் தேசியவாதிகளாகவோ ஆகிறோம். நாம் ஒரு இயல்பான தேசியர்களாக ஆவதில்லை. இதுவே எந்த அரசியல் பிரச்சினைகளையும் தன்னலம் சார்ந்ததாக சுருக்கிக் கொள்ள வைக்கிறது. உதாரணத்திற்கு, ஹரியானா, உ.பியை சேர்ந்த ஒருவர் ஊழலைப் பற்றிப் பேசும் போது இந்தியாவையே அது பாதிப்பதாகப் பார்க்கிறார்கள், ஆனால் தமிழர்களோ ஒருபோதும் அதை ஒரு பொதுப்பிரச்சினையாக கருத மாட்டார்கள். இங்கு எழுப்பப்படும் எதையுமே தம்முடன் அடையாளப்படுத்த அவர்களால் முடியாது. நாம் யாரோ ஒருவருடைய கைப்பாவையாக மாறிப் போனோம். இதுவே நமது இலக்கியத்தையும் நிழல் இலக்கியமாக்குகிறது.
நமக்குள்ள இந்த வரலாற்று துரதிஷ்டம் ஈழத்தமிழருக்கு இல்லை. சுதந்திரத்தின் போது இலங்கை இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருந்தால் அவர்களும் நம்மைப் போல காணாமல் போயிருப்பார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...