Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இலக்கிய அரட்டைக் குறிப்புகள் (2)

ஈழப் புலம்பெயர் / போர் இலக்கியங்களின் சிறப்பு என்னவென்பது எப்போதுமே எனக்குள் இருக்கும் கேள்வி - தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஈழத்தமிழரைப் போல போர் அனுபவம் இல்லையாகையால் ஈழ இலக்கியத்தாலே உலக இலக்கியத்திற்கு அருகில் போக முடியும், தமிழ்நாட்டு இலக்கியத்தால் முடியாது என்று ஏன் சிலர் கூறுகிறார்கள்?

இந்த விசயத்தைப் பற்றி மொழியாக்கப் பதிப்புகள் உலகளவில் போவது குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது தற்செயலாக ஜீவ கரிகாலனிடம் குறிப்பிட்டேன். ஈழத் தமிழரிடம் உள்ள ஒன்று தமிழ்நாட்டுத் தமிழரிடம் இல்லை. அது நிஜத்தில் போர் அல்ல. காப்காவின், ஜேம்ஸ் ஜாய்ஸின் புனைவுலகிலும் தான் போர் இல்லை. செர்வாண்டஸ் போரில் பங்கெடுத்தவர் என்றாலும் “டான் குவிக்ஸடோவில்” போர்க் காட்சிகள் இல்லை. ஆக, போர் இல்லாத மகத்தான நாவல்களை நம்மால் கணிசமாக குறிப்பிட முடியும். என்றுமே போர் அனுபவம் இலக்கியத் தகுதியாக அறியப்பட்டதில்லை. நோயுறுவது, விபத்துக்குள்ளாவது எழுத்தாளருக்கானது தகுதி என்பதைப் போன்றது இது. நிஜத்தில் நாம் சொல்ல வருவது போர் அனுபவத்தின் முக்கியத்துவத்தை அல்ல - போர் எதற்காக நடைபெறுகிறது? தேசத்துக்காக. தேசம் இல்லாத மக்களால் போர் தொடுக்க முடியும? முடியாது. இதுதான் உண்மையான பிரச்சினை. நாம் தேசியத்தைப் பற்றிப் பேச பயந்து அதைப் போர் அனுபவம் என மாற்றிவிடுகிறோம்.
தமிழ்நாட்டுத் தமிழரின் மிகப்பெரிய குறை அவர்களுக்கு தேசியம் இல்லாததே என்பது என் அனுமானம். தேசியம் ஏன் இல்லையெனில் அவர்களுக்கு என்று ஒரு தேசம் இல்லை. தேசம் இல்லாதவர்கள் அனாதைகள். சரி ஈழத்தமிழர்களுக்கும் தான் தேசம் இல்லையே? ஈழத்தமிழரிடம் சிறிது காலம் ஒரு தேசம் இருந்தது. அதற்கு முன்பே அவர்களுக்கு தேசம் குறித்த ஏக்கமும், தேசத்தை இழந்த பின்னர் ஒரு கனவு தேசிய உணர்வும் இருந்தது, இருக்கிறது. ஈழத்தமிழர் எனும் அடையாளமே தேச அடையாளத்துடன் தோன்றியதே. அதனாலே போருக்குப் பின்பு எழுதப்பட்ட போர் மற்றும் புலம்பெயர் இலக்கியப் படைப்புகளுக்கு உலகளவில் முக்கியத்துவம் ஏற்பட்டது அது ஒரு மொழிசார் இனக்குழுவின் பண்பாட்டு அடையாளம் என்பதாலோ வரலாற்றுக் கதையாடல் என்பதாலோ அல்ல ஒரு தேசிய இனக்குழுவின் அடையாளம், கதையாடல் என்பதாலே.
ஆனால் தமிழருக்கு இது என்றுமே இருந்ததில்லை. அவர்கள் ஒரு சமரசத்தின் பெயரில் தமிழ் தேசியத்தை கட்டமைத்தார்கள். ஆனாலும் அது டயட் ஷுகரைப் போன்ற ஒன்றே, அது ஒரு போதும் இறையாண்மைக்கு ஈடாகாது. அதனாலே என்னதான் தலைசிறந்த இலக்கியத்தைப் படைத்தாலும் அதற்கு உலக இலக்கியத்தில் மதிப்பு ஏற்படாது. இந்தி மொழி இலக்கியத்துக்கு இந்திய தேசிய அடையாளம் உள்ளது, இந்திய இறையாண்மையில் உரிமை உள்ளது. இதை நீங்கள் எந்த இந்தி பேசும் இந்தியரிடமும் காண முடியும். அவர்கள் தொடர்ந்து தேசம் குறித்த கற்பனையில், பரவசத்தில் இருப்பார்கள். அவர்களுடைய கனவில் நமக்கு என்றுமே உரிமை இருப்பதில்லை. நீங்கள் ஆங்கில இந்திய இலக்கியத்தைப் பார்த்தால் 90களுக்குப் பிறகு அதில் பெரும் தாக்கத்தை செலுத்திய உலகளவில் புகழடைந்தவர்கள் இந்தி பேசும் அல்லது சமஸ்கிருத, தேவநாகிரி மொழிக் குடும்பத்தை சேர்ந்தவர்களே (வங்காளிகள், பஞ்சாபியர், தில்லி, மும்பைக்காரர்கள்). மிகவும் பிரசித்தமான படைப்பாளியென்றாலும் ஆர்.கெ நாராயணுக்கு அவர்களுடைய புகழுலகில், உலக சந்தையில் இடம் இருந்ததில்லை. அருந்ததி ராய் கூட தன்னை கேரளாவை சேர்ந்த தென்னிந்தியராக என்றுமே காட்டிக்கொண்டதில்லை. இந்திய இறையாண்மைக் கனவின் பகுதியாக நின்றே அரசியல் சமூகப் பிரச்சினைகளை அவர் பேசினார்.
இதுவே நாம் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்த போது தேசங்களாக மாறியிருந்தால் 1940களுக்குப் பிறகு தமிழில் எழுதிய படைப்பாளிகள் நிச்சயமாக உலகளவில் பரவலாக மொழியாக்கப்பட்டு அடுத்த 50 ஆண்டுகளில் சந்தையை வெற்றி கண்டிருப்பார்கள். 1993இல் வெல்வெட் விவாகரத்து நடந்து செக் தேசம் உருவான பின்னர் இன்று காப்காவுக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது, அவருக்கான அருங்காட்சியகம், விழாக்கள் அங்கு நிழகின்றன, இதுவே செக் தேசம் உருவாகாமல், சோவியத் யூனியனின் பகுதியாக தொடர்ந்திருந்தால், அல்லது ஹிட்லர் கொல்லப்படாமல், இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வென்று, ஜெர்மனியின் பகுதியாகவே தொடர்ந்து செக் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? அவர்களுடைய இலக்கியத்துக்கு உலகளவில் மதிப்பிருந்திருக்குமா? இருக்காது. காப்கா காணாமல் போயிருப்பார். ஜெர்மனியின் மக்கள் தொகையும் தமிழ்நாட்டின் மக்கள் தொகையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் ஜெர்மானிய இலக்கியம், தத்துவத்துக்கு உலகளவில் உள்ள தாக்கம் ஒரு போதும் தமிழ்நாட்டுக்கு இல்லை. தமிழ்நாட்டு மக்கள் தொகைக்கும், நிலப்பரப்புக்கும், உற்பத்தி திறனுக்கும், பொருளாதார மதிப்புக்கும் பத்தில் ஒரு மடங்கு கூட இல்லாத ஐரோப்பிய தேசங்கள் உள்ளன, அவற்றில் தோன்றும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கு உள்ள முதுகு நிமிர்வு, தன்னம்பிக்கை ஒருபோதும் தமிழருக்கு இருக்க முடியாது.
நமது மிகப்பெரிய துரதிஷ்டம் முகலாய ஆட்சியின் கட்டுப்பாட்டில் முதலிலும், கிழக்கிந்திய கம்பனியின் படையினரின் கீழ் அடுத்தும், பிரித்தானிய காலனிய ஆட்சியின் கீழ் அதற்கு அடுத்தும் நாம் வந்து ஒரு காலனியின் பகுதியாக மாறிப் போனதே. தமிழ்நாட்டினர் கடும் பஞ்சத்திற்கு ஒரு காலத்தில் ஆளானதும்,வறுமைக்கு ஆட்பட்டதும், உலகம் முழுக்க புலம்பெயர்ந்ததும் காலனியத்தின் பகுதியாக நாம் ஆனதாலே. அதனாலே சுதந்திரத்துக்குப் பின் ஒரு பின்காலனிய தேசமான இந்தியாவின் பகுதியாக வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டோம். இது தமிழரின் தன்னம்பிக்கையை நிச்சயமாக பாதித்தது, தம்மைக் குறித்து பெருமையுடன் நினைக்க ஒன்றுமே இல்லாமல் பண்ணியது, தமது மொழி, பண்பாட்டுப் பெருமைகளை அங்கீகரிக்கும்படி ஒன்றியத்துடன் கையேந்தும் மனநிலை ஏற்படுத்தியது. பின்காலனிய சிந்தனையில் இதை மிமிக்றி என்கிறார்கள். நாம் இந்தி பேசும் இந்தியாவை போலச் செய்வதற்கோ அதைப் போலச் செய்யாமல் இருக்கவோ தாம் முயல்கிறோம். அவ்வாறே நாம் தேசியவாதிகளாகவோ தமிழ் தேசியவாதிகளாகவோ ஆகிறோம். நாம் ஒரு இயல்பான தேசியர்களாக ஆவதில்லை. இதுவே எந்த அரசியல் பிரச்சினைகளையும் தன்னலம் சார்ந்ததாக சுருக்கிக் கொள்ள வைக்கிறது. உதாரணத்திற்கு, ஹரியானா, உ.பியை சேர்ந்த ஒருவர் ஊழலைப் பற்றிப் பேசும் போது இந்தியாவையே அது பாதிப்பதாகப் பார்க்கிறார்கள், ஆனால் தமிழர்களோ ஒருபோதும் அதை ஒரு பொதுப்பிரச்சினையாக கருத மாட்டார்கள். இங்கு எழுப்பப்படும் எதையுமே தம்முடன் அடையாளப்படுத்த அவர்களால் முடியாது. நாம் யாரோ ஒருவருடைய கைப்பாவையாக மாறிப் போனோம். இதுவே நமது இலக்கியத்தையும் நிழல் இலக்கியமாக்குகிறது.
நமக்குள்ள இந்த வரலாற்று துரதிஷ்டம் ஈழத்தமிழருக்கு இல்லை. சுதந்திரத்தின் போது இலங்கை இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருந்தால் அவர்களும் நம்மைப் போல காணாமல் போயிருப்பார்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...