முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீண்டுமொரு விளக்கம்

நான் கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயமோகனின் கருத்துக்களுக்கு எதிர்வினைகள் எழுதுவதில்லை - அது ஒரு முடிவற்ற கருத்துச் சுழல், அவரது கருத்துக்களுக்கு பதிலெழுதுவது அவ்வளவு முக்கியமல்ல, அது என் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று ஒருநாள் என் மனதுக்குப் பட்டதும் நான் திருந்திவிட்டேன். இம்முடிவு எனக்கு நன்றாகவே பலனளித்தது. இன்னொரு விசயம், ஜெயமோகன் யாருடைய எதிர்வினையையும் பொருட்படுத்துவதில்லை, அவரை விமர்சிப்பது ஒரு மலையின் உச்சியில் போய் நின்று தனியாகப் பேசிகொண்டிருப்பதைப் போலத் தான். அவரை விமர்சிப்பதும், மறுப்பதும் மனித குலத்துக்கு அவசியமா என்றால் இல்லையென்பேன். ஆனால் இன்று அவரது இணையதளத்தில் அவர் தெரிவித்திருந்த ஒரு தகவலுக்கு நான் மறுப்பு சொல்ல வேண்டும். நான் செய்யும் காரியங்கள், எழுதும் சொற்கள் குறித்து வரும் விமர்சனங்களைப் பொருட்படுத்துவேன், ஆனால் நடக்காதவற்றைப் பற்றி விமர்சனம் எழும் போது அது ஏற்படுத்தும் தவறான மனப்பிம்பத்தை, அதன் நிழலை சுமக்க நான் தயாரில்லை. குறிப்பாக கடலூர் சீனு குறித்து அவர் இப்படி சொல்லியிருப்பது:
 //சீனுவுக்கு இதெல்லாம் தெரியும். இன்று அபிலாஷ் அவரை ஏளனமும் நக்கலும் செய்யும்போது சீனு அதை ஒருமுறைகூடச் சொல்லிக் காட்டவில்லை.//
இது உண்மை அல்ல. நான் எங்குமே சீனுவை ஏளனமோ நக்கலோ செய்யவில்லை. செய்யக் கூடாதென்றில்லை. ஆனால் நான் தான் செய்யவில்லையே. 
நான் பௌத்த அய்யயனாரின் ஒரு நிலைத்தகவலைப் பகிர்ந்தேன். பெங்களூரில் இலக்கிய விழா நடப்பதால் என்னைப் போன்ற தொடர்ந்து தமிழில் இயங்கி வரும், பெங்களூரிலோ அருகிலோ வசிக்கும் முக்கிய படைப்பாளிகளையும் அழைத்திருக்க வேண்டும் என்று அதில் என் வருத்தத்தையும் கூடவே பதிவு பண்ணினேன். அப்போதே சீனுவையோ பிறரையோ அழைப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, கூடவே பிறரையும் அரங்குகளில் சேர்த்திருக்கலாம் என்றேன். “ஜெயமோகனின் அடிவருடிகள்” என்று யாரையும் அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றும் எழுதினேன். இதை நான் பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டியதும் பவுத்த அய்யனாரும் அதை மாற்றிக்கொண்டார். 
அதன் பிறகு பேஸ்புக்கில் கடலூர் சீனு ஒரு மென் இலக்காக்கப்பட்டு பகடி செய்யப்பட்டார். அதற்கு அவரது தோற்றம் அல்ல, அவரது (ஜெ.மோவிற்கு கடிதம் எழுதுபவர் எனும்) பிம்பமும், இலக்கியத்திற்கு வெளியாள் எனும் மற்றொரு வினோத பிம்பமும காரணங்கள். எனக்கு இந்த உள்-வெளி எதிரிடையில் (இலக்கியமானவர், இலக்கியமல்லாதவர்) நம்பிக்கையில்லை. பேஸ்புக்கில் மற்ற முகாமை சேர்ந்த பங்கேற்பாளர்களை பொதுவில் விமர்சிக்க முகாந்திரம் இல்லை, மேலும் அவர்கள் நண்பர்களும் கூட (விமர்சிக்க அவசியமும் இல்லை என்றாலும்) என்பதாலே மொத்த வெறுப்பையும் சீனு மீது இறக்கினார்கள். எனக்கு இது வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் இதை ஏற்கவோ இதில் ஈடுபடவோ இல்லை. மேலும் எனக்கு அவரை ஏற்கனவே தெரியும். விஷ்ணுபுரம் கூட்டத்தில் வைத்து பேசியிருக்கிறேன்.  நான் அவரை புக் பிரம்மா அரங்குக்கு வெளியே பார்த்தேன். அவர் அந்தக் கூட்டத்தில் கொஞ்சம் அசௌகர்யமாக இருப்பதை கவனித்தேன். விஷ்ணுபுரம் அரங்குக்கு வெளியே நான் பார்த்த மனிதர் அல்லர் இவர், அவர் அங்கு பதற்றமாக இருக்கிறார் என உணர்ந்து அவரை என் வசம் அழைத்து அணைத்துக் கொண்டேன். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு சில நிமிடங்கள் பேசினேன். அவர் தன் வழக்கப்படி நைசாக கழன்றுகொண்டார். இப்போது ஜெயமோகன் நானே பேஸ்புக்கில் சீனுவைக் கலாய்த்து அமர்க்களம் செய்தேன், அவமதித்தேன் என்று சொல்வது ஒரு தகவல் பிழை, அது நியாயம் அல்ல. அது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
நான் ஜெயமோகனின் நண்பரை அழைத்து இதைத் தெரிவித்தேன். கடலூர் சீனுவிடமும் பேசினேன். நான் இது உருவாக்கும் மனப்பிம்பத்தை விரும்பவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...