Skip to main content

மீண்டுமொரு விளக்கம்

நான் கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயமோகனின் கருத்துக்களுக்கு எதிர்வினைகள் எழுதுவதில்லை - அது ஒரு முடிவற்ற கருத்துச் சுழல், அவரது கருத்துக்களுக்கு பதிலெழுதுவது அவ்வளவு முக்கியமல்ல, அது என் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று ஒருநாள் என் மனதுக்குப் பட்டதும் நான் திருந்திவிட்டேன். இம்முடிவு எனக்கு நன்றாகவே பலனளித்தது. இன்னொரு விசயம், ஜெயமோகன் யாருடைய எதிர்வினையையும் பொருட்படுத்துவதில்லை, அவரை விமர்சிப்பது ஒரு மலையின் உச்சியில் போய் நின்று தனியாகப் பேசிகொண்டிருப்பதைப் போலத் தான். அவரை விமர்சிப்பதும், மறுப்பதும் மனித குலத்துக்கு அவசியமா என்றால் இல்லையென்பேன். ஆனால் இன்று அவரது இணையதளத்தில் அவர் தெரிவித்திருந்த ஒரு தகவலுக்கு நான் மறுப்பு சொல்ல வேண்டும். நான் செய்யும் காரியங்கள், எழுதும் சொற்கள் குறித்து வரும் விமர்சனங்களைப் பொருட்படுத்துவேன், ஆனால் நடக்காதவற்றைப் பற்றி விமர்சனம் எழும் போது அது ஏற்படுத்தும் தவறான மனப்பிம்பத்தை, அதன் நிழலை சுமக்க நான் தயாரில்லை. குறிப்பாக கடலூர் சீனு குறித்து அவர் இப்படி சொல்லியிருப்பது:
 //சீனுவுக்கு இதெல்லாம் தெரியும். இன்று அபிலாஷ் அவரை ஏளனமும் நக்கலும் செய்யும்போது சீனு அதை ஒருமுறைகூடச் சொல்லிக் காட்டவில்லை.//
இது உண்மை அல்ல. நான் எங்குமே சீனுவை ஏளனமோ நக்கலோ செய்யவில்லை. செய்யக் கூடாதென்றில்லை. ஆனால் நான் தான் செய்யவில்லையே. 
நான் பௌத்த அய்யயனாரின் ஒரு நிலைத்தகவலைப் பகிர்ந்தேன். பெங்களூரில் இலக்கிய விழா நடப்பதால் என்னைப் போன்ற தொடர்ந்து தமிழில் இயங்கி வரும், பெங்களூரிலோ அருகிலோ வசிக்கும் முக்கிய படைப்பாளிகளையும் அழைத்திருக்க வேண்டும் என்று அதில் என் வருத்தத்தையும் கூடவே பதிவு பண்ணினேன். அப்போதே சீனுவையோ பிறரையோ அழைப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, கூடவே பிறரையும் அரங்குகளில் சேர்த்திருக்கலாம் என்றேன். “ஜெயமோகனின் அடிவருடிகள்” என்று யாரையும் அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றும் எழுதினேன். இதை நான் பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டியதும் பவுத்த அய்யனாரும் அதை மாற்றிக்கொண்டார். 
அதன் பிறகு பேஸ்புக்கில் கடலூர் சீனு ஒரு மென் இலக்காக்கப்பட்டு பகடி செய்யப்பட்டார். அதற்கு அவரது தோற்றம் அல்ல, அவரது (ஜெ.மோவிற்கு கடிதம் எழுதுபவர் எனும்) பிம்பமும், இலக்கியத்திற்கு வெளியாள் எனும் மற்றொரு வினோத பிம்பமும காரணங்கள். எனக்கு இந்த உள்-வெளி எதிரிடையில் (இலக்கியமானவர், இலக்கியமல்லாதவர்) நம்பிக்கையில்லை. பேஸ்புக்கில் மற்ற முகாமை சேர்ந்த பங்கேற்பாளர்களை பொதுவில் விமர்சிக்க முகாந்திரம் இல்லை, மேலும் அவர்கள் நண்பர்களும் கூட (விமர்சிக்க அவசியமும் இல்லை என்றாலும்) என்பதாலே மொத்த வெறுப்பையும் சீனு மீது இறக்கினார்கள். எனக்கு இது வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் இதை ஏற்கவோ இதில் ஈடுபடவோ இல்லை. மேலும் எனக்கு அவரை ஏற்கனவே தெரியும். விஷ்ணுபுரம் கூட்டத்தில் வைத்து பேசியிருக்கிறேன்.  நான் அவரை புக் பிரம்மா அரங்குக்கு வெளியே பார்த்தேன். அவர் அந்தக் கூட்டத்தில் கொஞ்சம் அசௌகர்யமாக இருப்பதை கவனித்தேன். விஷ்ணுபுரம் அரங்குக்கு வெளியே நான் பார்த்த மனிதர் அல்லர் இவர், அவர் அங்கு பதற்றமாக இருக்கிறார் என உணர்ந்து அவரை என் வசம் அழைத்து அணைத்துக் கொண்டேன். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு சில நிமிடங்கள் பேசினேன். அவர் தன் வழக்கப்படி நைசாக கழன்றுகொண்டார். இப்போது ஜெயமோகன் நானே பேஸ்புக்கில் சீனுவைக் கலாய்த்து அமர்க்களம் செய்தேன், அவமதித்தேன் என்று சொல்வது ஒரு தகவல் பிழை, அது நியாயம் அல்ல. அது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
நான் ஜெயமோகனின் நண்பரை அழைத்து இதைத் தெரிவித்தேன். கடலூர் சீனுவிடமும் பேசினேன். நான் இது உருவாக்கும் மனப்பிம்பத்தை விரும்பவில்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...