Skip to main content

கே.ஆர் மீராவின் “மீராசாது” - பக்தியில் இருந்து முக்தி





மீராசாதுநாவலை தமிழில் மொ. செந்தில்குமார் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் வெகுவாக சிலாகிக்கப்பட்ட நாவல் இது. நான் மொழிபெயர்ப்பில் படிக்கவில்லை. நான் ஸ்டோரிடெல் ஒலிநூல் செயலியில் மலையாள மூலத்தில் இந்நாவலைக்கேட்டேன்’. 


1970, 80கள் வரை வெகுஜன இலக்கியத்தில் பிரசித்தமாக இருந்த கதை வடிவம் இது: ஸ்திரிலோலனான ஒரு நாயகன், அவனிடம் காதல்கொண்டு பித்தாகி கிட்டத்தட்ட அடிமையாகவே செயல்படும் நாயகி. நாயகன் அவளை மணமுடித்து தொடர்ந்து அவளைச் சுரண்டுகிறான், ஏமாற்றி பல பெண்களை அனுபவிக்கிறான். கடைசியில் நாயகிக்கு மனம் தெளிந்து அவள் அவனைத் திருத்தி அவனுடன் வாழ்வாள் (ரமணி சந்திரனின் "மயங்குகிறாள் ஒரு மாது" நாவலை நினைத்துப்பாருங்கள்). இக்கதைகளின் அழகே நாயகியின் ஸ்டாக்ஹோம் சிண்டிரோமும், தன்னழிவில் அவள் கொள்ளும் பெருங்கிளர்ச்சியும்தான். அவள் வன்மமான நாயகனை வழிபடுவதில் ஒரு கிறுக்குத்தனமும், அதர்க்கமான அகப்பாய்ச்சலும் இருக்கும். உன்மத்தமான இக்காதல் அன்று பல வாசகர்களைக் கட்டிப்போட்டது. இந்தக் கதையமைப்பில் எப்போதுமே ஒரு அரைகுறைப் பெண்ணியவாதமும் இருக்கும். கே.ஆர் மீரா இதை வைத்து மூன்று விசயங்களைச் செய்கிறார்:

) அவரதுமாலாகயுடே மறுகுகள்நாவலில் வருவதைப்போல இதிலும் கட்டற்ற காதலின் பேரில் நிகழும் வெறுப்பு, துரோகம், கோபம், அதன் பெயரிலான குற்றம் வருகிறது. இது கள்ள உறவுகளும் குற்றங்களும் பெருகும் இக்காலத்திற்கு இந்நாவலைப் பொருத்தமாக்குகிறது


) காதலின் பேரிலும் குடும்பத்துக்காகவும் தன் சுயமரியாதையை, எதிர்காலத்தைத் தொலைக்கும் ஒரு தனிமனுஷியின் பெண்ணியப் போராட்டமாக இதைச் சித்தரிக்கிறார். மிகுந்த கவித்துவத்துடன் உணர்ச்சிவேகத்துடன் எழுதுகிறார்


) பெண்ணியக் கதைகளில் இல்லாமல் போன தத்துவார்த்தத்தைக் கொண்டுவருகிறார் - அதுதான் என்னை இந்த நாவலில் வெகுவாகக் கவர்ந்தது. நீங்கள் அம்பையின் பெண்ணியப் படைப்புகளில் ஒருபோதும் மதம் மீதான, கடவுள் மீதான விமர்சனத்தைக் காணமுடியாது. அதே போல குடும்பத்தைத் துறப்பதும் ஒரு தீர்வாக அளிக்கப்பட மாட்டாது. ஆனால் மீரா அதைச் செய்கிறார்; கிட்டத்தட்ட அம்பையின் கதையுலகை நிறைவு செய்வதைப்போல இதுவுள்ளது.


இந்த தத்துவார்த்த கோணத்தை மேலும் விளக்குவதானால் பக்திக்கும் காதலுக்குமான தொடர்பு, கடவுளுக்கும் அடிமை மனநிலைக்குமான தொடர்பு என்று கூறலாம். கடவுள் என்பதே இல்லாத ஒன்றை நிகழ்த்திக்காட்டும் ஒரு காட்சிதான். அக்காட்சியை நீங்கள் அணுகும்போது அது காலியாக இருப்பதை உணர்வீர்கள், ஆனால் அப்போது நீங்கள் ஏமாற்றமுறாமல் பரவசமாவீர்கள். அதையே (கடப்புநிலையின் அகக்கிளர்ச்சியை) பக்தி என்று கட்டமைக்கிறார்கள். இதையே மற்றமையைத் தள்ளிப்போடுகிற இன்பம் (differance) என்று தெரிதா கூறுகிறார். இந்த மனநிலை உங்களை எதார்த்த உலகில் இருந்து துண்டித்து ஒரு மிதப்புநிலையில் வைத்திருக்கிறது. இந்த போதைக்கு ஆட்பட்டவர்கள் காதல்வயப்பட்டவர்களைப்போன்றே இருப்பார்கள். இறைவன் தன் பக்தரிடம் தோற்றுவிக்கும் இந்த மாயமான பந்தத்தை வைணவம் லீலை என்கிறது. மீராவின் நாவலில் இந்த லீலை ஆணுலகச் சுரண்டலைப் பார்க்கமுடியாத ஒரு அடிமை மனநிலை மட்டுமே. இதிலிருந்து ஒரு பெண் விடுபடுவதையே, பௌதீக உலகின் நியதிகளுக்கு மீள்வதையே அவர்முக்தியாகக்காட்டுகிறார். (பக்தியில் இருந்து முக்தி என ரைமிங்காகவும் சொல்லலாம்.)


இந்த பக்திமார்க்கம் பரிசீலிக்கப்படும் இடங்கள் நாவலில் மிகக்கவித்துவமாக, கற்பனையைத் தூண்டும்விதமாக, ஆழமாக வந்துள்ளன. ஆனால் இதை மேற்கொண்டு அவர் வளர்த்தெடுக்காமல் ஒரு எளிய பழிவாங்கல் கதையாக முடித்துவிடுகிறார்.


குற்றக்கதையாகவும் இது முழுமையாக அமையவில்லை. கணவனைப் பழிவாங்குவதற்காக மீரா ஏன் தன் குழந்தைகளை விடமூட்டிக் கொல்கிறார், அவருக்கு மனம் பேதலித்துவிட்டதா போன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதில்லை. நாவலின் கவித்துவ எழுச்சியில் தன்னைத் தொலைத்துவிடுகிறார்; அதனாலே குறியீட்டுத்தன்மை அவருக்கு முக்கியமாகிறது. கிருஷ்ணர், ராதை, மீரா, கோயில் வளாகத்தில் தன் குட்டிகளைத் தூக்கிவரும் குரங்குகள், ஊனைத் தின்று அரிக்கும் எறும்புகள் இப்படி பல உருவகங்கள் வருகின்றன. சட்டென உருவகக் கதைக்கு பிரேக் போட்டு நிறுத்தி அதை குற்றக் கதையாக்குகிறார். இதுவேமீராசாதுவின்மிகப்பெரிய குறை. ஒரு நல்ல நாவலுக்கான மொழியை, கருவைக் கண்டடைந்து அதைக் கொண்டுபோய் தொலைத்ததைப்போல அவரது எழுத்து அமைந்துவிடுகிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...