முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கே.ஆர் மீராவின் “மீராசாது” - பக்தியில் இருந்து முக்தி





மீராசாதுநாவலை தமிழில் மொ. செந்தில்குமார் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் வெகுவாக சிலாகிக்கப்பட்ட நாவல் இது. நான் மொழிபெயர்ப்பில் படிக்கவில்லை. நான் ஸ்டோரிடெல் ஒலிநூல் செயலியில் மலையாள மூலத்தில் இந்நாவலைக்கேட்டேன்’. 


1970, 80கள் வரை வெகுஜன இலக்கியத்தில் பிரசித்தமாக இருந்த கதை வடிவம் இது: ஸ்திரிலோலனான ஒரு நாயகன், அவனிடம் காதல்கொண்டு பித்தாகி கிட்டத்தட்ட அடிமையாகவே செயல்படும் நாயகி. நாயகன் அவளை மணமுடித்து தொடர்ந்து அவளைச் சுரண்டுகிறான், ஏமாற்றி பல பெண்களை அனுபவிக்கிறான். கடைசியில் நாயகிக்கு மனம் தெளிந்து அவள் அவனைத் திருத்தி அவனுடன் வாழ்வாள் (ரமணி சந்திரனின் "மயங்குகிறாள் ஒரு மாது" நாவலை நினைத்துப்பாருங்கள்). இக்கதைகளின் அழகே நாயகியின் ஸ்டாக்ஹோம் சிண்டிரோமும், தன்னழிவில் அவள் கொள்ளும் பெருங்கிளர்ச்சியும்தான். அவள் வன்மமான நாயகனை வழிபடுவதில் ஒரு கிறுக்குத்தனமும், அதர்க்கமான அகப்பாய்ச்சலும் இருக்கும். உன்மத்தமான இக்காதல் அன்று பல வாசகர்களைக் கட்டிப்போட்டது. இந்தக் கதையமைப்பில் எப்போதுமே ஒரு அரைகுறைப் பெண்ணியவாதமும் இருக்கும். கே.ஆர் மீரா இதை வைத்து மூன்று விசயங்களைச் செய்கிறார்:

) அவரதுமாலாகயுடே மறுகுகள்நாவலில் வருவதைப்போல இதிலும் கட்டற்ற காதலின் பேரில் நிகழும் வெறுப்பு, துரோகம், கோபம், அதன் பெயரிலான குற்றம் வருகிறது. இது கள்ள உறவுகளும் குற்றங்களும் பெருகும் இக்காலத்திற்கு இந்நாவலைப் பொருத்தமாக்குகிறது


) காதலின் பேரிலும் குடும்பத்துக்காகவும் தன் சுயமரியாதையை, எதிர்காலத்தைத் தொலைக்கும் ஒரு தனிமனுஷியின் பெண்ணியப் போராட்டமாக இதைச் சித்தரிக்கிறார். மிகுந்த கவித்துவத்துடன் உணர்ச்சிவேகத்துடன் எழுதுகிறார்


) பெண்ணியக் கதைகளில் இல்லாமல் போன தத்துவார்த்தத்தைக் கொண்டுவருகிறார் - அதுதான் என்னை இந்த நாவலில் வெகுவாகக் கவர்ந்தது. நீங்கள் அம்பையின் பெண்ணியப் படைப்புகளில் ஒருபோதும் மதம் மீதான, கடவுள் மீதான விமர்சனத்தைக் காணமுடியாது. அதே போல குடும்பத்தைத் துறப்பதும் ஒரு தீர்வாக அளிக்கப்பட மாட்டாது. ஆனால் மீரா அதைச் செய்கிறார்; கிட்டத்தட்ட அம்பையின் கதையுலகை நிறைவு செய்வதைப்போல இதுவுள்ளது.


இந்த தத்துவார்த்த கோணத்தை மேலும் விளக்குவதானால் பக்திக்கும் காதலுக்குமான தொடர்பு, கடவுளுக்கும் அடிமை மனநிலைக்குமான தொடர்பு என்று கூறலாம். கடவுள் என்பதே இல்லாத ஒன்றை நிகழ்த்திக்காட்டும் ஒரு காட்சிதான். அக்காட்சியை நீங்கள் அணுகும்போது அது காலியாக இருப்பதை உணர்வீர்கள், ஆனால் அப்போது நீங்கள் ஏமாற்றமுறாமல் பரவசமாவீர்கள். அதையே (கடப்புநிலையின் அகக்கிளர்ச்சியை) பக்தி என்று கட்டமைக்கிறார்கள். இதையே மற்றமையைத் தள்ளிப்போடுகிற இன்பம் (differance) என்று தெரிதா கூறுகிறார். இந்த மனநிலை உங்களை எதார்த்த உலகில் இருந்து துண்டித்து ஒரு மிதப்புநிலையில் வைத்திருக்கிறது. இந்த போதைக்கு ஆட்பட்டவர்கள் காதல்வயப்பட்டவர்களைப்போன்றே இருப்பார்கள். இறைவன் தன் பக்தரிடம் தோற்றுவிக்கும் இந்த மாயமான பந்தத்தை வைணவம் லீலை என்கிறது. மீராவின் நாவலில் இந்த லீலை ஆணுலகச் சுரண்டலைப் பார்க்கமுடியாத ஒரு அடிமை மனநிலை மட்டுமே. இதிலிருந்து ஒரு பெண் விடுபடுவதையே, பௌதீக உலகின் நியதிகளுக்கு மீள்வதையே அவர்முக்தியாகக்காட்டுகிறார். (பக்தியில் இருந்து முக்தி என ரைமிங்காகவும் சொல்லலாம்.)


இந்த பக்திமார்க்கம் பரிசீலிக்கப்படும் இடங்கள் நாவலில் மிகக்கவித்துவமாக, கற்பனையைத் தூண்டும்விதமாக, ஆழமாக வந்துள்ளன. ஆனால் இதை மேற்கொண்டு அவர் வளர்த்தெடுக்காமல் ஒரு எளிய பழிவாங்கல் கதையாக முடித்துவிடுகிறார்.


குற்றக்கதையாகவும் இது முழுமையாக அமையவில்லை. கணவனைப் பழிவாங்குவதற்காக மீரா ஏன் தன் குழந்தைகளை விடமூட்டிக் கொல்கிறார், அவருக்கு மனம் பேதலித்துவிட்டதா போன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதில்லை. நாவலின் கவித்துவ எழுச்சியில் தன்னைத் தொலைத்துவிடுகிறார்; அதனாலே குறியீட்டுத்தன்மை அவருக்கு முக்கியமாகிறது. கிருஷ்ணர், ராதை, மீரா, கோயில் வளாகத்தில் தன் குட்டிகளைத் தூக்கிவரும் குரங்குகள், ஊனைத் தின்று அரிக்கும் எறும்புகள் இப்படி பல உருவகங்கள் வருகின்றன. சட்டென உருவகக் கதைக்கு பிரேக் போட்டு நிறுத்தி அதை குற்றக் கதையாக்குகிறார். இதுவேமீராசாதுவின்மிகப்பெரிய குறை. ஒரு நல்ல நாவலுக்கான மொழியை, கருவைக் கண்டடைந்து அதைக் கொண்டுபோய் தொலைத்ததைப்போல அவரது எழுத்து அமைந்துவிடுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...