Skip to main content

தமிழ் சமூகமும் சினிமாவும்

நான் ஒரு போக்கை கவனிக்கிறேன் - ஒரு படம் திரையரங்கில் வெளியாகும்போது ஐயோ அம்மா என்று பாராட்டித் தள்ளுகிறார்கள். அதுவே ஓடிடியில் வந்ததும் பார்த்துவிட்டு அமைதியாக நிறைகுறைகளை கவனித்து அந்தளவுக்கு ஒண்ணும் நல்லா இல்ல என்று எழுதுகிறார்கள். காதலிக்கும்போது ஒருவிதமாகவும் கல்யாணத்திற்குப் பிறகு இன்னொருவிதமாகவும் ஒரு பெண் தெரிவதைப்போல இது இருக்கிறது. பக்கத்தில் வந்ததும் அடச்சே என்றாகிறது.

எனக்குத் தெரிந்து விதிவிலக்காக இது நடக்காதது "சார்ப்பட்டா பரம்பரைக்கு' மட்டும்தான்.
இந்த திரையரங்க வெளியீட்டின்போது ரத்தக்கண்ணீர் வடிப்பவர்கள், வைரல் ஆகிறவர்கள், விழுந்துவிழுந்து பேட்டியெடுக்கும் விகடன், கலாட்டா குழுவினர் ஓடிடியை பொருட்படுத்தாதது காரணமா? பெருங்கூட்டத்தின் பகுதியாக இருந்து பார்க்கும் எழுச்சி, பரவசம் டிவியில் பக்கத்தில் பார்க்கும்போது வராததா? சினிமா நிறைய பொருட்செலவுடன் எடுக்கப்பட்டு மேளதாளத்துடம் வெளியிடப்படும்போது பார்வையாளருக்கும் ரசிகருக்கும் உண்டாகும் ஒருவித குற்றவுணர்வின் வெளிப்பாடு அதன் கடைசிகட்ட விற்பனைக் கண்ணியாக டிவி இருப்பதால் வராமல் போகிறதா?
எப்படி திருவிழா என்பது வெறும் சத்தங்களையும் பரபப்பையும் கூட்டத்தையும் தாண்டி ஒன்றுமில்லையோ, விழா முடிந்ததும் அதே கடையைத் திறந்துவைத்தால் யாரும் வரமாட்டார்களோ அதுவே இங்கும் நடக்கிறதோ?
ஒட்டுமொத்தமாக, இன்றைய சினிமா வெறும் பிரமை மட்டுமே, அது உள்ளீடற்றது என்பதை இது காட்டுகிறது. மிகையாக உணர்ச்சிவசப்படுபவர்கள் கூட அது முடிந்ததும் அதற்கும் தமக்கும் சம்மந்தமில்லை என்பதுபோலப் போகிறார்கள். ஒரு விலைமாதைப் போல சினிமாவை நடத்துகிறார்கள். உச்சம் அடையும் வரை ஆசை காட்டிவிட்டு அடுத்த நொடியே அடச்சே என்று உதறிவிட்டு வருகிறார்கள். தெருவில் அவள் எதிரே வந்தால் தலைதிருப்பிப் போகிறார்கள்.
சினிமா எந்தளவுக்கு மக்களை இடதுகையால் நடத்துகிறதோ, கையாளத்தக்க மூளையற்ற கூட்டமென நினைக்கிறதோ மக்களும் அவ்வாறே சினிமாவை நடத்துகிறார்கள். இரு தரப்புக்கும் பரஸ்பர மரியாதையில்லை. இது நேற்று வேறுவிதமாக இல்லை. அம்மா தாயே என்று திரையில் பார்த்து வியக்கும் நாயகி ஊருக்கு படப்பிடிப்புக்கு வந்தால் வேறுவிதமாகப் பேசுவார்கள், விலையென்ன என்று கேட்பார்கள். முதல் சூப்பர் ஸ்டாரான பாகவதர் கோயிலில் பாடி பிச்சையெடுத்தபோது யாரும் கண்டுகொள்ளவில்லை. உச்சநட்சத்திர நடிகைக்கு கோயில் கட்டுவார்கள். நட்சத்திர பக்கங்களை நடத்துவார்கள். படத்தை புரொபைலில் வைத்துக்கொண்டு சிலாகித்துக்கொண்டே இருப்பார்கள். அதே நடிகையின் அந்தரங்க காணொளிகள் வெளியானால் அதைப் பார்த்து உலகமெல்லாம் பகிர்ந்துகொள்ளும் முதல் ஆட்களாகவும் இவர்களே இருப்பார்கள்.
தமிழின் நல்ல இயக்குநர்களில் ஒருவர் அவர். அவர் படங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நாயகன் உதயமாகிறான் என்று பாட்டுப் பாடிக்கொண்டிருந்த மாற்றுசினிமா ரசிகர்கள் அவருக்கான சந்தை அடிபட்டதும் ஐயோ பாவம், காசுக்கு வழியில்லாமல் படம் கூட வெளியிட முடியாமல் இருக்கிறார், அவர் நலிந்த கலைஞர் என வீடியோ போட ஆரம்பித்தனர். அவரே ஒரு மேடையில் வந்து நான் நன்றாகத்தான் இருக்கிறேன், எனக்குப் பணம் ஒரு பொருட்டில்லை, படம் வராவிட்டாலும் கவலையில்லை என சொல்லும் நிலை ஏற்பட்டது.
ஒன்று சினிமா கலைஞர்களை, சினிமாவை கடவுள் எனத் தலைக்கு மேல் தூக்கிவைப்பது, அது முடிந்ததும் கீழ்த்தரமாக நடத்துவது, கண்டுகொள்ளாமல் போவது என அடிப்படை மரியாதையே இவர்களுக்கு சினிமா மீது இல்லை. இதனால்தான் தன் காலில் விழுந்த ஒருவரை இளையராஜா துரத்திவிட்டார். அவருக்குத் தெரியும் இது பொய் மரியாதை, போலிக் கொண்டாட்டம் என.
சினிமா மீது பெரும் பிரமையும் வழிபாட்டு மனநிலையும் இருக்கும் அளவுக்கு இங்கு மறைமுக வெறுப்பும் கசப்பும் அதன்மீது இம்மக்களுக்கு உள்ளதென நினைக்கிறேன். சினிமா நடிகர்களைப் போலச்செய்தே வாழ்வோர் இந்த கோபத்துக்காக தம்மை பலிகொடுப்பவர்கள். சாமிக்கு நேர்ந்துவிட்ட கோழியைப் போல.
நமது சமூகம் அதன் அடிப்படையில் மிகவும் நோய்மைப்பட்டதாக உள்ளது. அதன் அத்தனை செயல்களிலும் இந்த நோய்க்கூறே வெளிப்படுகிறது. இது சமூகவலைதளங்களால் இன்னும் தீவிரப்பட்டிருக்கிறது, சமூகமே திருவிழாக்கோலமிட்டிருப்பதாக தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நாம் என்றுமே இப்படித்தான் இருந்திருக்கிறோம். ஒன்றை நினைத்து மற்றொன்றை சொல்லி அதற்கு மாறாக ஒன்றை செய்வது. இரட்டை முகம், இரட்டை வேடம், அதன் கலவையான உணர்ச்சிகள், பாசாங்கான பேச்சு, நடத்தையென. சினிமா இதற்கு மேடையமைக்கிறது. பேய்வடிவான சாமிக்கு ஒருநாள் விழாவெடுத்து மேடையமைத்துக் கொண்டாடுவதையும் மறுநாள் அதை மூலையில் போடுவதைப் போல. ஆனால் அந்த பேய்நிலை சாமிதான் நமது ஆழ்மனமாக மிச்ச நாட்களில் இருந்து நம்மை வினோதமாக நடத்திக்கொண்டிருக்கும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...