Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தமிழ் சமூகமும் சினிமாவும்

நான் ஒரு போக்கை கவனிக்கிறேன் - ஒரு படம் திரையரங்கில் வெளியாகும்போது ஐயோ அம்மா என்று பாராட்டித் தள்ளுகிறார்கள். அதுவே ஓடிடியில் வந்ததும் பார்த்துவிட்டு அமைதியாக நிறைகுறைகளை கவனித்து அந்தளவுக்கு ஒண்ணும் நல்லா இல்ல என்று எழுதுகிறார்கள். காதலிக்கும்போது ஒருவிதமாகவும் கல்யாணத்திற்குப் பிறகு இன்னொருவிதமாகவும் ஒரு பெண் தெரிவதைப்போல இது இருக்கிறது. பக்கத்தில் வந்ததும் அடச்சே என்றாகிறது.

எனக்குத் தெரிந்து விதிவிலக்காக இது நடக்காதது "சார்ப்பட்டா பரம்பரைக்கு' மட்டும்தான்.
இந்த திரையரங்க வெளியீட்டின்போது ரத்தக்கண்ணீர் வடிப்பவர்கள், வைரல் ஆகிறவர்கள், விழுந்துவிழுந்து பேட்டியெடுக்கும் விகடன், கலாட்டா குழுவினர் ஓடிடியை பொருட்படுத்தாதது காரணமா? பெருங்கூட்டத்தின் பகுதியாக இருந்து பார்க்கும் எழுச்சி, பரவசம் டிவியில் பக்கத்தில் பார்க்கும்போது வராததா? சினிமா நிறைய பொருட்செலவுடன் எடுக்கப்பட்டு மேளதாளத்துடம் வெளியிடப்படும்போது பார்வையாளருக்கும் ரசிகருக்கும் உண்டாகும் ஒருவித குற்றவுணர்வின் வெளிப்பாடு அதன் கடைசிகட்ட விற்பனைக் கண்ணியாக டிவி இருப்பதால் வராமல் போகிறதா?
எப்படி திருவிழா என்பது வெறும் சத்தங்களையும் பரபப்பையும் கூட்டத்தையும் தாண்டி ஒன்றுமில்லையோ, விழா முடிந்ததும் அதே கடையைத் திறந்துவைத்தால் யாரும் வரமாட்டார்களோ அதுவே இங்கும் நடக்கிறதோ?
ஒட்டுமொத்தமாக, இன்றைய சினிமா வெறும் பிரமை மட்டுமே, அது உள்ளீடற்றது என்பதை இது காட்டுகிறது. மிகையாக உணர்ச்சிவசப்படுபவர்கள் கூட அது முடிந்ததும் அதற்கும் தமக்கும் சம்மந்தமில்லை என்பதுபோலப் போகிறார்கள். ஒரு விலைமாதைப் போல சினிமாவை நடத்துகிறார்கள். உச்சம் அடையும் வரை ஆசை காட்டிவிட்டு அடுத்த நொடியே அடச்சே என்று உதறிவிட்டு வருகிறார்கள். தெருவில் அவள் எதிரே வந்தால் தலைதிருப்பிப் போகிறார்கள்.
சினிமா எந்தளவுக்கு மக்களை இடதுகையால் நடத்துகிறதோ, கையாளத்தக்க மூளையற்ற கூட்டமென நினைக்கிறதோ மக்களும் அவ்வாறே சினிமாவை நடத்துகிறார்கள். இரு தரப்புக்கும் பரஸ்பர மரியாதையில்லை. இது நேற்று வேறுவிதமாக இல்லை. அம்மா தாயே என்று திரையில் பார்த்து வியக்கும் நாயகி ஊருக்கு படப்பிடிப்புக்கு வந்தால் வேறுவிதமாகப் பேசுவார்கள், விலையென்ன என்று கேட்பார்கள். முதல் சூப்பர் ஸ்டாரான பாகவதர் கோயிலில் பாடி பிச்சையெடுத்தபோது யாரும் கண்டுகொள்ளவில்லை. உச்சநட்சத்திர நடிகைக்கு கோயில் கட்டுவார்கள். நட்சத்திர பக்கங்களை நடத்துவார்கள். படத்தை புரொபைலில் வைத்துக்கொண்டு சிலாகித்துக்கொண்டே இருப்பார்கள். அதே நடிகையின் அந்தரங்க காணொளிகள் வெளியானால் அதைப் பார்த்து உலகமெல்லாம் பகிர்ந்துகொள்ளும் முதல் ஆட்களாகவும் இவர்களே இருப்பார்கள்.
தமிழின் நல்ல இயக்குநர்களில் ஒருவர் அவர். அவர் படங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நாயகன் உதயமாகிறான் என்று பாட்டுப் பாடிக்கொண்டிருந்த மாற்றுசினிமா ரசிகர்கள் அவருக்கான சந்தை அடிபட்டதும் ஐயோ பாவம், காசுக்கு வழியில்லாமல் படம் கூட வெளியிட முடியாமல் இருக்கிறார், அவர் நலிந்த கலைஞர் என வீடியோ போட ஆரம்பித்தனர். அவரே ஒரு மேடையில் வந்து நான் நன்றாகத்தான் இருக்கிறேன், எனக்குப் பணம் ஒரு பொருட்டில்லை, படம் வராவிட்டாலும் கவலையில்லை என சொல்லும் நிலை ஏற்பட்டது.
ஒன்று சினிமா கலைஞர்களை, சினிமாவை கடவுள் எனத் தலைக்கு மேல் தூக்கிவைப்பது, அது முடிந்ததும் கீழ்த்தரமாக நடத்துவது, கண்டுகொள்ளாமல் போவது என அடிப்படை மரியாதையே இவர்களுக்கு சினிமா மீது இல்லை. இதனால்தான் தன் காலில் விழுந்த ஒருவரை இளையராஜா துரத்திவிட்டார். அவருக்குத் தெரியும் இது பொய் மரியாதை, போலிக் கொண்டாட்டம் என.
சினிமா மீது பெரும் பிரமையும் வழிபாட்டு மனநிலையும் இருக்கும் அளவுக்கு இங்கு மறைமுக வெறுப்பும் கசப்பும் அதன்மீது இம்மக்களுக்கு உள்ளதென நினைக்கிறேன். சினிமா நடிகர்களைப் போலச்செய்தே வாழ்வோர் இந்த கோபத்துக்காக தம்மை பலிகொடுப்பவர்கள். சாமிக்கு நேர்ந்துவிட்ட கோழியைப் போல.
நமது சமூகம் அதன் அடிப்படையில் மிகவும் நோய்மைப்பட்டதாக உள்ளது. அதன் அத்தனை செயல்களிலும் இந்த நோய்க்கூறே வெளிப்படுகிறது. இது சமூகவலைதளங்களால் இன்னும் தீவிரப்பட்டிருக்கிறது, சமூகமே திருவிழாக்கோலமிட்டிருப்பதாக தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நாம் என்றுமே இப்படித்தான் இருந்திருக்கிறோம். ஒன்றை நினைத்து மற்றொன்றை சொல்லி அதற்கு மாறாக ஒன்றை செய்வது. இரட்டை முகம், இரட்டை வேடம், அதன் கலவையான உணர்ச்சிகள், பாசாங்கான பேச்சு, நடத்தையென. சினிமா இதற்கு மேடையமைக்கிறது. பேய்வடிவான சாமிக்கு ஒருநாள் விழாவெடுத்து மேடையமைத்துக் கொண்டாடுவதையும் மறுநாள் அதை மூலையில் போடுவதைப் போல. ஆனால் அந்த பேய்நிலை சாமிதான் நமது ஆழ்மனமாக மிச்ச நாட்களில் இருந்து நம்மை வினோதமாக நடத்திக்கொண்டிருக்கும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...