முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகத்தில் அடிக்கும் புயல்

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது, ஆனால் எனக்குத் தெரியும்: கடந்த மூன்று மாதங்களில் நான் எழுதும் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. சராசரியாக ஒருநாளைக்கு ஆயிரம் சொற்களாவது குறைந்தது எழுதுவேன். மாதத்திற்கு 50,000 சொற்கள்தாம் என் கணக்கு. ஒரு பக்கம் கட்டுரைகள் எழுதிக்கொண்டே இன்னொரு பக்கம் என் நாவல்களில் நேரம் செலவிட்டபடி இருப்பேன். முக்கால்வாசி எழுதிய நிலையில் நான்கு நாவல்கள் இப்படி கைவசம் இருக்கின்றன. மிகவும் நேரநெருக்கடியான நாட்களில் கூட சில நிமிடங்களாவது எழுதக் கிடைத்தால் போதும், நிம்மதியாவேன். கூடுதல் நேரம் கிடைக்கும் நாட்களில் அதிகமாக எழுதி ஈடுகட்டுவேன். ஆனால் அண்மையாகத்தான் இது முடியாமல் போய்விட்டது.

இது பெரிய உலகப் பிரச்சினையா? ஆமாம், எனக்கு எழுத்துதான் உயிர், உடல், ஆவியெல்லாம். எழுதுவது குறையும்போது என் மூளைக்குப் போகும் பிராணவாயு குறைந்து போகிறது. நான் நடைபிணமாக மாறுகிறேன். அதிகமாக எரிச்சல்படுகிற, மகிழ்ச்சியற்ற மனிதனாகிறேன்.
காரணம் என் வேலையில் ஏற்பட்டுள்ள மிதமிஞ்சிய சிக்கல்கள், நெருக்கடி, பிரச்சினைகள்தாம். முன்பைவிட பலமடங்கு அதிகமாக உழைக்கவேண்டியிருக்கிறது. எப்போதுமே வேலையிலிருக்கும் உணர்வு. எவ்வளவு உழைத்தாலும் வேலை தீராத அலுப்பு. ராட்சஸ பள்ளமொன்றில் கைமணலை அள்ளிஅள்ளிப் போட்டு இன்னும் நிரம்பவில்லையே என அசந்துபோகும் நிலை. கோவிட்டுக்குப் பிறகு பலருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைதான். வேலையைக் காப்பாற்றிக்கொள்ள, மூன்று வேளை சாப்பிட்டு வாடகை கொடுத்து கடனைத் தீர்க்கவே எல்லாரும் 18 மணிநேரத்திற்கு மேல் உழைக்கிறார்கள். சம்பாதிக்கும் பணத்தை பொருளாதார வீக்கமும் வரிகளும் விழுங்கியது போக, நிம்மதியை வேலை நெருக்கடி பிடுங்கிக்கொள்கிறது. என்னுடைய பிரச்சினை நூதனமானது - எனக்கு வேலைக்காக, எதிர்காலப் பாதுகாப்புக்காக வாழப் பிடிக்காது. அது தற்காலிகமானது. எனக்கு நிரந்தரமான உயர்ந்த இலக்குகளுக்காக ஓடப் பிடிக்கும். 9-9 வேலைகளில் நம் நேரத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. நாம் போனால் அங்கு இன்னொருவர் வந்து உட்கார்ந்துகொள்வார். யாரும் ஓரிரு நாட்களுக்கு மேல் நம் உழைப்பைப் பற்றிக் கவலைகொள்ள மாட்டார்கள். ஆனால் இப்படி எழுத்துக்காக வாழும், போதுமான அளவுக்கு மட்டும் வேலையில் ஈடுபடும் காலம் முடிந்துவிட்டது எனத் தோன்றுகிறது. உலகம் ஒரு பெரும் நிலக்கரிச் சுரங்கமாக மாறிவிட அது எல்லாருடைய கையிலும் மண்வெட்டியைக் கொடுத்து இருட்டில் இறக்கிவிட்டு விடுகிறது.
எல்லா வேலையிலும் பௌதீகமான ஓய்வு இருக்கும். ஆனால் ‘மன ஓய்வு’ என ஒன்று உண்டு. அகம் கடலைப் போல ஓய்ந்து அமைதியாக அசைவற்று இருக்கவேண்டும். எனக்கு அந்த மன ஓய்வு தான் அண்மைக்காலமாக கிடைக்கவில்லை. ஓய்வுப் பொழுதிலும் ஆயிரம் பிரச்சினைகளைப் பற்றி நினைத்து முயற்சிகள் செய்தபடியே இருக்கவேண்டி வருவதால் மனம் எழுத்துக்கு நேரெதிரான திசையில் சென்றுவிடுகிறது. ஒருநாளை நூறு சொற்களை எழுதுவதே பெரிதாகிவிட்டது. என் கணிணியில் நான் எழுதவில்லை, அதை வேறுவேலைகளுக்காக பயன்படுத்துகிறேன் என்று அதைப் பார்க்கையில் நினைக்கையிலே வியப்பாக இருக்கிறது.
ஆனாலும் எழுதியெழுதிப் பழகியவன் என்பதால் மனம் நிலைபெற்றதும் சட்டென என்னால் பழைய தாளலயத்துக்குத் திரும்ப முடிகிறது. ஒன்றிரண்டு ஓய்வுநாட்கள் கிடைத்தால் நாவலை விட்ட இடத்திலிருந்து சரளமாக எழுதமுடிகிறது. இப்போதுதான் எனக்கு வருடக்கணக்கில் எழுத முடியாமல் போன பல நண்பர்களின் நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் திறமையானவர்கள், ஆனால் வாழ்வின் சூறாவளிக்கு தம்மை ஒப்புக்கொடுத்தபடி தாமே சூறாவைளியின் மையமாக மாறிப் போனவர்கள். ஒரேயடியாக அக அமைதியை இழந்த பின்னர் எழுதாமல் இருப்பதே இயல்பாகிவிட்டவர்கள். மௌனித்துப் போனவர்கள். சிலர் சில பத்தாண்டுகள் எழுதாமல் இருந்துவிட்டு மீண்டு வருவார்கள். பலருக்கு திரும்ப வரும் பாதை மூடுண்டு போயிருக்கும். அவர்கள் சிறுகசிறுக கேளிக்கைகளால், சுயநிந்தனையால், தன்வெறுப்பால் தம்மை அழித்துக்கொள்வார்கள். அவர்களால் அது எப்படி முடிகிறது என்று வியந்ததுண்டு. அது இப்படித்தான் முடிகிறது என எனக்கு அனுபவப்படும்போது இப்போது புரிகிறது.
வாழ்வின் பல்வேறு சார்புநிலைகள், நிபந்தனைகள் தாம் ஒவ்வொன்றையும் தோற்றம் கொள்ளச் செய்கின்றன என்றார் நாகார்ஜுனர். எழுத்தும் கூட சாராம்சமானது அல்ல - நிபந்தனைகள் மாறும்போது எழுதும் மனம் எந்திர மனமாகிவிடக் கூடும். உலகின் ஆகப்பெரும் சாபக்கேடு அதுதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...