முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மரணம் - மெய்யறிவு - சர்வாதிகாரம்


நாம் தனியாக இருக்கிறோம் என்பதே அறுதியான உண்மை - அதை நாம் உறுதிப்படுத்தும் தத்துவ அலகாகவும் மறப்பதற்கான சிறிய போதையாகவும் உறவுகள், நட்பு, காதல், சமூகமாக்கம் தேவையாகிறது. அவர்களில் மிக மிக அணுக்கமானவர் காலமாகும்போதே நாம் எவ்வளவுத் தனிமையாக இருக்கிறோம் எனத் தீவிரமாக சில கணங்கள் உணர்கிறோம். மீண்டும் உறவு போதைக்குள் விழுந்து தனிமையின் மறதி மட்டுமே தரத்தக்க தன்னுணர்வுக்குள் சிக்குகிறோம். மரணத்தை வாழ்வில் நேரில் காணுறும்போது இந்த இருமை கிடைக்காமல் தத்தளித்து காணாமல் போகிறோம். 


இதனாலே காலனை தெய்வமாக வழிபடும் மரபு நமக்கு இருந்திருக்கிறது. பௌத்தத்தில் வலுவாகவே இன்னும் இருக்கிறது. அங்கு மரணத்தை அனுதினமும் நினைப்பது மெய்யறிவுக்கான மார்க்கம். இந்து மதத்தில் நசிகேதன் வாழ்வின் உண்மையை அறிய காலனிடமே சென்று மண்டியிடுகிறான். 


இதற்கு வெளியேதான் மெய்யறிவுக்கு எதிரான போலி எந்திரமய உலகம் ஒடிக்கொண்டே இருக்கிறது. அது மரணத்தைக் குறித்து யோசிக்க நம்மை அனுமதிக்காமல் ஓடிக்கொண்டே இருக்கச் செய்கிறது. எந்தளவுக்கெனில் இன்று சில நொடிகளிலே மரணத்தைக் கடந்துவிட இவ்வுலகம் நம்மைத் தூண்டுகிறது. அனுதினமும் பார்க்கிற ஒருவர் இல்லாமல் போகும்போது இரங்கல் தெரிவித்துக் கொண்டாட்டத்தில் மூழ்குகிறோம். அதன் பெயரே பண்பாடு, கலாச்சாரம். சமூகம் என ஒன்று உண்டானதுமே மரணத்தை மறப்பது முக்கிய இலக்காக அது வைத்துக் கொள்கிறது. அதற்கு வளர்ச்சி எனப் பெயரிடுகிறோம்.


நமது மொபைல் விளையாட்டுகளைப் பாருங்கள். ரத்தம் தெறிக்கவிடில் போரடிக்கிறது. ஜோம்பிகளைக் கொல்லாவிடில் அதில் உற்சாகமேயில்லை. பலிச்சடங்களை எல்லா இடங்களில் இருந்தும் ஒழித்துவருகிறோம். அதனிடத்தில் வன்முறையற்ற தெய்வத்தையும் வன்முறைமிக்க் வாழ்க்கையையும் உருவாக்குகிறோம்.

 மரணத்திற்குப் பதிலாக முடிவற்ற வன்முறையை குறியீட்டுரீதியாக அது நமக்குப் பரிசளிக்கிறது - வெறுப்பாக,  கொலைகளாக, ரத்தமாக, அதிகாரமாக, சர்வாதிகாரமாக.


நாம் மரணத்தை வெறுக்காதபோது வன்முறைக்கும் அதிகாரத்துக்கும் தேவையே இராது எனத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.