Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

காதலை நாடி விவாகரத்து செய்யும் அபத்தம்


பசிக்கும் போது சோறு தின்னுகிறோம். தாகமெடுக்கையில் தண்ணீர் குடிக்கிறோம். சோறுண்டாலும் தாகமெடுக்கிறதென்று யாராவது சோற்றின் மீது கோபித்துக்கொண்டு அதை விசிறியடிப்பார்களா? இல்லை, இரண்டும் வெவ்வேறு எனும் தெளிவு நமக்கு சோறு விசயத்தில் உள்ளதைப் போல திருமண விசயத்தில் இல்லாமல் போய்விட்டது. இன்று சுவாரஸ்யமில்லை, மகிழ்ச்சியில்லை எனும் காரணங்களுக்கான மேற்தட்டு நவீன தம்பதியினரில் பெரும்பாலானோர் விவாகரத்தை நாடுகிறார்கள். இது ஒரு பெரும் அபத்தம்.

கல்யாண வாழ்க்கைக்கும் காதலின் சுவாரஸ்யத்துக்கும் என்ன சம்மந்தம்? சுவாரஸ்யம், மகிழ்ச்சி போன்றவற்றை நாம் அடுத்தவரிடம் இருந்து பெற முடியாது. அதை நாமாகத்தான் உருவாக்க வேண்டும். இன்றைய காதலர்களுக்கு இரண்டே வாரங்களில் காதல் அலுத்துவிடுகிறது. ஏனென்றால் காதலில் சுவாரஸ்யமில்லை. அது சம்மந்தப்பட்ட தனிமனிதரின் செயலில் இருக்கிறது. காதலிலே நீடிக்க முடியாத சுவாரஸ்யம் வருடக்கணக்கில் நீளும் திருமண வாழ்வில் எப்படிக் கிடைக்கும்? இதைத்தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று எளிமையாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.
நவீன மனிதர்கள், குறிப்பாக படித்த மேற்தட்டினர், உறவுகளையும் வாங்கிப் பயன்படுத்தும் பண்டமாகவே பார்க்கிறார்கள். அது மெல்லமெல்ல உறவுகள் மீது அவநம்பிக்கை கொள்ளவும் அலுப்படையவும் வைத்து கடைசியில் முழுமையாக தனிமையை நோக்கி அவர்களைத் தள்ளுகிறது - ஜப்பானில் இளைஞர்கள் திருமணத்தில் இருந்து மட்டுமல்ல காதல், நட்பில் இருந்து முழுமையாக வெளியேறி தனியாகவே வாழ்கிறார்கள். ஆனால் அப்போதும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. தனியான வீடுகளில் வாழ்ந்து துயருற்று மடிகிறார்கள். அவர்கள் இறந்த பிறகும் அவ்வீடுகள் கைவிடப்பட்டு சிதிலமடைகின்றன. இன்று ஜப்பானில் மூன்றில் இரண்டு மடங்கு வீடுகள் இப்படி ஆளற்றுக் கைவிடப்பட்டவையே. இந்தியர்களும் அந்த இடத்தை நோக்கியே பாய்கிறார்கள்.

மகிழ்ச்சியை நாமாகத்தான் உருவாக்க முடியும். யாரும் தர முடியாது. சமூக, குடும்ப உறவுகள் என்பவை நடைமுறைத் தேவைகளுக்காக மட்டுமே. அவை ஒருவிதமான புரோட்டீன் பௌடர். (வெறும் புரதப் பொடியை உண்டால் பாடி பில்டர் ஆக முடியாது.) என்று திருமணத்திற்கு முன்பு காதல், திருமணத்திலும் காதல் வேண்டுமெனப் பேச ஆரம்பித்தார்களோ அன்று ஆரம்பித்தது சனியன். அரிஸ்டாட்டில் தனது “நிக்கோமேக்கியன் அறம்” நூலில் “நட்பென்பது பரஸ்பர நல்லெண்ணம்” என்கிறார். (அவர் காதலையும், தாம்பத்தியத்தையும் நட்பென்றுதான் அழைக்கிறார்.) எந்த சமூக, அந்தரங்க உறவும் பரஸ்பர நல்லெண்ணம் கொண்டு, பணம், அந்தஸ்து, வயது, மனநிலை, உணர்வுகள் எனப் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் தோன்றுவதே. நீ இன்பம் கொடு, நான் பணம் தருகிறேன், நீ என்னை மகிழ்ச்சியாக வை, நான் உன்னுடன் இருக்கிறேன் என்பது நல்லுறவு அல்ல. ஏதோ ஒரு சந்தர்பத்தில் நம்மால் முழுமையான ஒருங்கிணைவுடன் இன்னொருவருடன் இருக்க முடிகையில் அவருக்கு நன்மை செய்வதே நமக்கு நாம் செய்யும் நன்மையாகிறது, அவருக்கு இன்பமளிப்பது நமக்கு இன்பமளிப்பதாகிறது. பரஸ்பரம் கொடுப்பதல்ல, அளித்துப்பெறுவதல்ல, அளிக்கையில் பெறுவதே என்கிறார் அரிஸ்டாட்டில். ஆனால் இதை நீங்கள் ஆயுள் பரியந்தமும் செய்யமுடியாது.
ஆக, கல்யாண உறவு அப்படியான நல்லெண்ண உறவு அல்ல. அது ஒரு சமூக உறவு. அது முழுக்க நடைமுறை நோக்கங்களுக்காக அமைவது. தற்காலிக காதலானது மட்டுமே நல்லெண்ண உறவாக இருக்கலாம் (காதலே தற்காலிகம் தானே!).
காதலின் நீட்சியாக திருமண பந்தத்தைப் பார்க்க ஆரம்பித்ததே மனித குலத்தின் வீழ்ச்சியின் துவக்கம் எனக் கருதுகிறேன். இரண்டும் வேறுவேறு விசயங்கள். நீங்கள் எந்த விலங்காவது நாற்பது, ஐம்பது ஆண்டுகள் காதலித்து பார்த்திருக்கிறீர்களா? காதல் அவ்வளவு நுட்பமானது, மென்மையானது, அதன் சாரத்தை யாராலும் காண முடியாதென்று அதனாலே வள்ளுவர் சொல்கிறார். அதை எப்படி அன்றாட வாழ்க்கையின் நடைமுறைக்குள் சாத்தியப்படுத்த முடியும்? அது நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கானது அல்ல. (எப்போதும் அன்பில் திளைப்பதாக, காதலில் உருகிக்கொண்டிருப்பதாக சொல்கிறவர்கள் பொய் வியாபாரிகள்). அப்படி எந்த மனிதராலும் இயலாது. அரிஸ்டாட்டில் சொல்வதைப் போல காதலை யாராலும் தன்னளவில் நீட்டிக்க முடியாது.

நவீன உலகில் மக்கள் ஏன் காதலை, அதன் சாகசங்களைத் திருமணத்துக்குள் எதிர்பார்க்கத் தொடங்கினார்கள்? காதல் அவர்களுடைய அன்றாட உலகிலிருந்து மறைந்ததுதான் காரணம். எந்திரமயமான உலகில் முழுக்க தன்வயப்பட்ட மக்களுக்கு, தனிமை நோயால் பீடிக்கப்பட்ட ஜனங்களுக்கு காதலின் மீது அச்சம் ஏற்பட்டது. காதலில் மட்டுமல்ல நட்பிலும் அவநம்பிக்கை ஏற்பட்டது. அதனாலே தன் இணையரையே சிறந்த நண்பராக வைத்துக்கொள்ள விரும்பும், அவ்வாறு கோருகிற போக்கும் இன்று அதிகமாகி வருகிறது. காதலும் நட்பும் இல்லாமல் போன உலகைச் சேர்ந்தவர்களுக்கு திருமண வாழ்வின் பாதுகாப்புணர்வு அதிகமாகத் தேவைப்பட்டது. ஆனாலும் தனிமை அவர்களை விடாததால் திருமணத்துக்குள் நட்பில்லை, காதலில்லை எனக் காரணம் சொல்லிப் பிரிவை நாட ஆரம்பித்தனர். காதலை மிக முக்கியமாகக் கருதும் பெண்கள் அதிகமாக விவாகரத்தை நாடுவதிலும் ஆச்சரியமில்லை.

உலகில் எப்போதாவது அரிதாகத் தோன்றும் காதலுக்காக, காதலுக்குள்ளே தோன்றாத காதலுக்காக, நட்புக்குள்ளே தோன்றாத நட்புக்காக ஒருவர் ஒவ்வொரு உறவாக முறித்து, ஓடிக்கொண்டே இருப்பதைப்போன்ற, வாழ்வைப் பணயம் வைப்பதைப் போன்ற அபத்தம் வேறில்லை. அது பொருளாலான உலகில் கடவுளைத் தேடுவதை ஒத்தது. ஏனென்றால் காதலே நவீன உலகின் கடவுள். இதன் பெயர் சுதந்திரமோ, முன்னேற்றமோ அல்ல. இதன் பெயரே பேதைமை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...