முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தாண்டு வாழ்த்துகள்


புத்தாண்டு என்றால் புதிய வாய்ப்புகள், தீர்வுகள், மேம்பாடு குறித்த நம்பிக்கை. எனக்கு அதனாலே புத்தாண்டுக்கு முந்தின நாளென்றால் மிகவும் பிடிக்கும். நடைமுறை வாழ்வு குறித்து சில தீர்க்கமான முடிவுகளை வரும் ஆண்டு நிறைவேற்றப் போகிறேன். முன்பு எவ்வளவு குறைந்தபட்ச வசதிகள் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது. மகிழ்ச்சி உள்ளிருந்து வருகிறது என்று நம்பினேன். புறவாழ்வின் தூண்டுதல்கள் என்னைத் தொடவேயில்லை. ஆனால் இப்போது புறவாழ்வு மிகவும் அலுப்பூட்டுகிறது. அதனாலே அதை மாற்றுவதற்கு 2025ஐ பெரிதும் எதிர்பார்த்திருக்கிறேன்.

2025க்குள் இரண்டு நாவல்களை முடிக்கும் நம்பிக்கை இருக்கிறது - ஒன்று "கறுப்பு தினம்". இன்னொன்று "ஒரு முடிவற்ற துப்பறியும் கதை". அபுனைவில் "ஆண் ஏன் அடிமையானான்?" எனும் புத்தகம் ஒன்றும் 2025க்கான என் திட்டத்தில் இருக்கிறது.

இந்த ஆண்டு நான் செய்த தவறு பணம் குறித்த கவலைகளை என்னைத் தின்ன அனுமதித்தது. என்னதான் முயன்றாலும் சில விசயங்களை மாற்ற முடியாது எனும்போது நம் கட்டுக்குள் இருக்கும் எழுத்தில் அதிக கவனம் அளித்து உணர்வுகளைக் குவிப்பது கூடுதல் நிறைவை, மகிழ்ச்சியைத் தரும். என்னால் இன்னொருவராக இருக்க முடியாது. 2025இல் நான் என் நிலையில் திருப்தியாக மகிழ்வாக இருக்க முயல்வேன். இந்த வாழ்வு நான் பிறந்ததில் இருந்தே ஏவப்ப்பட்ட அம்பு. அதன் திசையை நான் இப்போது குறுக்கிட்டு மாற்றமுடியாது. இது எதை நோக்கிப் போகிறதோ அங்கேயே போய்ச் சேரட்டும்.

2024ஐ உற்சாகமாக மாற்றிய பல்லவிக்கு, என் கட்டுரைகளைப் பதிப்பித்த சுதீர் செந்தில் அண்ணனுக்கு, மனுஷ்யபுத்திரனுக்கு, என் நாவலை இந்தாண்டு பதிப்பிக்கும் ஜீரோ டிகிரி பதிப்பக காயத்ரி, ராம்ஜிக்கு நன்றி. "நிழல் பொம்மை" நாவலைப் படித்து உரையாடப் போகும் வாசக நண்பர்களுக்கும், ஏற்கனவே படித்து கருத்தைத் தெரிவித்த நண்பர்களுக்கும் நன்றி.

பிரியத்துக்குரிய நண்பர்கள் எல்லாருக்கு அன்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...