முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மொழி தேவையில்லாத சமூகம்


பள்ளிக்கல்வி இனிமேல் அதாவது அடுத்த கால் நூற்றாண்டுக்குள் நேரடி வகுப்புகள் குறைவாகவும், பதிவு செய்யபட்ட காணொளிகளும் பயிற்சிகளும் கொண்ட இணையவழி வகுப்புகள் அதிகமாகவும் இருக்கும். கட்டாயப் பாடங்கள் சொற்பமாகவும் தேர்வுப்பாடங்கள் அதிகமாகவும் இருக்கும். புதிய கல்விக்கொள்கையைப் பார்த்தால் ஏற்கனவே இதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார்கள் எனத் தெரியும். தமிழ்நாடு அரசு இப்போதைக்கு புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கலாம், ஆனால் எதிர்காலத்தில் ஒரு சிறிய இடைவெளி விழுந்தால் உள்ளே கொண்டு வந்துவிடுவார்கள். ஒரே ஒரு பிரச்சினை - தனியார் பள்ளிகள் லட்சக்கணக்கில் வருடத்திற்கு வசூலிப்பதை நியாயப்படுத்த நிறைய உள்கட்டமைப்பில் முதலீடு செய்திருக்கிறார்கள். அவர்களால் புதிய பாணி கல்வியை உடனடியாக ஏற்க முடியாது. கட்டணத்தை குறைக்கவும் இயலாது. ஆரம்பத்தில் நிறைய குழப்பங்கள் தோன்றும். இப்போதே சீனாவில் குழந்தைப்பேறு குறைந்ததில் பள்ளிகள் பல மூடப்படுகின்றன. இந்தியாவில் இது 2055க்கு மேல் நிகழும் என்கிறார்கள். அப்போது வேறுவழியின்றி தொலைதூரக் கல்வியை ஏற்பார்கள், பல ஆசிரியர்கள் வேலை இழப்பார்கள். மாணவர்களுக்கு எதைக் கட்டாயமாக அளிக்க வேண்டும் என்பதில் இருந்து அரசு வழுவிக்கொள்ள அவரவர் தேவைக்கேற்ப பாடங்களைத் தேர்வு பண்ணும் 'உணவக மெனுகார்ட்' நடைமுறை வரும், பல்வேறு பாடத்திட்டங்கள், கஸ்டமைஸ்ட் பாடத்திட்டங்கள் வரும். 12 வயதுக்கு மேல் தொழில் செய்து கல்வி கற்கும் சூழல் ஊக்கப்படுத்தப்படும். 

இந்த களேபரத்தின் இடையே, மாணவர் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைய கட்டாய மொழிக் கொள்கைகள் சாத்தியமாகாது. மாணவர்கள் தமக்குத் தேவையெனக் கருதும் மொழிகள் மட்டுமே கற்பிக்கப்படும். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் இது மாறிக்கொண்டே வரும். பெங்களூரில் பல தனியார் பள்ளி மாணவர்களுக்கு கன்னடாவில் வாசிக்கத் தெரியாது. எதிர்காலத்தில் இந்தி, சமஸ்கிருதம், உள்ளூர் மொழி எதையும் படிக்க மாட்டார்கள். ஆங்கிலத்தைக் கூட செயலியே நமக்காக எழுதும் எனும்போது அதையும் முறையாகப் படிக்க மாட்டார்கள். முழுக்க மாறுபட்ட வினோதமான மேலோட்டமான சமூகம் ஒன்று உருவாகும். இப்போதைய தமிழ்நாட்டு தனியார் பள்ளி மாணவர்களிடம் பேசினாலே இப்போக்கின் சாயலை உணர முடியும். 

 சி.பி.எஸ்.ஸி கல்வித்திட்டம் பற்றி அண்ணாமலை சொல்வதில் கொஞ்சம் உண்மை உள்ளது. ஒரே மாறுபாடு சி.பி.எஸ்ஸியே எதிர்காலத்தில் அப்படி இருக்க முடியாது என்பது. ஒன்றிய அரசின் பண்பாட்டு தேசியம் தற்காலிக மேகமூட்டம் மட்டுமே. உ.தா., புதிய கல்விக்கொள்கைக்குப் பிறகு முதலாமாண்டு மட்டுமே உயர்கல்வி நிறுவனங்களில் மொழிப்பாடம் இருக்கும். மாநில மொழிக் கல்வியை ஊக்கப்படுத்தும்படி பு.க.கொ பெயருக்கு கூறினாலும் அதற்கு எதிராகவே உள்ளது. திறன்சார் கல்வி, வேலை உத்தரவாதம் அளிக்கும் கல்வி எனும் பெயரில் மொழியை, பண்பாட்டுப் பாடங்களை அது ஒழித்து வருகிறது. இந்தியா முழுக்க எத்தனை மொழியாசிரியர்கள் இப்போது உள்ளார்கள், எத்தனை பேர்களை அரசு புதிதாக வேலையில் அமர்த்துகிறது எனக் கணக்கெடுத்துப் பார்த்தால் நான் சொல்வது புரியும். இன்று தம் பிள்ளைகளுக்கு தாய்மொழியைக் கற்றுக்கொடுக்கவே பெற்றோர்கள் பெரும்பாடு பட்டாக வேண்டும் 

பாஜகவும் திமுகவும் மோதிக்கொள்வது ஒரு தற்காலிக முரண்பாட்டுக்காகவே. கல்வியை தனியாரிடம் முழுமையாகக் கொடுக்காமல் அரசே அதில் பங்குதாரராக இருந்தால் மட்டுமே இம்மாற்றங்களைக் கட்டுக்குள் வைத்து கொள்கை வகுக்க முடியும். மொழிக்கொள்கைக்கு முன்பு அதற்குத் தோதான பொருளாதாரக் கொள்கை வேண்டும். இப்போதைக்கு கவனம் திருப்பும் விவாதம் மட்டுமே இது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...