முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலமும் ஒழுக்கமும்

புத்தரின் அடிப்படையான கருத்தே அனைத்தும் - முக்தியும் கூட - நிபந்தனைக்கு உட்பட்டது என்பதுதான். அதாவது ஒருவர் தியானம், ஒழுக்கம், கருணை என அமைதியான விழிப்பான வாழ்க்கையை வாழ்ந்தாலும் அது கயிற்றின்மீது நடப்பதைப் போன்றதே. அமைதியும் கருணையும் அக ஒளியும் நிபந்தனைக்கு உட்பட்டவை எனும்போது எவையும் நிலைப்பதில்லை. எதுவும் நிபந்தனைக்குட்பட்டது எனும் கருத்து கூட நிபந்தனைக்குட்பட்டதே. ஆக நாம் பத்து கார்களை ஒன்றின்மீது ஒன்று வைத்து ஓடவிட்டால் எப்படி இருக்குமோ அப்படியான இருத்தலையே கொண்டிருக்க முடியும். எக்கணமும் தடுமாறுவதும் நிலைகொள்வதும் இரண்டுமே நிபந்தனைக்குட்பட்டு தோன்றுகின்றன எனும் உணர்வைத் தக்க வைப்பதுமே சாத்தியமுள்ள நிலைகள். 

முன்பு நான் ஜென் துறவிகளின் நூல்களைப் படித்துவிட்டு அவர்கள் எப்போதும் அனுபூதி நிலையில் இருப்பார்கள், அகம் மலர்ந்த பின் அது கூம்பாது என்றே அபத்தமாக நம்பினேன். பின்னரே மலர்தலே மலர்தல் அல்லாத நிலையைச் சார்ந்துள்ளதால் எதுவும் பூரணமாக மலர்வதோ வாடுவதோ இல்லை என நாகர்ஜுனரின் வழியாகப் புரிந்துகொண்டேன். சின்னச்சின்ன தெளிவுகளைக் கடந்து கடைசிவரை எல்லாரும் சாமான்யமான மனிதராகவே இருக்க முடியும். புத்தரும் அப்படியே மரித்திருக்க முடியும். அதனாலே புத்தரின் கால் பாதம் வழிபடப்படுகிறது - நம்மைப் போல சாதாரணமாக மட்டுமே இருக்க முடிந்தவர், அதனாலே அவர் மரணமும் உற்றார். பௌத்தம் அதன் வெவ்வேறு வடிவங்களில், பள்ளிகளில் வளர்ந்தபோது, வெகுமக்கள் மதமாகியபோது புத்தருக்கு ஆன்மா உண்டு எனும் கருத்தை சிலர் எட்டினர். ஏனெனில் ஆன்மா இல்லாதபோது, முக்தி நிலையற்றதாகும்போது மத நிறுவனங்களைக் கட்டமைக்க அது உதவாது. மெல்லமெல்ல பௌத்தம் வைதீகத்துக்கு அருகில் வந்தது அல்லது பௌத்தத்தை தழுவி உருவான வைதீகத்துடன் அது கைகோர்த்தது அப்படியே. இன்றும் வைதீக, கிறித்துவ மதங்களைச் சார்ந்தோர் ஆன்மா சார்ந்த நிரந்தர முக்தியின் பாலான சாராம்சவாத பௌத்தத்தையே விரும்புகிறார்கள். 

ஆனால் அசலான பௌத்தம் எதையும் நிரந்தரமாக, நிபந்தனைக்கு அப்பாலானதாக, முழுமையாக உருமாற்றுவதாக, நீடிப்பதாக ஏற்காது. அப்படி ஏற்காமையே விடுதலை என அது சொல்லும். புத்தரே நிபந்தனைக்குட்பட்டு தோன்றும் மனநிலைதான். நிபந்தனைக்குட்பட்டதெனத் தோன்றும் நிபந்தனையினால் ஆன நிலை. 

பௌத்தம் கோரும் ஒழுக்கமும் அறமும் கூட நிபந்தனைக்கு உட்பட்டதே - ஒழுங்கீனம் சூனியமானது எனும்போது கிடைக்கும் தெளிவு அந்த சூனியத்தை மேலும் பற்றிக்கொள்ளாதிருக்கும் பொருட்டு சுயக்கட்டுப்பாட்டை விதிக்கக் கோருகிறது. கெட்டுப் போன உணவெனத் தெரிந்தபின் சாப்பிடாமல் தவிர்ப்பதைப் போல. இது மிகமிகச் சிக்கலானது. நம் மனத்திலும் உடலிலும் காலமே செயல்படுகிறது - காலம் என்பது காரண காரிய விசையின் உருவகம். அதனாலே நாம் எதாவது ஒன்றை நோக்கி சதா ஈர்க்கப்படுகிறோம் - நம் கண்கள், நாசி, புலன்கள், நம் உடல், சிந்தனை, உணர்வுகள் காலத்துள் இருப்பதாலே அசைவுற்றபடி உள்ளன. நீங்கள் காலத்தை சூனியமாக்கினால் அசைவு அர்த்தமிழக்கும். அப்போது நாம் விளையாட்டாக ஜாலியாக அசைய வேண்டியிருக்கும், சும்மா ஒரு இலை அசைவதைப் போல. இது மொழியின் அமைப்புக்கு ஏற்றது அல்ல, இது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. காலம் என்பது 'ஒழுங்கீனத்தின்' இன்னொரு வடிவமெனில் காலத்துள் இருக்கும் நாம் 'ஒழுங்கீனத்தால்' அமைந்தவர்கள் ஆகிறோம். இவ்வளவு சிக்கலான ஒன்றை புலனடக்கம் என சுருக்கிக் கொள்ள முடியாது - கால-அடக்கமே புலனடக்கம். எனில் நாம் எங்கு சென்று அதை நாட முடியும்? நம் பாலுறுப்பு காலத்தினுள் அமைந்திருப்பதால் நம்மால் பாலுறுப்பை எப்படிக் கட்டுப்படுத்த இயலும்?

இக்கேள்விகளுக்கு அவரவருக்கான பதில்களை அவரவரே கண்டடைய முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...