முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிகழாமையின் குழப்பம்



எனக்கு கடந்த புதன் கிழமை “பல்லைக் பிடுங்கினார்கள்”. ஆங்கிலத்தில் extraction என்று நளினமான அறிவியல்தனமாக அழைத்தாலும் அது நிஜத்தில் பிடுங்குவதுதான் என்பதை ‘உணர்ந்தேன்’. மருத்துவர் என் பல்லைக் கிடுக்கியால் பற்றி இழுத்தபோது இவர் ஏன் இழுக்கிறார் என வியந்தேன். அதன்பிறகு அதை அங்குமிங்குமாக அசைத்து ‘உடைத்தார்’. ஆம், நல்லவேளையாக அதற்கு முன்பு வலிமரப்பு ஊசியைப் போட்டார். நமக்குள் எதையோ உடைத்துப் பிடுங்கி எடுப்பதன் பயம் இருக்கிறதே அது தனியானது. எனக்குத் துளிகூட வலிக்கவில்லை, ஒரு சிறு கூச்சம், கண்ணை இறுக்க மூடவைக்கிற எலும்பு வலியைப் போல ஒன்று அவ்வப்போது இருந்தது என்றாலும், முறுகிக் கொள்கிற என் முஷ்டியைக் கட்டுப்படுத்துவதே கடினமாக இருந்தது. எங்கே என் பிரக்ஞையை மீறி அவரது மூக்கைக் குத்திவிடுவேனோ என பயமாக இருந்தது. ம்ம்ம்ம் என உறுமியபடி அதைக் கடந்தேன். சுவற்றில் ஆணியைப் பிடுங்குவதைப் போன்ற இச்செயலைச் செய்ய மருத்துவருக்கு அநாயசமான மனநிலையும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேண்டும். பார்த்து பதவிசாகச் செய்பவர்களால் முடியாது. அது மனித உடம்பல்ல, அது ஒரு இடிபாடு, அதற்குள் நீண்டிருக்கும் மரத்தை சுத்தியால் அடித்து உடைத்து பிடுங்கு என நினைத்துச் கைவைக்க வேண்டும். ஆனால் பல்லை டிரிட்டல் போன்ற சிறிய கருவியால் சுத்தம் செய்வது இன்னும் நுணுக்கமான வேலை. அதைச் செய்த இளம்பெண் பயிற்சி மருத்துவர் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் என் நாக்கைப் பதம் பார்த்தார். நான் நல்லவேளையாக மருத்துவம் படிக்கவில்லை. என்னைப் போன்ற யோசித்து கவனமாக நுட்பமாகச் செயல்படுகிறவர்களுக்கு பல்லை உடைப்பது குழப்பமான செயலாகும். இதற்கு ஒரு சுரங்கத் தொழிலாளியின் தைரியமும் வலிமையும் வேண்டும். ஒட்டுமொத்தமாக இதை ஒரு நல்ல அனுபவம் என்றே சொல்ல வேண்டும். பெரிய பாதகம் இன்றி வெளியே வந்தேன்.

இந்த பல்லுடைக்கும் விவகாரம் நடக்குமுன்பே என் சக ஊழியர் என்னை எச்சரித்தார். தாங்க முடியாத வலி ஏற்படும். அவர் அதனாலேயே தன் உடைந்து போன பல்லைப் பிடுங்காமல் தப்பித்துத் திரிகிறார். மேலும் நான் என் கல்லூரியில் யாரிடம் சொன்னாலும் ஏதோ நெருப்பில் தள்ளியதைப் போல துடித்தார்கள். “அவ்வளவு வலிக்குமா?” “ஐயய்யோ”. இரண்டு தோழிகள் என்னிடம் “நல்லாயிருக்கும்” என்றார்கள். நல்லாயிருக்குமா? “ஆமாம், பல்லெடுத்ததும் டாக்டர் ஐஸ்கிரீம் சாப்பிடச் சொல்வார். வலி குறைந்து ஜாலியாக இருக்கும்.” வலிக்காதா என்று நான் கேட்டதற்கு ஐஸ்கிரீம் சாப்டுங்க, எஞ்சாய் பண்ணுங்க என்று சிரித்தார்கள். என் அம்மாவிடம் கேட்டால் கண்டிப்பாக ஒரு வாரம் வலியிருக்கும், எதையும் சாப்பிட முடியாது என்றார். மேலும் எனக்கு ஏற்கனவே படித்துள்ள மார்க்வெஸின் கதையொன்று நினைவுக்கு வந்தது. அதில் வலி மரப்பு மருந்தின்றி ஒரு கொடுங்கோலரின் பல்லை புரட்சியாளர்களின் ஆதரவாளரான மருத்துவர் பிடுங்குவார். பொறுக்க முடியாத வலியில் அந்த மனிதர் கதிகலங்கிப் போவார்.

பல்லவியிடம் மருத்துவர் பல்லை உடைக்கப் போவதாகச் சொல்லியும் கூட அவள் (வலிக்கு பயந்து) முடியாதென்று சொல்லி மறைந்து திரிகிறாள். என்னால் தலைமறைவாக முடியவில்லை. இரு வாரங்களுக்கு முன்பு என் பற்களில் வலி எடுத்ததால் சுத்தம் பண்ணி இரு பற்களை ‘நிரப்பினார்கள்’. நிரப்பியபின்னரே எனக்கு தாங்க முடியாத வலி எடுத்தது. வலி நிவாரணி மாத்திரைகளே உதவின. அந்த மாத்திரைகள் முடிந்ததும் பற்களைச் சும்மா காட்டிவிட்டு மீதமுள்ள பற்களையும் நிரப்பலாமா என்று கேட்கவே அரைமனத்தோடு போனேன். காத்திருப்பு வரிசையில் ஒரு மனிதர் ஒரு பக்கம் முகம் வீங்கிய நிலையில் பயங்கரமான பாவனையுடன் உட்கார்ந்திருந்தார். உள்ளே போன என்னை அந்த மருத்துவர் பார்த்துவிட்டு வலப்பக்க ஞானப்பல்லை எடுத்துவிடலாம், அதன்பிறகு நிரப்பலாம் என்றார். என்னவோ பண்ணுங்க எனும் மனநிலையில் நான் இருந்தேன்.

பல்லை மருத்துவர் உடைத்தபின்னர் எனக்கு ரொம்ப நேரமாக வலிக்கவே இல்லை. நான் மருத்துவரிடம் ஏற்கனவே இதைக் குறித்துக் கேட்டிருந்தேன். வலிமரப்பு மருந்து நான்கு மணிநேரங்களில் செயலிழக்கும். உடனே வலி தொடங்கும். வலி நிவாரணி மாத்திரைகளை நான் முழுங்கிக்கொள்ள வேண்டும். “வலி போய்விடுமா?” “வலிக்கும், மாத்திரை அதைக் கொஞ்சம் குறைக்கும்.” “எவ்வளவு நாட்கள்?” “ஐந்து நாட்கள்.” நான் இதைக் குறித்த பதற்றத்திலே இருந்தேன். வீட்டுக்கு வந்து அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு மருந்தை முழுங்கினேன். அதன்பிறகு ஒவ்வொரு நான்கு மணிநேரமாக எண்ணிக்கொண்டிருந்தேன். சுத்தமாக வலியே இல்லை. சிலர் 24 மணிநேரத்துக்குப் பிறகு வலிக்கும் என்றார்கள். எனக்கு அடுத்தநாளே ரத்தக் கசிவு நின்று காயம் ஆறத் தொடங்கியது. 48 மணிநேரத்தில் கடுமையான வலி ஏற்படக் கூடும் என இணையத்தில் படித்தேன். ஆனால் கடவுளைப் போல வலி தன் தரிசனத்தைத் தராமலே ‘ஏமாற்றிவிட்டது’. வரும் வரும் எனும் பயமே பயங்கரமாக இருந்தது. ஒருவேளை வாய்க்குள் எதாவது பிரச்சினையோ என்று பல்துலக்கும்போது பல்லிருந்து பகுதிக்கு அருகே பிரஷ்ஷைக் கொண்டு போனால் வலித்தது. முழுமையாக காயம் ஆற இன்னும் ஐந்து நாட்கள் ஆகும் என நினைக்கிறேன்.

காயம் ஆறி வரும் முதல் ஐந்து நாட்களில் குத்துச்சண்டை பயிற்சியோ உடற்பயிற்சியோ செய்யக் கூடாது என்று சாட்ஜிபிடி கண்ணை உருட்டி என்னை எச்சரித்தது. ஆனால் நான் குத்துப் பயிற்சி செய்தேன். ஒரு பக்க வாயால் கறி, மீனெல்லாம் தின்றேன். எந்த பிரச்சினையும் வரவில்லை. என்னவோ ஒன்று சரியாகவும் தப்பாகவும் இருக்கிறது - அது என்னவென்றுதான் தெரியவில்லை. பல்லை நிரப்பியபோது என் கழுத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த வலி தாலி கட்டும் சமயத்தில் தன் காதலனுடன் ஓடிப்போய் விட்டது. ஆனால் இடப்பக்க ஞானப்பல்லை அடுத்து மருத்துவர் ‘உடைக்கும்போது’ இந்த வலி என்னிடம் காதல் கொண்டு திரும்ப வந்துவிட்டால் என்ன செய்வது? இப்போதைக்கு அப்பயம் மட்டுமே.

பல்வலி இரண்டு மூன்று வாரங்களாகப் படுத்தி எடுத்ததில் என் எழுத்து கிட்டத்தட்ட நின்றுவிட்டது. ஒரு கட்டுரை, நாவலில் சில பக்கங்கள் மட்டுமே எழுத முடிந்தது. ஆனால் வலியின் பாதையின் முடிவு எப்போதும் இப்படியிருந்தால் அப்போதே சந்தோஷப்பட்டிருப்பேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.