தன் பிரச்சனையை (துன்பியல் வழுவை) உணர்ந்து சரியான நேரத்தில் நாயகனோ நாயகியோ தன்னை மீட்டுவிட்டால் அது கதையை பலவீனமாக்கி விடும் என்று அரிஸ்டாட்டில் தன் “கவிதையியல்” நூலில் ஓரிடத்தில் சொல்லுகிறார். இது உண்மையா? எல்லா நாயகர்களும் மீளமுடியாதபடி வீழ்ந்து தான் ஆக வேண்டுமா? இது தான் எதார்த்த உலகில் நடக்கிறதா? இல்லையே! இங்கு தான் அரிஸ்டாட்டில் கதையை வாழ்க்கையை போலச்செய்தல், ஆனால் வாழ்க்கை அல்ல என்று சொல்லுவதை நாம் கவனிக்க வேண்டும். கதை வாழ்க்கையை விட வசீகரமானது, சுவாரஸ்யமானது (நான் வாழப்படும் வாழ்க்கையை சொல்லுகிறேன், கதையாக மீளநினைக்கப்படும் வாழ்க்கையை அல்ல.) அதனாலே சரியான நியாயங்கள் இல்லாமல் திடீர் திருப்பமொன்றின் மூலம் ஒரு பாத்திரம் மீட்கப்படுமானால் அது கதையின் தீவிரத்தை மழுங்கடித்து விடும், கதையின் அமைப்பே பாத்திரங்கள் போக்கை தீர்மானிக்க வேண்டும், பார்வையாளர்களுடைய (வாசகர்கள்), எழுத்தாளனுடைய விருப்பம் அல்ல என்று அவர் வலியுறுத்துகிறார். தல்ஸ்தாயின் “அன்னா கரெனினா” நாவலில் வரும் இரு முக்கிய பாத்திரங்களான லெவின் மற்றும் கிற்றி (Levin, Kitty) இதற்கு சிறந்த உதாரணங்கள். தங்களுடைய மிகையான கற்பனாவாதம் மற்றும் சுய-ஆட்கொள்ளல் காரணமாக இருவருமே வீழ்ச்சியை நோக்கி செலுத்தப்பட்டு பின்னர் சந்தர்பங்களால் மீண்டு வந்து காதலித்து திருமணம் செய்து லட்சிய தம்பதிகள் ஆகிறார்கள். ஆனால் அன்னா கரெனினா அளவுக்கு நம் மனத்தை கிற்றியோ லெவினோ ஆட்கொள்வதில்லை. ஏனென்றால் அன்னா தன்னுடைய தவறான தேர்வுகளால் குடும்பத்தை, குழந்தையை பறிகொடுத்து விட்டு, ஒரு இளைஞனைக் காதலித்து அவனுடன் ஓடிப் போகிறாள். அந்த உறவு விரைவில் கசந்து விட அவளால் திரும்ப பழைய வாழ்க்கைக்கு திரும்ப செல்ல முடிவதில்லை. அதே நேரம் அவளுடைய காதலின் உண்மைத்தன்மையும் அவளை கட்டிப்போடுகிறது. இருதலைக்கொள்ளி எறும்பாக அவள் பரிதவிக்கிறாள். நாவலின் இறுதிக்கட்டத்தில் தன் துன்பியல் வழுவை அறிந்தேற்றம் செய்கிற ஒரு அன்னாவை நாம் காண்கிறோம். அவள் எப்படியாவது தன் துன்பியல் முடிவில் இருந்து தப்பிக்க வேண்டும் என நாம் மனதார விரும்புகிறோம், ஆனால் அன்னா போக்கிடம் இல்லாமல் தன் குற்றவுணர்வாலும் குழப்பத்தாலும் உந்தப்பட்டு ரெயிலுக்கு தலையைக் கொடுத்து தற்கொலை பண்ணிக் கொள்கிறாள். இந்த முடிவே இன்றும் அன்னாவை நிறைய வாசகர்களால் மறக்க முடியாத பாத்திரமாக்கி இருக்கிறது. அதற்கு இந்நாவலுக்கு தல்ஸ்தாய் கொடுத்த கச்சிதமாக துன்பியல் முடிவும் ஒரு காரணம்.