Skip to main content

மணிரத்னம் - உணர்வு மொழியில் இருந்து தன்னையே 'வெளியேற்றியவர்'






மணிரத்னத்தின் திரைமொழியின் அழகியலில் 'சுற்றுத்துறை விளம்பரப்படத் தன்மை' உண்டென ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதை நான் அண்மையில் ரோஜா படத்தின் "சின்னச்சின்ன ஆசை"பாடலைத் திரும்பப் பார்க்கையில் உணர்ந்தேன். அதாவது ரோஜாவின் அக உலகத்தில் வரும் கிராமம் அல்ல அது. வெளியே இருந்து பார்ப்பவருக்காக கிளர்ச்சியூட்டப்பட்டு அந்நியப்படுத்தப்பட்ட (exociticized) பிம்பங்கள் அவை. "ஒரு வெள்ளை மழை" பாடலும் அப்படித்தான். அது தன் மனைவிக்கு பனிவெளியை நாயகன் காட்டுவதாகத் தான் ஆரம்பிக்கிறதே. அப்படியே பார்வையாளர்களுக்கு காஷ்மீரை மணிரத்னம் அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்துவதாக காட்சிகள் உருக்கொள்கின்றன. முத்தக்காட்சிகள் வழியாக அவர் காஷ்மீர் உலகை இச்சிக்கத்தக்கதாகவும் மாற்றுகிறார் (தர்காவஸ்கி எப்படிப் புறவுலகை பாத்திரத்தின் அகவுலகின் நீட்சியாகச் சித்தரிக்கிறார் என்பதுடன் ஒப்பிட்டால் இது இன்னும் துலங்கும்). அவரது மிகச்சிறந்த காட்சி பிம்பங்களைக் கொண்ட "அக்னி நட்சத்திரமும்" கூட பாத்திரத்தின் அகவுலகில் இருந்தும், உணர்வுகளில் இருந்து பார்வையாளனை வெளியேற்றி அவனை ஒரு பயணி ஒரு சுற்றுலாப் பிரதேசத்தைப் பார்ப்பதைப் போலக் காண வைக்கும் படமே. மணிரத்னத்தின் வரவுடனே சினிமா கதையில் இருந்தும், பாத்திரத்தின் உணர்வுகளிலும், சிந்தனைகளிலும் இருந்து துண்டிக்கப்பட்டு "வெளியேற்றப்பபடுகிறது". அத்துடன் பார்வையாளர்களும் கதைக்கும், பாத்திரத்தின் பிரச்சினைகளுக்கும் அப்பாலிருந்து காட்சிகளை ரசிக்கப் பழகுகிறார்கள். இதை ஒரு fetishism என்று சொல்லலாம் (மார்க்ஸ் சொல்வதுபடி பார்த்தால் ஒரு பண்டத்தின் மதிப்பை பணத்தின் வழியாக சந்தை வெளியேற்றி அதை நேரடி மதிப்பற்றதாக்குவது; செக்ஸில் ஒரு பெண்ணின் பாதத்தில் சுகத்தைக் கண்டு அவளது ஆளுமையை, முகத்தை நிராகரிப்பது - இதைப் போல சினிமாவை பிரதான பாத்திரத்தின் அகத்துக்கு அப்பால் ரசிப்பது.). மணிரத்னத்துக்கு இணையாக இதைத் தமிழ்ப் புனைவில் செய்தவர் என்று சுஜாதாவைச் சொல்லலாம். அதனாலே இருவரும் இணையும்போது அது பொருத்தமாக வெற்றிகரமாக அமைந்தது. அவர்கள் இருவரின் கச்சிதமும் ஸ்டைலும் 'வெளியேற்றத்தில்' இருந்தே கிளைக்கின்றன.

இன்று "சாய் வித் சித்ராவில்" இயக்குநர், விமர்சகர், திரைப்படக் கல்வியாளர் ஹரிஹரனின் நேர்முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஹரிஹரன் இதை அவதானித்ததைக் கண்டபோது ஆச்சரியப்பட்டேன். அவர் மணிரத்னத்தை பிரதமர் ராஜீவ் காந்திக்குப் பிறகு இந்தியாவில் தோன்றிய தாராளமய சந்தைப் பொருளாதாரத்தின் நுகர்வுக் கலாசாரத்தின் பிள்ளை என்கிறார். மணிரத்னம் தன் காட்சிகளை விளம்பரப்படங்களின் பாணியில் அமைக்கிறார் என்கிறார். (ராஜீவ் மேனனும் தன் படங்களில் இதைச் செய்வதைக் காணலாம்.)
அவர் மேலும் மணிரத்னத்தைப் பற்றி ஒரு ஜோக் சொன்னார். மணிரத்னத்தின் கால்ப் உதவியாளர் அவரிடம் அவரது ஆட்டத்தின் பாங்கைப் பற்றிச் சொல்கிறார்: sir, your shots are beautiful. They are great. But your direction is wrong.

ஆனால் மணிரத்னத்துக்கு இணையாக நவீன உருவகங்களை கதாபாத்திரங்களின் மன-அமைப்புக்கும், ஆளுமைக்கும் சட்டகத்தில் கொண்டு வந்து, ஒளியமைப்பின் வழியாகக் காட்டியவர்கள் அவருக்கு முன்பு அனேகமாக இல்லை என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். (பாலச்சந்தரும் பிறரும் கூட அவ்வளவு புதுமையாக, நவீனமாக காட்சி மொழியை அமைக்கவில்லை.) "இருவரில்" ஆனந்தன் மொட்டைமாடியில் இருந்து கீழே பார்க்கையில் அவர் பார்வையில் விரியும் ரசிகர்களின் திரளும், மெல்லமெல்ல அவன் தன் ஆளுமையை வெளிப்படுத்துகிற விதமும் முன்பு யாரும் தமிழில் காட்டாத காட்சி. இந்த அபாரமான கற்பனைக்கு ஈடான ஐடியாக்களும் தத்துவப் பார்வையும் இருந்திருந்தால் அவர் உலகளவில் கொண்டாடப்பட்டிருப்பார். அவர் தன்னையே "வெளியேற்றிக்" கொண்டார் என்று தோன்றுகிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...