முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணிரத்னம் - உணர்வு மொழியில் இருந்து தன்னையே 'வெளியேற்றியவர்'






மணிரத்னத்தின் திரைமொழியின் அழகியலில் 'சுற்றுத்துறை விளம்பரப்படத் தன்மை' உண்டென ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதை நான் அண்மையில் ரோஜா படத்தின் "சின்னச்சின்ன ஆசை"பாடலைத் திரும்பப் பார்க்கையில் உணர்ந்தேன். அதாவது ரோஜாவின் அக உலகத்தில் வரும் கிராமம் அல்ல அது. வெளியே இருந்து பார்ப்பவருக்காக கிளர்ச்சியூட்டப்பட்டு அந்நியப்படுத்தப்பட்ட (exociticized) பிம்பங்கள் அவை. "ஒரு வெள்ளை மழை" பாடலும் அப்படித்தான். அது தன் மனைவிக்கு பனிவெளியை நாயகன் காட்டுவதாகத் தான் ஆரம்பிக்கிறதே. அப்படியே பார்வையாளர்களுக்கு காஷ்மீரை மணிரத்னம் அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்துவதாக காட்சிகள் உருக்கொள்கின்றன. முத்தக்காட்சிகள் வழியாக அவர் காஷ்மீர் உலகை இச்சிக்கத்தக்கதாகவும் மாற்றுகிறார் (தர்காவஸ்கி எப்படிப் புறவுலகை பாத்திரத்தின் அகவுலகின் நீட்சியாகச் சித்தரிக்கிறார் என்பதுடன் ஒப்பிட்டால் இது இன்னும் துலங்கும்). அவரது மிகச்சிறந்த காட்சி பிம்பங்களைக் கொண்ட "அக்னி நட்சத்திரமும்" கூட பாத்திரத்தின் அகவுலகில் இருந்தும், உணர்வுகளில் இருந்து பார்வையாளனை வெளியேற்றி அவனை ஒரு பயணி ஒரு சுற்றுலாப் பிரதேசத்தைப் பார்ப்பதைப் போலக் காண வைக்கும் படமே. மணிரத்னத்தின் வரவுடனே சினிமா கதையில் இருந்தும், பாத்திரத்தின் உணர்வுகளிலும், சிந்தனைகளிலும் இருந்து துண்டிக்கப்பட்டு "வெளியேற்றப்பபடுகிறது". அத்துடன் பார்வையாளர்களும் கதைக்கும், பாத்திரத்தின் பிரச்சினைகளுக்கும் அப்பாலிருந்து காட்சிகளை ரசிக்கப் பழகுகிறார்கள். இதை ஒரு fetishism என்று சொல்லலாம் (மார்க்ஸ் சொல்வதுபடி பார்த்தால் ஒரு பண்டத்தின் மதிப்பை பணத்தின் வழியாக சந்தை வெளியேற்றி அதை நேரடி மதிப்பற்றதாக்குவது; செக்ஸில் ஒரு பெண்ணின் பாதத்தில் சுகத்தைக் கண்டு அவளது ஆளுமையை, முகத்தை நிராகரிப்பது - இதைப் போல சினிமாவை பிரதான பாத்திரத்தின் அகத்துக்கு அப்பால் ரசிப்பது.). மணிரத்னத்துக்கு இணையாக இதைத் தமிழ்ப் புனைவில் செய்தவர் என்று சுஜாதாவைச் சொல்லலாம். அதனாலே இருவரும் இணையும்போது அது பொருத்தமாக வெற்றிகரமாக அமைந்தது. அவர்கள் இருவரின் கச்சிதமும் ஸ்டைலும் 'வெளியேற்றத்தில்' இருந்தே கிளைக்கின்றன.

இன்று "சாய் வித் சித்ராவில்" இயக்குநர், விமர்சகர், திரைப்படக் கல்வியாளர் ஹரிஹரனின் நேர்முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஹரிஹரன் இதை அவதானித்ததைக் கண்டபோது ஆச்சரியப்பட்டேன். அவர் மணிரத்னத்தை பிரதமர் ராஜீவ் காந்திக்குப் பிறகு இந்தியாவில் தோன்றிய தாராளமய சந்தைப் பொருளாதாரத்தின் நுகர்வுக் கலாசாரத்தின் பிள்ளை என்கிறார். மணிரத்னம் தன் காட்சிகளை விளம்பரப்படங்களின் பாணியில் அமைக்கிறார் என்கிறார். (ராஜீவ் மேனனும் தன் படங்களில் இதைச் செய்வதைக் காணலாம்.)
அவர் மேலும் மணிரத்னத்தைப் பற்றி ஒரு ஜோக் சொன்னார். மணிரத்னத்தின் கால்ப் உதவியாளர் அவரிடம் அவரது ஆட்டத்தின் பாங்கைப் பற்றிச் சொல்கிறார்: sir, your shots are beautiful. They are great. But your direction is wrong.

ஆனால் மணிரத்னத்துக்கு இணையாக நவீன உருவகங்களை கதாபாத்திரங்களின் மன-அமைப்புக்கும், ஆளுமைக்கும் சட்டகத்தில் கொண்டு வந்து, ஒளியமைப்பின் வழியாகக் காட்டியவர்கள் அவருக்கு முன்பு அனேகமாக இல்லை என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். (பாலச்சந்தரும் பிறரும் கூட அவ்வளவு புதுமையாக, நவீனமாக காட்சி மொழியை அமைக்கவில்லை.) "இருவரில்" ஆனந்தன் மொட்டைமாடியில் இருந்து கீழே பார்க்கையில் அவர் பார்வையில் விரியும் ரசிகர்களின் திரளும், மெல்லமெல்ல அவன் தன் ஆளுமையை வெளிப்படுத்துகிற விதமும் முன்பு யாரும் தமிழில் காட்டாத காட்சி. இந்த அபாரமான கற்பனைக்கு ஈடான ஐடியாக்களும் தத்துவப் பார்வையும் இருந்திருந்தால் அவர் உலகளவில் கொண்டாடப்பட்டிருப்பார். அவர் தன்னையே "வெளியேற்றிக்" கொண்டார் என்று தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...