முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டி.என்.ஏ - ஒருமுறை அழகி

 


பம்பரத்தைச் சுற்றிவிட்டதைப் போல விர்ரென நின்றபடி ஓடும் திரைக்கதைதான் இப்படத்தின் வலிமை. இடைவேளைக்குப் பிறகு தண்ணீர் குடிக்கணும், பாத்ரூம் போகணும் எனும் நினைப்பை ஒவ்வொரு கணமும் மறக்கடித்து ஒட்டுமொத்தமாக ஒண்ணும் வேணாம் போ என உட்கார வைத்துவிடுகிறார்கள். அடுத்தடுத்த பரபரப்பான திகிலான திருப்பங்கள், பதற்றத்தின் எல்லைக்கே கொண்டு போகும்படி இழுத்துப்போகும் காட்சியமைப்புகள்.

அதன்பிறகு நிமிஷா சஜயனின் அபாரமான நடிப்பு. நிமிஷா இதன் துவக்கத்தில் மனநலப்பிறழ்வை கோமாளித்தனமாகக் காட்டும்போது ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனால் குழந்தை காணாமல் போனபிறகு அவரது நடிப்பு இன்னொரு தளத்துக்குப் போகிறது. ஒவ்வொரு நிலையிலும் ஒரு பெண்ணின் உடல்மொழியில் வரும் மாற்றங்களை அபாரமாக கண்ணாடிபோலப் பிரதிபலிக்கிறார். அவரது கண்கள், பளிச்சென்று சிரிப்புக்கு மலரும் முகம், சட்டென்ற சோர்வில் வாடும் மலரைப் போன்ற பாவனைகள், சின்னச்சின்ன மாற்றங்களை அடுத்தடுத்து காட்டும் பாங்கு - அசத்துகிறார். ஆனால் அதேநேரத்தில் "பார்ரா நான் நடிக்கிறேன்" எனும் மிகையும் உள்ளது. "உணர்ச்சிவசத்த அடக்கு, அது பக்கத்து தெருவில ஒரு தங்கச்சி தன் அண்ணனைக் கூப்பிடுற சத்தம்" என வடிவேலு சொல்வாரே அதைப் போல அடிக்கடி சொல்கிற ஒரு இயக்குநர் இவருக்குத் தேவை. ஆனாலும் மனதைக் கொள்ளையடித்துவிடுகிறார்.

இப்படத்தின் துவக்கத்தையும் - அதர்வாவின், நிமிஷாவின் பாத்திர வார்ப்பு - நன்றாகவே எழுதியிருக்கிறார்கள். அதர்வாவின் பாத்திரமான ஆனந்த் தன் காதலியின் மரணத்தில் இருந்து மீளத் தெரியாமல் போதையில் ஆழ்ந்து அதிலிருந்து பயிற்சி வழியாக மீண்டுவருகிறார். நிமிஷாவின் பாத்திரமான திவ்யா யாராலும் நம்பவோ ஏற்கவோ படாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண். இருவருக்கும் அன்பும் ஏற்பும் தேவைப்படுகிறது. குழந்தை காணாமல் போகிற, அதைத் தேடி ஆனந்த் திரிகிற, போராடுகிற பகுதிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும் அவை ஆரம்பக் கதையுடன் - பிரதான பாத்திரத்தின் உடனடித் தேவையுடன் (want), ஆழமான அக நிறைவுக்கான தேடலுடன் (need) - பொருந்தவில்லை. குழந்தையை அவர்களுடன் வாழ்வுடன் சரியாகப் பிணைத்து முன்னெடுக்க முடியாதபடி கதையின் அமைப்பும் உள்ளது - பிறந்தவுடனே குழந்தை காணாமல் போகிறது. சொல்லப்போனால் ஆனந்தின், திவ்யாவின் கதை திருமணத்துடன் முடிந்துவிடுகிறது. இரண்டாவது கதையான குழந்தைக்கான தேடல் துண்டாகத் தனியாக நிற்கிறது. அதனாலே இப்படம் முடிகையில் சாக்லேட் சாப்பிட்டு முடித்துவிட்டு அதை இதைப் போய் ஏன் தின்றோம், இதில் உடம்புக்குத் தேவையான ஒன்றுமே இல்லையே என ஏமாற்றமடைவதைப் போல இருகிறது. ராஜேஷ் குமாரின் நாவலைப் படித்துவிட்டு என்னதான் படித்தோம், என்னதான் நடந்துச்சு, என்னவோ ஜாலியா டைம் பாஸாச்சு என்று பஸ் இருக்கையில் நைசாக வைத்துவிட்டு நகர்வதைப் போல உள்ளது. நெல்சன் வெங்கடேசனின் "மான்ஸ்டர்" படம் இன்னும் நன்றாக எழுதப்பட்டது. அதில் கதாபாத்திரத்தின் அகப்பயணம், நிறைவு இன்னும் சரியாகக் கொண்டு வரப்பட்டிருந்தது. எலியும் நாயகனும் பல சாகசங்களுக்குப் பிறகு கிளைமேக்ஸில் இன்னொரு இடத்திற்கு நகர்ந்து புதிய உயரத்தை எட்டுவார்கள். இரண்டு உயிர்களுமே ஒன்றுதானே எனும் விழுமியமும் (ராபர்ட் மெக்கீ சொல்கிற value) இருக்கும். அப்படி எந்த விழுமியமும் இக்கதையில் இல்லை.
சாலையில் ஒருமுறை பார்த்து ரசித்து மறந்துவிடுகிற பெண்ணைத் திரும்பப் பார்க்க நேர்ந்தால் ஏன் முதற்பார்வையில் மட்டும் அவ்வளவு அசத்தலாக இருந்தாள் என நினைக்க வைப்பதைப் போன்ற படம்.

திரைக்கதையிலும் மூலகதை உருவாக்கத்திலும் அதிஷாவின் பங்பளிப்பு எவ்வளவு எனத் தெரியவில்லை. இணை-எழுத்தாளராக கிரெடிட் கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டால் அவர் முக்கிய பங்காற்றியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. கச்சிதமான திகில் கதைக்கான வேலையைப் பிரமாதமாகச் செய்திருக்கிறார். இதற்காக அவரும் நெல்சன் வெங்கடேசனும் எவ்வளவு மெனெக்கெட்டிருக்க வேண்டும் என்று புரிகிறது. அடுத்தடுத்து நல்ல படங்கள் அவருக்கு அமையட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...