முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொறாமைப் பதிவு

 எனக்கு ஒரு விசயத்தில் சினிமாக்காரர்கள் மீது பொறாமை உண்டு - நாம் ஒரு நாவலை எழுதிவிட்டு அதைச் சநதைப்படுத்த தனியாக போராடிக்கொண்டு இருக்க வேண்டும். எதாவது இலக்கிய அமைப்புகள் நிகழ்ச்சிகள் நடத்தினாலும் சிறிய வட்டத்துக்குள்தான் அது நிகழும். ஆனால் ஒரு சிறிய படமென்றாலும் அதற்கான புரொமோஷனுக்கு 30-50 லட்சங்களையாவது அவர்கள் செலவிட்டு கலாட்டா, சன் டிவி என ஏகப்பட்ட சேனல்களில் தொடர்ச்சியாக பேட்டியளிக்கிறார்கள். அனேகமாக எல்லா பத்திரிகைகளும் அதைச் சந்தைப்படுத்த உதவுகின்றன. கூடுதலாகச் சமூகவலைதளங்களிலும் சினிமா செய்திகளுக்கு கவனம் அதிகமாகக் கிடைக்கும். கூடுதலாக சொச்சம் பணமிருந்தால் யுடியூப் வாயர்களையும் விலைக்கு வாங்கலாம். இந்தச் சந்தைப்படுத்தல் செலவை பட்ஜெட்டில் இன்று உட்படுத்துவதால் பி.ஆர்.ஓ மூலம் அடுத்தடுத்து ஒருங்கிணைத்து விடுகிறார்கள். கூடுதலாக, இசை வெளியீடும், பாடல்களும் பெரிய விளம்பரம் - எப்படியெல்லாம் எல்லார் காதிலும் நுழைந்துவிடும். இதெல்லாம் நடந்து படம் ஓடினால் இலக்கிய பத்திரிகைகளும் பாராட்டி எழுதுவார்கள். இலக்கியவாதிகள் கூட்டம் நடத்தி மாலை சூட்டுவார்கள். படம் ஓடினாலும் இல்லாவிட்டாலும் இயக்குநருக்கும் நடிகர்களுக்கும் நல்ல சம்பளம் கிடைக்கும். ஒருவர் தினமும் தனியாரில் போய் ஆடுமாடு மேய்த்து 5-10 ஆண்டுகளில் சம்பாதிக்கும் பணத்தை இவர்கள் நாற்பது நாட்களில் சம்பாதிப்பார்கள். (புகழெல்லாம் சொல்லவே வேண்டாம்.) என்னதான் படமெடுப்பதும், முதலீடு பெறுவதும் சவால்தான் என்றாலும் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தாம்.

ஒரு எழுத்தாளர் புத்தகத்தை எழுதி அது நன்றாக விற்று அவர் கையில் பணம் வரவே சில ஆண்டுகள் ஆகும். அதை வைத்து ஒரு பயணம் போகவோ நாலு நாள் நன்றாகச் சாப்பிடவோ முடியாது (சுதந்திரமாக விருப்பப்படி எழுத முடியும் என்பதைத்தாண்டி எதுவுமே இல்லை.) அதுவும் தமிழ்நாட்டில்.
ஒரு இயக்குநரோ நடிகரோ நினைத்தால் துணை முதல்வரையோ முதல்வரையோ நேரில் சந்திக்கலாம். வேண்டுகோள் வைக்கலாம். ஒரு எழுத்தாளர் நினைத்தால் - டிரம்ப் அளவுக்கு பயங்கரமான தொடர்புவலைகள் இல்லாதபட்சத்தில் - ஒரு அமைச்சரைக் கூட சுலபத்தில் பார்க்க முடியாது.
எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாக்காரர்களுக்கு பயங்கரமாக டப் கொடுப்பவர்கள் யுடியூப், இன்ஸ்டா பிரபலங்களே. எதிர்காலத்தில் அவர்கள் சினிமா பிரபலங்களின் இடத்தை எடுத்துக்கொள்ளவும், கட்சி ஆரம்பித்து எம்.பி ஆகவும் கூடும். தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் எல்லா காலத்திலும் இப்படித்தான் இருப்பார்கள்.
நேற்று மெக்ஸிக எழுத்தாளர் அக்டாவியோ பாஸ் குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் அவரது கட்டுரை நூல் ஒன்று வெளியான போது பத்து மில்லியன் பிரதிகள் விற்றது என்கிறார்கள். ஸ்பானிய மொழிக்காரர்கள் எவ்வளவு அறிவுக் காதல் கொண்டவர்கள் எனில் இவ்வளவு பெரும் தொகையில் ஒரு கட்டுரை நூல் அங்கு விற்க வேண்டும். நம் ஊரில் கோபிநாத்தாலும் திரைநட்சத்திரங்களாலும் மட்டுமே அது இயலும். இலக்கிய வாசிப்பு, பண்பாட்டு நாட்டத்தைப் பொறுத்தமட்டில் நமக்கு ஏதோ மரபணுக் கோளாறு உள்ளது.
எனக்கென்னமோ போன ஜென்மத்தில் நல்வினைகள் நிறைய செய்தவர்கள் இப்பிறவியில் சினிமாக்காரர்களாகிப் படமெடுக்கிறார்கள் என நினைக்கிறார்கள். போன ஜென்மத்தில் கேடு கெட்டவர்களாக இருந்தவர்களோ இலக்கிய வெறியுடன் தமிழ்நாட்டில் பிறந்து ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.