மொண்டெய்ன் தனது On Experience எனும் கட்டுரையில் வழக்கறிஞர்கள் பிரச்சினைகளை உருவாக்கி அவற்றுக்கு மத்தியஸ்தம் பண்ணிவைத்து சம்பாதிப்பவர்கள், அதனாலே காலனிகளைத் தேடிச் செல்லும் குழுவினரிடம் மன்னர் பெர்டினெண்ட் வழக்கறிஞர்களை மட்டும் அழைத்துச் செல்லக்கூடாது எனச் சொன்னதாகக் குறிப்பிடுகிறார். அது இந்த காலத்துக்கு வெகுப்பொருத்தமாக உள்ளது. இன்று ஒரே வித்தியாசம் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்துக்கு இணையாக தேர்தல் ஆணையமும் தவறு செய்யாத மக்களை பிரஜைகள் அல்லரென்றும், ஆவணங்கள் இல்லாதவர்கள் என்றும் தம் இஷ்டத்துக்கு பாவித்து அவர்களை "நீங்களே உங்களை அப்பழுக்கற்றவர்கள் என ஆவணங்களைத் தாக்கல் செய்து நிரூபியுங்கள்" என்கிறது. அரசு கண்ணை மூடித்திறக்கும் முன் ஒரு சட்டத்திருத்தம் பண்ணி பெருங்குழப்பத்தில் மக்களை ஆழ்த்துகிறது; மக்கள் இடையே சச்சரசவும் குழப்பமும் தோன்ற அதைத் தீர்ப்பதாகச் சொல்லி தன்னை தலைமையாக நிறுவுகிறது. தானே ஏற்படுத்திய வரிகளைத் தானே குறைத்து தன்னைப் பாராட்டிக் கொள்கிறது. தான் திணித்த எதேச்சதிகாரச் சட்டத்தை தானே மட்டுப்படுத்தியோ தற்காலிகமாக நிறுத்திவைத்தோ அதை மனிதநேயமும் என்றும் பண்பென்றும் சுயமாகப் பாராட்டிக் கொள்கிறது. எண்ணற்ற சிக்கல்களை தனது அனுதினமும் தோற்றுவிக்கப்படும் விதிமுறைகளால் உருவாக்கி மக்களைக் கடும்பதற்றத்தில் வைக்கிறது.
ஒரு அறையில் உட்கார்ந்து சட்டங்களைப் பிறப்பிப்பவர்கள், அவற்றைப் பின்பற்ற விதிமுறைகளை உருவாக்குபவர்கள், அதைவைத்து பணமும் அதிகாரமும் சம்பாதிப்பவர்கள், தரவுகளைக் கொண்டு மக்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துபவர்கள் இன்று பெருகிவிட்டார்கள். அல்லது அவர்களின் அதிகாரம் பெருகிவிட்டது. வாழ்க்கையை மிகவும் சிக்கலானதாக, துன்பமானதாக இவர்கள் மாற்றுகிறார்கள். அதேநேரம் தம் உடலுழைப்பால் மாற்றங்களைக் கொண்டு வருவோர், பிறருக்கு உதவுவோர், படைப்பூக்கத்துடன் செயல்படுவோர் மக்களுக்கு நன்மை பயப்பவர்களாக உள்ளர். படித்தவர்களையும் ஒழுக்கமானவர்களையும் விட படிக்காதவர்களும் ஒழுங்கற்றவர்களும் நல்லவர்களாகவும் நியாயமானவர்களாகவும் தெரிகிறார்கள். அந்தளவுக்கு கல்வியும் அறிவும் கண்காணிப்பும் அதிகாரமும் கைகோர்த்து அதிகாரத்துவத்துவத்தின், நிர்வாகக் கட்டுப்பாடுகளின் பெயரில் மக்களைத் துன்புறுத்தும் காலத்தில் வாழ்கிறோம். மோடியின் ஆட்சியில் நாடே ஒரு பெரும் நீதிமன்றமாகவும் அதிகார மையங்கள் வக்கீல் அலுலவகங்களாகவும் மாறிவிட்டது.
"King Ferdinand, sending colonies to the Indies, wisely provided that they should not carry along with them any students of the long-robe, for fear lest suits should get footing in that new world, as being a science in its own nature, the mother of altercation and division."
எதையும் அப்பழுக்கற்றதாக, ஒழுங்கானதாக, பிசிறற்றதாக, குற்றமற்றதாக மாற்ற நினைக்கும்போதே பெருங்குழப்பமும் பிரச்சினைகளும் குற்றங்களும் நாட்டில் பெருகுவதாக மாண்டெய்ன் சொல்வது குறிப்பிடத்தக்கது. மேலும் இயல்பான படைப்பூக்கமான வாழ்க்கையென்பது சரியான வரையறைக்குள் வராததே. அதுவே தன்னளவில் அழகானதாகவும் நியாயமாகவும் உள்ளது.