முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆவண அரசியல் 2

 கர்நாடக அரசு வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்காக ஒரு சட்ட வரைவைக் கொண்டு வரப்போகிறது. அதன்படி இனி பணியாளர்களை சுத்தம் பண்ணவும் சமைக்கவும் நியமிக்கிறவர்கள் கட்டாயமாக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் நிபந்தனைகளை, எதிர்பார்ப்புகளைப் பதிவு பண்ண வேண்டும். வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். பயிற்சியளிக்க வேண்டும். அதன்பிறகுதான் வருகிறது பிரச்சினையே - வருங்கால வைப்புநிதியைப் போல ஒன்றைக் கொண்டு வருகிறார்கள். அதற்கு பணி அமர்த்துநர் ஒரு தொகையை (5%) வழங்க வேண்டும். அதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர் வழங்குவதை ஆவணப்படுத்தி அதை ஒரு படிவத்தில் நிரப்பி வருடத்திற்கு ஒருமுறை மொத்தமாகத் தாக்கல் பண்ண வேண்டும். அரசு இந்த அமர்த்துநரின் வருடாந்திர வரவு செலவுக்குள் இந்த பணம் செலுத்துதல் வருகிறதா எனச் சரிபார்க்கும். இல்லாவிட்டால் அபராதம் கட்ட வேண்டும்.

நோக்கத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு சிறந்த வரைவு. ஆனால் நடைமுறையில் இது பலருக்கும் சிக்கலாகும். வார விடுமுறையை பலரும் ஏற்கப் போவதில்லை. வார இறுதி நாட்களில்தான் வேலைகள் அதிகம் என்பதாலும் அப்போதுதான் அவர்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதாலும். அடுத்து, வைப்புநிதியையும் சேர்த்தே சம்பளம் கொடுப்பார்களா அல்லது அதற்காக அதிகரிப்பார்களா என்பது. அடுத்து, இவ்வளவையும் பேசி முடித்தபின்னரும் ஒரு சிறிய வேலைக்காக ஆவணமாக்கல் பணியில் ஈடுபட மக்கள் மெனெக்கெடுவார்களா என்பது. ஒரு அலுவலகத்தில் இதற்கென ஊழியர்கள் இருப்பார்கள் (மனிதவளத்துறை). மாதம் ரெண்டாயிரத்துக்கு பாத்திரம் தேய்க்க ஆளை அமர்த்துவோர் அதற்காக வருடத்திற்கு நான்கு முறைகள் அரசுக்குப் பணம் செலுத்தி அதை சரியாக ஆவணப்படுத்தி முறையாக தாக்கல் செய்வார்களா? மறந்துபோய் அபராதம் கட்டுவார்களா? கொஞ்சம் மெனெக்கெட்டால் நாமே பாத்திரம் தேய்த்து பெருக்கிவிட்டுப் போகலாமே என யோசிக்க மாட்டார்களா?
அரசு அதிகாரிகளின் ஒரு பிரச்சினை அவர்கள் உலகமே ஆவணங்களில்தான் வாழ்கிறது என நம்புவது. அவர்களுக்கு ஆவணத் தாக்கலில்தான் வருமானம் வருகிறது. ஆனால் உலகில் எவ்வளவோ பிரச்சினைகளும் வேலைகளும் குவிந்திருக்கையில் ஆவணங்களுக்காக அலைவதற்கு மக்களால் முடியாது. அது ஒருவித தண்டனையாகிவிடும். வாடகைப் பணம் வரும்போது அதற்காக ஒப்பந்தம் தாக்கல் செய்ய தயங்காத நாம் இதைப் போன்ற தவிர்க்கக் கூடிய வேலைக்காக செய்வோமா என்றால் சந்தேகம்தான்.
குறைந்த சம்பளத்துக்கு பணியாற்றும் ஒருவர் இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி வழக்காடுமன்றம் போவாரா? சந்தேகம்தான். அடுத்து, அவர் தன் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து வைப்புநிதியாக வைத்து அதில் சிறிது சேர்த்து திரும்ப அளிப்பதை விரும்புவாரா அல்லது அதை அவர் செலவுக்கு வைத்துக் கொள்ள நினைப்பாரா? மிகச்சிறிய தொகைகளுக்கு இது எப்படி உதவும்? இதற்குப் பதிலாக அரசு ஒரு தொகையை அவர்களுக்காக வழங்கலாமே.
முகவர்கள் வழியாகப் பணி அமர்த்துவோருக்குப் பிரச்சினை இருக்காது என நினைக்கிறேன். ஏற்கனவே உள்ள முகமைக் கட்டணத்துடன், முகமைச் சேவையுடன் இப்பணிகளையும் சேர்த்துவிடுவார்கள். சுயமாக பணியமர்த்துவோருக்கே இது தொல்லையாகும். ஒருவேளை எதிர்காலத்தில் இரண்டு விசயங்கள் கர்நாடகத்தில் நடக்கலாம்: ஆவணமாக்கலுக்குப் பயந்து அமர்த்துநர்கள் வேலையாட்களைத் தவிர்ப்பார்கள்; அதைக் கருதி ஆவணமின்றி பணியில் இருப்பவர்களே அதிகமாக இருப்பார்கள். அதாவது நடைமுறைப்படுத்துவதன் சிரமம் காரணமாகவே திட்டம் தோல்வியடையும்.
அரசு வீட்டுப் பணியாளர்களுக்கு ஒரு தனித்துவ அடையாள எண்ணையும் அளிக்கிறது. ஆனால் அது பெயருக்குத்தான். இம்மாதிரி எண்கள், அட்டைகளுக்கு பயன்மதிப்பே அரசு அதை வழங்கும்போதல்ல, அரசு நலத்திட்டங்களுக்கு அதைப் பயன்படுத்தும்போதுதான் வரும். ரேஷன் அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். ரேஷன் பொருட்களை வழங்கும் பொறுப்பை அரசு தனியாருக்கும், என்.ஜி.ஓக்களுக்கும் கொடுத்துவிட்டு அட்டை மட்டும் தம் பொறுப்பு என்று சொன்னால் அந்த அட்டை மதிப்பிழக்கும். ஆதார், வாக்களர் அட்டைக்குச் செய்ததைப் போலத்தான் அரசு ஒவ்வொரு ஆவணத்துக்கும் செய்து வருகிறது - ஒவ்வொன்றாகக் கொடுத்துவிட்டு பின்வாங்குகிறது. இது தன்னுடையதல்ல, இதனால் பயன்மதிப்பில்லை என்கிறது.
அரசு இதற்குப் பதிலாக இப்பணியாளர்களை அரசு நிறுவன முகமையின் கீழ் ஒன்றிணைக்கலாம். பணியமர்த்துநர் தம்மிடம் விண்ணப்பித்து பணியாளர்களைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையைக் கொண்டு வரலாம். நடைமுறையைச் செயலி வழியாக எளிமைப்படுத்தலாம். வேலையை இழக்கும் பணியாளர்களுக்குத் தற்காலிகமாக பணியளிக்கலாம். இதன்வழியாக பணி உத்தராவதம் கொடுக்கலாம். கடுமையான ஆவணத்தாக்கல், அபராத மிரட்டல் மூலமாக அரசு இதைச் சாதிக்க முடியாது. பெரும் நிறுவனங்களில் கூட பணியாளர்களில் மிகமிகச் சிலரே நிறுவனங்களுக்கு எதிராக வழக்காடுமன்றம் போகிறார்கள். அவர்களாலே முடியாதபோது நான்கு வீடுகளில் பணியாற்றி எட்டாயிரம் சம்பாதிக்கும் பெண்களா செய்யப் போகிறார்கள்?
இன்னொன்று - பணியாளர்களுக்கும் அமர்த்துநருக்குமான உறவில் ஒரு உணர்வுரீதியான பந்தம் உள்ளது. பணியாளர்கள் வீட்டில் வந்து குடும்பத்தின் பகுதியாகிப் பணி செய்கிறார்கள், பழகுகிறார்கள் என்பதால் அவர்களைத் தம்மவர்களாக்கிக் கொள்ள அமர்த்துநர்கள் முயல்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளுக்குப் படிக்க பணம் கொடுக்கிறார்கள், சமைத்துக் கொடுக்கிறார்கள், ஆடைகளை வழங்குகிறார்கள், சிலர் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாங்கிக்கொடுப்பது, கல்யாணம் பண்ணி வைக்கும் அளவுக்குக் கூடப் போகிறார்கள் (ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் இந்த உணர்ச்சிகரமான பந்தத்தைக் காட்டினார்கள்). இதைச் சுரண்டல் என்று நாம் சுருக்கிவிட முடியாது (தனித்தட்டில் சோறு கொடுப்பவர்கள், சொந்த சாதிக்குள் வேலைக்கு வைப்பவர்கள் போன்ற தீயவர்களும் இருக்கிறார்கள்). ஆனாலும் பணியமர்த்துதல் ஒருவித இறையாண்மையைத் தோற்றுவிக்கிறது - பணியாளர்களின் உடலில் அது செயல்படுத்தப்படுகிறது. அது ஒருவித தேசமாகிறது. 'தேசப்பற்று' (முதலாளி பற்று), 'சேவை மனப்பான்மை' (பணியாளர் மீதான பற்று), 'தியாகம்' (இரு தரப்பு தியாகங்கள்) போன்ற கொள்கைகள், செண்டிமெண்டுகள் தோன்றுகின்றன. அரசு ஆவணப்படுத்தல் வழியாக இத்தேசத்தைக் கைப்பற்ற வாக்குகளாக அதை உருமாற்ற விரும்புகிறது. ஆனால் அதற்காகச் செலவு செய்ய, பொறுப்பேற்க மட்டும் தயாரில்லை.
யோசித்துப் பாருங்கள் - ஒரு பெண் தாதியாக வேலை செய்கிறார். அவருக்கும் குழந்தைக்கும் உணர்ச்சிகரமான பந்தம் தோன்ற குழந்தை அவரைத் தாய் என்றே நினைக்கிறது. அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு ஆவணம் தாக்கல் பண்ணாவிடில் இவ்வுறவு செல்லுபடியாகாது என்கிறது. வெள்ளையினத் தம்பதிக்குப் பிறந்த எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் தனது குழந்தைப் பருவத்தை இந்திய தாதியிடமும் பணியாளர்களிடமுமே அதிகமாகக் கழித்தார். இந்தியைக் கற்றுக்கொண்டார். இந்தியாவை அறிந்து கொண்டார். அந்த பந்தத்தையே மோக்லிக்கும் ஓநாய்களுக்குமான பந்தமாக அவர் "ஜங்கிள் புக்" நூலில் சித்தரித்தார். இதைப் பணத்தாலோ ஆவணத்தாலோ வாங்க முடியாது, விளக்கவும் முடியாது.
இப்படி, யாருக்கும் பயனில்லாத அடையாளச் சட்டமாக ஒன்றை உருவாக்கி என்ன பயன்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...