Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

'வெகுமக்கள்' சினிமாவைக் கொண்டாடும் விலங்குப் பண்ணை

தீபாவளி என்றால் ஓய்வு தினம், கொண்டாட்டம். நான் என் குழந்தைப் பருவத்தில் அப்படித்தான் மகிழ்ச்சியாக இந்நாளைப் பார்த்தேன். இந்த நாளில் எவ்வளவோ பேசலாம், படிக்கலாம், எழுதலாம், நன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்கலாம். உறவினர்களைச் சந்திக்கலாம். பட்டாசு வெடித்து சூழலை ஓரளவுக்கு மாசுபடுத்தி ஊரையே கதறடிக்கலாம். இதைப் பற்றி பிறரிடம் பகிரலாம். நம் வாழ்க்கை மீது உள்ள நம் கட்டுப்பாடு புலனாகும். நாம் இங்கே இவர்களுடன் இணைந்திருக்கிறோம் எனும் உறுதி ஒரு நம்பிக்கையை அளிக்கும். பொங்கலும், கிறித்துமஸும் கூட அப்படித்தான் (இஸ்லாமிய பண்டிகைகளை இவர்கள் இன்னும் பண்டமாக்கல் செய்யாததால் அதற்குள் நான் வரவில்லை.) ஆனால் நம் ஊடக வியாபாரிகள் தீபாவளி என்றால் தீபாவளி சிறப்பிதழ் படியுங்கள் என்று ஆரம்பித்து படம் பாருங்கள், படம் மட்டுமே பாருங்கள் என்று அதைப் பற்றி மட்டுமே யோசிக்கிற வைபவம் ஆக்கிவிட்டார்கள். 
ஏன் தீபாவளி என்றாலே படம் பார்த்துவிட்டு அதைப்.பற்றி புலம்ப வேண்டும் என ஒரு கும்பல் திரிகிறார்கள்? அதிலேயே ஒருநாள் முடிந்துவிடுகிறதே. நீங்கள் ஒன்றை செய்யக் கூடியவராக இருக்கையில் அங்கு செயலை நிகழ்த்துபவர். நீங்கள் சினிமா பார்க்கும்போது ஒரு காய்கறி. உங்களுக்கு எந்த முகமையும் இல்லை. அதனாலே அது உங்கள் வாழ்க்கையை அடிப்படையில் கொன்று விடுகிறது. அது மேலும் மேலும் உங்களை எதிலும் பங்கெடுக்க விடாமல் பண்ணி அரங்கில் அமர்ந்து பொம்மைகளைப் போலக் கைத்தட்டி சத்தம் எழுப்புபவர்கள் ஆக்குகிறது. 

வெகுஜன சினிமா அடிப்படையில் நுண்ணுணர்வற்ற மந்தையை மந்தையாகவே வைத்திருக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. எந்த நாட்டிலும் சினிமாவால் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டதாக வரலாறில்லை. ஆனால் இலக்கியத்தால், எழுத்தால் ஏற்பட்டிருக்கிறது. சினிமா தரும் உடனடிப் புகழை அரசியல்வாதிகள் பயன்படுத்தி அதிகாரத்தை வெல்லலாம். ஆனால் எதிர்த்து அடிக்கிற உணர்வு அது தராது, அது ஒருவரைப் போராடவோ செயல்படவோ வைக்காது. அப்படி எண்ணி மயங்க மட்டும் வைக்கும்..அது அறிவையும் நுண்ணுணர்வையும் தராது, அவை இல்லாமல் இருப்பதைக் குறித்து கும்பல் மனநிலையில் சிலிர்க்க வைக்கும். இதனாலே வெகுமக்கள் சினிமாக்காரர்கள் அரசுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். நூல்கள் தடை செய்யப்படுவதில் நூறில் ஒரு மடங்கு கூட வெகுஜன சினிமாக்கள் தடைசெய்யப்படுவதோ, இலக்கியவாதிகள் அளவுக்கு அவர்கள் கைதாவதோ உலகம் முழுக்க இல்லை. அரசு எப்போதுமே சினிமா கலைஞர்களைக் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் படைப்பாளிகளை அஞ்சுகிறது - நீங்கள் இப்போதுகூட பயங்கரவாத ஆதரவு நூல்களை வைத்திருந்ததாகச் சொல்லி போராளிகள் மீது அரசு பொய் தேசத்துரோக பயங்கரவாதத் தடைச் சட்ட வழக்க்குகள் போடுவதைப் பார்க்கலாம் - ஆனால் விஜய், அஜித், ரஜினி, கமல், சினிமாப் படத்தை போனில் வைத்ததற்காக கைது பண்ண மாட்டார்கள் - இத்தனைக்கும் இவர்கள் படங்களில்தாம் நிமிடத்துக்கு நூறு புரட்சிக் கருத்துக்கள் பேசப்படும், ஆபாசத்துக்கு வெகு அருகில் செல்லக்கூடிய விசயங்கள், சாதி வெறுப்பைத் தூண்டும் சங்கதிகள் ஏராளமாக இருக்கும். 

பெருமாள் முருகனைத் தடை செய்யப் போராடினார்களே, ஏன் ஊர்ச்சடங்குகளை வைத்து என்னென்னமோ படமெடுத்தவர்களை இம்மக்கள் எதிர்க்கவில்லை? சல்மான் ருஷ்டிக்கு பத்வா விதித்து அவரைக் கத்தியாலும் குத்தியவர்கள் மணிரத்னத்தை சும்மா மிரட்டியதுடன் ஏன் விட்டார்கள்? ஏனென்றால் சினிமா ஒருபோதும் status quoவை (இயல்பெனக் கருதப்படும் அதிகார நிலையை) எதிர்க்காது. இம்மியும் விலகிப் பேசாது. ஆனால் அவ்வாறு செய்வதாக பாவனை செய்து யாரையும் அதைச் செய்யவிடாமல் பண்ணும். அதனாலே ஊடக முதலாளிகளும் அரசும் சினிமாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் - சில எழுத்தாளர்களைப் பணத்தையும் அதிகாரத்தையும் காட்டிப் பணிய வைக்கலாம். அப்போது ஒரு சிலராவது உண்மையைப் பேசுவார்கள். சினிமாக்காரர்கள் ஒருபோதும் உண்மையைச் சொல்ல மாட்டார்கள். எப்போதும் அதிகாரமும் பணமும் பாயும் திசையிலே சாய்வார்கள் (காலனிய அடிமைக்காலத்தில் நாடகக் கம்பனிகள் அப்படித்தான் இருந்தார்கள் என்பது வரலாறு.) இந்தியா முழ்க்க இத்தனை மொழிகளும் அதில் பல லட்சம் படங்கள் எடுக்கப்படுகின்றன. இதுவரை மோடியை எதிர்த்து, விமர்சித்து ஒரு படமாவது எடுக்க முடிகிறதா? ஆனால் எத்தனை கவிதைகள், கதைகள், கட்டுரை நூல்கள் வந்துவிட்டன. இதுதான் வித்தியாசம் - சினிமாக்காரர்களுக்கு சமூக முன்னேற்றச் சிந்தனை, சுரணை, கவலை, அக்கறை, உயர்பண்பாட்டு விழுமியம், வாசிப்பு, கறனை, ஆய்வுத்திறன் ஒன்றும் கிடையாது. வீட்டுக்குள் எலிகள் ஓடுவதைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நாம் சினிமாவை ஏதோ கடவுள் அவதரித்து பூமிக்கு வந்ததைப் போல புல்லரித்துப் பார்க்கிறோம் - அதற்காக நம் சிறந்த நாட்களை வீணடிக்கிறோம், அதில் நம் வாழ்க்கை, சிந்தனை, உணர்வு வந்துவிடாதா என ஏங்குகிறோம். ஆனால் அது மக்களை ஜடமாக்கிக் கொண்டே வருகிறது. 

ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் வெகுமக்கள் பண்பாட்டு செயல்பாடு சார்ந்ததாக இருக்கும், செயலைப் பார்த்துத் திளைப்பதாக இருக்காது. நோய்மைச் சமூகத்திலே சினிமா இவ்வளவு பெரும் இடத்தைப் பெறும். வெகுமக்கள்  சினிமாவும் அடுத்து வருகிற யுடுயூப், இன்ஸ்டா பொழுதுபோக்காளர்களும் ஒழியாதவரைக்கும் நாம் ஒரு விலங்குப் பண்ணையாகவே இருப்போம். சினிமாக்காரர்கள் நம் பண்ணையை நிர்வகித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...