Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மூன்றாவது அணி இயக்குநர்


 

ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு பிரச்சினை இருக்கும் - கடந்த பத்தாண்டுகளில் அது நரேட்டிவ் செட் பண்ணுவதாக இருக்கிறது. அரசியலில் இதைத் துவங்கி வைத்தது பாஜக. பகிங்கரமான குற்றச்சாட்டுகள், கதையாடல்கள், எதிரிடைகளை உருவாக்கி மக்களிடையே வெறுப்பை விதைத்து அந்தப் பரபரப்பையும் பதற்றத்தையும் கொண்டு தம்மைப் பெரியோராகக் காட்டுவது, அதே சமயம் தம்மைப் பாதிக்கப்பட்டோராகவும் முன்னிறுத்துவது. ஊடகங்களைத் தம் வசப்படுத்தி தம்மை விமர்சிப்பவர்களை துரோகிகள், குற்றவாளிகள் என்றோ ஒடுக்குபவர்கள், கொடுமைக்காரர்கள் என்றோ, இரண்டுமேதாம் எனவோ சித்தரிப்பது, இதைக் குறித்து அஞ்சி அவர்கள் வாயை மூடும் சூழலை ஏற்படுத்துவது. இதை ஜெர்மனியில் ஹிட்லரும் ரஷ்யாவில் ஸ்டாலினும் முன்பே பண்ணியிருக்கிறார்கள் என்றாலும் நம் நாட்டில் தேசியம், கட்சிக் கட்டுப்பாடு, சித்தாந்த விசுவாசம் ஆகியவற்றை மீறி மூளைச்சலவையாக மட்டுமே இது இருக்கிறது. அவ்வாறு மூளைச்சலவை செய்து சாதி, மதம் உள்ளிட்ட எதிரிடைகளைக் கொண்டு என்னதான் பாசிசத்தை வளர்த்தாலும் ஒட்டுமொத்தமாக அதே சமூக நீதி மக்களாட்சியைத்தான் இவர்களும் செய்ய வேண்டியிருக்கிறது என்பதொரு சுவாரஸ்யம். சினிமாவில் இத்தகைய நரேட்டிவ் செட்டிங் (அதாவது பிரித்தாளும் எதிர்மைக் கதையாடல்கள்) மூன்றாவது அணித் தோற்றத்திற்கான சூழல் வலுப்பெறும்போதே தோன்றுகிறது.
தலித் சினிமாவின் துவக்கத்தில் அது நரேட்டிவ் செட்டிங்காக இல்லையென்றாலும் மெல்லமெல்ல அது அந்த இடத்திற்கே செல்கிறது. மூன்றாவது அணிக் கட்சியினரே தலித் சினிமாவின் இரண்டாவது கட்டத்தில் சில படங்களுக்கு நிதியாளர்களாகவும் இருந்திருக்கக் கூடுமோ எனும் ஐயம் பின்னர் நடந்த சில குற்றச் சம்பவங்களைப் பார்க்கையில் ஏற்படுகிறது. குறிப்பாக, திராவிடக் கட்சிகளுக்கு எதிரான நரேட்டிவ்வை செட் பண்ணுவது இங்கு எடுக்கப்பட்ட சில தலித் படங்களின் நோக்கமாக மாறுகிறது. நரேட்டிவ் செட் செய்வது அடிப்படையில் பண்பாட்டுப் பணி அல்ல, அது படைப்பாளர்களின் நோக்கம் அல்ல, அது நேரடி அரசியலின் பிரச்சார இலக்கு மட்டுமே. அது முழுக்கமுழுக்க தேர்தல் அரசியலில் மட்டுமே செல்லுபடியாகிற செயல்பாடு. அதனாலே தமிழிலோ பிற மொழிகளிலோ தலித் இலக்கியம் மத்திய சாதிகளின் மனசாட்சியை நோக்கிப் பேசுகிற, தமது நிலையை முன்வைக்கிற தன்கதைகளாக மலர்ந்தன. சாதியின் நுட்பங்களை, அது சமூகத்தில் செயல்படுகிற வினோதமான வடிவங்களைச் சித்தரித்தன. தலித் இலக்கியத்தின் நோக்கம் மையப் பண்பாட்டு பெருங்கதையாடல் எதிர்ப்பின் வழியிலான சமூக மாற்றமாகவும் இருந்தது. அதாவது மக்களின் மனத்தில் அன்பின் வழியில் மாற்றத்தை உண்டு பண்ணுவது. மக்களைத் திரட்டி தேர்தல் பிரச்சாரம் வழியாக அதிகாரம் பெறுவதாக இருந்ததில்லை - அது தலித் கட்சிகளின் இலக்கு மட்டுமே. தமிழில் தலித் சினிமா ஒரு கட்டத்தில் கட்சி அரசியல் நரேட்டிவ் செட்டிங் நோக்கிப் போனது ஆச்சரியமானது. ஒருவேளை அரசியல் அதிகாரம், முலதனத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றுவது, நிதியாளர்களின் தேவைகள் இதைச் சாத்தியமாக்கி இருக்கலாம். திமுக ஆட்சிக்கு வந்ததும் ரஞ்சித்தை விட்டுவிட்டு மாரி செல்வராஜை எடுத்துக்கொண்டது மேலும் சுவாரஸ்யமானது - ஆனால் மாரி வரலாற்று நிகழ்வுகளின் காலவரிசையை மாற்றுவதை ஒழித்து வேறெதையும் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ சார்பாகச் செய்யத் தயாராக இல்லை. அவர் செட் செய்கிற நரேட்டிவ் தலித் சமூகத்தினர் தேர்தல் அரசியலில் தனித்திரளாக வேண்டும் என்பதை இதுவரையிலான படங்களைக் கவனித்தால் தெளிவாகப் புரியும். அவருக்குப் பின்னுள்ள சாதித் திரளை பாஜக கவரும் முயற்சியை ஆரம்பித்ததாலே அவர்களை ஆற்றுப்படுத்தும் முயற்சியை திமுக தொடர்ந்து எடுத்து வருகிறது என்பதை அப்பட்டமானது. மாரி இச்சூழலை ஒரு பக்கம் பயன்படுத்திக்கொண்டு தன் படத்துக்கு பரபரப்புகாகவும் தன் மூன்றாவது அணி வெறுப்பு அரசியல் நரேட்டிவ்களை செட் செய்வதற்காகவும் அங்கங்கே மற்றமையையும் சுய-மற்றமையையும் விதைக்கும்வண்ணம் தன் படங்களின் கதையமைப்பை வைக்கிறார். அதாவது கூட்டணியில் சேரும் மூன்றாவது அணியினரைப் போலவே ரெண்டு பக்கமும் நெருப்பு அணையாதபடி பார்த்துக்கொள்கிறார். அவரது 'கர்ணன்', 'மாமன்னன்' போன்ற படங்களில் திமுக அதிமுகவைச் சாடவும் அதிமுக தாம் பாராட்டப்பட்டிருப்பதாகச் சொல்லவும் போதுமான குழப்பத்தை இடைவெளியாக அவர் விட்டுவைத்திருப்பார். இரண்டு பக்கமும் கொந்தளிக்க மாரி "டேய் நீ போய் பருத்தி மூட்டையை குடோன்ல வை" என தன் ஆதரவாலர்கள், எதிர்ப்பாளர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார். அது மட்டுமல்ல, அதிமுக-திமுக எனப் பந்தை அடித்துக்கொண்டே இருக்கும் அவர் (பா. ரஞ்சித்தைப் போல) பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்குள் வரவே மாட்டார். அந்தக் கதவைத் திறந்தே வைத்திருப்பது தன் மதிப்பை அதிகரிக்கும் என அவருக்கு ஒரு உள்ளுணர்வு இருக்கிறது. அயோத்திதாசர், அம்பேத்கர், இங்கு அதையொட்டித் தோன்றிய தமிழ்த் தேசியம், ஆதி-திராவிடம், பூர்வ பௌத்தம் எனப் போய் இந்துத்துவாவை வைதீக ஒடுக்குமுறையாளர்களின், திருடர்களின் சித்தாந்தம் என்று சொன்னால் பின்னர் தான் அதிமுக, திமுக முகாம்களுக்குள் மாட்டிக்கொள்ளக் கூடும் என்பதால் அவர் பாஜகவை ஒரு வெற்றிடமாகவே பாவிக்கிறார்.
அவரது திறமையான சினிமா மொழியும் உணர்ச்சிகரமான முன்வைப்பும், தன் கதைகள் தன்னனுபவக் கதையாடல்கள் என்று எளிமைப்படுத்தும் போக்கும் இந்த அரசியல் நோக்கத்தை சுலபத்தில் யாரும் கவனிக்க முடியாதபடி பண்ணுகிறது.
சினிமா நடைமுறை அரசியலுக்கு நெருக்கமாக வந்தால் நடக்கிற ஒன்றுதான் இப்போது மாரி செல்வராஜ் விசயத்தில் நடக்கிறது. அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என ஊடகவியலாளர்களை செட் பண்ணி கேள்வி கேட்க வைப்பது, அதற்கு இப்போ நிறைய வேலை கிடக்கு எனப் பதில் சொல்வது, மூன்று பேர்களை அனுப்பி தன் படத்துக்கு எதிராக முழங்க வைத்து அதற்கு விளக்கமும் மறுப்பும் சொல்வதற்கும், ஒரு ஆர்வத்தைத் தூண்டுவதற்கு, மறைமுகச் சேதியைக் கட்சிக்காரர்களுக்கு அனுப்ப ஊடகச் சந்திப்பை நடத்துவது என அவர் செய்வதையெல்லாம் பார்க்க ஜாலியாக இருக்கிறது. இச்சந்திப்பில் நாக்கிப் பிரகி தான் ரொம்பக் கஷ்டப்பட்டு நரேட்டிவ்வை செட் பண்ண முயன்று வருவதாகவும், அதை முப்பது பேர் இணையத்தில் அமர்ந்து விமர்சிப்பதகாவும் சொல்லி சட்டென அதைத் திருத்தி கஷ்டப்பட்டு ஏற்கனவே இருந்த நரேட்டிவை உடைக்க முயற்சி பண்ணுவதாகச் சொல்வதைப் பார்க்க இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. நாக்கு குழறும்போது உண்மை முந்திக்கொண்டு விடும் என பிராயிட் சொன்னார் (அடக்கப்பட்ட காமத்தின் பொருளில்). இதற்கு முன் அடிக்கடி நாக்கு குழறுபவராக நம் அண்ணாமலைதான் இருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது.
எனக்கு மாரியின் படங்களை விட இந்த அரசியல் குசும்பு தான் பிடித்திருக்கிறது. இப்படி ஊரையே ஏமாற்றி ஓடவிட தனித்திறமை வேண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...