முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நகல் காதலர்கள்

 அண்மையில் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தனக்கு மிகவும் பிடித்த பெண் என்று பெண்ணின் ரீல்ஸைக் காட்டினார். மிகையான சிரிப்புடன் படு கவர்ச்சியாக அப்பெண் நடப்பது, குனிவது, கோலமிடுவது, ஜாகிங் போவது என பல காணொளிகள். அவரிடம் இது செய்யறிவால் உருவாக்கப்பட்டது, இப்பெண்ணே இல்லை என்று சொன்னதும் அவர் அதிர்ந்துவிட்டார். அதன்பிறகு என்னிடம் சிறிது நேரம் பேசவே இல்லை. இன்று இன்னொரு பக்கத்தை பேஸ்புக்கில் பார்த்தேன். இதே செய்யறிவு படைப்புகள். ஒடிசாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரில் நடத்துகிறார்கள். அப்பெண் பேசுவது, பாடுவது, ஆடுவது என காணொளிகள். வேறேதோ பக்கத்தில் இருந்து எடுத்த இளம்பெண்ணின், வயதான பெண்ணின் படங்களுடன் இதையும் இணைத்து குடும்பச் சித்திரங்களையும் பதிவேற்றியிருந்தார்கள். ஒவ்வொரு படத்துக்கும் ஆயிரக்கணக்கில் விருப்பக்குறிகள், காணொளிகளுக்கு அதைவிட அதிகம். மென்பொருளுக்கு சந்தா கட்டி இப்படியான காணொளிகளையும் பக்கங்களையும் உருவாக்கி பேஸ்புக்கில் பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். சில நிமிடங்களில் முடிகிற காரியம். அதில் ஒரு வருமானம். இதை உண்மையென நம்பி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறாயா, இதுதான் என் எண், என்னை அழைக்க மாட்டாயா, இன்னும் ஒழுங்காக ஆடையணியலாமே, அண்ணன் சொல்கிறேன் கேள் பாணி கமெண்டுகள். இவர்கள் பைத்தியமா இல்லை இதுவும் ஒருவித பொழுதுபோக்கா எனத் தெரியவில்லை.

இப்படித்தான் முன்பு வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் படங்களைத் தரவிறக்கி அவருக்கு அம்புஜா சிமி எனப் பெயரிட்டு ஒரு பேக் ஐடியை நடத்தினார் நெல்லையைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர். இப்பெண் கேரளாவில் ஒரு சேனலில் பணிபுரிந்ததாக தொனிக்கும்படி படங்களும் குறிப்புகளும் அவரது எழுத்தில் இருக்கும். ரொம்ப முற்போக்காக, பெண்ணியமாக சட்டையபடிப் பதிவுகள். அவருக்கு நிறைய ரசிகர்கள். கடைசியில் ஒருவர் அந்தக் குறிப்பிட்ட சேனலில் உள்ளவரிடம் விசாரித்து அது பேக் ஐடி எனக் கண்டுபிடித்தார். இன்று பேக் ஐடியை உருவாக்க அந்தளவுக்கெல்லாம் யாரும் மெனக்கெடுவது இல்லை. அதை விசாரிக்கவும் முனைய மாட்டார்கள். எதெல்லாம் அப்பட்டமாயப் பொய்யெனத் தெரிகிறதோ அதையே முதல் ஆளாக நம்பி கிளர்ச்சி அடைந்தால் போதுமென இருக்கிறார்கள்.
இந்த செய்யறிவு வரும் சில ஆண்டுகளில் இன்னும் துல்லியமான நகல் காணொளிகளை உற்பத்தி பண்ணும். அச்சுஅசலாக இருக்கும். அப்போது என்னவெல்லாம் நடக்குமோ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...