முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருப்பாத சுழலர்கள்

 


குல்தீப்பை ஏன் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் ஆட வைக்கவில்லை என்று கடந்த இரு டெஸ்ட் பயணங்களின்போதும் பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவருக்குப் பந்து வீச பின்னர் வாய்ப்புகள் அமைந்தபோது சோபிக்கவில்லை. கடந்த ஆண்டு அவரிடம் இருந்த ஒன்று இன்று இல்லை. 2024இல் அவருக்கு ஏற்பட்ட கவட்டுப் பகுதி காயம் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அவர் காயத்திற்குப் பிறகு ஆசியக் கோப்பையில் நன்றாக வீசி நிறைய விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் அதன்பிறகு நடந்த ஐ.பி.எப்பில் அவரது ரன் ரேட்டும் விக்கெட்டுகளும் எதிர்பார்த்தபடிக்கு இல்லை. டெஸ்டுகளில் மே.இ தீவுகளுக்கு எதிரான மலிவான விக்கெட்டுகள் உதவினாலும் நியுசிலாந்துக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் எதிராக அவர் திணறினார். எந்த விதத்தில்?

காயத்திற்கு முன்பு குல்தீப்பின் பந்துவீச்சில் வேகமும் திருப்பமும் இருந்தது. பந்து விர்ரென்று சுழன்றது. இதுவும் அவரது பந்துவீச்சில் இயல்பாகவே உள்ள மர்மத்தையும் கொண்டு அவர் கச்சிதமான சுழலராகத் தெரிந்தார். இதை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டினார்கள். குறிப்பாக அவர் தன் பந்தை வீசாத வலது கையை (non-bowling arm) பயன்படுத்திய விதம், ஓடிவரும் பாணியில் ஏற்பட்ட மாற்றத்தைப் பாராட்டினார்கள். அதன்பிறகு காயம் ஏற்பட நாம் கண்ட குல்தீப்பால் பந்தை வேகமாகப் போட இயன்றது, ஆனால் திருப்ப இயலவில்லை. இதை அஷ்வின் தன் யுடியூப் சேனலில் ஒரு உரையாடலில் குறிப்பிட்டார் - குல்தீப்பின் பந்து பெரிதாகத் திரும்புவதில்லை, எந்தப் பக்கம் அது திரும்பும் எனும் மர்மமே அவரது பலம். அதையும் கணிக்க முடிந்தால் அவரால் விக்கெட் எடுக்க முடியாது என்றார். தென்னாப்பிரிக்க ஆப் சுழலர் ஹார்மரின் பந்துகள் 5 பாகைக்கு மேல் திரும்ப, இந்திய சுழலர்களோ சராசரியாக 3 பாகையே சுழற்றினார். அதுவும் குல்தீப் மட்டும்தான் 3.5 பாகை திருப்பினார். அதனாலே மற்றவர்களைவிட அதிக விக்கெட்டுகளும் எடுத்தார். ஆனால் மட்டையாளர்கள் அவரைப் பின்னங்காலுக்குச் சென்று ஆடி அவ்வப்போது ஸ்வீப்பும் செய்யும்போது அவர் தடுமாறினார். ஏனென்றால் பந்து அதிகமாகத் திரும்பினாலே பின்னங்காலில் போய் தடுத்தாடும்போதும் பந்து எகிறும் (ஹர்பஜன், அஷ்வினை நினைத்துப் பாருங்கள்).
குல்தீப்பை விடுத்தால் ஜடேஜாவும், வாஷிங்டனும் 2.5 பாகை மட்டுமே திருப்புகிறார்கள். இன்று ரஞ்சிக் கோப்பையிலும் பந்தை அதிகமாகத் திருப்புவோர் கிடையாது. ஆக இந்தியாவின் சுழல் எதிர்காலம் இப்போதைக்கு கவலைக்கிடமாகவே உள்ளது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்திடம் சற்று மேலான சுழலர்கள் உள்ளனர். இதை அஷ்வின் பலமுறைகள் குறிப்பிட்டு எச்சரித்து வருகிறார்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே (உத்தப்பா 18 ஆண்டுகளாக என்று சொல்கிறார்) நமது ஆடுதளங்கள் வேகப்பந்துக்குச் சாதகமாக மாற்றப்பட்டது இதற்கு ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். இப்போது சுழல் பந்தைத் திருப்பவோ ஆடவோ ஆள் இல்லை.
இதைத் தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க நாம் எடுத்த முயற்சியுடன் ஒப்பிடலாம். ஆங்கில வழிக் கல்வியால் நம் மாணவர்களுக்கு சரிவர ஆங்கிலம் பேசவும் வரவில்லை, தமிழும் தெரியவில்லை. கலந்துகட்டி ஏதோ பீகாரிகளைப் போலப் பேசுகிறார்கள். (அதுவும் மத்திய, கீழ்மத்திய மாணவர்களே ஓரளவுக்காவது வட்டார வழக்கிலாவது பேசுகிறார்கள். உயர்த்தட்டினர் ரொம்ப மட்டமாகப் பேசுகிறார்கள்.) ஒட்டுமொத்தமாக அவர்களுக்குத் தாம் நினைப்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தவே தெரியவில்லை. எழுதுவதெல்லாம் வாய்ப்பே இல்லை.
இதுதான் அதீதத் திருத்தத்தின் எதிர்-விளைவு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.