முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாருவும் கெர்ட் வொனெகெட்டும்

 


How Tamil author Charu Nivedita has created a cult following for his books  (and his persona)

எனக்கு சாருவின் நகைச்சுவையில் உள்ள கட்டற்ற தன்மை பிடிக்கும். அதை ஒரு அபத்த நகைச்சுவை என்று சொல்லலாம். அதில் ஒரு குழந்தைமை எப்போதும் இருக்கும். குறிப்பிட்ட நபர்களை, நம்பிக்கைகளை பகடி செய்வது அவரது நோக்கமாக இருக்காது. யாருமே பார்க்கவோ பேசவோ விரும்பாத ஒன்றைப் பகடி செய்வார். அந்த ஒன்று சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாறும். அதை ஒரு எதிர்மறை கடப்புநிலைப் பொருள் (negative transcendent) என்றோ நிகழாத இன்மை (unrealized emptiness) என்றோ சொல்லலாம்.

எதிர்மறை கடப்புநிலைப் பொருள் என்றொன்றைப் பற்றி யாரும் சொல்லியிருக்கவில்லை. குந்தர் ஆண்டர்ஸ் இதை எதிர்காலத்தில் தொழில்நுட்ப ஆதிக்கத்தால் நாம் நமது முன்னேற்றத்தால் நம்மைதே கடந்து அழிவை நோக்கிப் போவோம் எனும் பொருளில் பயன்படுத்தினார். நான் இதை வெற்றுக்குறிப்பான் எனும் பொருளில் பயன்படுத்துகிறேன். சாரு தொடர்ந்து ஆன்மீகம், தன்னைக் கடந்த மகத்தான அனுபவங்கள் குறித்து எழுதுவார். அதனூனே தான் அவரது இந்தப் பகடியும் நிகழும். அவரது எழுத்தின் அடிநாதமே சொல்ல வரும் விசயத்தைக் கடந்த உணர்வுநிலையை நமக்குத் தருவதுதான். இதுவே அதன் கடப்புநிலைத்தன்மை. ஆனால் அவர் நகைச்சுவை என்று வரும்போது தான் கொண்டாடுகிறவற்றின் (இலக்கியம், காதல், நட்பு, லட்சியம்) நிகழாத எதிர்மறைக்குள் நம்மைக் கொண்டு போவார். காதல் காதல் என்று மருகுவோர் அதற்கு நேர் எதிராகச் செயல்படுவதை அவர் பகடி செய்வதை எடுத்துக் கொள்வோம். அங்கு அவர் காதலைப் பகடி செய்யவில்லை, காதல் குறித்த அணுகுமுறையையும் பகடி செய்யவில்லை - ஒருவித பாசாங்கை, முரணைப் பகடி செய்கிறார் என்றும் கொள்ள முடியாது. ஏனென்றால் அடுத்த சில பக்கங்களிலேயே அவர் அதே பாசாங்கைத் தானும் நிகழ்த்தத் தொடங்குவார். அதிலும் அவர் தீவிரமான நம்பிக்கையை வைக்கிறாரா அல்லது அதுவும் ஒருவித விளையாட்டா என்று அறிய முடியாது. இப்படி அவரது பகடி எதிர்மறையை ஊடுருவி அதே எதிர்மறைக்குள் போய் நம்மை நிறுத்துகிறது. அது ஒன்றுமில்லாத இடத்துக்குப் போகிறது. எதிர்மறைக் கடப்புநிலைப் பொருள் எனும் பதமே சற்று கடுமையாகத் தெரியலாம். நிகழாத இன்மை என்பது இன்னும் பக்கத்தில் வருமென நினைக்கிறேன்.
சாருவின் நகைச்சுவையில் உள்ள கட்டற்ற தன்மை எனக்குப் பக்தி கவிதைகளுக்குவெகு நெருக்கத்தில் இருப்பதாக அடிக்கடி தோன்றும். அதனாலே அவரது பகடியை நாம் தனித்துப் படிக்கலாகாது - அதை அவரது காதல் வரிகள், கொண்டாட்ட விவரணைகளுக்கு அருகிலேயே வைக்க வேண்டும். அப்போதே அது ஏன் நம்மை அகத்தே அவ்வளவு சுத்தப்படுத்துகிறது என விளங்கும்.

கெர்ட் வொனெகட்டின் பகடியும் நகைச்சுவை உணர்வும் நிச்சயமாக சாருவை நினைவுபடுத்துகிறது. எதையும் விட்டுவைக்காத முழுமையான அம்மண விளையாட்டாக அவர் பகடியை மாற்றுகிறார். உதாரணமாக Breakfast for Champions நாவலில் தன் மனைவியை இழந்த ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு முழுமையான பைத்திய நிலையில் சரிவதைச் சித்தரிக்கும்போது அவர் எதார்த்தவாத எழுத்தில் வீழ்ச்சியை கசப்புடன் சுய-இரக்கத்துடன் காட்டுவதற்கு நேரெதிராகச் செல்கிறார். முழுக்க முழுக்க கேலி, கிண்டல், பகடிதான், ஆனால் அந்த எள்ளலிலும் கசப்பு இருக்காது. அதே போலத்தான் அவர் பதிப்பு வணிகம் எப்படி இலக்கியத்தையும் போர்னோகிரபிக்கு பக்கத்தில் கொண்டு போகிறது எனக் காட்டும் இடங்கள்.

ஆனால் ஒப்பீட்டளவில் சாருவின் எழுத்து னெகெட்டை விட பலமடங்கு மேலானது - ஏனென்றால் சாரு இந்த பகடியைக் கொண்டு நம்மை இன்னொரு இடத்துக்கு அழைத்துச் சென்று நம்மை சுத்திகரிக்கிறார். இதை வெனெகெட்டால் செய்ய முடிவதில்லை. அவர் மறுப்புநிலைவாதத்துடன் நின்றுகொள்கிறார். தன்னுடைய அரசியல் தரப்பையும் (இடதுசாரி, சர்வாதிகார எதிர்ப்பு) அவரால் கடக்க முடிவதில்லை.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...