முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"படித்துதான் ஆகணுமா?" - ஒரு மதிப்புரை



என்னுடைய புதிய நூலான "படித்துதான் ஆகணுமா?"விற்கு செந்தமிழ் எழுதியுள்ள அருமையான மதிப்புரை இது. நூலின் சாராம்சத்தை தன் எழுத்தில் அவர் கொண்டு வந்துவிட்டார். படித்துப் பாருங்கள்:

"கல்வித்துறையில் இருக்கும் பிரச்சனைகளை பொதுவாகச் சொல்லாமல் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தகுதித்தேர்வு, சமூகம் என்று நான்கு பிரிவுகளாக தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். கல்வியில் மதத்தின் பங்கு, ஆசிரியர் மாணவர் உறவு, மாணவர்களுக்கான அரசியல், வாசிப்பு பழக்கம், ஆசிரியர்களின் பணிச்சுமை என்று ஆசிரியர், மாணவர், சமூகம் ஆகிய மூன்று தரப்பினரின் சிக்கல்களையும் தீர்வுகளையும் அலசியுள்ளார்.‌ உயர்கல்வி பகுதியில், கல்வித்துறை தனியார்மயமாதலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் ஆபத்துகளை பல இடங்களில் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார். தகுதித்தேர்வு பகுதியில், மற்ற துறை தேர்வுகளிலிருந்து ஆசிரியர் தகுதித்தேர்வு எப்படி வேறுபட்டிருக்க வேண்டும், தற்போதைய முறையால் என்னென்ன சிக்கல்கள் உள்ளன‌ என்று‌ கூறுவதில் ஒரு பேராசிரியராய் அவரின் அக்கறை கூடுதலாய் வெளிப்பட்டுள்ளது. 

வாசிப்பாக இந்நூல் நம்மை தொய்வடைய விடுவதில்லை. கல்வியை அதீதமாக மகத்துவப்படுத்தியோ நிராகரித்தோ செய்யப்படும் பிரச்சாரங்களுக்கு இடையில், நிதானமாக நம்மை அதன் தற்போதைய நிலை குறித்தும் அதற்கான தீர்வுகளை நோக்கியும் சிந்திக்கச் செய்யும் இந்நூலை, படித்துதான் ஆகணுமா? என்று கேட்டால் நிச்சயம் 'ஆம்' என்பேன். ஆசிரியர்கள், கல்வித்துறையில் முடிவெடுக்கும் நிலையில் இருப்பவர்களின் கண்களின் இந்நூல் சென்றடைய வேண்டும். அபிலாஷின் பரிந்துரைகளை ஒருவர் ஏற்கலாம், மறுக்கலாம். ஆனால் கல்வி குறித்து சமூகம் தனக்குள் கேள்விகள் கேட்டுக் கொள்ள வேண்டிய நேரம் இது. நிச்சயம் பரவலான விவாதங்களுக்கு இந்நூல் இட்டுச்செல்லும் என்பதில் ஐயமில்லை." 


 https://tsenthamil.blogspot.com/2026/01/blog-post_26.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...