Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

நிம்மதியும் வாசிப்பும்

வாசிப்பு நிதானமாக, கவனமாக, ஒன்றினுள் துணிந்து ஆழ்ந்து போக அனுமதிக்கிறது, பழக்குகிறது. வாசிக்கும்போது உலகம் முழுக்க நாம் கொள்ளும் மனநிலை, அணுகுமுறை முழுக்க தனித்துவமானது. கிட்டத்தட்ட தியானத்தைப் போன்றது. வாசிப்புக்கு எதிராக உள்ள மனநிலை பரபரவென்று எதாவது ஒரு கவலையில், பயத்தில், உணர்ச்சிக் கொந்தளிப்பில், தவிப்பில் இருப்பது. புலனனுபவத்தை நாடி அதில் மனதைத் தொய்க்க வைப்பது. அதிலும் மனம் இல்லாதபோது அதை உணராதிருப்பது. எதையும் வெளியே நின்று பார்த்தபடி இருப்பது.


வாசிப்பு இயற்கையானது அல்ல. ஆனால் ஒருவிதத்தில் அது இயற்கையானதுதாம்தான். வாசிக்கும் ஒருவர் நமக்கு ஆதி இயல்பாக உள்ள ஒரு அகநிலையை மீட்டெடுக்கிறார். அது நமக்குள் வெகு ஆழத்தில் இருக்குள் எங்கோ ஒளி நடுக்கத்தைப் போல இருக்கிறது. நீரில் மிதக்கும் பிரதிபலிப்பைப் போல கிடக்கிறது. அதைத் தொட்டெடுத்ததும் அது நம்மை உள்ளிருந்து ஒளிர வைக்கிறது. மெல்ல மெல்ல 'முழுவதுமாக' நாம் இருக்க உதவுகிறது. ஆக, வாசிப்பை ஒரு 'பின்னோக்கிச் செல்லும் கல்வி' எனலாம் (ஐரோப்பிய கற்பனாவாதிகள் இயற்கையைக் குறித்து நம்பியதைப் போல).

தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்களில் பெரும்பகுதியினர் வாசிப்பதில்லை. இதற்கு ஓய்வோ, வசதியின்மையோ காரணமல்ல. நாம் இன்று இந்தியாவில் உள்ள செல்வச்செழிப்பான மாநிலங்களில் ஒன்று. அரசே வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் முயற்சி எடுக்கிறது. ஆனால் நாம் அகத்தில் இன்னும் ஆழமாக நம்மை உணர பயிற்சி எடுக்கவில்லை. துரத்தப்படும் விலங்கைப் போன்றே எப்போதும் உணர்கிறோம். குடும்பத்தில், வீட்டில், வேலையிடத்தில், வெளியே.

வாசிப்பு ஒரு ஆன்மீகப் பயிற்சி என வரவர எனக்குத் தீவிரமாகவே தோன்றுகிறது. ஆலயம் தொழுவது, மத ஊர்வலங்களில் பங்கெடுப்பது, கடவுள் சிலை முன் கண்ணீர் உகுப்பதை நான் சொல்லவில்லை. தயங்காமல் கலங்காமல் ஒன்றினுள் இருப்பதைச் சொல்கிறேன். அதற்குச் சிறந்த புத்தகங்களைப் படிக்க அவசியமில்லை என்றாலும் சிறந்த புத்தகங்கள் நாம் வாசிப்புக்குள் நுழைய அதிகமாகவே உதவுகின்றன.

இன்றைய காலத்தில் புத்தக வாசிப்பு அறிமுகமாகிறவர்கள் நேரமின்மையைக் குறித்துப் பேசுகிறார்கள். நமக்கு ஆழமாகப் படிக்க பத்து நிமிடங்கள் கூடப் போதும். அது இல்லாமல் இல்லை. வாசிப்பை நாம் ஒரு நுகர்வாகப் பார்க்கும் வழக்கம் அதிகரித்து விட்டதால் 'நேரமில்லை', 'புத்தகம் அலுப்பூட்டுகிறது' போன்ற கருத்துக்களைச் சொல்கிறோம். நுகர்வு நிலையில் இருந்து நகரும்போதே நல்ல வாசிப்புக் கலாச்சாரம் உருவாகிறது.

அதற்கான பயிற்சியை பள்ளியில் இருந்து, வீட்டில் இருந்து துவங்கலாம். சமூக வலைத்தளத்தில் கூடப் பயிற்சி அளிக்கலாம். ஆனால் மதத்தை விட, தெய்வத்தை விட வாசிப்பு முக்கியம் எனும் மனப்பான்மை வர வேண்டும். வாசிப்பில் இருந்து அனைவரும் தாம் நினைப்பதைச் சொல்லில் வடிக்கும் கலையைப் பழக வேண்டும். அதுவும் ஆன்மீகப் பயிற்சிதான். மகிழ்ந்திருப்பது என்பது இங்கிருந்தே வருகிறது. நாம் மகிழ்ச்சியற்று, நிம்மதியற்று இருக்கும்போது ஒரு புத்தகத்தின் ஒரு பக்கத்தைக் கூட நிம்மதியாகப் படிக்க முடியாது என்பதை உணர்ந்திருப்போம். வாசிக்கையில் நம்முடன் இருக்கும், வாசிக்க நம்மை அனுமதிக்கும் இந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் உள்ளிருந்து ஊறி வருவதே. இதை நாம் வெளியே இருந்து பெறத் தேவையில்லை. அது புத்தகத்தில் இருந்து வருவதும் அல்ல. புத்தகம் அதைத் தன்னுடன் இருக்க அனுமதிக்கிறது. அதுவும் புத்தகத்தின் அணுக்கத்தை விரும்புகிறது.

வாசிப்புக்கான நேரமில்லை என்பதை விட வாசிப்புக்கான 'நிம்மதி' இல்லை என்பதே சரியான விளக்கம்.

நாம் ஏன் நிம்மதியற்ற சமூகமாக இருக்கிறோம்?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...