முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வளைவதன் நுட்பங்கள்

 எது நம்மை அதிகாரத்தின் முன் சட்டெனப் பணிந்து வணக்கம் போட, முதுகு வளைய வைக்கிறது?

என்னுடைய பதில் நம் அதிகார ஆசை என்பதே. அதிகார ஆசை எப்போதும் ஆசையாக வெளிப்படாது. அது அச்சமாகவே முதலில் தோன்றும் எனத் 'தோன்றுகிறது'. நாம் எதையோ இழந்துவிடுவோம், மறுக்கப்படுவோம் எனும் அச்சம் கூட ஒன்றைப் பெற வேண்டும், ஏற்கப்பட வேண்டும் என்பதம் எதிர்மறையான வெளிப்பாடுதான்.
எது நம்மை அதிகாரத்தின் இருண்ட குகையின் வாயில் முன்பு தலையைக் குனிய வைக்கிறது?
பழக்கம். இதுதான் ஆகச் சுவாரஸ்யமானது. அன்றாட உலகம் ஒருவித ராணுவப் பயிற்சி முகாம் போலச் செயல்படுகிறது. குடும்பம், வேலையிடம், வெளியிடங்கள் எல்லாமே. நாம் தொடர்ந்து உடன்பட்டும் இணங்கியும்தான் பிழைக்கிறோம். மொழியை எடுத்துக் கொள்வோம்.
மொழி கேள்விகளாலும் கோரல்களாலும் ஆனது. வெயில் பொளக்கிறது இல்லையா என்று கேட்டால் ஆமாம் என்போம். வெயில் பொளக்கிறது என்றாலும் தலையாட்டுவோம். இப்படி நம் அன்றாடப் பேச்சே நம்மை அதிகாரத்தின் முன் பணியப் பயிற்சியளிப்பதுதான். அடுத்து, எல்லாருக்கும் நைசாகப் போவதற்காக நாம் கேலி, கிண்டல், சுயகருத்து எல்லாவற்றையும் கழற்றிவைத்து விட்டுப் பேசத் தொடங்குகிறோம். இடத்திற்கு ஏற்றாற்போல பேசுகிறோம். சிரிக்கத் தேவையில்லாதவற்றுக்கு எல்லாம் சிரிக்கிறோம்.
அடுத்து பணம். நாம் பணத்தைப் பயன்படுத்தும்போது பல்வேறு பொருளாதார நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உடன்பட்டே ஆக வேண்டி வருகிறது. அதிகாரம் அங்கு அரூபமான தளத்தில் இயங்கினாலும் நேரடிப் பிரயோகத்தில் நமக்கு அது இன்பம் அளிக்கிறது. காதலிக்குப் பரிசு வாங்கிக் கொடுத்து நைஸ் பண்ணுகிறோம். இனிப்புகளை வாங்கித் தின்கிறோம். கட்டணங்களைச் செலுத்துகிறோம். நாம் ஓய்வு கொள்வதற்குக் கூட உழைக்க வேண்டி இருக்கிறது. ஆக, நம் ஓய்வு என்பதும் பணத்தால் வாங்கப்படுவதே. இன்பம், நிம்மதி, ஓய்வு எல்லாமே இப்படி பணத்தால் செயல்படுத்தப்பட நமக்கு ஒரு சேதி உணர்த்தப்படுகிறது. பணம் அடிமைகளின் அடையாள அட்டையாக இருக்கிறது. இதனால்தான் கல்ட் அமைப்புகளோ எதிர்ப்பண்பாட்டுக் குழுக்களோ தனிச் சமூகமாக மாறும்போது பணத்தைப் பயன்படுத்தாமல் பண்ட மாற்றம், சுய-நாணயம் என மாறுகிறார்கள்.
அடுத்து, குடும்பம். இது அனைவரும் நன்கு அறிந்ததே. ஒருவரைக் காயடிக்க முதலில் அவரைக் குடும்பத்துக்குள் அடைத்துவிட்டால் போதும். இதற்கடுத்து, நிறுவனம். கடைசியாக வெகுஜன ஊடகம்.
இப்படி ஒவ்வொன்றிலாகப் பயின்று வந்துவிட்டால் ஆசை நம்மைப் பிடித்துக் கொள்கிறது. இன்னதெனத் தெரியாமல் அலைபாய வைக்கும் ஆசை அது. யாரைக் கண்டாலும் கூழைக் கும்பிடு போட வைக்கும் ஆசை. பயமென்று நாம் தவறாகப் புரிந்துகொள்ளும் ஆசை அது. இப்படி வளைகிறவர்கள் விரைவிலேயே அதிகாரம் பெற்று அடுத்தவர்களைக் கட்டுப்படுத்தும்போதே அது அச்சமல்ல என்று நமக்குப் புரிகிறது.
இந்தச் சிக்கலான அமைப்புக்குள் எழுத்தாளர்கள் தினசரி உழன்று தம் மூர்க்கத்தை, கூர்மையைத் தக்க வைக்க வேண்டி உள்ளது. அது சுலபம் அல்ல. நமது ஒரு உடல் எழுத்தில் கூர்முனைக் கத்தியைப் போல மிளிர்ந்தாலும் நமது இன்னொரு உடல் அதிகாரத்தைக் கண்டதும் ஐயா வணக்கம் எனக் கைகூப்பி குனிகிறது. பெரும் கலகக்காரர்கள், போராளிகளில் இருந்து நைசான படைப்பாளிகள் வரைப் பலருக்கும் இது நடந்துள்ளது. எழுத்தாளர்கள் இப்படித் தம் இரு உடல்களையும் காப்பாற்ற வேண்டியிருக்கிறது.
இதில் பிரச்சினையே இல்லாதவர்கள், கொடுத்து வைத்தவர்கள், இரு உடல்களும் வளைகிறவர்கள்தாம். அவர்கள் எழுத வரும்போதே குனிந்து நெளிந்தபடியே வருவார்கள். என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதையே எழுதுவார்கள். சொல்வார்கள். செய்வார்கள். எழுத்திலும் வளைவார்கள், நடத்தையிலும் வளைவார்கள். தாம் இப்படித்தான் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. தனிமையில் புழுங்குவார்களோ என்னமோ. இவர்களுக்கு வாழ்க்கையில் 'தோல்வியே' கிடையாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...