Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

காதலர் தின நேர்முகம்


 

காதலர் தினத்தை ஒட்டி தினகரன் நிருபர் ஒருவர் என்னிடம் ஒரு குறுநேர்முகத்தைச் செய்தார். அக்கேள்வி பதிலை இங்கே பகிர்கிறேன்:

1.⁠ ⁠காத்திருத்தல் vs உடனடித் தீர்வு: சங்க அகத்திணையில் 'காத்திருத்தல்' (முல்லை) என்பது காதலின் மிகப்பெரிய தவமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்வது போல காதலையும் 'இன்ஸ்டன்ட்' ஆக எதிர்பார்க்கும் இன்றைய 'ஜென் இசட்' மனநிலை, காதலின் ஆழத்தை நீர்த்துப்போகச் செய்கிறதா? அல்லது இதுதான் காலத்தின் நவீன வடிவமா?
பதில்: சங்க அகத்திணையில் காத்திருத்தல் கடுந்துன்பமான அனுபவம். அது காதலுக்கு ஆழம் கொடுக்கும் என்பது சங்கக் கவிதைகளின் கருத்தல்ல. அது பின்னர் வந்த பக்திக் கவிதைகளின் மனநிலை - அதாவது அனுபவத்தை முடிவிலி வரை முடிவற்றுத் தள்ளிப் போட்டபடியே இருத்தல். இன்று நாம் (அதாவது ஜென் ஸெட் யுகத்தில்) காதல் குறித்த பழமையான விழுமியங்களையும் சுமக்கிறோம் (கற்பு, சார்ந்திருத்தல், தீராக் காதல்); காதலைப் பண்டமாக பாவிக்கும் நுகர்வு மனநிலையையும் கொண்டிருக்கிறோம். இது நுகர்வுப் பண்பாட்டால் மட்டுமே ஏற்படவில்லை. மிதமிஞ்சிய தரவுகள், நேரம் குறைந்து விட்டது, கவனமின்மை, சுயசிந்தனையற்ற மந்தைத்தனம் ஆகியவற்றால் நாம் எதையும் ஆழமாக அறிவது குறித்து அச்சப்படுகிறோம். அல்லது அப்படி அறிய ஒன்றுமில்லை, 'கடந்து போவதே காதல்' என நினைக்கிறோம்.
2.⁠ ⁠அகம் vs புறம்: தமிழர்களின் காதல் மரபு 'அகம்' சார்ந்தது; அதாவது உள்ளுக்குள் உணரப்படுவது. ஆனால் இன்றைய காதல் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, ரீல்ஸ் என முழுக்க முழுக்க 'புறம்' சார்ந்த கொண்டாட்டமாக மாறிவிட்டதே... அந்தரங்கம் இல்லாமல் பொதுவெளியில் கொண்டாடப்படும் காதல், அதன் புனிதத்தை இழக்கிறதா?
பதில்: அந்தரங்கம் புனிதமா? இல்லை. புனிதம் என்பது ஒரு கற்பிதம். ஒன்று கீழ்மையானது என நம்பினாலோ மற்றொன்று புனிதமாகும். ஆனால் இந்த இரண்டுக்கும் மத்தியில்தான் மனித அனுபவம் உள்ளது. அந்தரங்கத்தில் நம்பிக்கை இருந்தால் ஏன் நமது சிற்பங்களில் அந்தரங்கமான தருணங்கள் சித்தரிக்கப்படுகின்றன? அதேநேரம், நாம் இன்று காணப்படும் அந்தரங்கத்தைப் பிரகடனப்படுத்தும் போக்கு நுகர்வுப் பண்பாட்டின் நீட்சிதான். நான் என் உடலை, என் உணர்வுகளைப் பொதுவெளியில் காட்சிப்படுத்தி அதற்கு விலையாக சமூகத்தின் அங்கீகாரத்தை, பாராட்டைப் பெறுகிறேன். இங்கு புறம் அகம் ஆகவில்லை. புறம் அகமாக கற்பனைச் செய்யப்படுகிறது. அகம் பொருட்படுத்தப்படுவதில்லை. அகம் ஒரு பூட்டப்பட்ட இருட்டறையாக இன்றைய காதலில் உள்ளது. அங்கு யாரும் போக விரும்புவதில்லை. இதுதான் நிஜமான இழப்பு.
3.⁠ ⁠பிரிவு vs 'கோஸ்டிங்': சங்க காலத்தில் பிரிவு என்பது (பாலை) துயரம் நிறைந்தது; அதில் ஒரு வலி இருந்தது. ஆனால் இன்று ஒரு தொடர்பை முறித்துக்கொள்வது 'பிளாக்' (Block) அல்லது 'கோஸ்டிங்' (Ghosting)(பேய் போல உறவை முறித்துக் கொண்டு செல்வது) செய்வது மூலம் மிக எளிதாகக் கடந்து செல்லப்படுகிறது. தொழில்நுட்பம் வளர வளர, மனிதர்கள் உணர்வு ரீதியாக அந்நியமாகிறார்களா?
பதில்: கோஸ்டிங் எனும் சொல்லே 'அழகானது' - ஒருவர் இறந்ததும் அவர் எங்கு போகிறார் என யாருக்கும் தெரியாது, அதனாலே அவர் போனாரா இல்லையா எனும் குழப்பம் ஏற்பட்டு அது பதற்றமாகி ஆழ்மனத்தில் நிலைகொள்கிறது என்றார் ஹைடெக்கர். ஒருவர் நம்மைக் காதலித்துவிட்டு உறவை முறிக்க நினைக்கும்போது அந்த வலியை அல்லது அதைக் குறித்த கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திடீரென நம்மை கோஸ்ட் செய்கிறார். அப்போது நமக்கும் மேற்சொன்னவாறுதான் ஆகிறது. இரண்டு தரப்புக்கும் ஆறாத காயத்தை இது அளிக்கிறது. வலியை நாம் இன்று சந்திக்க மறுக்கிறோம், காதலை ஏன் அதன் ஆழத்தில் சந்திக்க மறுக்கிறோம் என்பதற்கான பதில்தான் இதற்கும். அதேநேரம், இதனாலோ தொழில்நுட்பத்தாலோ அந்நியமாகிறோம் என்று நான் நினைக்கவில்லை. எந்த அனுபவத்தின் மையத்திலும் ஒரு உண்மை உள்ளது என நாம் இன்று நம்பவில்லை. இதனாலே நாம் அந்நியமாகிறோம். அதன்பிறகு அந்நியமான வழிமுறைகளைத் (கோஸ்டிங், PDE) தேர்ந்தெடுக்கிறோம்.
4.⁠ ⁠மெய்நிகர் vs மெய்யான காதல்: அன்று காதலர்கள் சந்திக்கப் பல தடைகள் இருந்தன; அரிதாகச் சந்திக்கும்போது சிலிர்ப்பு இருந்தது. இன்று வீடியோ காலில் எப்போது வேண்டுமானாலும் முகம் பார்க்கலாம். இந்த அதீத அணுகும் தன்மை (Accessibility) காதலின் மீதான ஈர்ப்பையும், சுவாரஸ்யத்தையும் குறைத்துவிட்டதா?
பதில்: அரிதாகப் பார்ப்பதாலே, தொலைதூர உறவில் இருக்கும் கணவர், மனைவியர் இடையே மோதலும் பிரிவும் வருவதில்லையா? ஆக, சந்திக்கும் வாய்ப்புகளின் மிகையோ போதாமையோ ஆர்வத்தைக் குறைப்பதோ கூட்டுவதோ இல்லை.
மாறாக, நாம் இன்று காதலிக்கும் பழக்கத்தை, நுட்பத்தை இழந்து வருகிறோம். ஆகையால் இனக்கவர்ச்சிக்கு அப்பால் அது நட்பாக மாறி உலர்ந்து போகிறது. மேலும் நாம் எதையும் நம்புவதில்லை. காதலுக்கு ஆழமான பொருள் உண்டு என நம்பாமலே காதலிக்கிறோம். இயல்பாகவே இத்தகைய காதலில் சுவாரஸ்யம் இருக்காது. அதில் புலனின்பம், தற்காலிக கொண்டாட்டம், உடனடி திருப்திதான் இருக்கும். இதை ஒரு நுண்பேசியுடன் ஒப்பிடலாம்.
நுண்பேசியில் நம்மை மகிழ்விக்க எவ்வளவோ சங்கதிகள் உண்டு. நம் செயலாற்றலைப் பெருக்கும் திறனையும் அது கொண்டிருக்கிறது. அதனாலே அதை வாங்குவதை ஒரு முக்கியமான விசயமாக நினைக்கிறோம். ஆனால் யாருமே இந்த பயன்களுக்கு அப்பால் அதற்கு ஒரு முக்கியத்துவம் உள்ளதாக நம்ப மாட்டோம். அதற்கு ஒரு அர்த்தமில்லை. அது ஒரு வெற்றுக் கருவி. அதனால்தான் நமக்கு அதைப் பிடிக்கிறது, அதனால்தான் நாம் அதை நம்பவும் இல்லை. இந்த மனப்பான்மையால்தான் காதலிலும் நாம் பிடிப்பின்றி இருக்கிறோம். நாம் அதை ஆழமாக நம்பவில்லை. நம்பாத ஒன்றில் ஈர்ப்பும் சுவாரஸ்யமும் சட்டென வடிந்துவிடும்.
5.⁠ ⁠எதிர்காலம்: செயற்கை நுண்ணறிவு (AI) துணையுடன் காதல் கடிதம் எழுதும் அளவுக்குத் தொழில்நுட்பம் வந்துவிட்டது. எதிர்காலத்தில் மனித உணர்வுகளே இல்லாத, வெறும் அல்காரிதம்களால் தீர்மானிக்கப்படும் ஒரு இயந்திரத்தனமான விஷயமாகக் காதல் மாறிவிடுமோ என்ற அச்சம் உங்களுக்கு இருக்கிறதா?
பதில்: எதிர்காலத்தில் இருபாலின உறவுகள் அரிதாகும் என்பது என் கணிப்பு. ஏனென்றால் நாம் மற்றமையை (நாம் அல்லாத, நமக்கு எதிர்நிலையில் உள்ள ஒரு விசயத்தை) இன்று கடுமையாக அஞ்சுகிறோம். தன்பாலின உறவுகள் இதனால் அதிகமாகும். ஆனால் இவை அசலான தன்பாலின உறவாகவும் இருக்காது. சேர்ந்து அனுசரணையுடன் இருப்பார்கள். உடலுறவு நிகழ்வெண்ணிக்கை உலகம் முழுக்க குறைந்து வருகிறது. குழந்தைப்பேறும் குறைகிறது. ஆகையால் எதிர்கால உலகம் எதிர்-பாலின ஈர்ப்பற்ற, தன்பாலினத்தை மட்டும் நம்புகிற, ஏற்கிற, சிறு மூடப்பட்ட குழுக்களுள் மக்கள் வாழ்வதாக இருக்கும். அப்போது காதலர் தினம் விவசாயம் மதிப்பிழந்த இன்றைய காலத்துப் பொங்கலைப் போல, 'சுதந்திரம் இல்லாத' சுதந்திர தினத்தைப் போல இருக்கும். நாம் செய்யறிவை (AI) இந்தப் பின்னணியில் பார்க்கையில் அது நம்மை இணைக்கவும், நம் தனிமையைப் போக்கவும் பிரதான பங்காற்றும். நமக்குப் பேச, உலகைப் புரிந்துகொள்ள கற்றுத் தரும். அது நம்மைத் தனக்கேற்ப மாற்றும். இதையெல்லாம் நினைக்கவே பயமாக இருக்கிறது.
ஆகையால், இதெல்லாம் நடக்காது, காதல் எப்போதும் போல உயிர்ப்புடன் இருக்கும் என நம்புவோம். காதல் நமக்கு கருணையை, கற்பனையை, நம்பிக்கையைக் கற்றுத் தருகிறது. அதைப் பாதுகாப்போம்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...