Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தொழில்நுட்பம் ஏன் கதாசிரியர்களை வெளியேற்றுகிறது?



‘சாய் வித் சித்ரா’ எழுத்தாளர் வட்ட மேஜை விவாதத்தின் ஒரு அத்தியாயத்தில் பங்கேற்பாளர்கள் ஏன் தமிழ் சினிமாவில் திரைக்கதையாளர்களுக்கு இடம் குறைவாக உள்ளது எனும் தலைப்பில் பேசிய விசயங்கள் என் சிந்தனையைத் தூண்டின. தமிழ் சினிமாச் சூழலை வைத்து அவர்கள் அவதானித்தவை (தற்போதைய இயக்குநர்கள் ஹீரோவுக்குக் கதை சொல்லி ‘புரோஜெக்டை’ ஏற்க வைப்பதால் அங்கு கதாசிரியரின் இடம் இல்லாமல் போவது, இயக்குநர்களின் ஈகோ, அவர்கள் இலக்கியம் வாசிக்காதது, தயாரிப்பாளர்களுக்கு திரைக்கதை அறிவு குறைவாக இருப்பது) சரியாகத்தான் இருக்க வேண்டும். அதேநேரத்தில் இன்னும் பரந்துபட்ட கோணத்தில் இதைப் பார்க்க முடியும். அடிப்படையில் நவீன சினிமா எப்படியான கதைகூறல் நிகழ்வு? அதில் எழுத்தாளருக்கோ அவரது கதைக்கோ இடமுண்டா? இதுதான் எனக்குள்ள கேள்வி. இல்லை என்பதுதான் என் பதில்.

சினிமா ஒரு தொழில்நுட்பக் கதை. கதாசிரியரின் சொற்கள், நடிகரின், கதைசொல்லியின் உடல், உணர்ச்சிகள், குரலின் அவசியமின்றி கதைசொல்ல உதவும் உபகரணத்தை நாம் தொழில்நுட்பம் என்று இங்கு புரிந்துகொள்ளலாம். ஒரு நாடகத்தில் வரும் ‘செட்’, தானியங்கி / ஊழியர்கள் இயக்கும் கருவிகள், சினிமாவில் ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு, கிராபிக்ஸ் ஆகியவையும் தொழில்நுட்பம்தான். நான் என் கைகளின் நிழலைக் காட்டி ஒரு கதை சொன்னாலும் அது தொழில்நுட்பம்தான். இது கதையை வெளிமுகமாக்குகிறது. கதையை உள்வாங்கி என் கற்பனையால், அனுபவத்தால், உணர்ச்சிகளால் உருவேற்ற வேண்டிய அவசியத்தை ரத்து செய்கிறது. கதையில் இருந்து பார்வையாளனை வெளியேற்றுகிறது. வெளியேற்றப்படும் பார்வையாளன் அடையும் திகைப்பே சினிமாவின் அழகு, மதிப்பு, அதற்காகத்தான் மக்கள் திரைப்படத் துறையினருக்கு பணத்தை அள்ளித் தருகிறார்கள். தம்மைக் கதையில் இருந்தும், மொழியில் இருந்து வெளியேற்றுவதற்கான ஊதியம் அது. இதைப் புரிந்துகொள்ள நீங்கள் திரையரங்கில் காணொளியின் ஒளியளவைக் கூட்டினாலோ வசனம், இசையின் ஒலியளவைக் கூட்டினாலோ குறைத்தாலோ காணொளியை நிறுத்தி ஒலியை மட்டும் ஓட விட்டால் போதும் - பார்வையாளர்கள் கூச்சலிடுவார்கள். ஆனால் நீங்கள் ஒரு நாவலைப் படிக்கும்போது காகிதம் தரமாக இல்லையெனக் கோபப்பட மாட்டீர்கள். அதில் உள்ள ஓவியங்கள் தெளிவாக இல்லை என அதைக் கிழித்து எறிய மாட்டீர்கள். வாசகர்கள் எந்த வெளிமுகமான உதவியும் இன்றி கதைக்குள் உலவுவார்கள். பார்வையாளர்கள் வெளிமுகமான உதவியுடன் மட்டுமே உலவுவார்கள் என்பதன்றி உள்முகமான கதையம்சம் அவர்களைத் தொந்தரவு பண்ணவும் கூடும். அதாவது பார்வையாளர்கள் படத்தில் வரும் பிம்பங்கள், ஒலிக்கோர்வையைக் கொண்டும், கருத்துக்களை தம் அறிவாலும் ஆய்வாலும் பெருக்கியும் கதையைப் புரிந்துகொள்ள வேண்டும் எனும் நிபந்தனை இருந்தாலும் எதிர்ப்பார்கள். (மிகச்சில தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள், நிறைய வாசிப்பும் கற்பனையும் கொண்டவர்கள், மட்டுமே அத்தகைய படங்களைப் பார்க்க முடியும். அவர்களுக்கும் கூட வெளிமுகமான காட்சிமொழியும் இடையும் கைகொடுக்க வேண்டும்.) அதாவது திரைப்படம் உங்களைக் கற்பனை செய்யவும், ஊகிக்கவும், சிந்திக்கவும் வைக்க முடியாது. அது உங்களைக் காட்சிகளில் இருந்துகூட 'வெளியேற்றி' விடும். அதனாலே திரைப்படம் இயல்பாகவே ‘கதைக்கு’ எதிரானதாக உள்ளது.

ஆரம்பத்தில் கதையை ஒரு ஆசிரியர் முகமூடி அணிந்து நிகழ்த்திக் காட்டியதாக அரிஸ்டாட்டில் தன் “கவிதையியலில்” சொல்கிறார். அதன் நீட்சியாக நடிகர்கள் தோன்றி கதாசிரியர் பின்னுக்குப் போக நாடகம் தோன்றியது. நாடகத்தில் கருவிகளும் செட்டும் வந்ததும் அதில் தொழில்நுட்பம் வலுவாகத் தோன்றியது. படக்கருவியின் அறிமுகத்துடன் தொழில்நுட்பம் முழுமையாகக் கதையை ஆட்கொண்டது. நான் சின்ன வயதில் பார்த்த “அபூர்வ சகோதர்கள்” படத்தில் என் மனத்தில் நீண்ட காலம் தங்கியிருந்த காட்சி குள்ளனான அப்பு செய்யும் சாகசக் காட்சிகள். ஏனென்றால் நான் அவற்றை நடப்புலகில் கண்டதில்லை. ஏனென்றால் கதைக்கு அப்பால் என்னைத் தூக்கிச் செல்லும் சங்கதிகள் அக்காட்சிகளில் இருந்தன. மற்றொன்று “ஜுராஸிக் பார்க்” (தெ லாஸ்ட் வெர்ல்ட்). வனப்பகுதியில் ஒரு குழந்தை. பின்னால் புதரில் இருந்து கோழி அளவுக்கு உள்ள ஒரு குட்டி டினோசர் (கோம்ப்ஸோகெனெதெஸ்) எட்டிப் பார்க்கிறது. குழந்தை ஆர்வத்தால் தூண்டப்பட்டு அதை நெருங்கி பார்க்க, அதற்கு உணவளிக்க மேலும் பல குட்டி டினோசர்கள் தோன்றிச் சூழ்கின்றன. குழந்தையின் முகத்தில் பீதி. அவை அக்குழந்தையைக் கடிக்கத் தொடங்குகின்றன. இக்காட்சி எனக்கு கடும் பயத்தையும் பரவசத்தையும் ஒரே சமயம் அளித்தது. நீங்கள் இக்காட்சிகளை முழுக்க வெளிமுகமான பிம்பங்கள் என்று அழைக்கலாம். இவைத் திரைப்படத்தின் பகுதிதான். ஆனால் இவை ‘கதை’ அல்ல. இவற்றை நாம் கற்பனை மட்டும் செய்வதில்லை. நம் கற்பனையையும் தாண்டி நம்மை இவை ஆக்கிரமிக்கின்றன. ஏதோ பேயொன்று நம் முன் தோன்றி நம்மை உறைய வைப்பதைப் போலத் தொந்தரவு செய்கின்றன. மேற்சொன்ன காட்சியை நீங்கள் தமிழ் சினிமாவின் மிகப்பிரசித்தமான காட்சியான ‘பராசக்தி’ நீதிமன்றக் காட்சியுடன் ஒப்பிடுங்கள். அக்காட்சி நம் உணர்ச்சியைத் தூண்டி நம்மைச் சிந்திக்க வைக்கிறது. ஆனால் நமக்கு புலனின்பத்தை ‘ஜுராஸிக் பார்க்’ காட்சியைப் போல அளிப்பதில்லை. முதலாவது கதை, இரண்டாவது தொழில்நுட்பம்.

என்னதான் தொழில்நுட்பத்தால் செலுத்தப்படும் கதைக்கு அடிப்படைக் கட்டமைப்பை திரைக்கதையாளர்களே அளிக்கிறார்கள் என்றாலும் அது நமக்கு நேரடியாகக் கதையைத் தருவதில்லை. கதையில் இருந்து நம்மை வெளியேற்றி ஒரு புலனுணர்வு அனுபவத்தையே கொடுக்கிறது. இந்த வெளியேற்றம் தீவிரமாக ஆக நாம் சினிமாவின் பரவசத்துக்கு, திகைப்புக்கு அதிகமாக ஆளாகிறோம் (இதே காரணத்தால்தான் நடிகர்கள் நேரில் தோன்றும்போதும் நாம் பரவசத்துக்கு உள்ளாகிறோம்.). தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகமாக ஆக பார்வையாளர்களான நாம் சினிமாவை வெறும் பிம்பங்களாகப் பார்க்கும் மனநிலைக்கு ஆட்படுகிறோம். இன்று சினிமா குறித்த தெரியாத பார்வையாளர்கள் கூட அதிகமாக காட்சிமொழியைக் குறித்து உணர்வு கொண்டிருப்பதைக் காண்கிறோம். அவர்கள் அந்த ‘அனுபவத்தைக்’ குறித்து திரையரங்கில் இருந்து வெளிவரும்போது பேசுகிறார்கள். காட்சி, வசனம் குறித்து பேசுவதில் இருந்து இது முழுக்க வேறுபட்டது.

மலையாளத்தில் இன்றும் திரைக்கதைக்கு ஓர் இடமிருப்பது அவர்கள் தொழில்நுட்ப அனுபவத்தை விட கதையனுபவத்தை நம்பியிருப்பதால்தான். அவர்களுடைய பட்ஜெட்டும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். கதையில் லயிக்க வைப்பதும், அடுத்து என்ன வரப்போகிறது எனும் ஆர்வத்தைத் தூண்டும் சின்னச்சின்ன தந்திரங்களால் பார்வையாளரைக் கட்டிப் போடுவதும் அவர்களுக்கு அவசியம். ஆனால் அங்கு முதலீடு பெருகும்போது அவர்கள் தொழில்நுட்ப சினிமாவாக அதிகம் மாறுவார்கள். மொபைல் விளையாட்டுகள் இதற்குச் சான்றாக உள்ளன. இதுதான் சினிமாவின் எதிர்காலம் - நாம் திரையரங்கில் அமர்ந்து காட்சிக்குள் நுழைகிற, காட்சியின் வளர்ச்சியில் பங்கெடுக்கிற (immersive) தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெறும். செய்யறிவைக் கொண்டு நம்மையே நாயகனாக / நாயகியாகத் திரையில் காணும் நிலை வரலாம். நாம் முழுமையாக ‘வெளியேற்றப்படுவோம்’. எதிர்காலத்தில் கதையின் இடத்தில் ‘விளையாட்டே’ இருக்கும். திரைக்கதையாளர்கள் ஒரு மொபைல் விளையாட்டைப் போல கட்டமைப்பை (பாத்திர அமைப்பு, பின்னணி விபரம், ஆக்‌ஷன், விளைவுகள்) மட்டுமே உருவாக்குவார்கள்.

இது சினிமாவின் சாபம். தொடர்ந்து உலகில் இருந்து, கற்பனையான உணர்வுகள், கருத்துக்களில் இருந்து வெளியேற்றப்படும் நாம் முழுக்க அந்நியப்படுவோம். இதனாலே சினிமா நம் ஆன்மாவை அரித்துத் தின்றுவிடும் என நினைக்கிறேன்.

‘கதையே’ நம்மை எப்போதும் காப்பாற்றும்.

Comments

Popular posts from this blog

ரஜினியின் தனித்துவமான நடிப்பு

“பாஷா” ரஜினியும், “எஜமான்” ரஜினியும் ஒரே ரஜினி தான் - அவர்கள் இடையே நிறைய நுட்பமான வேறுபாடுகள் இருக்கும், ஆனால் பார்வையாளர்களில் எல்லாரையும் திருப்திப்படுத்தும் மாறுபட்ட குணநலன்களும் இருக்கும். இந்த முரண் இயல்புகள் உறுத்தாமல் இருக்க, ரஜினி அப்பாத்திரத்துக்கு என நடையின் வேகத்தில், பார்வையில், சைகைகளின் வீச்சு மற்றும் வேகத்தில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்டு வருவார். அதற்கு மேல் முயன்று ஒரு பாத்திரமாகவே ஆக முயல மாட்டார்; ரஜினி தன் ‘நடிப்பை’ நடிப்பாக அல்ல ஒவ்வொரு சந்தர்பத்துக்கும் வினையாற்றுகிற ஒன்றாகப் பார்க்கிறார். இதற்கும் மேலாக அவரது ஸ்டைல், சின்னச் சின்ன சேட்டைகள், நட்சத்திர பிம்பம் கட்டியமைக்கப்படுவதால் அவரது சன்னமான நடிப்பு வெளிப்பாடுகளை நாம் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். கிண்டிலில் "ரஜினிகாந்த்" நூலை வாங்க https://www.amazon.in/dp/B0GDGQ2YQH?fbclid=IwY2xjawPn21dleHRuA2FlbQIxMQBicmlkETFnNkdnMTE1bmVDaHJUbUtTc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHsjGj6zfIg4207UJ3iEOj9DtejPeqRNUjptrKoyquP9RJ18C0qnMkqOeNzss_aem_zjwowo0tzM_mYQ8Jh7zI5g

"படித்துதான் ஆகணுமா?" - ஒரு மதிப்புரை

என்னுடைய புதிய நூலான "படித்துதான் ஆகணுமா?"விற்கு செந்தமிழ் எழுதியுள்ள அருமையான மதிப்புரை இது. நூலின் சாராம்சத்தை தன் எழுத்தில் அவர் கொண்டு வந்துவிட்டார். படித்துப் பாருங்கள்: "கல்வித்துறையில் இருக்கும் பிரச்சனைகளை பொதுவாகச் சொல்லாமல் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தகுதித்தேர்வு, சமூகம் என்று நான்கு பிரிவுகளாக தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். கல்வியில் மதத்தின் பங்கு, ஆசிரியர் மாணவர் உறவு, மாணவர்களுக்கான அரசியல், வாசிப்பு பழக்கம், ஆசிரியர்களின் பணிச்சுமை என்று ஆசிரியர், மாணவர், சமூகம் ஆகிய மூன்று தரப்பினரின் சிக்கல்களையும் தீர்வுகளையும் அலசியுள்ளார்.‌ உயர்கல்வி பகுதியில், கல்வித்துறை தனியார்மயமாதலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் ஆபத்துகளை பல இடங்களில் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார். தகுதித்தேர்வு பகுதியில், மற்ற துறை தேர்வுகளிலிருந்து ஆசிரியர் தகுதித்தேர்வு எப்படி வேறுபட்டிருக்க வேண்டும், தற்போதைய முறையால் என்னென்ன சிக்கல்கள் உள்ளன‌ என்று‌ கூறுவதில் ஒரு பேராசிரியராய் அவரின் அக்கறை கூடுதலாய் வெளிப்பட்டுள்ளது.  வாசிப்பாக இந்நூல் நம்மை தொய்வடைய விடுவதில்லை....

பாலியல் வன்முறை எனும் விதிவிலக்கின் மொழி

எப்ஸ்டைன் கோப்புகள் குறித்த தரவுகள் உண்மையில் கொட்டிக் கிடக்கின்றன . இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமான வித்தியாசம் இது . நாம் இத்தகைய விவகாரங்களை கிசுகிசு , வம்பு , கற்பனைக் கதைகளுக்குள் மறைத்துவிடுவோம் . அவர்களை அவற்றை ஆவணங்களாகவே பொதுவெளியில் வெளியிடுகிறார்கள் . ஆனால் அதற்காக எப்ஸ்டைனைப் போன்ற சிறுமிகளைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்துவோர் , பணத்தைக் காட்டி பல இளம்பெண்களைச் சுரண்டுவோர் , அவர்களை டிரம்பைப் போன்ற வேறு நண்பர்கள் , அதிகார வர்க்கத்தினரிடம் பகிர்ந்து கொள்வோர் இந்தியாவில் இல்லையென்றில்லை . இத்தகையோர் வரலாற்றில் இதற்கு முன் இருந்ததில்லையா ? இருந்தார்கள் , இருக்கிறார்கள் , இருப்பார்கள் . இதைப் பற்றிப் படிப்பவர்களை அதிகம் தொந்தரவு செய்வது , கலங்கடிப்பது எந்த வரைமுறையுமற்ற பாலியல் அத்துமீறல்கள் . குற்றங்கள் கூட அல்ல . ஏனென்றால் ஒருவிதத்தில் பாலியல் தரகர்கள் , சினிமா தயாரிப்பாளர்கள் , மாடல்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் . பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார் எப்...