முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு எதிர்மறையான, தற்காப்பு முடிவு


 

ஒரு பக்கம் அரசு கௌரவ உதவிப் பேராசிரியர்களின் சம்பள உயர்வு, நிரந்தரமாக்கல் கோரிப் போராட்டம், இன்னொரு பக்கம் நீதிமன்றம் 2000 சொச்சம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை 4000 ஆக்க பரிந்துரை. எதற்கு இப்போதைக்கு வம்பு, தேவையில்லாத தலைவலி என்று அரசு நியமனங்களை தேர்தலுக்குப் பின்பு தள்ளி வைத்துவிட்டது என நினைக்கிறேன். தினமலரில் அரசுக்கு நிதி நெருக்கடி, அதனால் நியமனம் ஒத்திப் போடப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. ஆனால் மகளிர் உதவித் தொகை 5000 போட நிதியுள்ளதா என பணி கோருவோர் யோசிக்க மாட்டார்களா? அரசு உழைப்பவர்களுக்கான ஊதியம், பாதுகாப்பு, நலன் ஆகியவற்றிலே கவனம் செலுத்த வேண்டும். அவர்களே வரி செலுத்துகிறார்கள், செலவு செய்கிறார்கள், சந்தைக்கான விசையாகச் செயல்படுகிறார்கள், அவர்களே இளந்தலைமுறையினரை உருவாக்குகிறார்கள். அவர்களை விட்டுவிட்டு மகளிர் வாக்காளர்கள் அதிகரிக்கிறார்கள் என்று அவர்களை ஊக்கப்படுத்த முயல்வது சமூகத்தைப் பின்னுக்குத் தள்ளும். இது தமிழ்நாடு அரசின் சிக்கல் மட்டுமல்ல, வேறு பல மாநிலங்களிலும் இச்சிக்கலை இத்தகைய முடிவுகள் ஏற்படுத்தி உள்ளன. பெங்களூரில் சாதாரண கடைக்காரர்களே இலவசப் பேருந்து திட்டத்தை எதிர்ப்பதைப் பார்த்திருக்கிறேன். பெண்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பதில் மக்களுக்குக் கோபமில்லை, சிறுதொழில் புரியும் தமது நியாயமான கோரிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளி திடீரேன அரசு தீவிர பெண்ணியவாதி வேடம் போடுகிறதே என்பதே கர்நாடக மக்களின் வருத்தம். தமிழ்நாட்டிலும் பலரிடம் இத்தகைய வருத்தம் உள்ளதைப் பார்க்க முடிகிறது. மாற்றுத்திறனாளிகள் ஒரு உதாரணம் - அரசு அவர்கள் போராட ஆரம்பித்ததும் அது எதிர்ப்பிரச்சாரம் ஆகக் கூடாது என்றுதான் கவலைப்படுகிறது. அவர்களைக் கைது பண்ணி அள்ளிக் கொண்டு போகிறது. பார்வையற்ற சிலர் சாலையில் கோஷம் போட்டால் பொதுமக்களுக்கு என்ன இடைஞ்சல் வந்துவிடப் போகிறது? அரசு ஊழியர்கள், கௌரவ ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று அரசு நேரடியாகப் பாதுகாக்க வேண்டியவர்களை விடுத்துவிட்டு அரசு இன்னொரு திசையில் போகக் கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...