முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு எதிர்மறையான, தற்காப்பு முடிவு


 

ஒரு பக்கம் அரசு கௌரவ உதவிப் பேராசிரியர்களின் சம்பள உயர்வு, நிரந்தரமாக்கல் கோரிப் போராட்டம், இன்னொரு பக்கம் நீதிமன்றம் 2000 சொச்சம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை 4000 ஆக்க பரிந்துரை. எதற்கு இப்போதைக்கு வம்பு, தேவையில்லாத தலைவலி என்று அரசு நியமனங்களை தேர்தலுக்குப் பின்பு தள்ளி வைத்துவிட்டது என நினைக்கிறேன். தினமலரில் அரசுக்கு நிதி நெருக்கடி, அதனால் நியமனம் ஒத்திப் போடப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. ஆனால் மகளிர் உதவித் தொகை 5000 போட நிதியுள்ளதா என பணி கோருவோர் யோசிக்க மாட்டார்களா? அரசு உழைப்பவர்களுக்கான ஊதியம், பாதுகாப்பு, நலன் ஆகியவற்றிலே கவனம் செலுத்த வேண்டும். அவர்களே வரி செலுத்துகிறார்கள், செலவு செய்கிறார்கள், சந்தைக்கான விசையாகச் செயல்படுகிறார்கள், அவர்களே இளந்தலைமுறையினரை உருவாக்குகிறார்கள். அவர்களை விட்டுவிட்டு மகளிர் வாக்காளர்கள் அதிகரிக்கிறார்கள் என்று அவர்களை ஊக்கப்படுத்த முயல்வது சமூகத்தைப் பின்னுக்குத் தள்ளும். இது தமிழ்நாடு அரசின் சிக்கல் மட்டுமல்ல, வேறு பல மாநிலங்களிலும் இச்சிக்கலை இத்தகைய முடிவுகள் ஏற்படுத்தி உள்ளன. பெங்களூரில் சாதாரண கடைக்காரர்களே இலவசப் பேருந்து திட்டத்தை எதிர்ப்பதைப் பார்த்திருக்கிறேன். பெண்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பதில் மக்களுக்குக் கோபமில்லை, சிறுதொழில் புரியும் தமது நியாயமான கோரிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளி திடீரேன அரசு தீவிர பெண்ணியவாதி வேடம் போடுகிறதே என்பதே கர்நாடக மக்களின் வருத்தம். தமிழ்நாட்டிலும் பலரிடம் இத்தகைய வருத்தம் உள்ளதைப் பார்க்க முடிகிறது. மாற்றுத்திறனாளிகள் ஒரு உதாரணம் - அரசு அவர்கள் போராட ஆரம்பித்ததும் அது எதிர்ப்பிரச்சாரம் ஆகக் கூடாது என்றுதான் கவலைப்படுகிறது. அவர்களைக் கைது பண்ணி அள்ளிக் கொண்டு போகிறது. பார்வையற்ற சிலர் சாலையில் கோஷம் போட்டால் பொதுமக்களுக்கு என்ன இடைஞ்சல் வந்துவிடப் போகிறது? அரசு ஊழியர்கள், கௌரவ ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று அரசு நேரடியாகப் பாதுகாக்க வேண்டியவர்களை விடுத்துவிட்டு அரசு இன்னொரு திசையில் போகக் கூடாது.

கருத்துகள்