நான் தினமும் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் சில நிமிடங்களில் அல்லது வினாடிகளில் தற்கொலை செய்து இறந்து போகும்போது அதுவரை அவர் இறந்ததன் பொருள் என்ன, நாம் இருப்பதன் பொருளென்ன எனும் அதிர்ச்சியான கேள்விகள் தோன்றுகின்றன. நாகார்ஜுனர் சொல்வதைப் போல வாழ்தலும் சாதலும் நிபந்தனைக்கு உடபட்டதுதானா எனக் கேள்வி எழுகிறது. எதுவும் தன்னளவில் 'இருப்பதில்லையா'?
இந்தக் கேள்வி நமது காலத்தை உபயோகமாகச் செலவழிக்க மிகுந்த உத்வேகம் தருகிறது. செயலுக்குள் மட்டுமே நம்மால் சர்வ நிச்சயமாக உண்மையாக இருக்க முடிகிறது. நமது பிரக்ஞையும் உடலும் ஒரு புள்ளியில் இணையும் செயலில். பூமியின் ஒவ்வொரு துடிப்பிலும் நாம் நமது அகத்தை அறியச் செய்யும் செயலில். அது நமக்கு மகிழ்ச்சியும் அளிப்பதானால் அதிலேயே முடிந்தளவுக்கு அதிகமான நேரத்தை, முடிந்தளவுக்கு உண்மையுடன் செலவழிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. மரணம் நமக்கென திறந்து காட்டும் சாளரத்தின் வழி எனக்கு இது மட்டுமே தெரிகிறது.
இச்சாளரத்தின் வெளியே தென்படும் அங்கீகாரம், புகழ், செல்வாக்கு, சமூகத்தொடர்பு வலை, ஆதரவு, பயண வாய்ப்புகள், மேடை வாய்ப்புகள் முக்கியமாகத் தோன்றவில்லை. மரணத்தின் சாளரம் எப்போதுமே எனக்குத் தென்படும்படி திறந்த நிலையில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதில் தெரியும் காட்சிகள் தரும் தன்னம்பிக்கையை வேறெதுவும் தருவதில்லை. ஒன்றுமே ஒரு கணம் கூட நிலைக்காது எனும்போது நாம் தாழ்வுணர்வு கொள்ள ஒன்றுமே இல்லை. நாம் பெருமை கொள்ள இந்த வாழ்வின் ஆத்மார்த்தமான ஒவ்வொரு செயலும் இருக்கிறது.
Comments