சாரு "அன்பு" நாவல் குறித்த நிகழ்ச்சியொன்றி ஆற்றிய உரையொன்றில் சொல்கிறார்: "யாரையும் திருத்த முயலாதீர்கள். சமூகத்தை மாற்ற முயலாதீர்கள். யாரிடமும் அன்பு காட்டுகிறேன் எனக் கட்டுப்படுத்தாதீர்கள். உங்களால் உங்களை மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும். அதைச் செய்யுங்கள் போதும்."
நான் இக்கூற்றைக் குறித்தே சில நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். சில கேள்விகள் இதை ஒட்டி எழுகின்றன. சுலபத்தில் விடை கிடைக்காத கேள்விகள்:
பிறரிடம் அக்கறை செலுத்தும்போது அதில் இயல்பாகவே ஒரு வன்முறை செயல்படத் தொடங்குகிறது. இதை எப்படித் தவிர்க்க முடியும்?
தன்னை பிறருக்காக வதைப்பதே வாழ்தலுக்கு, இருத்தலுக்கு விரோதமானது, இது ஒட்டுமொத்தச் சமூகத்தை குற்றவுணர்வில் ஆழ்த்தி வாழ்வை எந்திரத்தனமாக்குகிறது என்று கர்த்தரைக் குறித்து நீட்சே சொல்கிறார்.
சமூக அக்கறை, அறம் சார்ந்த மதிப்பீடுகளை எங்கே வைப்பது? மற்றமையின் அறத்தைப் பொருட்படுத்தாமல் உன் அறத்தில் கவனம் செலுத்து என சாரு சொல்கிறாரா? இதை அறவியலில் எப்படிப் பரிசீலிப்பது?
'என்னால் யாருக்கும் தீங்கு வராமல் கவனமாகத் தவிர்க்கிறேன், அதுவே என்னால் இயன்ற நன்மை' என சாரு சில இடங்களில் எழுதி இருக்கிறார்.
பிறரைத் தீங்கு செய்ய வைப்பவை என்னையும் அவ்வாறு செலுத்தாதா? முழுக்கத் தனித்து என்னால் வாழ முடியுமா?
அன்பு காட்டுவதே அக்கறையின் பெயரில் பிறரைத் துன்புறுத்தாதிருப்பது என சாரு சொல்கிறார். இது சரிதான். ஆனால் அக்கறை ஏன் மனிதர்களை இவ்வளவு மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது? அக்கறை இல்லாத போது தனிமை தாள முடியாமல் போகாதா?
இக்கேள்விகளுக்கு தர்க்கரீதியாகப் பதில் தேடாமல் வாழ்வில், அகத்தில் தேட வேண்டும் என நினைக்கிறேன்.
Comments